அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 28, 2005

திரை

சமீபத்தில் படித்த மாத இதழ்.புது பத்திரிக்கை என்று நினைக்கிறேன். சினிமா பற்றிய வெகு இயல்பான விழிப்பான ஒரு பத்திரிக்கையாக நான் இதனை கருதுகிறேன். பொதுவில்

பிலிமாலையாவும், ஜெமினி சினிமாவும், சினிமா எக்ஸ்பிரஸும் போதாக்குறைக்கு விகடனும் குமுதமும் போட்டிபோட்டு கிசுகிசுக்கைளையும், தொப்புள் நடிகைகளையும், களியாட்டங்களையும்,

"இது வித்தியாசமான கதை சார்" போன்ற தலையணை பேட்டிகளையும் மக்களுக்கு சேவையாக கொடுத்துகொண்டிருக்கும் வேளையில் உலக சினிமா பற்றிய ஒரு மாத இதழ் வருவது

வரவேற்புக்கு உரியது. இதுமாதிரியான இதழ்களை முன்னமே கவனித்து இருக்கிறேன். அவற்றின் ஆயுள் சொர்ப்பகாலம்தான். ஒன்று பத்திரிக்கையை நிறுத்திவிடுவார்கள், அல்லது வெகுஜன

பத்திரிக்கைகளின் வழக்கமான அம்சங்கள் சேர்ந்துவிடும். "திரை" எப்படி போகிறது என்று பொருத்திருந்து பார்ப்போம். பிரபஞ்சன், ஜெயமோகன், யுகபாரதி, டாக்டர் ஷாலினி,

அருண்மொழி, பாலுமகேந்திரா, லோகிதாஸ், சேரன், டிராஸ்கி மருது, செழியன், சமிரா, வசந்தகுமார் போன்றோர்களின் பங்களிப்புகளில் பத்திரிக்கை கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது.

உலக சினிமாக்கள் பற்றிய விவாதங்கள், அவற்றின் டெக்னிகல் மற்றும் கதை சொல்லும் பாணி பற்றிய பகிர்வுகளும் கட்டுரைகளும் மேலும் பத்திரிக்கையை அற்புதமாக்கும். தமிழ் சினிமாவின்

மறக்கபட்ட மறுக்கபட்ட இயக்குனர்களும், கதை சொல்லிகளும் இந்த பத்திரிக்கை வாயிலாக தொடர்ப்பு கொள்ளலாம். நல்ல சினிமா பற்றிய தெளிவு வருமென்ற நம்பிக்கை தெரிகிறது. பத்திரிக்கை பேட்டிகளின் கருத்துகளில் தைரியம் தெரிகின்றது. கவர்ச்சிபடங்கள் இல்லாத சினிமா பத்திரிக்கை...

கற்பு...

கற்பு... கடந்த சில வாரங்களாக ஜோதிட சிகாமணி, ஆவிகள் உலகம், சிறுவர் மலர் தவிர ஏறக்குறைய எல்லா நாள் வார மாத பத்திரிக்கைகளும் விவாதித்து வரும் விஷயமாகிவிட்டிருக்கிறது. கொஞ்சம் கவனித்து பார்த்தால் பொதுவில் எல்லோரும் தங்களுடைய கருத்துகளை, தங்களின் சுயம் சார்ந்த கருத்துகளை சொல்வது பிடிபடுகிறது. இதில் பொது கருத்து எதுவும் இல்லை. நான் தான் சமூகம் என்ற உணர்வு அவர்களில் கருத்து வெளிப்படும் பாங்கில் தெரிகிறது. மெல்ல மெல்ல பூனைகள் சாக்கில் இருந்து வெளிவருகின்றன. நிஜமான சமூகத்தில் முகம் முகமூடிகளின் அலங்காரமின்றி மெல்ல தெரிகின்றது. "நாங்கெல்லாம் ஒழுக்கசீலர்கள்..." என்ற அரிதாரபூச்சு மெல்ல கலைகிறது. ஒழுக்கம் என்பதின் தெளிவு பற்றிய அறிவு சமுதாயத்தின் பல்வேறு கலாச்சாரங்களில் இருந்தும் வெளிப்படுகிறது. இதுதான் உண்மை என்பதை மனமார்ந்து ஒத்து கொள்வதில் என்ன தயக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. உண்மையை பற்றிய ஒரு சர்ச்சையில் எல்லாரும் கொஞ்சம் குளிர்காய்ந்து கொள்கிறார்கள். சல்மா சொல்லியிருந்தது போல " பிரச்சனை கற்பு அல்ல.. சொன்னது யார் என்பது தான்". சர்ச்சைக்குரிய விஷயங்களை சொல்லும் ஆண்கள் போல சர்ச்சைகுரிய விஷயங்களை பேசும் பெண்களை சமூகம் கவனிப்பதில்லை. நிறம் என்றும் வேறுபட்டே இருக்கிறது. கருத்துக்களை விட சொன்னது யார் எந்த சாதி, எந்த மதம் ஆணா பெண்ணா என்ற கவனிப்பில் கருத்தின் உணர்வு மட்டுபடுகிறது. திரைப்படம், மருத்துவம், சட்டம், மற்றும் பெண் இயக்கங்கள் மெல்ல மெல்ல சுயம் பற்றிய புரிதலை, வெளிபடையாக சொல்கின்றன. ஞானி, பாரதிராஜா, டாக்டர் ஷாலினி மற்றும் பலர் பாராட்டுக்கு உரியவர்கள். இவர்களின் கருத்துகளை விட கருத்து சொல்லபட்ட விதமும், என் கருத்து என்ற கர்வமும், தைரியமும் பாராட்டுக்கு உரியவை. சானியா மிர்சாவின் பின்வாங்கலில் மதம் சார்ந்த பயம் தெரிகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பாலுறவு தெளிவு போன்றவை சமுதாயம் வளர வளர சொல்லி கொடுக்கபட வேண்டியவை என்பதில் ஒரு பொதுவான கருத்து இருப்பது நல்லது.

Monday, November 21, 2005

உணவு அதன் ...

பெறும்பாலான ஞாயிற்றுகிழமை காலைகள், சிற்றுண்டி இல்லாமலேயே போய்விடுகின்றன சென்னையில். கோவையில் இருந்தால் சூடாய் இட்லியும் காரமாய் தக்காளி வெங்காய சட்னியும் ஞாயிறு காலையை உன்னதமாகிவிடும். கிராமத்தில் இருந்தபோது, இட்லியும் கறிகுழம்பும் நாக்கில் விளையாடும். சென்னைவாழ்க்கையில், காலை உணவு தவிர்க்கபடுவதால் மதிய உணவு கொஞ்சம் கனமாகவே அமைவதுண்டு. இந்த முறை நண்பர்களுடன் பாண்டிபஜார் அஞ்சப்பர் போக எண்ணித்து நடந்தோம்-அங்கே சாப்பிட வரிசையில் ஏற்கனவே நின்றிருந்ததால், கொஞ்சம் தள்ளி இதுவரை போக்குவரத்தில் மட்டுமே கவனித்திருந்த நெல்லையப்பர் உணவகம் சென்றோம். நண்பர் லோகுவின் கூற்றுபடி அது இயல்பான திருநெல்வேலி பிரியாணி கடை. சிக்கன் பிரியாணியின் சுவையும், சிக்கன் துண்டுகளின் மசாலாவும் வேகவைக்கபட்டிருந்த பதமும் நண்பருக்கு கிராம நாட்களை ஞாபகபடுத்தின. நானும் கொஞ்சம் சுவைத்து பார்த்தேன். திங்களூர் சுவை. அப்புறம் மண்சட்டி மீன்குழம்பு. உறைப்பும், புளிப்பும், பூண்டும் மசாலாவும் சேர்தரைத்த சுகானுபவம். ஊர்புரத்து மீன்குழம்பை நினைவுறுத்தும் சுவை. வெந்த மீன் துண்டு முட்கள் பிரிந்து நாக்கில் கரைகிறது. மொத்தத்தில் அற்புதமான சாப்பாடு. ரசமும் அமிர்தம் ஆனால் தயிர் மட்டும் சென்னை பாலில்... இனி மாதம் இருமுறையாவது ஞாயிறு மதியங்களில் என்னை அங்கு பார்க்கலாம்.

மீன் சாப்பிடுவது ஒரு கலையாக பயிற்றுவிக்க பட்டது என் பாட்டியாலும் அப்பாவாலும். பாட்டி காரமும் உப்பும் கலந்த கலவையை மீன் துண்டுகள் மேல்தடவி மெல்ல குத்திவிட்டு மசாலா இறங்கியதும் பொறித்து எடுத்த மீனில் முள் பிரித்து சதைமட்டும் சேர்த்து உறைக்கும் மசாலாவோடு தருவார். இந்த மசாலா விஷயத்தில் எங்கள் வீட்டில் பணி புரிந்த ஒரு முஸல்மானிய அம்மா வித்தியாசமான சுவையை தருபவர். எனினும் பாட்டி மசாலா எனக்கு பிடித்தமானது. மீனின் சதையை மெல்ல விண்டி, நாக்கின் நுனியில் வைத்தி மெல்ல உறிஞ்சி, பின்னர் நாக்கால் சதையை நிரவி மேலன்னத்தில் மீன் முள்ளை தரம் பிரித்து அதுக்குள் சேர்ந்திருக்கும் மசாலா சுவை உமிழ்நீரை சட்டென விழுங்கி, பின்னர் மீன் முள்ளை உதடு ஓரத்தில் ஒதுக்கி, சதையை சுவைக்கும் கலை அப்பா சொல்லி தந்தது. வேர்கடலை உரிக்கும் வேகமாக கலையும், ஆட்டிறைச்சியின் எலும்பு கடிக்கும் உக்தியும் அப்பாவிடம் கற்ற வித்தைகள்.

உணவு அதன் சுவையை கொண்டும், சமைக்கும் பாகத்தை கொண்டும், பரிமாறும் பரிவை கொண்டும் உறவுகளை நெருக்கமாக்கி கொடுக்கிறது என்பது என் கருத்து. முகம் அறியாத நிறைய உறவுகளை எனக்கு கொடுத்து உணவினால் வந்த உறவுதான். பெரும்பாலான உறவினர் நண்பர் திருமணங்களில் சமையல் அறையில் உள்ள வித்தகர்களிடம் பழக்கம் கொண்டவன் நான். அவர்களின் வாழ்க்கையில் உணவளித்தல் என்பது ஒரு சுவாசம் போல நிறைந்திருந்தது. இன்றெல்லாம் ஓட்டல்களில் வைக்கபடும் திருமணங்களில் உணவு என்பது சம்பிர்தாயமான ஒன்றாகிவிட்டது. ஆனாலும் நம்மை சுற்றி முகம் தெரியாத எத்தனையோ சமையல் வித்தகர்கள் உலகின் பசியை சுவையாயும் பரிவாலும் தீர்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

Creative Writing

அமெரிக்க பள்ளிகளில் ஒரு பாடம் "Creative Writing". கற்பனைதிறனை வளர்க்கும் இந்த பாடத்தை போதிக்கும் ஒரு ஆசிரியை இணையத்தில் பழக்கமாகியுள்ளார். அவர் சில கேள்விதாள்களை கொடுத்தார். சில கேள்விகளை அவ்வப்போது கேட்கிறேன்... பதில் சொல்லி பாருங்கள்...சுவரஸ்யமாக இருக்கிறது...

கேள்வி 1: நீங்கள் ஒரு பறவையாக இருக்கவேண்டியிருந்தால் எந்த பறவையாக இருக்க விருப்பம். ஒரு சிறு கவிதை எழுதுக.

கேள்வி 2: உங்கள் வயற்றில் பட்டாம்பூச்சிகளை உணர்ந்த மூன்று சம்பவங்களை சொல்லுக...

எழுதி பாருங்களேன்...இஷ்டமிருப்பின் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...

திருட்டுமாங்காய் சுகம்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நண்பனின் வீட்டில் குரூப்ஸ்டடி என்ற பெயரில் குழுமியிருந்தோம். வீட்டில் யாரும் இல்லை. தெரிந்துதான் கூடியிருந்தோம். காரணத்தோடுதான். எல்லாருக்கும் அதுதான் முதல்முறை. ஊர் அடங்கி, மணி இரண்டான பிறகு, சர்வ ஜாக்கிரதையாக "அது" பிரிக்கபட்டு வீடியோ டெக்கில் போடப்பட... சில நிமிஷங்களில் காதுமடல்கள் சூடாகி, என் இதயம் துடிக்கும் ஒலி எனக்கே கேட்கபட, கை காலெல்லாம் ரோமம் சிலிர்த்துகொள்ள, நாக்கு வற்றி மூச்சா வரும் உணர்வு ஏற்பட்டு விட்டது... அது ஒரு குழப்பமான வயது சார்ந்த காலகட்டம். ரொம்ப நாட்களுக்கு அதனை பேசி கொண்டிருந்தோம். இன்றெல்லாம் கிட்டதட்ட 75 வகையான கலைகளுடன் ஆங்கில விளக்கங்களுடன் சர்ரவுண்ட் சவுண்டில் டிவிடியிலேயே வருகிறதாம்... என்ன இருந்தாலும் திருட்டுமாங்காய் சுகம் கிடைக்குமா..

