அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Friday, April 21, 2006

வலிமை கொண்ட பாரதம்...

மூன்று வருடங்களுக்கு முன்னர் கோவையில் ஒரு புத்தக காட்சிசாலையில் அவரை பார்த்தேன். நல்ல உயரம், நரைத்த தாடி, தோளை தொடும் நீண்ட முடி, தீட்சண்யமான கண்கள்..அவருடன் ஒரு பெண் இருந்தாள். ஜீன்ஸும் சுடிதாரின் டாப்ஸும் (அதுக்கு என்ன பெயர் என்று இன்னும் தெரியவில்லை...) அணிந்திருந்த அந்த பெண்தான் முதலில் கவர்ந்தாள், அவளை கண்கள் தொடரவே இந்த பெரியவரை பார்த்தேன். பார்த்ததும் பிடித்தது அவரது தோற்றம்தான். புத்தகங்களை வாங்கி கொண்டு எதிரே இருந்த அன்னபூர்ணா கெளரிசங்கரில் காப்பி குடிக்க உட்கார்ந்து இருந்தேன். அவர்கள் என் எதிரில் இருந்த டேபிளில் உட்கார்ந்து இருந்தார்கள். டேபிளில் என் புத்தகங்கள் இருந்தன. அவர் பார்வை என் புத்தகங்களில் பதிவதை கவனித்தேன். மெல்ல புன்னகைத்தேன். அவரும் பதிலுக்கு புன்னகைத்தார்...தெளிவான ஆங்கிலத்தில் "நீங்கள் விலைக்கு வாங்கிய புத்தகங்கள் அருமையானவை...இது போன்ற புத்தகங்களில் உங்களுக்கு ஆர்வம் உண்டா..?" என்றார். "எனக்கு ஆர்வம் நிறைய உண்டு...அதுவும் தவிர இத்தகைய சித்தாந்தங்களில் பிடிப்பும் உண்டும்" என்றேன். "இந்த சித்தாந்தங்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா...?" என்றார்.."என் நம்பிக்கை எல்லாம் நடைமுறை படுத்தி வெற்றி பெற்றவைகளில் மட்டும்தான்... தியரிகளை நான் அதிகம் நம்புவதில்லை..அவை சிலரின் கருத்துகள் மட்டுமே..ஒரு சமூகம் அந்த தியரியை ஒத்துகொண்டு வழிநடக்குமாயின் அது செழுமைபடுத்தபட்ட நடைமுறை விதியாகிறது..." என்றேன்.. அமோதிப்பது போல புன்னகைத்தார்.அந்த பெண் என்னை விரோதி போல பார்த்து கொண்டு இருந்தது. ஒரு சிறு காகிதத்தில் அவர் பெயரும் தொலைபேசி எண்ணும் கொடுத்து தொடர்ப்பில் இருக்க சொன்னார்.பின்னர் அவரை பார்க்க 5 மாதம் ஆகிவிட்டது...

