அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, August 21, 2007

வெற்றியும் தோல்வியும்...

நிறைய பேருக்கு இருப்பதை போல எனக்கு விளையாட்டுகளில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆறாம் வகுப்பிலேயே கண்-கண்ணாடி அணிந்ததால் கூட இருக்கலாம். பள்ளி காலங்களிலும் எந்த விளையாட்டுகளிலும் நான் கலந்து கொண்டதில்லை - கோ-கோ மற்றும் கிரிகெட், பேஸ்பால் ஆகியவை மணி உயர்நிலை பள்ளி கோவையிலும், பொதுவான கபடி போன்ற விளையாட்டுகள் கல்பாக்கத்திலும் இருந்த போதிலும், என் பங்கேற்பு மிக சொற்பம்தான் - அதுவும் நிர்பந்த அடிப்படையில். கூடை பந்து விளையாட்டு காலங்களின் காரணங்கள் வேறு...

ஆர்வம் குறைவாக இருந்தபடியினால், பத்திரிக்கைகளிலும் விளையாட்டு செய்திகளில் மனம் லயித்ததில்லை. எனினும் ஒரு திரைப்படம் என் கருத்துகளை கொஞ்சம் மாற்றியுள்ளது. அது பெண்களின் ஹாக்கி விளையாட்டு பற்றிய ஒரு திரைப்படம். கொஞ்சமும் வியாபாரதனம் கலக்காத ஒரு ஹிந்தி திரைப்படம் - இத்தனைக்கும் மொழியின் உச்ச கதாநாயகனை கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம். யாரும் யூகிக்கும் 15 நிமிட உச்ச கட்ட காட்சியை கூட மிக திறமையான முறையில் அமைத்திருக்கும் பாங்கு அருமை. சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் - ஒரு உதாரணம் - தேர்ந்தெடுத்த குழு பெண்களின் கண்களில் தெரியும் வேகமும் உணர்வும். ஆட்டமும் பாட்டும் இல்லை - ஒரு பாடல், நிச்சயம் கொஞ்சம் உணர்வுகளில் தங்கும் இசையும் தாளமும் கொண்டது... வெற்றி என்பது குழு முயற்சி என்பதை அழகாக உணர்த்தும் மேலாண்மை விஷயங்களை சொல்லும் முறையில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் இத்தகைய திரைப்படங்கள் பார்க்கும் போது.. - தமிழில் இப்படி படங்கள் வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம் - நான் சொல்வது வியாபாரதனம் இல்லாத, விளையாட்டு, குழு முயற்சி, உணர்வு ரீதியான உறவுகள்... என பேசும் திரைப்படங்கள். திரைப்படம் எடுக்க சிலர் தயார் எனினும், வெற்றி தோல்வி பற்றிய கவலை தடுக்கிறது...

வெற்றி தோல்வி - இரண்டுக்கு பின்னாலும் முயற்சி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது மதிக்கபடும் விதத்தை வெற்றியோ தோல்வியோதான் நிர்ணயம் செய்கிறது... வெற்றி என்றால் தலையில் தூக்கி ஆடுவதும், தோல்வி என்றால் மண்ணில் மிதிப்பதும் காலங்காலமான முட்டாள்தனங்கள்.. எதற்கும் பின்னால் உள்ள முயற்சி என்பது மதிக்கபடும்மாயின், அங்கு மலர்கிறது மனித மனங்களின் புத்திசாலிதனமான உணர்வுகள்...

Friday, August 17, 2007

கனவும் உழைப்பும்...

ஒரு திரைப்படம்... அது வெகுஜன இயல்பு சார்ந்த திரைப்படம். பொதுவில் அத்தகைய திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பினை மறுத்துவிடுவதுண்டு. இந்த முறை மறுக்க முடியாத அளவு எல்லா பத்திரிக்கைகளும் நண்பர்களும் தூண்டியதால் பார்க்க நேர்ந்தது...திட்டியோ பாராட்டியோ எல்லா மீடியாக்களும் அந்த திரைப்படத்தை பற்றி ஒரு மாதம் எழுதி தீர்த்தன... திரைப்படம் என்னை பொருத்தவரை குழந்தைகளுக்கானது... சில காட்சிகள் பெரிவர்களுக்கானது.. எதுவும் வளர்ந்தவர்களுக்கானது இல்லை. நான் சொல்வது பொது அறிவு அல்லது பொதுவான அறிவு பற்றி மட்டுமே. எனினும் ஒரு மஜாவுக்காக மட்டும் பார்க்க கூடிய திரைப்படமாக இருந்தது..

நான் இந்த பதிவில் சொல்ல வருவது மற்றுமொரு சிந்தனை - இந்த திரைப்படத்தில் வேலை செய்தவர்கள் எல்லாருமே நல்ல சினிமா ஞானம் உள்ளவர்கள்.. நிறைய உலக திரைப்படங்களுடன் பரிச்சயம் உள்ளவர்கள்.. சிந்தனையாளர்கள் - இவை அவர்களின் மற்ற படைப்புகளில் இருந்தே நான் சொல்கிறேன்... எனினும் - இந்த திரைப்படத்தை பற்றி அவர்கள் யோசிக்கும் போது, படமாக்கும் போது, கதை அமைக்கும் போது இதில் உள்ள அபத்தங்களை அவர்கள் கவனித்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லாம் இருந்தும் ஒரு வியாபாரம் என்று வரும்போது சிந்தனை ஆற்றலை கொஞ்சம் தள்ளி வைத்து கொண்டு, முட்டாள்தனமான கனவை திறமையாக படைக்க தங்கள் அறிவை உபயோகபடுத்தியுள்ள பாங்கு சிந்திக்க வைக்கிறது..

சில காட்சிகளுக்கு கதாநாயகியின் அரை நிர்வாணம் தேவைபடும் போது - புத்திசாலி கதையாசிரியர் அதற்க்கு இடம் கொடுத்து தள்ளி உட்காருகிறார். தன் மகளை விட வயது குறைந்த கதாநாயகியை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாநாயகனை எந்த வித விகல்பமும் இன்றி சமுதாயத்தை ஏற்க வைக்க எல்லாரும் பாடுபட்டு செலவழித்து இருக்கிறார்கள் - இவர்கள் அனைவரும் பத்திரிக்கை செய்திகளில் வயது குறைந்த பெண்ணை பெண்டாளும் வயதான ஆண்கள் பற்றிய செய்திகளை படித்து காரசாரமாக விமர்ச்சனம் செய்பவர்கள்தான்... எனினும் எல்லாம்.. எல்லாம்.. ஒரு வியாபாரத்துக்காக.. அறிவும் திறமையும்.. கைகட்டி நிற்க்க .. அபத்தமும், ஆபாசமும்.. முன்வைத்து சினிமா வியாபாரம்.. - ஒரு வேலை இப்படி இருப்பதுதான் பிழைக்க தெரிந்து வாழ்வதோ....

Tuesday, August 14, 2007

முகம்...

முகம் என்பது என்ன.. ஒரு அடையாளம்... அடையாளம் மாறி முகம் மாறினால் - உறவுகளின் மேல் கொண்ட அர்த்தங்களும் மாறிவிடுமோ. அடையாளம் மாறிய முகத்திடம், மாற்றதுக்கு முந்தய பாசமும் நேசமும் இருக்குமா.. எனக்கு இந்த குழப்பம் இன்னும் இருக்கிறது. பற்கள் எடுப்பபட்ட பின்னர் என் அம்மாவின் முக அடையாளம் மாறிவிட்டது. என்னால் முந்தைய சகஜத்துடன் பழக முடியவில்லை... பின்னர் மறுபடி அந்த சகஜம் வர சில நாட்கள் ஆகியது...

ஓர் இரவு...

சென்னையின் உணவு முறை விசித்திரமாக இருப்பதாக உணர்கிறேன் - பெரும்பாலும் அவை சுவை சார்ந்ததாக இல்லாமல் பசிக்கு உண்பதாகவே இருக்கிறது. மனசு சுவை தேடும் நேரங்களில் சிறிய மிக சிறிய உணவங்களிலும் உண்பதுண்டு. நான் இருக்கும் பகுதியிலேயே ஒரு மிக சிறிய கடை உண்டு - இட்லி, ஆப்பம் கிடைக்கும். தேங்காய் சட்னி என்ற பெயரில் தேங்காய் சாறுடன், நிறைய பச்சை மிளகாய் அரைத்து ஒரு திரவம் கிடைக்கும். அரசானிக்காய், வெண்டை, முருங்கை மற்றும் வாழைக்காய் வைத்து சாம்பார் என்ற திரவமும் உண்டு. ஒரு கேரள தம்பதியினர் கடை நடத்துகிறார்கள். ஒரு முறை அவர்கள் இல்லாத ஒரு முன்னிரவு நேரத்தில் குழந்தைகள் சமைத்தார்கள் - கூச்சலும் கிண்டலுமான சமையல் அது. பெண் குழந்தைக்கு 8 அல்லது 10 வயது இருக்கும்... ரொம்ப பொறுப்புடன் முட்டை உடைத்து ஆம்லெட் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். பையன் 16 வயது இருக்கும் - அதட்டலும் மிரட்டலுமாக ஆயினும் தங்கையுடன் சுமுக உறவும் கொண்டவனாக சமைத்தார்கள்... உணவும் கூட.. கொஞ்சம் சுகமாக அனுபவம் அது.

மற்றவர்கள் மறுக்க சில கருத்துகள் ...

முன்னேற்றம் என்பது - பொருளாதாரம் மட்டும் கொண்டதல்ல. வாழ்க்கை முறை சார்ந்தது.

பெரும்பாலருடைய வாழ்க்கை கோட்பாடுகளினால் சூழப்படும் இருத்தலாகவே இருக்கிறது ... ஓவ்வொருவருடைய வாழ்க்கையிலும் புத்தனும் சித்தார்த்தனும் இருக்கிறார்கள். சித்தார்த்தனாக இல்லாதவனால் புத்தனாக முடிவதில்லை. புத்தனை அறிய சித்தார்த்தன் தேவை - இல்லாவிட்டால் புத்தன் வெறும் துறவி. அவன் அடையாளம் போதி மரம் - புத்தனின் கோட்பாடுகள் இல்லை.

பெரும்பாலரின் வாழ்க்கை வட்டங்களுக்குள் உள்ளது - அது ஒரு சிறிய வட்டம் - அந்த வட்டத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை போல. மற்றவர்கள் வட்டத்துக்கு வெளியே இருப்பதாலேயே வட்டத்துக்கு அப்பால் சிந்திக்க முடிகிறது. வட்டத்துக்குள் உள்ளவர்களோடான விவாதங்கள் பொதுவின் விதண்டாவாதங்களே. எவர் வட்டத்துக்கு வெளியே இருப்பினும் - அடிப்படையில் அவர்கள் அவரவர் வட்டங்களுக்கு உள்ளேயே இருக்கிறார்கள்.

எல்லாருக்கும் அடுத்தவர் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் வாழவேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனின் சுயஒழுக்கம் அதனை கொண்டே அளவிடபடுகிறது.

இக்கருத்துகளை பகிர்ந்து கொள்ள இன்னும் சரியான துணை கிடைக்கவில்லை - இவைக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். கருத்துகளே பின்னர் கருத்துகளை மாற்றி கொள்ளலாம்... எனினும் தற்போதைக்கு காலம் மட்டுமே துணையாக இருக்கிறது.

தனிமையும் இலக்கியமும்...

காலம் இயங்கி கொண்டு இருக்கிறது. பின்னிரவுகளில் தூக்கம் தொலைந்து விட... ஜன்னலுக்கு வெளியே யாருமற்ற வெளியை காரணமின்றி பார்த்தபடி அமர்ந்திருக்கும் தருணங்கள் அதிகமாகி விடுகின்றன. சில இரவுகளில் வாழ்தல் பற்றிய ஒரு கேள்வி ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட இருள் போல என்னுள் கவிகிறது. சில புத்தங்களை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவை கவிதைகளும் இலக்கியங்களும் இல்லை - அவைகளை நீங்கள் சுயமுன்னேற்ற புத்தகங்கள் எனவோ, கற்பனை கதைகள் எனவோ சொல்லலாம். ரசவாதி மற்றும் தன் பொக்கிஷத்தை விற்ற துறவி என்பவை அந்த புத்தகங்கள். இப்புத்தங்களும் மேலும் சில கவிதை மற்றும் இலக்கிய புத்தகங்களும் படித்து பின்னர் தனிமையில் அவற்றின் கருத்துகளை எனக்குள்ளெ பகிர்ந்து கொள்ளும் போதெல்லாம் எனக்கு சில கருத்துகள் தோன்றுவதுண்டு... என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும், பிறர் வாழ்வுகளை கவனித்த பின்னரும் - எல்லோர் வாழ்விலும் இலக்கியமும் கவிதையும் இருப்பதாகவே தோன்றுகிறது. இலக்கியமும் கவிதையும் வாழ்வை சொல்லும் மொழி எனப்படும் போது... எனக்கு தோன்றுகிறது... வாழ்தல் - இன்னும் சரியாக புரிந்து கொள்ளபடாத ஒரு கலை - நிறைய பேருக்கு அது புரியும் போது வாழ்வு முடிந்து விடுகிறது.

தொலையும் வாழ்க்கை...

நகரம்... தன்னுள் புதைந்த எல்லோரையும் தன்னுள்ளே கரைத்து கொண்டு ஓடும் திரவ வாழ்க்கையை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நானும் விதிவிலக்காக இல்லை. நான் என்னை தொலைத்து விட்டதை உணர்கிறேன். சிரிப்பும், பேச்சும், இலக்கியமும், கவிதையும், தோழமையும் இன்னும் பிற வாழ்க்கை சார்ந்த விஷயங்களும் நீங்கி... என்னை தொடரும் காகிதங்களை நானும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் - அதுவே வாழ்க்கை என எல்லாரும் சொல்லும் வழியில். தொழில் என்பது வாழ்வை வளமாக்கவே - வாழ்வை பறித்து கொண்டு ஓடும் தொழில் என்றும் இருக்கிறது... எனக்கு பிடித்த நான் வெளிப்படும் தொழிலுக்கு தைரியமில்லாமல், என்னை தொலைக்கும் தொழிலில் இயந்திரத்தனமாக இயங்கும் இந்த வாழ்க்கை ஒரு நாள் என்னை என்னிடமிருந்து கொள்ளை கொண்டு போக போகிறது. எல்லாம் பேசலாம் - காகிதங்களுக்காக வாழாமல் இருந்தால். ஒரு ஓவிய ஆசிரியராக ஏதோ ஒரு பள்ளியில் வேலை செய்ய பிரியபட்ட காலம் உண்டு. பின்னர், காகிதங்களின் தாக்கமும் தேவையும் எழ, இப்போது கொண்ட தொழில். இது மரம் அறுக்கும் தொழில். தொழிற்சாலையில் நிறைய மரங்கள் உள்ளன... எல்லாம் வெட்டபட்டவை. இவைகள் கதவாகலாம், கட்டிலாகலாம், மேசையும் நாற்காலியும் ஆகலாம். ஆயிரம் ஆண்டு வாழும் மலை மரங்களை இனி வாழ்வில் பார்ப்பது அரிது. எல்லா மரங்களும் போன பிறகு தொழிற்சாலைகள் தன்னை தானே அறுத்து கொள்ளும்... காலம் வழி சொன்னால் .. என் கவிதைகளும் ஓவியங்களும் கொண்ட உலகோடு மரணமாகிவிட வேண்டும். ரெளத்திரம் கொண்ட மனதோடு அலையுதல் ஒரு வகையான வேதனை... அதுவும் இல்லாவிட்டால் வாழ்க்கை வெறிச்சோடி போய்விடுமோ என்ற பயமும் உண்டு...

மீண்டும் ஒரு முறை...

நெடுநாட்களுக்கு பிறகு மறுபடியும் பதிவுகளை கொண்டுவந்திருக்கிறேன். இடைப்பட்ட காலங்களில் நிறைய அனுபவங்கள், சில தவறுகள், சில திருத்தங்கள், சில இழப்புகள், சில சேர்க்கைகள், பார்த்தவை, படித்தவை, உணர்ந்தவை என நிறைய உண்டு... தற்போது புதிய நிறுவனத்தில் இருக்கிறேன்...புதிய குழு... புதிய யுக்திகள் கொண்ட வேலை என மாறுபட்ட சூழ்நிலை.

பகிர்ந்து கொள்ள நிறைய இருந்தாலும் நேரம் இல்லாமை காரணமாக இழந்த விஷயங்களில் பட்டியலில் வாழ்க்கையும் சேர்ந்து கொண்டது எனலாம். பகிர்தல் இழக்கும் போதே வாழ்க்கையும் கொஞ்சம் செத்து போகிறது. புதிய எண்ணங்கள்.. புதிய அனுபவங்களுடன் உங்களை எல்லாம் மறுபடியும் சந்திக்கிறேன். இடைபட்ட காலங்களில் என்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் எல்லாருக்கும் நன்றி.

இது தவிரவும் மேலும் சில குழுக்களில் எழுதலாம் என்று எண்ணம் உண்டு.. மேலும் நண்பர்கள் தேடும் காரணம் தான். வாழ்க்கை சில புள்ளிகளின் வழியே கிறுக்கி போல கோலம் போல இருந்தாலும்... அதனை வண்ணம் கொண்டு மெருகேற்றுவது நட்பு வட்டம் தானே...