மூன்று நாட்கள்

மூன்று நாட்கள் கோவையில் சந்தோஷம். செல்லமான மழைகாற்றுடன் கூடிய சீதோஷனமும், அம்மாவின் மோர்குழம்பும், மத்தியான தூக்கமும், சூடான காப்பியுடன் சுவையான நண்பர்கள் வட்டமும் மூன்று நாட்களை சில வினாடிகளில் முடிந்த உணர்வுடன் முடித்துவிட்டது. அம்மா ரொம்பவுமே பொறுமைசாலி . என் வெட்டிகதைகளைகளையும் புலம்பல்களையும் ஆர்வத்தோடு கேட்பது கொஞ்சம் கஷ்டம்தான். சின்ன ஊரில் இருக்கும் சுகம் பெரும்நகரங்களில் கிடைப்பதில்லை என்பது என் கருத்து. சொந்த கிராமங்களின் வாழ்க்கையை யாராவது பெருநகரவாழ்க்கையோடு ஒப்பிட முடியுமா..?

என்னை பொறுத்தவரை, பெருநகரங்கள் ஆள்விழுங்கும் வட்டங்களாகவே இருக்கின்றன. மனிதர்களை விட்டில்பூச்சிகளை போல் பணமும், கவர்ச்சியும், ஆடம்பரமும், புகழும் காட்டி ஈர்கின்றன.

கலை, சமுதாய உணர்வு, மனிதாபிமானம், அடிப்படை பண்பு, ஒருங்கிணைந்த வாழ்க்கைமுறை இவை எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக குழிக்குள் புதைக்கபடுகின்றன.

பயமும், பிரமிப்பும் கலந்த நிச்சயமற்ற, தொழில்நேர்மையற்ற, கலர்கனவுகள் மட்டுமே நகர வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கிறது.

பணம் இருந்தால்

பணம் இருந்தால் எல்லாம் முடியும் என்பதற்கு சமீபத்தில் நான் கோவை சென்றிருந்தபோது ஏற்பட்ட ரயில் அனுபவத்தை ஒரு சாட்சியாக கொள்கிறேன். போகும்போது குளிர்சாதனம் செய்யபட்ட அற்புதமான ரயில் பெட்டி, வரும்போது ஒரு டப்பா பெட்டியுல் கழிவறைக்கு அடுத்த கேபினில் படுக்கை. வசதிபடைத்தவர்கள் ரயில் பெட்டியில் எல்லா வசதிகளையும் பெறுகிறார்கள், மேல் பர்த்தில் ஏறும் ஏணி கூட ரப்பர் காப்பணிந்து மெத்துமெத்தென. வசதியில்லதவர்கள் இரும்பு கம்பியில் வழுக்கி கொண்டு இருக்கிறார்கள். தலையனை, போர்வை, விரிப்பு என வசதிபடைத்தவர்களை பார்க்கும் தென்னிந்திய ரயில்வே, வசதியில்லாதவர்களை வெறும் மனிதர்களாக கூட பார்பதில்லை. அடிப்படை சுத்தமும் வசதியும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக வேண்டும்.

இன்னொரு சுவரஸ்யம் எனக்கு. இதுவரை எந்த சாதாரண மக்கள் பயணம் செய்யும் பெட்டிகளின் கழிவறைகளிலும் ஆபாசமான படங்களையோ, எழுத்துகளையோ பார்த்ததில்லை, பொதுவான சுத்தம் பேணப்படுகிறது. வசதிபடைத்தவர்கள் பயணம் செய்யும் பெட்டிகளில் கழிவறைகளில் எல்லா வகையான ஆபாச படங்கள், வசனங்கள், சமீபத்தில் சில செல்போன் நம்பர்களும் கூட அழைப்புகளோடு எழுதபட்டிருந்தது. மன வக்கிரம் பணம் பார்த்து வருவதில்லையோ... ?

செய்திகளும் சில கருத்துகளும்

நவம்பர் 17 தினமலர் நாளிதழை புரட்டிகொண்டிருக்கும்போது சில செய்திகளை பற்றி தோன்றிய கருத்துகள் இவை.. இதற்க்காக யாரும் திருநெல்வேலிதாண்டி குக்கிராமத்தில் என் மேல் வழக்கு பதிவு செய்யமாட்டார்கள் என நம்புகிறேன்..

குஷ்புவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சானியா, நடாலியா கிளினோபோவா, மற்றும் நரேன் கார்த்திகேயன்.
-- எனக்கு தெரிந்து இன்றைய சம்பாரிக்கும் இளைய சமுதாயம் மொத்தமுமே ஆதரவு தெரிவித்துகொண்டுதான் இருக்கிறது ஆனால் வெளிப்படையாக தெரிவிக்கும் தைரியம் இல்லாமல். நடுத்தர வயது, வாலிப வயோதிக அன்பர்களுக்கும் ஆதரவு தெரிவிக்க ஆசைதான், ஆனால் இதுவரை என்வென்றே தெரியாத கலாச்சாரமும், மனைவி பயமும், ஆதரவுக்கு முட்டுகட்டைபோடுகின்றன. கிட்டதட்ட 10 ஆண்டுகளில் செக்ஸ் சமுதாயத்தில் குறிப்பாக சம்பாரிக்கும் சமுதாயத்தில் மிக சகஜமான அங்கமாகிவிட்டது. பாதுகாப்பான உடலுறவு என்பதில் ஒரு நடிகை தெரிவித்த கருத்து சரிதான் என்பதில் பலருக்கும் கருத்து இருந்தாலும், தமிழ் கலாச்சாரம் என்ற ஒரு தடையை தாண்டுவதில் திணறல் இருக்கிறது. இதில் 90 சதவீதம் பேருக்கு தமிழ் கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது. இதே சமுதாயம் சினிமாவில் உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாவிட்டால் சினிமா பார்க்காது, முறையற்ற உறவுகளை சொல்லாத நாடகம் பார்க்காது. இன்டெர்நெட்டில் செக்ஸ் தேடாது, குமுதத்திலும் விகடனிலும் தொப்புள் தேடாது, இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ற பெயரில் நடக்கும் காம கூத்துகளை தேடிபடிக்காது, நாலு சுவற்றுக்குள் மனதில் விகாரம் காட்டாது ஏனென்றால் நாம் தமிழ் சமூகம்...தமிழ்நாட்டில் முறையற்ற உறவுகளும், செக்ஸ் தேடல்களும், பாதுகாபற்ற உடலுறவும், போதையும் இல்லை என்று யாராவது உத்தமர் சொல்ல முடியுமா..? லஞ்சம் போலவே இதுவும் சமுதாயத்தில் கலந்துவிட்ட வஸ்து. அன்னிய சந்தையை அனுபவிக்க நாம் கொடுக்கும் விலை இது எனினும் ஆதிமுதல் இது இல்லை என்ற முட்டாள்தனமான வாதம் வேண்டாம்.

மேலும் சில செய்திகள்...

11 வயது சிறுவனிடம் 29800 பணம் பறித்த பெண் எஸ்.ஐ கைது.
-- இனிமேல் பணத்துக்கு பாதுகாப்பக யாராவது அன்னிய நாட்டு கம்பெனி தொழில்முறை பாதுகாவலர்களை அமர்த்திகொள்ளவேண்டும். இல்லையேல் பணம் கொண்டு போவதற்கு முன்பு பக்கத்து போலிஸ் ஸ்டேசனில் கணிசமாக லஞ்சம் கொடுத்து யாராவது ரவுடியை பாதுகாப்புக்கு வைத்து கொள்ள வேண்டும்...

"படிக்கவே விருப்பம் எனக்கு. திருமணத்துக்கு நச்சரித்தால் காதலியை கொன்றேன்" எம்பிஏ காதலன் வாக்குமூலம்.
-- இது பற்றி இனி மேலும் செய்திகள், கருத்துகணிப்புகள், கட்டுரைகள் எல்லா பத்திரிக்கைகளும் எழுதும். ஆனால் படிப்பு பற்றி முன்னிருத்திய காதலனை வில்லனாக்கிவிடும் பெண் அமைப்புகள்.

Saturday, November 12, 2005

காதல்

காதல் எப்போதெல்லாம் வருகிறது. பொதுவாக ஆண் பெண் நட்பில் எந்த நிமிடமும் காதல் உருவாகிறது. அது பெரும்பாலும் வெளிப்படுத்தபடுவதில்லை. சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் காரணமாகிறது. காதல் உருவாவதின் காரணங்களை போலவே, வெளிப்படுத்தபடாமல் இருப்பதற்கும் காரணம் பட்டம் கொள்கின்றன. என் அளவில், என் வட்டத்திலும், நட்பு வட்டத்திலும் காதல் இங்கனம் உள்நிலையில் தேங்கியிருக்கிறது. சில பெண்களிடம் நான் சொன்னதில்லை எனினும் என் நடவடிக்கைகளை கொண்டு அவள் புரிந்து கொண்டிருக்கலாம். முதல்காதல் போலல்ல தற்போதைய காதல் எல்லாம். முதல் காதலில் முழு ஈடுபாடு இருந்தாலும் காரண அடிப்படையில் இனகவர்ச்சி முன் நின்றது. அழகு என்பது முதன்மைபடுத்தபட்டது. வளர்தலின் சாட்சியாக, காதலில் மெல்ல மெல்ல அழகு தனிமைபட்டும், மனது முதன்மைபட்டும் நின்கிறது. எனினும் உடல்கவர்ச்சி இல்லாத காதல் விவாதம் கொள்ளப்படும் கருத்து. நட்பு காதலாய் உடையும் கணம் அற்புதமானது. ஒரு புன்னகையில், ஒரு தொலைபேசி விவாதத்தில், ஒரு மழைக்கால காலையில், ஒரு மாலைநேர நடத்தலில், ஒரு திரைப்பட காட்சியில், ஒரு சம்மதித்தலில், ஒரு பரிசில், ஒரு முத்ததிலும் கூட... சில நேரங்களில் பிரிவிலும். ஆண்கள் பெண்களாலும் பெண்கள் ஆண்களாலும் வையம் முழுவதும் ஈர்க்கபட்டுகொண்டே இருக்கிறார்கள். இதில் கணக்கு வைப்பது அநாகரீகம். காதல் இல்லாத ஒரு மையபுள்ளியில் வைக்கபடும் உறவுகளுக்குள் பெரும்பாலும் பிணைப்பு இருப்பதில்லை என்பது என் கருத்து. எனக்கு பிடித்தது அவளுக்கும் பிடித்திருக்குமாயின், அவளின் ஈர்ப்புகளின் என் கவனமும் இருக்குமாயின் நெருக்கத்தில் விளையும் நட்பு மெல்ல காதலாகி பின்னர் யாரும் சொல்லாமலேயே நினைவுகளாக வாழ்வின் எல்லாம் பக்கங்களிலும் எழுதபடுகிறது.

பிக் பிஷ் ...

பிக் பிஷ் என்று ஒரு திரைப்படம். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவின் ஆழம் சொல்லும் திரைப்படம். தந்தை மகனுக்கு குழந்தைபருவத்தில் இருந்தே தன்னை பற்றி கற்பனைக்கு தாண்டிய கதைகளோடு வளர்க்கிறார். வாலிபத்தில் மகன் தந்தையின் கதைகளில் உள்ள கற்பனைகளை பற்றி தெரிந்து கொள்கிறான். தந்தையின் எல்லா அனுபவங்களுமே கற்பனைகதைகள் தான் என்ற மனோபாவம் உருவாகிறது. தந்தையின் இறுதிகாலத்தில் அவரின் கற்பனைகளுக்கு உண்மைசம்பவங்களுக்கும் உள்ள பிணைப்பு, மற்றும் அதன் உண்மைகளை உணர்கிறான். சம்பவங்களும் மனிதர்களும் மனதின் ஆழத்தில், கதைகளை மெல்ல மெல்ல உருவாக்குவதை கதை தெளிவுபடுத்துகிறது. இசையும் வசனங்களும் குறிப்பிட வேண்டியவை. திரைக்கதை தேவதை கதைகளின் சாராம்சத்தை கொண்டு இருந்தாலும் காட்சி வரிசை, அமைப்பு மிக இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. கதாபாத்திரங்கள் இன்னும் ரொம்ப நாளுக்கு மனதில் இருப்பார்கள். கொஞ்சம் யோசிப்பதில் இந்த கதை சொல்லும் மனிதர்கள் நமக்கும் பல சமயங்களில் அறிமுகமாகி இருக்கிறார்கள். பெரும்பாலும் பயணங்களில் - கிராமங்களில் கதைகள் எல்லோருடனும் தோழமையும் உலவுகின்றன. பெரும்பாலும் கதைகளில் கதை சொல்லி ஏதோ ஒருவிதத்தில் பார்வையாளனாக இருக்கிறார் - சில நேரங்களில் கதையின் மையமாக கூட. மனோதத்துவரீதியான விவாதத்தில் பொருந்தும் கருத்து இது. எல்லாருக்கும் கதைகள் இருக்கின்றன. அதில் உணர்வுகள், சம்பவங்கள், சில சமயங்களில் அற்புதமான பொய்கள் எல்லாம் இடம்பெறுகின்றன. மனிதர்களின் மறுபக்கங்கள் சொல்லபடுகின்றன. முற்றிலும் புதிய கதாபாத்திரங்கள் உருவாக்கபடுகிறார்கள் - அவர்கள் கதைசொல்லியின் எண்ண எதிர்பார்ப்புக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். இன்று கதை சொல்ல இயந்திரங்கள் இருக்கின்றன. மனிதமனதின் கதைகள் யாருக்கும் கிடைப்பதில்லை - கேட்பதற்க்கும் இன்னும் சில காலங்களில் யாரும் இருக்கமாட்டார்கள். கதைகள் நம்மை வேறோர் உலகத்துக்கு கொண்டு செல்லும் அற்புதம் பல நேரங்களில் யாராலும் உணர்ந்துகொள்ளபடுவதில்லை. கவிதைகள் வேறோர் உலகம் - கதைகள் வேறோர் உலகம் ஆயினும் மெல்ல விரியும் மனதின் பரிமாணங்களை உணர்தல் சுகம் - வாழும் கணிப்பொறி நரகம் தாண்டிய ஒரு தேவதை உலகம்... என்னை போலவே யாரும் இருந்தால் - பகிர்தலில் சுகம் உணரலாம்...

ஆதிமனிதனின் ...

செய்தி ஊடகங்களை பற்றி ஒரு விவாதம் எழுந்தது இன்று. பொதுவாக செய்தி ஊடகங்களில் நல்ல மங்களகரமான செய்திகளில் சதவிகிதம் 30%க்கும் குறைவாகவே இருக்கிறது. 70% அசந்தர்ப்பமான, வாழ்வின் நிகழ்வுகலில் குலைவுகள் நிகழ்ந்தாலே செய்தியாக்க படுகின்றன. மனிதர்களுக்கு இது மாதிரி ஒரு சுவை ஏதோ ஒரு மீடியத்தின் வழியாக தேவைபடுகிறது என்கிறார் சுஜாதா (கற்றதும் பெற்றதும்). எழுதுவதற்கு ஏதும் இல்லாமல் போகும் ஒரு நேரத்தில் சினிமா நடிகைகளில் வாழ்க்கை, பெண்களின் கற்பு,பெருநகரங்களின் முறையற்ற தனிமனித வாழ்க்கை,அரசியல் பேரங்கள், செக்ஸ் போன்றவை செய்திகளாக்கபடுகின்றன. இது ஜூனியர் விகடன், ரிப்போர்டர் மற்றும் இந்தியாடுடே மற்றும் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வெகுஜன பத்திரிக்கைகளுக்கு பரவி வருகிறது. சுஜாதா சொல்வது போல, ஆதிமனிதனின் மன அடிஆழ எண்ணங்களில் சுவைபட இது தீவிரமாக வியாபாரமாக்கபடுகிறது.

கஜினி

சமீபத்தில் கஜினி திரைப்படம் பார்த்தேன். கமர்சியல் திரைப்படம். லாஜிக் எல்லாம் பேசினால் படம் பார்க்க முடியாது. நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் இல்லை - பத்திரிக்கைகள் இதனையே அற்புதமான நடிப்பு என புகழ்கின்றன. நடிப்பின் இலக்கணம் இப்போதெல்லாம் மாறிவருகிறது. உண்மையாக நடித்தெல்லாம் இப்போதைய பார்வையில் ஓவர் ஆக்டிங். இயல்பாக இருப்பது என்ற போர்வையில் நடிக்காமலேயே இருப்பதுதான் நடிப்பு. இயல்பு நடிப்பு பற்றி எல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. வங்கமும், கேரளமும் கமர்சியல் திரைப்படங்களில் கை நனைத்திருந்தாலும் நம்மைபோல முங்கி குளிப்பதில்லை. சொல்ல வருவதை தெளிவாக சொல்லும் பாங்கு இருக்கிறது. இப்போதெல்லாம், சண்டைகாட்சிகள், தெளிவான காமிரா, கொஞ்சம் பதைபதைக்கும் இசை, உள் ஆர்ந்த கவர்ச்சி, ஆணுக்கு நிகரான பெண்கள் (எதில் என்றெல்லாம் கேட்க கூடாது - சில நேரங்களில் ஆணைவிட அதிகமாக)காமெடி என்ற பெயரில் கூச்சலும் கும்மாளமும் என்பதெல்லாம் திரைப்படமாகிவிட்டது. பாலுமகேந்திராவும் விதிவிலக்கு அல்ல போல - புகைபடங்கள் வேறு மாதிரி பேசுகின்றன. கதை என்பது ஒரு வரி விஷயம். வசனம் என்பது அதிபுத்திசாலிதனமாக இருக்க வேண்டும் என்பதாலேயே குழப்பங்கள் கூடியது. எடிட்டிங் என்ற பெயரில் வேகமான புரிதலுக்கு முந்தய பட ஓட்டம். யாருக்காக திரைப்படம் என்பதே புரியவில்லை - எல்லாம் படித்த, உலக படங்கள் பார்க்கும், மேல்தட்டு சமூகத்துக்கு மட்டும் திரைப்படம் என்றால் அவர்கள் உலகபடங்களே பார்கலாமே- தமிழ் படங்களில் என்ன உண்டு விஷேசமாக - உச்சரிப்பு தங்கிலிசை தவிர...

பெசன்ட் நகர் கடற்கரைக்கு

சென்ற முறை பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றிருந்த போது, ஒரு சிறுமியை பார்த்தேன். கையில் பட்டங்கள் - நிஜ பறக்கும் பட்டங்கள். வாயில் ஏதோ சினிமா பாடல். எல்லாரிடமும் பட்டம் வாங்க சொல்லி கெஞ்சி கொண்டு இருந்தாள். யாரும் அவளை பொருட்படுத்தவில்லை சிலரை தவிர. குழந்தைகளுக்காக பட்டம் வாங்கினார்கள், சில இளைஞ்சர்களும் வாங்கினார்கள்... அப்புறம் நான் மணலில் உட்கார்ந்து கொண்டேன். நண்பர்களில் கடலில் விளையாடிகொண்டு இருந்தார்கள். சில நிமிடங்களில் அந்த சிறுமி பட்டங்களை ஒரு கையிலும் இன்னொரு கையில் ஏதோ ஒரு பொருளுடனும் கடலில் விளையாடி கொண்டிருந்த இளைஞ்சர்களை கெஞ்சி கொண்டு இருந்ததை கவனித்தேன். அவள் கையில் ஏதோ கடல் விலங்கு - அரைகுரை உயிருடன். நீர்வேகத்தில் கரை ஒதுங்கிவிட்டது போலும்,. அதனை மீண்டும் கடலில் விட சொல்லி எல்லாரிடமும் கெஞ்சி கொண்டு இருந்தாள். இம்முறை சுத்தமாக யாரும் அவளை பொருட்படுத்தவில்லை. அப்புறம் பட்டங்களை மணலில் செருகினாள். உடையை மேலிழுத்து செருகி கொண்டு ஒரு கையில் அந்த மீனுடன் கடலில் இறங்கினாள். மார்பளவு தண்ணீரில் நின்று வேகமாக அதனை கடலினுள் வீசினாள். பட்டங்களை எடுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள் - மீண்டும் அதே பாட்டை முனுமுனுத்து கொண்டு. என் வயதில் நான் இப்படி இருந்திருக்கிறேனா..? நிச்சயம் கிடையாது. ஒரு மீனுக்காக கவலைபடும் சிறுமி நிச்சயம் என்னிலும் உயர்ந்தவள். சொல்லபோனால் நம் படிப்பு, சமுதாய பழக்கங்கள் எல்லாம் நம் இயல்பு வாழ்க்கையை மெல்ல நம்மிடம் இருந்து எடுத்து கொண்டன. மிஞ்சி நிற்பது சொஞ்சம் சுயநலமும், நிறைய ஆசைகளும் கவலைகளுமே... மனிதாபிமானம், அன்பு, காதல், பரிதாப உணர்ச்சி, உதவி செய்யும் மனோபாவம் மற்றும் மனித உணர்வுகள் எல்லாம் இருந்தால் அற்புதமான ஒரு பெயர் உங்களுக்கு உண்டு நம் சமூகத்தில் -- இளிச்சவாயன்...

சைக்கிள் ...

சைக்கிள் என் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. முதல் காதலை சொல்லி கொடுத்தது சைக்கிள்தான். அப்போதெல்லாம் சைக்கிள் வாடகைக்கு மட்டுமே கிடைக்கும். 1 ரூபாய் க்கு ஒரு மணி நேரம். ஆனால் 1 ரூபாய் பெரிய பணமானதால் எனக்கு கிடைப்பது நாலணாவும், எட்டணாவுமே. அப்போது எனக்கு சரியாக சைக்கிள் ஓட்ட வராது. என் வயது பயலெல்லாம் சைக்கிளில் வித்தை காண்பிக்க எனக்கு குரங்கு பெடல் கூட வராது. (இன்றைக்கும் அது எனக்கு பெரிய ஆச்சரியம் - எப்படி பேலண்ஸ் பண்ணுகிறார்கள்.) எனக்கு அப்போது ஒரு தோழி இருந்தாள். சங்கீதா. அது எங்கள் இருவருக்குமே காதல் செய்யும் வயது கிடையாது எனினும், ஒரு ஜெனிடிக் ஈர்ப்பு இருவருகுள்ளும் இருந்தது. கொஞ்சம் நெருக்கமான நட்பு. ஒரு வகையான பொஸிசிவ்னெஸ். ஊரெல்லாம் சேர்ந்து சுத்துவோம். இதனால் பசங்களுக்கு என்மேல் காண்டு இருந்தது வேறு விஷயம். அவளிடம் நான் நிறைய ரீல் விட்டிருந்தேன். அதில் ஒன்று எனக்கு பிரமாதமாக சைக்கிள் ஓட்ட தெரியும் என்பது. அவளும் ரொம்ப நாளாக அதனை நம்பியிருந்தாள். ஒருதடவை அவளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுதரும்படி என்னிடம் அவள் கேட்கும் வரைக்கும் எல்லாம் நன்றாகவே போனது. அவள் கேட்டதும் உலகமே நின்றது போல இருந்தது. எனக்கு தெரியாது என ஒத்து கொள்ள ஆம்பளை மனது கேட்கவில்லை. பசங்களிடம் போய் உதவி கேட்கவும் மனதில்லை (சுலபமாக டீல் விட்டுவிடுவார்களோ என்ற பயம்தான்.) எவ்வளவு தவிர்க்க பார்த்தும் ஒரு ஞாயிற்று கிழமை ஊருக்கெல்லாம் சுகமாகவும் , எனக்கு மட்டும் விவகாரமாகவும் விடிந்தது. ஒரு பெண்கள் சைக்கிள் போன்ற அமைப்புடைய சைக்கிளை அவளும் நானும் தள்ளி கொண்டே குளத்தோர மைதானத்துக்கு போனோம். அவளை ஏறி உட்கார சொன்னேன். இருவருக்குமே நடுக்கம். சைக்கிளில் சீட்டின் நேராக உட்காருவதே ஒரு கலை. அதற்க்குள் கிழே விழுந்து இருவருக்கும் சிராய்ப்பு. அப்புறம் பின்னால் பிடித்து கொண்டு, நேரா பாரு நேரா பாரு என்று கத்தி கொண்டே நாக்கு தள்ள ஓடி, ஒரு வழியாக நிறைய சிராய்ப்புகளுடனும், ஏகப்பட்ட வியர்வைகளுமாக அவள் சைக்கிளை ஓட்டினாள். நான் பின்னாலேயே ஓடினேன் - வேறு என்ன செய்ய முடியும். அப்போதுதான் கற்று கொண்டேன். சைக்கிள் ஓட்ட தெரியாவிட்டாலும் சைக்கிள் சொல்லி கொடுக்க முடியும் என்பதை. ஆனால் விதி வேறு விதமான சதி செய்திருந்தது. வீடு திரும்பும் போது அவளுக்கு காலில் ஏற்பட்டிருந்து சிராய்ப்புகளால் நடக்க முடியவில்லை. காலையில் வரும்போது தூரம் தெரியவில்லை - இப்போது களைத்திருந்ததால் தூரம் அதிகம் போல தெரிந்தது. அந்த கேள்வியை அவள் கடைசியில் கேட்டே விட்டாள் "என்னை வச்சு டபுல்ஸ் கூட்டிட்டு போடா.." - பெண் பிள்ளை கேட்டு மறுக்க முடியுமா..? எல்லாம் ஒரு நம்பிக்கைதான். அவளை கேரியரில் உட்காரவைத்து ஊரில் உள்ள சாமியெல்லாம் மனசில் நினைத்து கொண்டு ரெண்டு அழுத்து அழுத்துவதற்க்குள் பேலன்ஸ் தவறி, சைக்கிளோடு இருவருமே குளத்து சேத்தில் அமிழ்ந்திருந்தோம். எனக்கு நல்ல அடி. அழக்கூட முடியாது - பெண் பிள்ளை முன்னால் அழுவதா..? ஆனால் அவளுக்கு அந்த லஜ்ஜை எல்லாம் கிடையாது. ஓவென கத்தி அழ ஆரம்பித்து விட்டாள். அவளை சமாதனபடுத்துவதா, என் காயத்துக்கு எச்சில் தடவுவதா, பெண்டான சைக்கிள் வீலுக்காக பயப்படுவதா என தெரியாமல் கொஞ்சம் நேரம் பிரமை பிடித்து உட்கார்ந்து இருந்தேன். ஒரு வழியாக தைரியத்தை வரவழித்து கொண்டு, அவளையும் அழைத்து கொண்டு வீடு சேர்ந்தோம். சரியான திட்டு. எல்லாரிடமும். அவங்க வீடு, என் வீடு போதாகுறைக்கு சைக்கிள் கடைகாரன். கொஞ்ச நாள் அவள் என்னிடம் பேசவே இல்லை. அப்புறம் ஒரு நாள் டூரிங்டாக்கிஸில் இருந்து திரும்பும்போது அவள் ஏதோ பேச, நான் ஏதோ பேச கொஞ்சம் கோபம், கொஞ்சம் சிரிப்பு என சீக்கிரம் பழைய நட்பு பற்றி கொண்டது. இன்றும் அந்த பொய்யும், அதற்கு அவளால் கிடைத்த தண்டனையும் மறக்க முடிவதில்லை. பேசாமல் இருப்பது பெரிய தண்டனை - அதுவும் மனதுக்கு இனிய தோழி என்றால்... அப்புறம் பள்ளி இறுதியில் சைக்கிள் நன்றாக ஓட்ட தெரிந்த காலகட்டம் - சாயந்திரம் டைப்பிங் இன்ஸ்டியூட் வழியாக வேகமாக சைக்கிளில் போவது, வளைவில் ஸ்டெயிலாக திரும்புவது, கையை விட்டு விட்டு ஓட்டுவது, வேகமாக திரும்பும்போது தவறுதல் போல பேப்பர்களை தவறவிடுவது.. அதை எடுத்து தரவே அங்கே ஒரு பெண் இருந்தாள். அய்யர் பெண் - பெயர் கூட தெரியாது. ஒரு ரோஜா மட்டுமே அடையாளம். எனினும் இன்னும் யாராவது அய்யர் பெண் தாவணிகட்டி தாண்டி போனால் அவள் அடையாளத்தை மனது தேடுகிறது. வயதுகால பெண் நட்புகளை நெருக்கமாக்கி தந்தது எல்லாமே சைக்கிள்தான். சைக்கிள் பாரில் பெண் உட்கார்ந்து இருக்க அழுத்தி மேடு மிதிக்கும் போது, அவள் கூந்தல் முகத்தில் பரவ, பெயர் தெரியாத பூக்களின் வாசமெல்லாம் நெஞ்சில் நிறையும். திருவிளையாடல் பாண்டியனுக்கு வராத சந்தேகமெல்லாம் வரும். அதனால் தானோ என்னவோ இன்றும் சைக்கிள், சைக்கிளில் செல்லும் பெண்கள் எல்லாம் ஏதோ நினைவுகளை விதைத்தபடியே செல்கிறார்கள்.

தீபாவளி...

தீபாவளி விவகாரமாக விடிந்தது இந்த முறை. அலுவலகத்தில் மூன்று மாதத்துக்கு முன்பு ( நான் வேலைக்கு சேரும் முன்னர்) ஆரம்பித்த ஒரு தொல்லைக்கு யாரும் இல்லாத காரணத்தால் நான் பதில் சொல்ல ஆரம்பிக்க அது முடிவில் காலை சுற்றிய பாம்பாகிவிட்டது. நேரம் 12:40 மேல் ஆகிவிட்டதால் உணவு இல்லை - கிடைத்த ஆப்பத்தை சாப்பிட்டு விட்டு, வீடு தேடி வந்தால், வேலைக்கார அம்மாளின் கைங்கரியத்தில் கதவில் ஆட்டோலாக் சிக்கி கொண்டிருக்க நண்பர்கள் தெருவில் நின்றிருந்தார்கள். தெரிந்த நண்பர்கள் எல்லாரும் தீபாவளிக்கு ஊருக்கு போயிருந்ததால் உதவிக்கு ஆளில்லை. பாண்டிபசார் வரை நடந்தோம். ஓட்டல்களில் இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் - வெளியூர்காரகளுக்கு ஓட்டல் அறை இரவில் கிடைக்காதாம் - அப்புறம் எதற்கு ஓட்டல் என்று தெரியவில்லை. நேரம் ரொம்ப ஆகிவிட்டதும் ஒரு காரணம் என்றார்கள். அப்புறம் ஒரு சின்ன அறை கிடைத்தது. அத்தகைய அறையை நான் பார்த்தே இல்லை. 'ஏதேதோ' நடக்கும் இடம் போல. அதுக்கு ஆயிரம் கேள்விகள். அலுவக ஐடி கார்டு வாங்கி வைத்து கொண்டார்கள். மூன்று பேர். குப்பையான மெத்தைகள், அழுக்கான அறை. சத்தம் போடும் மின்விசிறி. கைகுட்டையை கண்ணில் கட்டிகொண்டு வலுகட்டாயமாக கண்களை மூடி கொண்டு தூங்க முயற்சி செய்ததிலேயே விடிந்து விட்டது. 8:45 க்கு ஒரு பூட்டு ரிப்பேர்காரனை அள்ளி கொண்டு வந்தால் அவன் ஒரு கம்பியில் 10 தேய்ப்பும், 4 தீக்குச்சிகளும் செலவு செய்து 20 நிமிடத்தில் கதையை முடித்து விட்டான். ஒரு தேனீர் குடித்து விட்டு, 9:30க்கு தலைக்கு எண்ணைவைத்து குளித்து, சென்ற முறை கோவை சென்றிருந்த போது எடுத்த புது துணியை அணிந்து கொண்டு நட்பு வட்டம் எல்லாம் கூப்பிட்டு, வாழ்த்து சொன்னேன். உணவு விடுதிகள் இல்லாததால் மதிய உணவும் சேர்த்து 1 - 1/2 நான் - காளான் மசாலாவில். இரவு - இருக்கவே இருக்கிறது மாகி நூடுல்ஸ். கொஞ்சம் டிவிடி திரைப்படங்கள், கொஞ்சம் தூக்கம், முடிந்தே விட்டது தீபாவளி. நாளைக்கு மறுபடியும் அலுவலகம்... இயந்திர வாழ்க்கை... தீபாவளி சாக்கிலாவது நட்பு வட்டங்களில் ஆழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. என்னதான் மின் அஞ்சலும், இணைய வழி வாழ்த்துக்களும் இருந்தாலும், நேரில் வாழ்த்து சொல்லும் சுகம் அலாதி.

பள்ளியின் கதவுகளில்...

கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் பழைய மாணவர் பேரவை 25 ஆண்டுகளுக்கு முந்திய மாணவர்களை மீண்டும் கலந்துரையாட செய்து அற்புதமான ஒரு முயற்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. இப்போதெல்லாம் மாதம் இருமுறை வைக்கிறார்கள் என நினைக்கிறேன். பழைய நண்பகளை அதுவும் நெடுநாட்களுக்கு பிறகு சந்திப்பது அற்புதமான விஷயம். நானும் என் பள்ளி நண்பர்களை அப்படி சந்தித்து இருக்கிறேன். 8ஆம் வகுப்பில் இருந்து ஒரு பழக்கமாக பள்ளி குழு புகைபடங்களின் பின்புறம் வரிசைவாரியாக பெயர்களை எழுதிவைப்பதை பழக்கமாக கொண்டதினால் இன்னும் புகைபடங்கள் பார்க்கையின் பெயர்கள் நினைவிருக்கிறது. இந்த பழக்கத்தை சொல்லிகொடுத்த தமிழ்அய்யாவுக்கு என்றும் நன்றி சொல்வேன். ஆயினும் சிலரை எங்காவது எத்தோசையாக பார்க்க நேரிடும் போது பெயர் தொண்டையில் சிக்கி கொள்கிறது. ஆரம்ப பள்ளி தோழர்களை சில முறை கிராமத்துக்கு போகும்போது சந்திப்பதுண்டு. முருகன் என்றொரு நண்பர் - அருணாச்சலம் மளிகை கடை வைத்திருக்கிறார். திங்களூர் - பெருந்துறை பகுதியில் ஒரு சின்ன ஊர் (இப்போதெல்லாம் நிறைய மாறிவிட்டது - கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்கள் தங்கள் அடையாளத்தை இழந்து வருவதற்கு சான்றாக). எனக்கு வீடு தாண்டிய உலகத்தை அறிமுகம் செய்த ஊர். சோளக்காட்டுக்குள் பயமுறுத்தும் அய்யனார் கோவில், ஆரம்ப பள்ளி கூடத்தின் திண்ணைகள் கட்டிய வகுப்பறைகள், யாரோ ஒரு மாணவன் எழுதிய இன்றைய மாணவர் பதிவு மற்றும் யாரோ ஒரு ஆசிரியர் சொல்லி கொடுத்த பாடத்தின் அழிக்கபட்டாத மிச்சங்களுடன் கூடிய கரும்பலகை, கொடி ஏற்றும் மைதானம், சந்தை பகுதி, ஊருக்கு வெளியே வருடம் ஒரு முறைமட்டுமே கதவு திறக்கபடும் இருண்ட கோவிலுன் கல் மண்டபங்கள் எல்லாம் என்னுடன் வரும்போது அவர் ஆச்சரியமாக பார்ப்பார். இதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என எனக்கு தெரியவில்லை என்பார். அவர் மனைவி அற்புதமான சமைப்பவர். ஊர் திரும்பும் வரை நாக்கினடியில் சுவைக்கும் கோழி குழம்பு. இரண்டு அற்புதமான குழந்தைகள் - அதே ஓட்டு பள்ளியில் படிக்கின்றன (அடுத்த வருஷம் பெருந்துறைல படிக்க வைக்கணும்...என்பார் அடிக்கடி). என்னோடு நான் பொருத்தி பார்க்கும் நண்பர்கள் குழாமில் முருகனின் வாழ்க்கை என்னை பொருத்தவரை அற்புதமான உலகம். அவனுக்கு என் உலகம்தான் அற்புதம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற சொல்வழக்கு போல. சில நண்பர்களை மறுபடியும் பார்க்கவே முடியவில்லை. ஆறுமுகம் என்றொரு நண்பன் - 3ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தோம். பள்ளி சுற்றுலாவில் மைசூர் போனோம். 3 நாட்களும் கைகளை கோர்த்து கொண்டே(தொலைந்து போகாமல் இருக்க...) சாப்பாடு, தூக்கம், பெரிய சர்ச், பிருந்தாவனம், ஏதேதோ இடங்கள்... இன்று நினைக்கையில் வாழ்க்கையின் முடிந்த பகுதியின் சந்தோஷங்கள் இனிக்கின்றன. வருத்தங்கள் ? - வழக்கம் போலவே....

ஆட்சி மாற்றம்...

NDTVல் நம் ராணுவவீரர்களோடு நட்புமுறை பயணமாக பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் வந்து உறவாடுவதை சென்ற முறை கோவை சென்றிருந்த போது காண முடிந்தது. நிறைய ராணுவவீரர்கள் நன்றாக பாடுகிறார்கள். தாய்பாஷையில் பற்றோடு இருக்கிறார்கள். பிடிவாதமாக அதிலேயே பேசுகிறார்கள். ஆட்டமும் உண்டு. தன் இனத்தின் பாரம்பரிய நடனத்தை அற்புதமாக (கொஞ்சம் வெட்கத்தோடு) ஆடுகிறார்கள். குடும்பம் என்ற ஏக்கம் பலருக்கும் இருப்பதை காண முடிகிறது. அவர்களின் வாழ்க்கை முறையோடு பொருத்தி பார்க்கையில் ஏதோ நாம் மாதம் ஒருமுறையாவது குடும்பத்தோடு உறவாடுகிறோம். பேசுகிறோம். உத்திரவாதமில்லாத வாழ்க்கையில் அவர்கள்... உத்திரவாதம் தரமுடியாத வலுக்காட்டாயமான வாழ்க்கைமுறையில் நாட்டுமக்கள்... ஒரு இந்திய ராணுவ கணக்கெடுப்பில் 68% வீரர்கள், ராணுவம் நாட்டை ஆளவேண்டும் என சொல்லியிருப்பதாக படித்தேன். கலாம் போன்ற குடியரசுதலைவரின் ஆட்சியில் ராணுவம் ஆட்சி பொறுப்பேற்குமாயின் ... மாற்றம் நிச்சயம் வரலாம்.

சென்னையில்...

சென்னைக்கு வந்து சென்ற Oct 21ஆம் தேதியோடு 1 மாதம் முடிந்துவிட்டது. இந்த ஒரு மாதம் ஓரளவில் சென்னையின் வாழ்க்கைமுறைக்கு என்னை பழக்கபடுத்தியுள்ளது. அலுவகம் ஆழ்வார்பேட்டையிலும், தங்கியுள்ள இடம் வடக்கு உஸ்மான் ரோட்டிலும் இருக்க பஸ்ஸும் ஆட்டோவும் கொஞ்சமாய் பழக்கமாகியுள்ளது. உணவு கடைகள், பத்திரிக்கைகள் கிடைக்கும் இடங்கள், Browsing Center, மருந்து கடைகள், ஞாயிறு பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவையும் கொஞ்சமாய் தெரிந்துள்ளன. எனினும் பெருநகரங்களின் வாழ்க்கைவேகம் இன்னும் பிடிபடவில்லை. கோவை மேலும் நெடுநாட்களுக்கு சொர்க்கமாகவே தோன்றும். நிறைய கூட்டம், நிறைய வெயில், மழை வந்தால் தெருவெல்லாம் மூழ்ங்கி போகும் அவலம், கொஞ்சமும் மரியாதை இல்லாமல் தெனாவெட்டாகவே பேசும் மக்கள் சமூகம், அர்த்தமில்லாத வண்டி ஓட்டும் லாவகம், பேஷன் என்ற சொல்லின் தப்பார்த்தமான உடையலங்காரங்கள், எங்கு போவதாக இருந்தாலும் ஆர்காடு நவாப் அளவுக்கு சொத்து இருந்தால்தான் போகமுடியும் என்பது போல சார்ஜ் கேட்கும் ஆட்டோகாரர்கள் என சென்னை இன்னும் விரிந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதி மக்களும், பெருநகரத்தின் வாழ்க்கைமுறையில் தீப்பெட்டிகுள் அடைபட்ட பொன்வண்டு போல இருந்து கொண்டே இருக்கிறார்கள். சொந்த ஊரின் ஞாபங்களை, என்றேனும் ஒரு நாள் என் ஊருக்கே போய்விட போகிறேன் என்ற எண்ணங்களை சுமந்து கொண்டு இருக்கிறார்கள். இனி தொடர்ச்சியாக எழுத முடியும் என நினைக்கிறேன். மத்திய அரசின் சுலபவிலை கணிப்பொறி திட்டம் மூலமாக 1 மாதத்தில் கணிப்பொறிக்கு குறிவைத்துள்ளேன். இணைய இணைப்பும் கிடைக்கும். Browsing Centerல் unicode அமைத்துள்ளேன். அது Windows 98. எனினும் சில இணைய நண்பர்களின் உதவியால் unicode அமைக்க முடிந்துள்ளது. எழுத நிறைய உள்ளது - காலை நேரங்களை உபயோகபடுத்தலாம். அலுவத்தில் நெருக்கல்கள் ஏற்படாதவரை.

Sunday, September 18, 2005

சலூன் ஞாபகங்கள்

சலூன்கள் வாழ்வின் சில முக்கியமான நிமிடங்களை நினைவுறுத்துகின்றன. நான் சின்ன வயதில் இருக்கும்போது ஒரு முடிதிருத்துபவர் வீட்டுக்கே வருவார். காலையில் 6 மணிக்கு எழ வேண்டும். கொசு கடிக்கும் வீட்டு பின் தோட்டத்தில் அவர் முடி வெட்டி விடுவார். ஸ்டைல் எல்லாம் கிடையாது. ஒரே வகையான அலங்காரம்தான் அவருக்கு தெரியும். அதற்க்கு பின்னால் சில வருடங்களுக்கு பிறகு, பள்ளி இறுதிகாலங்களில் சதுரங்கபூம்பட்டிணத்துக்கு சைக்கிளில் சென்று வருவேன். சினிமாவும், காதலும் அறிமுகமாக தொடங்கியிருந்ததால் தலைமுடிக்கும் ஸ்டைல் தேவைப்பட்டது. எப்படி வெட்டினாலும் உள்ளதுதான் இருக்கும் எனினும் ஆசை யாரை விட்டது. அவர் பருமனாக இருப்பார். கசாப்புகடைக்காரர் போன்ற மீசையும் உருவமும். ஆனால் குழந்தைபோல இனிமையானவர். கேட்டதுபோல செய்வார். அதுதவிரவும் ஊர்விட்டு தள்ளி இருக்கும் இன்னொரு கடையும் உண்டு. அது சில நேரங்களில் மட்டும். சுவற்றில் அரைகுறை அந்தகால நடிகைகள், ஜெமினி சினிமாவின் கட்டிங், படிக்ககாத்திருக்கும் பத்திரிக்கைகளில் சினிமா எக்ஸ்பிரஸ், பிலிமால்யா. பொதுவாக முடி திருத்திகொள்ள அங்கே வருபவர்களை காட்டிலும், இவற்றை எல்லாம் ரசிக்க வரும் நபர்களே அதிகம். மீசை அரும்பிய பருவத்தில் இருந்த எங்களை யாரும் பெரியதாக கண்டுகொண்டதில்லை. இன்றும் சலூன்களில் பெருத்த மாறுதல்கள் இல்லை. விசாலமான கண்ணாடிகள் அதிகமாகியிருக்கின்றன. சுவற்றில் நடிகைகள் இல்லை, மாறாக குமுதமும், குமுதம் ஸ்டாரும், ஆனந்த விகடனும், வாரமலரும், குடும்ப மலரும். சில கடைகளில் டைம் மற்றும் இந்தியாடுடே. ரசிக்கும் படியான விஷயங்கள் குழந்தையை கூட்டுவரும் அப்பாமார்கள். அது அழும், சமாதானபடுத்தவேண்டும். விளையாட்டு காட்டவேண்டும். முரண்டுபிடிக்கும், வழிக்கு கொண்டுவர அல்பதனமாக கொஞ்சவேண்டும் - இல்லாவிட்டால் ஊரை கூட்டிவிடும். ஜாலியான விஷயம் என்றாலும் அவர்கள் அசடுவழிவதை காண கண் வேண்டுமய்யா. அரசியல், சினிமா, சூரியன் எப்.எம், சின்ன பாட்டில் ஷவர், படிகாரகல், ஸ்பிரே, சுழலும் பிரமாண்ட நாற்காலி, கண்ணாடிகளில் உள்-கோணங்கள், காத்திருக்கும் நேர டீ.... சலூன் சுவஸ்ரஸ்யமானதுதான்.

இந்தியாடுடேவின் சர்வே

இந்தியாடுடே தனது மூன்றாவது செக்ஸ் சர்வேயை பத்திரிக்கைகளில் பதித்து இந்த ஞாயிறு முழுக்க விவாத மேடைகளிலும் மூழ்ங்கியது ( ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஆஜ்தக்). இந்த முறை இளம் பெண்களிடன் ஆய்வு. என் கருத்துகள் இதனின் கொஞ்சம் மாறுபடுகின்றன. பொதுவாக இந்தியாடுடேவும், காமசூத்திரா நிறுவனமும் தங்கள் ஆய்வரிக்கைகளில் நிறைய முரண்பாடுகளை சொல்கின்றன. மக்களை பத்திரிக்கை வாங்க வைக்க இன்றைய அளவில் செக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது. அது இந்தியாடுடேவாக இருந்தாலும், நக்கீரனாக இருந்தாலும், குமுதம் ரிப்போர்டராக இருந்தாலும் ஜூனியர் விகடனாக இருந்தாலும் சரி. ஒன்றும் இல்லை என்றால் இதில் இறங்கிவிடுகிறார்கள் எல்லாரும். திரை திறந்து பார்ப்பதின் ஆர்வம் எல்லாருக்கும் உண்டு. எனக்கு சில கேள்விகள், எத்தனை பேர் உண்மை சொல்லியிருப்பார்கள். சொல்லாதவர்களின் உண்மைகள் எங்கே? ஓரளவுக்கு முன் வந்து பெண்கள் தங்கள் கருத்துகளை சொல்லியிருந்தது பாராட்ட கூடிய விஷயம் எனினும் ஆண்கள் அளவுக்கு பெண்கள் வெளிபடையாக இல்லை இந்த விஷயத்தில் என்பது உண்மையாக அனைவராலும் கருதப்படுமாயின், பதிக்கபட்டுள்ள சதவீதங்கள் எந்த அளவுக்கு சமுதாயத்தில் நிஜம்.? சொல்லாத, சொல்லவிரும்பாத, பத்திரிக்கைகள் சந்திக்காத சதவீதம் என்னவாக இருக்கும்.? மேலா கீழா ? எனினும் ஹைத்திராபாத்தும், சென்னையும் முந்தைய வருடங்களைவிட வித்தியாசம் காட்டியிருப்பதை பத்திரிக்கை ஆசிரியர் சொல்லிகாட்டியுள்ளார். காரணம் ஆராய்ந்தால் வேறு என்னவாக இருக்க முடியும், பணமும் தனிமையுமே. கொஞ்சம் கொஞ்சமாக சமுதாயத்தில் மது அருந்துவது ஒரு அந்தஸ்துக்குரிய விஷயமாகுதலை போல செக்ஸ் ஒரு விஷயமாகும் நாள் அதிக தொலைவில் இல்லையோ? குடும்பம் என்னும் அமைப்பை ஏற்கனவே சீரழிக்கும் சினிமாவும், தொலைகாட்சி நாடகங்களும் மெல்ல மெல்ல செக்ஸையும் - அது முறையற்றதாயினும் தவறில்லை எனும் கருத்தையும் திணித்து கொண்டு வருகின்றது. உதாரணம்: சினிமா பாடல்களும், படமாக்கபடும் விதங்களும், தொலைகாட்சி விளம்பரங்களும், கருத்துகளில் உள்ள பெண்விஷயங்களும், தொலைகாட்சி நாடக சம்பவங்களும், மருத்துவ நிகழ்ச்சிகளும், அதுதவிர கொஞ்சம் கொஞ்சமாக குமுதமும், விகடனும் மற்ற ஜனரஞ்சக பத்திரிக்கைகளும்... இந்த லட்சணத்தில் இணையத்தையும் செல்போன்களையும் குற்றம் சொல்கிறார்கள். அதுவும் தவிர சினிமாவில் புகை பிடிக்கும் காட்சியால்தான் சமுதாயம் கெடுகிறதாம்...மற்றபடி தைரியமான ஒரு சர்வேக்காக இந்தியாடுடேவுக்கு வாழ்த்துக்கள்.

Monday, September 05, 2005

நேரடியாக தமிழில்

நேரடியாக தமிழில் கருத்துகளை பதிக்க இந்த முகவரி அற்புதமாக துணை புரிகிறது.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

சில நேரங்களில்

பெரு நகரங்களின் வாழ்க்கை சூழல் சுனாமியாய் மனித வாழ்வின் நிமிடங்களை சுழற்றும் போதிலும், ஊர் ஞாபகங்கள் வீட்டு தாழ்வாரத்திலலும் திண்ணையிலும் தேங்கி நிற்க்கும் மழை நீர் போல சில நேரங்களில் சலனமிக்கிறது. பாட்டி, வார சந்தை, வருட பொங்கல், தேர் விழா,
ஐய்யானார் பூஜை, கோழி சண்டை, ஓட்டு பள்ளி கூடம், தமிழ் அய்யா, கணக்கு வாத்தி, முட்டி கிழிந்த சண்டை, அய்யர் வீட்டு வத்சலா அக்கா,
தண்ணி துப்பாக்கி, பஞ்சாயத்து ரேடியோ, டூரிங் டாக்கிஸ்...அப்புறமும் எத்தனையோ... என் மகனுக்கோ, மகளுக்கோ இந்த விஷயங்கள் எந்த
ஆவனத்திலும் இருக்காதோ...

கண் முன்னே
முகம் தொலைத்த கிராமங்கள்
சன் டீவில் ஆழ்ந்து...

செப்டம்பர் 21ல்

செப்டம்பர் 21ல் இருந்து ஜாகை மாற்றம். பெருநகரங்களின் வாழ்க்கை சுழலில் நுழையும் மனதும் உடம்பும். சென்னை புதிதல்ல எனினும்,
கோவைக்கு ஒப்பிடும்போது கொஞ்சம் வேறுபாடு புரிகின்றது. நண்பர்கள் உண்டு, தொழில் உண்டு, வாழ்க்கை மட்டும்... அதன் போக்கில்.
அடுத்த பரிணாமம் எல்லா வகையிலும் தேவை...அதற்க்கான காலம் அமைய கொஞ்சம் மெனக்கெட வேண்டும். செய்வோம்... அது தவிர,
படிக்கவும் - எழுதவும் - பார்க்கவும் - பழகவும் நிறைய நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அவ்வண்ணமே நடக்க கடவ... :)

இளையராஜாவின் திருவாசகம்...

இளையராஜாவின் திருவாசகம்...கண் மூடி கேளுங்கள். உயிர் உங்களிடம் இருந்து உருகும். மெல்லிய முன்னிரவில், நிலவு காய, தென்னை
மரங்களோடு, மனம் கொண்ட துணையோடு, கண் மூடி... ஒரு தியானம் போல, கேட்க கேட்க... உயிர் நம்மில் என்ன வடிவம் என்பது
புலனாகிறது. பொதுவில் இசை ரசனை என்பது காலத்தோடு சேர்ந்தது. சில வகை இசை மட்டுமே காலம் தாண்டியும் ஜீவிக்கலாம். திருவாசகம்
அப்படி ஒன்று. மெல்லிய இலை ஒன்று காற்றில் லயத்தோடு பறக்கும் லாவகம் இசை ரசிக்கும்போது வருமேயானில் ஜீவிதம் புனிதமாகிறது.ஓதுவாரின் திருவாசகம் ஆன்மீக சாரல், இசை கொண்ட இந்த திருவாசகம் மனசு நிறைய மட்டும்.

பணம் இன்றைய உலகில்

பணம் இன்றைய உலகில் நிறைய விளையாடுகிறது.. செய்யும் தொழிலின் நேர்மையும்...அதின் நேர்த்தியும் பணத்தின் முன் காணாமல் போகிறது.நிறைய பணம் என்பது குறிகோளாகி, திறமையான தொழில் என்பது வெறும் வார்த்தை பிரயோகமாகிவிட்டது. பணம் தேடாதவனை "பிழைக்க
தெரியாதவன்" என்று சொல்வதில் யாருக்கும் குற்ற மனப்பாண்மை இல்லை. படிப்பு, தொழில் எல்லாமே பணம் சார்ந்தது. எனில் திறமை மட்டும்
கொண்டவன் பிழைக்க வழி...சமூகம் வழிகாட்டுகிறது. குற்றங்கள் பெருக பெருக..படித்தவனின் திறமை பயத்தை விளைவிக்க தொடங்க..சமூகம்
அவனுக்கு மரியாதை கொடுக்கிறது...ஒருவன் வாழ்க்கை அடுத்தவருக்கெல்லாம் சரித்திரம். இன்னும் எத்தனை காலங்களோ.. யார் யாரும் இங்கே
சாட்சிகளாக மட்டும்...

வாழ்வின் பெண்கள்

கமல் தன் வாழ்வின் பெண்கள் பற்றி பேசியிருந்தார்.பெண்கள் இல்லாத உலகம் கற்பனை செய்ய முடியாத ஒன்று என்றார். இதுவரைக்கும் நான் கடந்து வந்த பாதையில் திரும்பி பார்க்கும் போது அவருடைய கருத்து ஒத்து கொள்ளதக்கது. 1ஆம் வகுப்பில் அரைகுறை நினைவுகளுடன் படித்த தனலட்சுமியிலிருந்து, கல்லூரியில் கூட படித்த நாகரத்தினம்...அப்புறம் (தற்போது சண்டிகரில்) வேலை பார்க்கும் சிந்துஜா, சில நாட்களே உடன் பணிபுரிந்த அபிராமி வரை, புதியதாக சேர்ந்து என்னுடன் வேலை பார்த்து கொண்டிருக்கும் ஒரு மதுரைக்கார பெண் லில்லி தெரஸா வரை.. நல்ல நட்பான பெண்கள் நிறைய உண்டு.

அப்புறம், பள்ளி இறுதி கால நாட்களில் நெருக்கம் கொண்ட சில (Special) தோழிகளும் உண்டு. கல்லூரியிலும் உண்டு. வேலை செய்யும் காலங்களிலும் உண்டு. மனசு எல்லாரையும் ஒரே தட்டில் வைப்பதில்லை. இனம் புரியாமல் அது சலனப்படுபோது, ஒவ்வொருவருக்கும் அதுவே
தனித்தனியான தட்டில் அமைக்கிறது. மனசு ஊஞ்சல் என்றார் சுகி.சிவம். ஒரு நிலைப்பாட்டுக்கு வரும் வரை ஆட்டம் கொண்டுதான் இருக்கும்.அதன் போக்கில் விட்டு கட்டுபாடு அடையும் போது நிறைவான கட்டுபாடு சாத்தியமாகிறது. இது இருபாலருக்கும் பொது என்கிறார் சத்குரு
ஜக்கி வாசுதேவ்.ஆதலனினால் நண்பர்களே..சஞ்சலத்தை சஞ்சலத்தோடு அணுகாதீர் !!!!

மஞ்சள் நிறத்தில் ஒரு கோடு...

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறோம்... என்ன செய்வது... முதல் காரணம் இந்திராகாந்தி பல்கலைகழகத்துக்கும் எனக்கும் உள்ள அசைக்க முடியாத பந்தம்... அப்புறம் அலுவக காரணங்கள்... இனிமேல் தொடர்ச்சியாக எழுத முடிவெடுத்துள்ளேன்.. இது ஒரு வகையில் மனதை திருப்திபடுத்துவதான உணர்வுதான் அதற்க்கான காரணம்... கொண்ட வேலைகளுக்கு மத்தியில் ஒரு பொழுதுபோக்கு, யாரையும் தொந்தரவு
செய்யாமல்.


சமீபத்தில் நண்பர்களுடனான ஒரு விவாதத்தில் "Yellow Line Friendship" எனப்படும் ஆண்/பெண் நண்பர்களுடனான நட்பு பற்றி பேசினோம். இது இப்போது உள்ள சமூகத்தில் பரவலாகி உள்ளது. தோழமை தாண்டிய நெருங்கிய உறவுமுறை... ஆனால் எல்லைகள் கொண்ட
நட்பு... என் பெண் நண்பர்கள் சிலர் "Yellow Line" அமைப்பில் உள்ளனர்... எங்களுக்குள் நெருக்கம் உண்டு... எல்லைகளும் உண்டு... ஒரு நண்பர் கேட்டார்... என் பெண் நண்பர்களுடனான உறவு.. " உடல் சார்ந்த ஈர்ப்பா.." .... நான் சொன்னேன்.. "மனம் சார்ந்த ஈர்ப்பு... " .. "இதில் உடல் பங்கேற்பதில்லையா.. "... " மனதை விட குறைவான பங்குதான்.. " ... " அப்போ.. இது காமமா..
காதலா.. "... " நட்பை விட உயர்ந்த.. காதலை விட உயர்ந்த... காமத்தை விட உயிர்ப்பான.. உணர்வு... " "தோளில் சாய்ந்து கொள்வதையும்... கைகளை கோர்த்து கொள்வதையும்... இடுப்பை அணைத்து நடப்பதும்... உம் கண்களுக்கு காமமேயெனில்... விளக்கம்
ஒன்றுமில்லை.... என் பார்வைக்கு... இது நட்பு சார்ந்த ஆளுமை... யாரும் யாரையும் கட்டாயபடுத்துவதில்லை... விருப்பம் கொண்டவர்களிடம் மட்டுமே உள்ள உறவு இது... " அப்புறம் இது பற்றி பேச பெரிய ஆர்வம் யாரும் காட்டவில்லை...பின்னர் ஒரு முறை
கேள்வி கேட்ட நண்பரை ஒரு Java Green Cafeல் அவருடைய தோழியுடன் பார்த்தபோது அவர் புரிந்து கொண்டிருந்தது புரிந்தது. எனினும் யாரும் சுலபத்தில் ஒத்து கொள்வதில்லை. அப்படி இருப்பவர்களையும் சமூகம் கவனிக்கும் தொனி ஒரு காரணம் என்பது என் கருத்து.

Wednesday, May 25, 2005

காதல் கவிதைகள் புதுசா..

அலுவகத்தில் இருந்து திரும்பி வரும்போது நண்பர் நரசிம்மனும் நானும் இன்றைய சினிமா பாடல்கள் பற்றியும் பாடல் புரியாத இசை பற்றியும் பேசிக்கொண்டு வந்தோம். சில பாடல்கள் மட்டும் காலம் கடந்து நிற்கிறது என்பது இருவரும் ஒத்து கொண்ட விஷயம். ஆனாலும் திரைப்படம் மனதில் நிற்பதில்லை. காரணம் திரைப்பாடல்களில் சில நேரங்களில் நாம் நம்மையே பொருத்தி கொள்கிறோம். அற்புதமான வெஸ்டன் இசையை எங்கோ கிராமத்தில் இருந்து வந்த இளையராஜா எத்தனையோ திரைப்பாடல்களில் பொருத்தி நம்மை மறக்க செய்கிறார்...எப்போதும்.. எனினும் அவரது கிராமிய பாடல்களின் ஈரம் பழைய நினைவுகளை தூண்டுவதை தவிர்க்க முடிவதில்லை.

அற்புதமான கவிதைகள் இன்று மட்டுமே எழுதபடுபவை இல்லை. திருவள்ளுவரும் ஆண்டாளும் எழுதிய கவிதைகள் படியுங்கள்.. காதல் எனும் உணர்வு பற்றி நிறைய சொல்லி தந்தவை அவை. திருக்குறளின் களவியலில் சில குறள்கள்....

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

பொருள்: என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடு! யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே..!

நெஞ்சத்தார் கத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து

பொருள்: எம் காதலர் நெஞ்சினுள் இருக்கிறார். ஆகையால், சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணி சூடான பொருளை உண்ண அஞ்சுகிறோம்.

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்க லுறுவதொன்று உண்டு

பொருள்: நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்கு சொல்லகூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு

பொருள்: அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தை போல, காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கியிருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

வள்ளுவர் அற்புதமான காதலர் எனலாம்.. எனவே இக்கால கவிஞர்கள் சொல்லும் காதல் எல்லாம் ஏறத்தாழ சொல்லபட்ட கவிதைகளின் வழிமொழிதலே எனலாமா...?

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...

Tuesday, May 24, 2005

நல்ல சினிமா...

நல்ல சினிமா பற்றிய குழப்பங்கள் இன்னும் நிறைய பேருக்கு இருக்கின்றன. சினிமா பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததே இதற்க்கான காரணம் என்பது என் கருத்து. பலருக்கு சினிமா இன்னும் ஒரு கவர்ச்சியான பொழுதுபோக்கு. சிலருக்கு செய்திகளையும் கருத்துகளையும் சொல்லும் ஊடகம். சிலருக்கு கலை. சிலருக்கு கனவு... சிலருக்கு
தொழில். ஒரு சாதாரண ரசிகனின் நிலையிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பொதுவில் இன்று சினிமாவின் தொழிற்நுட்பம் சார்ந்த அறிவு மீடியாக்களின் புண்ணியத்தில் கொஞ்சம் பேருக்கு இருக்கிறது. லைட்டிங், எடிட்டிங், கேமரா, காஸ்டீயும், கவிதை சார்ந்த பாடல்கள், சண்டைகள் எடுக்கபடும் முறை என பேசவாவது தெரிகிறது. எனினும் நல்ல சினிமா எது..? இந்த கேள்வியின் பதில்...!!! பல நேரங்களில் குழப்பம்தான்.

ஒரு முறை நண்பர்களுடனான விவாதத்தில் நல்ல சினிமா பழைய படங்கள்தான் என்ற கருத்து வந்தது..சிவாஜியும், எம்ஜியாரும், ஜெமினிகணேசனும் மற்றும் கருப்பு வெள்ளை கால திரைபடங்கள் மட்டுமே நல்ல சினிமா என்றார்கள்.. நான் மகேந்திரனின் உதிரிப்பூக்களையும், மெட்டி, நண்டு போன்ற படங்களை குறிப்பிட்டேன். துரதஷ்டவசமாக யாரும்
அந்த திரைப்படங்களை அறிந்திருக்கவில்லை. பாலுமகேந்திராவின் ஓடாத படங்களையும் யாரும் அறிந்திருக்கவில்லை. வியாபாரரீதியாக ஓடும் திரைப்படங்கள் நல்ல திரைப்படங்களாக ஒத்து கொள்ளபடுவதில்லை. ஓடாத படங்களே நல்ல படங்களாம்... அந்திமந்தாரை, ஹேராம், ஆறிலிருந்து அறுபதுவரை, அன்பே சிவம்... என அவர்கள் வரிசைப்படுத்தினார்கள்... இக்காலங்களில் அழகியும், ஆட்டோகிராப்பும் நல்ல திரைப்படங்களாக
ஒத்துகொள்ளபடுபவை ஆனால் எப்படியோ வசூலும் கொஞ்சம் கொடுத்தவை. நான் நிழல்கள், 16 வயதினிலே, முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே, வானமே எல்லை, இது நம்ம ஆளு, சிந்துபைரவி, மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், கேளடி கண்மணி போன்றவையும் நல்ல படங்கள் என்றேன். எல்லாவற்றிலும் கருத்தும் நல்ல திரைப்படமாக்கலும் உள்ளது. எனினும் வசூலும் கொடுத்தது. குமுதம் அரசு பதில்களில் ஒருமுறை "தேசம்"
திரைப்படம் பற்றிய ஒரு கேள்விக்கு.. " நல்ல கருத்துகளை சொல்வதற்று ஒரு திரைப்படம் தேவையில்லை என்று பதிலளிக்கபட்டிருந்தது.. " .. அப்புறம்.. மலையாளமும் பெங்காலியும் நல்ல படங்களை என்று பேச்சு திரும்பியது... ஏனோ தமிழ் படங்கள் பற்றி .... படம் பார்க்கும் முறை பற்றி தெளிவான எண்ணங்கள் எல்லை. பதேர்பாஞ்சாலி, செம்மீன் படங்களை யாரும் பார்க்காமலேயே கேள்வி ஞானத்திலேயே அவை நல்ல படங்கள் என
விளம்பரபடுத்துகிறார்கள். தமிழின் நல்ல திரைப்படங்கள் மிக சிலருக்கே தெரிந்துள்ளன. நண்பர்களுடன் ஒரு நாள் ஒரு விசிடி கடைக்கு போய் "Mr. & Mrs. Iyar" என்ற திரைப்படத்தின் விசிடி பற்றி விசாரிக்கையில்... "மலையாள செக்ஸ் சினிமா சிடி எல்லாம் கிடையாது சார்" என்றார் கடைக்காரர்.. தலையில் அடித்துகொண்டு திரும்பினோம்.
ராகுல் போஸையும், கொங்கனா சென்னையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த நான் தயாரில்லை. நான் விரும்பிய திரைப்படங்கள் பற்றி பேச நிறைய உள்ளது. பின்னர் ஒருநாள் பேசலாம்.

சரி உன் கருத்து என்ன என்று கேட்பவர்களுக்கு.. யதார்த்தமும்...வாழ்வின் அற்புதங்களையும் அனுபவங்களையும் சொல்லும் எந்த மொழி சினிமாவும் நல்ல சினிமாதான்.

அப்புறம் சமீபத்தில் படித்ததில் பிடித்தது.


ஒரு பத்திரிக்கை பேட்டி ஒன்றில் இயக்குனர் மகேந்திரன் " மனதில் எதிர்பார்ப்பும், அதற்கேற்ற வேகமும் இருக்கிறதா..? நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை அதற்கேற்ற போக்கில் செய்து கொண்டிருங்கள். அதன் விளைவு எப்படியாவது வந்துதான் தீரும். கால ஓட்டத்தில் சற்று பிந்தலாம். அவ்வளவுதான்... "

அப்புறம் சல்மாவின் கவிதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கவிதை

விபத்தில் இருந்து மீண்ட நாளின் உடை
நாம் சந்தித்து கனிந்திருந்த
வேளையில் பகிர்ந்திருந்த உணவு
நெருங்கியவரின் மரண செய்தி
வந்து சேர்கையில்
என் கண்களை கவர்ந்த
சிவப்பு வண்ண கார்
வியப்பாகதானிருக்கிறது
பொருட்களின் மீது
காலம் பதிந்து நிலைபெறுமென்பது...

Monday, May 23, 2005

மீண்டும் சந்திக்கிறோம்... நெடுநாட்களுக்கு பிறகு..

பெங்களூர் பயணமும் அலுவக வேலைகளும் கைகளை கட்டி போட்டு விட்டன. பயணத்தில் சொல்ல நிறைய இருக்கிறது. நீண்ட ரயில் பயணம். ரிசர்வேஷன் செய்திருந்ததால் இம்முறை உட்கார சிரமம் இல்லை. எவ்வளவு நேரம்தான் ஜீனியர் விகடனும், குங்குமமும் படிப்பது... ரயில் ஜன்னல் ஒரு அற்புதமான புத்தகம். நிறைய படிக்கலாம். எத்தனை மனிதர்கள்....இன்னும் வயலில் உழுது கொண்டு.... இன்னும் காட்டு வேலை செய்து கொண்டு... இன்னும் சுள்ளி பொறுக்கி கொண்டு... எத்தனை குழந்தைகள் இன்னும் ரயில் செல்பவர்களுக்கு டாடா காட்டிகொண்டு.. பாவம்..

அவர்களுக்கு திரும்ப யாரும் டாடா காண்பிப்பதில்லை.. ஆனாலும் அந்த குழந்தைகள் எல்லா ரயில்களுக்கும் இன்னும் டாடா காட்டிகொண்டுதான் இருக்கின்றன. இன்னும் விடியாத கிராமங்கள் எத்தனையோ.. ஆனாலும் இரவில் ஏறக்குறைய எல்லா கிராமங்களிலும் டிவி அவர்களுக்கு எட்டாத நிறைய கனவுகளை காட்டி ஏமாற்றி கொண்டுதான் இருக்கின்றது. டூரிங் டாக்கீஸ் சினிமாக்களில் தங்கள் ஏக்கங்களை தொலைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்... தருமபுரி ரயில் நிலைய பிளாட்பாரமில் வடியும் குழாய் தண்ணீரை மட்டுமே குடித்து வயிறு நிரப்பி கொண்டலையும் நாடோடி கும்பல்கள்... அவர்களின் குழந்தைகளுக்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும்... என்னுடன் "Java Certification" எழுதுவதற்காக பயணம் செய்த ஒருவர்.. "இவர்களுக்கு நம்மை போல கவலைகள் இருக்கமுடியாது" என்றார்.. நமக்கு நிறைய தேவைகள்.. அதனால் கவலைகள்.. அவர்களின் தேவை தெளிவானது.. கொஞ்சம் உணவு.. அதற்க்கான உழைப்பு.. அப்புறம் குடும்பமும் குழந்தைகளும்.. ஜாவா, .னெட், லட்சங்களில் சம்பளம், அழகான மனைவி, கிரடிட்கார்ட் வாழ்க்கை, வெளினாட்டு கார், உயர்தர உணவகம், வெளினாடுகளில் வாரவிடுமுறை...எதுவும் அவர்களுக்கு கிடையாது.. எனவே.. கவலைகளுக்கும் அளவுண்டு.

பெங்களூர் ஆனந்தராவ் சர்க்கிளில் ஷீத்தல் விடுதியில் தங்கியிருந்தேன். போன வேலை முடிந்ததும்.. இரவு நேர பெங்களூர் இரு கரங்களுக்குள் என்னை அணைத்து கொண்டது. நிறைய பணம், நிறைய டெக்னாலஜி, நிறைய கவலை, நிறைய டென்ஷன், நிறைய பார்கள், நிறைய பெண்கள், நிறைய குறைபாடுகள்... அவர்களது உடையிலும் என்னுடய மனதிலும்.. இன்னும் அவ்வளவு பக்குவம் வரவில்லையோ என்று நினைப்பதுண்டு. என்ன செய்யலாம்...வயசு அப்படி...ஆனால் இன்னொரு பக்கம்... "ஆண்கள் இல்லாத உலகில் பெண்கள் இங்கனம் உடையணிவார்களோ.. ?" என்ற கேள்வி எழும்.. பெண் பார்க்க சாகசம் செய்யும் ஆணுக்கும்... ஆண் பார்க்க சாகசம் செய்யும் பெண்ணுக்கும் ... முறைகள் வேறுபட்டிருப்பினும்...காரணம்
ஒன்றுதானோ..?

ஆண் பெண் சுதந்திரம் தவறாக புரிந்து கொள்ளபட்டிருக்கிறது என்ற கருத்து சில நேரங்களில் புலப்படுகிறது. ஏறக்குறைய நிறைய பெண்கள் மதுபானங்களை சுவைக்கிறார்கள். ஆண் நண்பர்கள் இல்லாதது சமூககுறைபாடாக தெரிகிறது... மதுரையிலும் கோவையிலும் இருந்து புதியதான சமூகத்தில் அடியெடுத்து வைக்கும் நண்பர்கள் சுலபமாக வசப்படுகிறார்கள்.. மல்டிநேஷனல் நிறுவனங்கள் மனிதர்களை சுலபமாக பிழிந்து சாறு எடுக்கின்றன. காய்ந்த சறுகுகள் தங்களை மீண்டும் உய்வித்துகொள்ள இங்கனம் மாயவலையில் மிக சுலபமாக சிக்கி கொள்கிறார்கள். மிக சிலரே தரம் தெரிந்து தன்னை அறிந்து அடுத்த நிலைக்கு தங்களை உயர்த்தி கொள்ள ஆர்வமும் முயற்சியும் கொள்கிறார்கள். மற்றவர்களின் உடலும்
மனமும் பிழிந்து வீசப்பட்டு இருக்கிறது... அவர்களுக்கு மகிழ்ச்சி.. உயர்தல் என்பது வேறு சமூகம்...அப்பனுக்கும் பாட்டனுக்கும் கிடைக்காத சம்பளம்..தனக்கு கிடைத்தவுடன்..உலகம் காலுக்கடியில் இருக்கும் உணர்வு.. பாலகுமாரன் ஒருமுறை எழுதினார். ' பளபளக்கும் ராஜ உடைவாள்... பார்பதற்கு கம்பீரமும், கலவரம் கொடுக்கும்.. எல்லாம் கையில் எடுத்து பார்க்கும் வரைக்கும்.. கையில் எடுத்ததும் தலைக்கும் மேல் உயர்த்தி பார்க்க நினைக்கும் மனது... ' மனதின் வேகமும் தன்னிலை இழக்கும் திறனும் இதனைவிட அருமையாக யாரும் சொல்ல முடியாது. சில நேரங்களில் இது ஒரு புலம்பல் போலவும் உள்ளது... 'உனக்கு கிடைக்கல .. புலம்பற.. ' என்றும் கூட சொல்லலாம். விவாதங்களுக்கு வரவேற்ப்பு உண்டு. விமர்ச்சனங்களை எதிர்கொள்வதிலேயே தன்னையறிதல் சாத்தியப்படும்.

சாப்பிட புதியதாக ஒரு இடம் கண்டுபிடித்தாகிவிட்டது. ஒரு ஆந்திரா மெஸ்... நல்ல சுவை காரம்.. உடம்பை கெடுக்காத உணவு. NASA என்றொரு பப். புத்தம் புதிய பியர் கிடைக்கிறது.. ஆண்கள் பெண்கள்.. தண்ணீர் குடிப்பதுபோல குடிக்கிறார்கள்..பக்கத்தில் இருந்து பேசினால் கூட கேட்டாத அளவுக்கு மேற்கத்திய இசை.. வளைந்து வளைந்து ஆடும் பெண்கள்..இன்றுதான் கடைசி என்பதுபோல துடிக்கும் ஆண்களின் ஆட்டம்..2 மணி நேரம் கழித்து வெளியில் வந்து நின்றபோது...தருமபுரி ரயில் நிலைய நாடோடி கும்பல் நினைவுக்கு வந்தது... இவர்கள் அவர்களை போல வாழ முடியுமா..? அவர்கள்தான் இந்த வாழ்க்கையை நினைக்க முடியுமா..? அன்பே சிவம் திரைபடத்தில் மாதவன் கதாபாத்திரம் கிட்டதட்ட இந்த கேள்வியை
அடிப்படையாக கொண்டு அமைந்து போல தோன்றும். ஆர்வமுள்ளவர்கள் விவாதிக்கலாமே...

அப்புறம் வழக்கம் போல ஒரு கவிதை...சி.கே. ராஜாசந்திரசேகர் கவிதைகளில் இருந்து...

மழை
மழையாகவும் இருந்திருக்கிறது
கவிதையாகவும் இருந்திருக்கிறது
மனங்களுக்கு தக்கபடி...

குடைகள்
ரசிப்பதில்லை
மழையை...

ஒரு மழை நாளில்தான்
உன்னை பார்த்தேன்
அதிலிருந்து இன்னும்
தூரலாக விழுந்து கொண்டிருக்கிறாய்
மனதில்...

மழையின் முன்நேரங்கள் கூட
மழையை போலவே
ரசிக்கபட வேண்டியவை

மரங்களில்
சொட்டி கொண்டிருக்கிறது
மழையின் மழை...

நீ நடக்கிறாய்
மழை
நனைகிறது

மழை ஜன்னல்
சூடான தேநீர்
அசைபோட வைக்கும்
ஞாபகங்கள்
கணங்கள் இப்போது
கனிகளாய்...

Friday, May 13, 2005

Some Interesting IT-Facts

37% of broadband users look up Web sites related to TV programming, according to Forrester Research report. Forrester Research surveyed 3,207 US adult consumers online, HeadlightVision conducted in-home interviews in 17 households. 34% of broadband users look up Web sites mentioned on TV ads. 18% take part in online polls mentioned on television, and 11% go online to learn about characters in a show. Wired broadband now accounts for 50% of Internet hits, while dial-up accounts for 43% and wireless broadband accounts for 8%.

40% of US consumers have read a political blog and more than 25% read them once a month or more, according to Harris Interactive. There are more adults reading the blogs of political pundits and prognosticators than there are people posting comments on them. Out of 2,630 online adults, less than 10% had ever posted a comment to a political blog. Harris found that 15% of those surveyed had posted comments.

While Peer-2-Peer and piracy issues have not entirely disappeared, consumers are showing heightened awareness and interest in legitimate online music services, reports In-Stat. The worldwide online music market is expected to grow 134% this year, reaching $1 billion for the first time. Over 50% of the survey respondents who have downloaded music from the Internet admitted to not paying for it. The average amount spent in the past year for online music was $25. 35% of the respondents are owners of an MP3 player, with 70% saying it was their first one.

Analysys Research said active mobile penetration, which excludes phones that have not been used for about three months, would grow to 98% from 90% in 2006 and eventually exceed 100% in Western Europe. Cell phone penetration in western Europe will hit 100% by 2007. Analysys expects mobile service revenue to grow at 9% per year between 2004 and 2007.

IDC found that US wireless carriers generated $1.6 bln in data service and application revenues in Q4 2004 from a base of 178.2 mln subscribers and customers. Data services and applications are essential to slowing or reversing the slide in average revenue per unit (ARPU) associated with the voice side of the business - and while data represented some 5.8% of industry-wide ARPU in Q4 2004, IDC anticipates it will grow to better than 15% of total service revenues in the years ahead.

18% of the $20.9 bln venture capitalists invested in 2004 went to biotech, up from 4% just five years before. The San Francisco Bay Area has 820 biotech companies with 80,000 workers, more than any other US region, BayBio says.

US employers created 262,000 jobs in February 2005, as auto workers returned from temporary layoffs and construction activity snapped back from a cold January, according to the Labor Department. The unemployment rate, however, rose to 5.4% from January 2005 5.2%, but the gain partly reflected an increase in workers entering the labor force.

Fast Company magazine runs a list of top 25 jobs. They analyzed such data as job growth (in terms of employer demand), salary potential, education level and room for innovation. Among the IT occupations, both software engineer and systems analyst made it to the top 10 list, ranking #3 and #9 respectively.

1. Personal finance adviser
2. Medical scientist
3. Computer software engineer
4. Chiropractor
5. Environmental engineer
6. Biochemist and biophysicist
7. Sales manager
8. Epidemiologist
9. Computer system analyst
10. Athlete

Society of Human Resource Management found that 75% of the nation's employees are looking for a new job. Executives are the most dissatisfied, with 82% on the job hunt. 43% say they want a new job for more money. But dissatisfaction with opportunities at their current job and burnout were pretty high on the list too (35%).

Thursday, May 12, 2005

தமிழில் Unicode ...

தமிழில் Unicode உபயோகத்தில் எழுத ஆரம்பித்து நண்பர்களுக்கு சொன்னவுடன்... வழக்கம் போல நிறைய கேள்விகள். அவற்றில் சிலவற்றுக்கு இங்கே பதில்கள்.

1. How do I know if a given Tamil font is of Unicode kind and also includes Tamil block?

On Windows 2000/XP, you can use the "character-map" utility available within /accessories/system tools/ to look at the contents of all fonts installed in your computer. Select the font you are interested on the top and also "unicode-Tamil" as the block you want to look at. If your font is based on Unicode and has Tamil support, you should be able to see a set of all basic characters that are
defined in the Unicode Tamil block and also additional Tamil glyphs stored in the font.

2. If I prepare the text in TSCII or TAB, is there a text convertor to convert it to Unicode format?

Yes, Murasu Anjal 2000SE comes with a Text Convertor that allows you to open any TSCII or TAB or other popular Text Encodings (has even an auto encoding detection tool incorporated) and generate equivalent unicode text. Remember that, for use in Web pages, the Unicode based text must be stored in UTF-8 format.

3. How are unicode-based Tamil texts handled on the Web?

For use in the Web/Net, Unicode based texts are to be stored in the source/html files in a specific UTF-8 format. (Notepad allows you to save Unicode Texts in this UTF-8 format. So if you know how to add html tags yourself, you can prepare a Tamil webpage using Notepad alone).

4. What browsers do I need to view Unicode Tamil webpages?

Netscape browser 4.6 onwards and Internet Explorer 4 onwards are unicode-intelligent. Hence if they are used in conjunction with Win 2k/XP, they will display Tamil webpages correctly.

Because Unicode-based texts are stored in UTF-8 format, you need to set the browser also correspondingly before viewing Unicode Tamil webpages. Two things you need to do: a) select a unicode font that carries Tamil block as the default font for use with unicode encoding/char-set and b) set also the browser to display the webpage in UTF-8 format. If you have done(a), reload the page if necessary.

5. How about current support to Unicode Tamil texts in Adobe PDF?

Adobe Acrobat 4 allows you to prepare PDF files of Unicode Tamil texts without any problem. With "font embedding" option, PDF files are readable integrally in Windows 2000/XP and also in Macintosh OS 9 and X

6. What tools do I need to prepare a Unicode font with support for Tamil block elements?

Unicode fonts are of a special kind OTT (OpenTrueType) unlike 8-bit bilingual fonts used for TAB &TSCII (Truetype). Preparation of an OTT font proceeds in two distinct steps:

stage i) preparation of a TT font with all glyphs you want to include in the font using one of the Font-editing softwares that support Unicode encoding. Currently these are Font Creator, FontEdit and Fontographer. With these you can name the glyphs to have Unicode-based naming and numbering.

stage ii) preparation of glyph positioning (GPOS) and glyph substitution (GSUB) tables and bundle these along with the glyph outline files to create OTT for use in Windows. Best software for this purpose is MS VOLT, distributed free by Microsoft to registered software professionals.

ஒரு வழியாக "ழ" அமைப்பின் உதவியால், மற்றும் பல இளம் கணிபொறியாளர்களின் உழைப்பால் தமிழில் Linux வெளிவந்து விட்டது. நன்றி

வெளியில் நல்ல மழைகாற்று. கோவையில் எத்தனை வெயில் அடித்தாலும் மாலையில் சிலுசிலுவென குளிர் காற்று அத்தனையையும் மறக்கடித்து மனிதர்களை மொட்டை மாடியில் விசிலடித்து திரிய வைத்து விடுகிறது. மழை சின்ன வயதில் இருந்தே பிடித்த பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. அதிலும் மத்தியான மழைக்கு தனி சுகம் உண்டு. மண்
சூடேறி முதல் மழைத்துளி மண்ணில் விழுந்ததும் புறப்படும் மண்வாசம்.. அப்புறம் கொட்டி சிதறும் மழை.. சாலையெங்கும் நிரம்பி வழியும் மழை நீர்... மெல்லிய தூரல் கொண்ட மாலை நேரம்... இத்தனைக்கும் ஆசைபடும் மனசு. முன்னெல்லாம்.. பள்ளிகூட காலங்களின் விடுமுறையில் மழை வந்தால்... சூடாக மஞ்சள் பொடி போட்டு.. இரண்டு காய்ந்த மிளகாய்.. சீரகம்.. பூண்டு.. கறிவேப்பிலை போடு ... பொரி வறுத்து ... காரம் சுருசுருக்க.. கெட்டி
வெல்லம் தட்டி... சுக்கு காப்பி போட்டு... கால் நீட்டி உட்கார்ந்து அம்மாவும் தம்பியும் நானும் இளையராஜாவை ரசித்ததெல்லாம்.. கோடி கொட்டி கொடுத்தாலும் இனிமேல் அந்த காலம் வராது. Atleast மீண்டும் அந்த பாடல்கள் Radioவில் கேட்கும் போது பழைய நினைவுகளில் மூழ்ங்கவாவது நேரமும் பொறுமையும் இருக்கிறதே... அதற்றே காலத்துகும் நன்றி சொல்ல வேண்டும்.

பாரதியாரின் கவிதைகள் பற்றி சாயங்காலம் ஒரு தோழமையுடன் விவாதம் வந்தது.. சஞ்சலமடையும் மனதிற்கு கட்டளையிடும் பாரதியின் பாடல் ஒன்று இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். தேடி கண்டுபிடித்து படித்தவுடன்... இத்தனை நாட்கள் எப்படி கிடைக்காமல் போனது என்ற ஆச்சரியம்...

நல்ல கவிதை...

பேயா யுழலுஞ் சிறுமனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைந்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

இதுவெல்லாம் பாரதி போன்ற கலைஞனால் மட்டுமே முடியும்...

ஒருவழியாக எழத ஆரம்பித்து விட்டாயிற்று... அடுத்த கவலை ஒழுங்காக தொடர வேண்டும். நண்பர் லோகுகிருஷ்ணன் ஒரு முறை சொன்னார்.. "ஏதாவது எழுதி கொண்டே இருங்கள்.. பின்னர் பழக்கமாகிவிடும்.. அப்புறம் தானாகவே நல்ல விஷயங்களை தேடி படித்து எழுத ஆரம்பித்து விடுவீர்கள்.. " .. சொல்லபோனால் ஒரு வகையில் இது அன்றாட வேலைகளில் இருந்து Relaxation...

மீண்டும் சந்திப்போம்...

Wednesday, May 11, 2005

இலக்கியமும்..கவிதையும்...

நண்பர்களே..

மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி... நேற்று Unicode பற்றிய விளக்கங்கள் கொஞ்சம் பதித்துள்ளேன்.. உங்கள் கருத்துகள் அறிய ஆவலாய் இருக்கிறேன்.. இன்று வேறு எதாவது பேசலாம்.. கொஞ்சம் இலக்கியம்.. கொஞ்சம் கவிதைகள்.. இலக்கியம் பற்றிய விவாதங்களில் எல்லாம் தவறாமல் இடம் பெறும் ஒரு பெயர் புதுமைப்பித்தன்.. திருநெல்வேலிக்காரர். இயற்பெயர் விருத்தாச்சலம். மணிக்கொடி பத்திரிக்கையில் அறிமுகம்.. 14 ஆண்டுகள்.. சிறுகதை, கவிதை நாடகம், சினிமா, அரசியல், மொழிபெயர்ப்பு என பன்முகத் தன்மை கொண்ட கலைஞன். இலக்கியம் படிப்பவர்களுக்கு ஒரு நாடிதுடிப்பு போல புதுமைப்பித்தன்.. இயல்பான நகைச்சுவை.. வாழ்வின் வலி.. நிதர்ச்சனமற்ற வாழ்க்கை.. என தொட்டு செல்லும் எழுத்துகள்..
சமீபத்தில் வீ.அரசு என்பவர் தொகுத்த ஊழியன் மற்றும் பிற புதுமைப்பித்தன் கதைகளின் தொகுப்பு படிக்க நேர்ந்தது.. அவற்றில் ஒரு கதை.. "?" என்பதுதான் தலைப்பு.. கதை இயல்பானது.. இரண்டு முனிவர்கள் ஹிமாலய சிகர பிரதேசங்களில் நடந்து கொண்டிருக்கிறார்கள்... தூரத்தில் எட்டாத இலட்சியம் போல கைலாயம்..

குரு கண்களில் ஒளி மின்ன சொல்கிறார்.. " அதோ தெரிகிறது பார்த்தாயா .. உயர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக வானை கிழித்து கொண்டு.. கைலாயகிரி.. அதன் உச்சியில்.. வான் தகட்டில் .. சிகர திலகம் போல ஒரு நட்சத்திரம்.. பிரகாசமாக.. அது போலத்தான் இலட்சியம்.. "

பதிலளித்தான் சிஷ்யன்.. " பிரபோ.. நிமிர்ந்து நின்று என்ன பயன்.. ? உயிரற்று கிடக்கிறதே..! பிரகாசம் மட்டும் போதுமா.. ? ஒருவன் எட்டிபிடிப்பதற்க்காக அது இருந்தென்ன அல்லது கண்ணுக்கு தெரியாமல் போய் என்ன..?

குரு பதிலளித்தார்.. " ஒருவன் தொட்டால் உலகம் தொட்ட மாதிரி.. !"

"உலகம் அவனை இழந்து விடுவதனாலா..? " "இல்லை.., உலகத்தை அவன் இழப்பதனால்.... "

சில நிமிடங்கள் இருவரும் தலை நிமிர்ந்து சிகரத்தை பார்த்தபடி யோசனையிலாழ்கின்றனர்..

"இல்லை.. நான் சொன்னது பிசகு!.." என்று தலைகுனிகிறார் குரு..

கதை இவ்வளவுதான்.. எத்தனை ஆழமான கருத்து.. எது இலட்சியம்.. இலட்சியம் அடைவதன் பலன்.. என பல வகையான கருத்துகளை தூண்டும்.. கதை.. சுலபமான ஒரு பக்க கதை.. இத்தகைய ஆழமான கருத்துகள்.. இன்றைய அவசர உலகில்.. இத்தனை ஆழமான கருத்து எடுபடுமா.. என்னுடன்.. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்.. நண்பர்களே..

அப்புறம் சமீபத்தில் படித்த ஒரு கவிதை..


அது ஒரு கோடை, அல்லது
கோடை காலத்தின் முடிவு...
அப்போது நான் உன் காலடி ஓசைகளை கேட்டேன்,
கிழக்கிலிருந்து மேற்காக நீ சென்றபோது,
கடைசி தடவையாக..
இந்த உலகில் கைகுட்டைகள் தொலைந்தன..
மற்றும் புத்தகங்களும் மனிதர்களும்..

அது ஒரு கோடை, அல்லது
கோடை காலத்தின் முடிவு...
நடுப்பகல் நேரங்களில் நீ இருந்தாய்;
நீ முதல் முறையாக
உன் கோடித் துணியை அணிந்தாய்.
நீ சற்றும் கவனிக்கவில்லை..
ஏனெனில் அது மலர்களால் பின்னல் வேலை செய்யப்பட்டிருந்தது..

எஹீதா அமிக்ஹாய் கவிதைகளில் இருந்து....

மீண்டும் சந்திப்போம்..

Tuesday, May 10, 2005

Unicode - An Introduction...

Dear Friends..

Good Evening.. This is a Small introduction about Unicode Fonts and its technologies... This may be helpful for the newbies to Unicode system..

What is Unicode...?

Unicode is an universal font encoding scheme, designed to cover all world languages. It is a 32-bit scheme with over 65500 slots to assign to various

languages. Each language (except few like chinese) is given a 128-slot block.

When we discuss about Tamil Encoding..Tamil is a language where, in addition to the basic vowels (uyir) and consonants (mei), the compounded (uyirmei)

characters all have unique glyph forms. Popular Tamil font encoding schemes like TAB, TSCII, TAM are glyph based ones. As many of these unique

uyirmeis with distinct glyph forms are directly encoded in the scheme. Thus uyirmeis like ku, pU etc are directly encoded.

Unicode, on the contrary, encodes only basic uyir and mei characters and a set of modifiers to represent situations where the uyir/mei pair appear as a

combination (uyirmei). Unicode file stores textual information solely at this "character" level. It does not care about the actual form of the glyphs. Rendering

of the glyphs corresponding to stored characters is left to softwares.

OK.. How Tamil is Encoded in Unicode.. All indic languages are allocated 128-slots each. Assignment of characters to specifc slots within this block is

based on ISCII (Indian Standard Code for Information Interchange) scheme, that uses Devanagari as the basic reference language. Thus the vowels,

consonants and their modifiers of each indic language appears at the same slot. "ka" of Tamil and Telugu are separated by same 128 slots, greatly

facilitating programming.

Fine.. Now Concepts are ok.. What is the Technology.. As I already stated, in Unicode, unique glyph forms of uyirmeis are stored separately and are

"rendered" on the screen when a unicode-based text file is displayed using softwares.

The process of picking up these unique glyph forms of uyirmeis stored in the font and rendering them on the screen is called "glyph substitution (GSUB)".A

new Font technology called "OpenTrueType" (OTT) has been developed for use with Unicode. Different platforms/Operating systems use different

font-rendering engines to handle these Unicode OTT-type fonts (use of GSUB, GPOS tables).

To use a Unicode Tamil text, you need to have a Unicode OTT-type font that has Tamil block (yes many unicode fonts carry only few languages) and also

the font-rendering tool/engine (a DLL) of respective platform.

Fine..Now a Question.. What Operating System do I need to use Tamil Unicode?

On Windows platform, only Windows 2000 and Win XP come with the required .dll file to handle Tamil characters. Windows ME and 98 though they are

"unicode-intelligent", they do not have the specific .dll file support required for Tamil. So unicode Tamil texts will be rendered in a "linear" fashion as stored

in character-based scheme without glyph substitution. Latha, Arial UnicodeMS, Code2000 are some of the Unicode fonts that carry Tamil block.

Apple uses a different font-rendering engine called ATSUI to handle GSUB, GPOS tables of unicode OTT fonts. Though Mac OS 9.x and X fully support

Devanagari, Gujarati and Gurmuki, their ATSUI does not support Tamil.

Tamil Linux group has developed necessary tools to enable Unicode Tamil in this platform.

I See.. Now..one more question.. What application softwares do I need for Tamil Unicode in Windows ?

Even if you use Win 2K/XP, you need "compatible" application softwares to handle Tamil Unicode in these. MS Office 2000 appeared before Windows2000

release and hence displays unicode Tamil text in linear fashion even when used in Windows 2000 OS!. So you need to use recent Office XP package with

Win 2000. Alternate choice is to use a simple text editor like Notepad or WordPad with TavulteSoft Keyman (E-Kalappai20b - Package Name) - Which can

be downloaded from www.tavultesoft.com/keyman website. This Keyman Software supports Unicode, Normal English and TSCIIANJAL Architecture.

OK.. let us see more in next Article.....

Good Night..
G.Muthukumar