5 மாதங்களுக்கு பிறகு சேலம் பஸ் நிலையத்தில் மறுமுறை அவரை பார்த்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்டார். அவர் தருமபுரிக்கு அருகே ஒரு கிராமத்துக்கு போக போவதாகவும் நான் ஓய்வாக இருந்தால் தன்னுடன் வரும்படியும் அழைத்தார்..சொல்லி கொள்ளும் படி எந்த வேலையும் இல்லாததால் அவருடன் போக இசைந்தேன். பயணம் முழுவதும் புத்தகங்கள் பற்றியும்...கருத்துகள் பற்றியும் அரசியல் பற்றியும் போராளிகளின் வாழ்க்கை முறை பற்றியும் நிறைய பேசி கொண்டே வந்தார். தேசத்தின் மோசமான நிலை பற்றி அவர் பேசும் போது அவரது வார்த்தைகளில் ஆவேசம்.. நான் அதிகம் பேசவில்லை...கவனித்தலில் நேரம் கழிந்தது..இரவு 8 மணி சுமாருக்கு அந்த கிராமத்து சாலையில் இறங்கி நடக்க தொடங்கினோம். சில நிமிடங்களில் பாதை என்பதே இல்லை. முள் செடிகள் சூழ்ந்த அந்த பாதையில் நடந்து கொண்டே இருந்தோம்.. யாரை பார்க்க...எங்கே போகிறோம் என்ற கேள்விகளை நான் கேட்க விரும்பவில்லை எனினும் கேள்விகள் இருந்தது...கிட்டதட்ட 5 மணி நேர நடை பயணத்துக்கு பிறகு காடா விளக்குகள் பொருத்தபட்ட சில வீடுகள் கொண்ட ஒரு இடத்தை அடைந்தோம். பெரும்பாலும் அங்கிருந்தவர்கள் இளைஞர்கள்..பெண்களும் இருந்தார்கள்..ஒரு விதமான முரட்டுதனமான அமைதி இருந்தது...பெரியவரை ரொமப விசேஷமாக வரவேற்றார்கள்.
அவர் கொண்டு வந்திருந்த புத்தகங்கள்..வாங்கி பத்திரபடுத்தபட்டன.. சூடான டீ எங்களுக்கு கொடுக்கப்பட்டது. நான் ஒரு தெரிந்த நண்பர் என்று அவர்களிடம் அறிமுகபடுத்தபட்டேன்.. அங்கிருந்தவர்களில் சில முரட்டுதனமாக இல்லை..மாறாக தெளிவான ஆங்கிலமும், நகர் புறங்களில் வாழுபவர்கள் போல இருந்தார்கள்....மறைந்து வாழும் போராளிகள் என்பதை உணர்ந்து கொள்ள ரொம்ப நேரம் ஆகவில்லை...எந்த பயமும் வரவில்லை..மாறாக அவர்களின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ஆசை மட்டுமே இருந்தது. என்னிடம் அறிமுகப்படுத்தி வைக்கபட்டவர்கள் தவிர யாரும் என்னிடம் பேசவே இல்லை...அவர்கள் அந்த பகுதி மக்களிடம் கல்வியறிவை மேம்படுத்துவதாகவும், விவசாய கருவிகளுக்கு உதவுவதாகவும், கடின நில விவசாயம் பற்றி சொல்லி கொடுப்பதாகவும் சொன்னர்கள். தன்னை மருத்துவர் என்று அறிமுகபடுத்தி கொண்ட ஒருவர் ஜனநாயக அமைப்பு என்ற போர்வையில் நடக்கும் அரசியல் கேவலங்ளை பற்றி ஆவேசப்பட்டார். கல்வியும், சுய தொழிலும், முரண்பாடில்லாத பொருளாதார சூழ்நிலைகள் மட்டுமே கீழ்மட்ட மக்களை மேம்படுத்தும் என்பது அவர்களின் ஒட்டு மொத்த கருத்தாக இருந்தது.

அவர்களில் பெரும்பாலோர் படித்தவர்களாக இருப்பதை உணர்ந்தேன்.. அரசியல் மேலும் சமுதாயம் மேலும் அவர்களில் பெரும்பாலோருக்கு நம்பிக்கை இல்லை...அவர்கள் ஒரு தீவிரமான புரட்சியில் ஈடுபட்டு இருந்தார்கள்...சமுதாய அமைப்பில் ஒரு புதிய உத்வேகத்தை கொண்டு வருவது அவர்களின் நோக்கமாக இருந்தது. அடுத்த நாள் அங்கிருந்து கிளம்பிவரும் வரை அந்த சூழல் ஒரு நல்ல உணர்வை கொடுத்தது. வெளிஉலகில் நல்ல வேலையில் இருக்கிறார்கள்...சம்பாதிக்கும் சொந்த காசில் இந்த புரட்சியை நடத்துகிறார்கள்..கிராமங்களில்..சின்ன ஊர்களில் சத்தம் இல்லாமல் இந்த புரட்சி நடக்கிறது.. அந்த அனுபவத்துக்கு பிறகு அவர்களில் யாரையும் நான் மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் நகஸல்பாரி இயக்கம் சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்துவைப்பதின் மூலம் அவர்களை புரட்சியில் இருந்து தடுத்து நிறுத்துவதாக செய்தி வந்து இருந்தது. அவர்கள் இந்த சின்ன தடைகளில் தங்கள் இயக்க செயல்பாடுகளை தடுத்து கொள்வதில்லை...அரசாங்கத்தின் கணிப்பு போராளிகள் விஷயத்தில் என்றும் சரியாக இருப்பதில்லை..விலைக்கு வாங்க நினைக்கும் அரசாங்கத்தின் போக்குக்கு மிக சிலரே பலியாகிறார்கள்...இன்னும் எத்தனையோ சத்தமில்லாத புரட்சிகள் தேசத்தின் கண்ணுக்கு தெரியாத எல்லைகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன...

No comments: