அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, December 03, 2006

தாண்டி செல்லும் மேகங்கள்

ஓவ்வொரு முறையும் இந்த மாதிரியான அனுபவம் ஏற்படும்போது நான் யோசிப்பதுண்டு - இதற்கு காரணம் நானா, அவர்களா என்று. "அனுபவம்" என்றவுடன் சில தோழமைகள் நமுட்டு சிரிப்பு சிரிக்க வேண்டாம். இது நட்பு என்ற குழப்பம் சார்ந்தது. இதனை பற்றி பெரும்பாலான என் தோழமைகளுடன் பல முறை விவாதித்தாகி விட்டது, சில முறை எழுதியும் ஆகி விட்டது எனினும் இம்முறை அது மறுபடியும் நடக்கிறது. எதிர்பாலினம் சாராத நட்பில் பெரும் பாலும் குழப்பங்கள் இல்லை என கொள்ளலாம். அதன் குழப்பங்கள் பெரும்பாலும் சுய அரசியம், தொழில், பொருளாதார சிக்கல்கள், அடிப்படை கருத்துகளில் வேறுபாடுகள் எனவே அமைகிறது. எதிர்பாலினம் சார்ந்த நட்பின் மிகப்பெரிய சிக்கல் நம்பிக்கை சார்ந்தது. ஆளுமையும் நம்பிக்கை சார்ந்த குழப்பங்களும் பல நட்புகளை கேலிக்குரியதாக்கி விடுகின்றன.

நட்பு துளிர்க்கும் நிமிடம் அறிய முடியாதது. அது முறியும் நிமிடம் மறக்க முடியாதது. யார் வாழ்விலும் உள் நுழையும் நட்பு, வெளியேறும் போதும் எந்த வலியையும் கொடுக்காமல் போகும் எனில் அது அற்புதமானது - எனினும் இது பெரும்பாலும் அமைவதில்லை.

ஒத்த ரசனைகள் நட்பினை தோற்றுவிக்கின்றன, முதலில் கவிதைகள் அல்லது ஓவியங்கள்.
பின்னர் கொஞ்சம் இலக்கியம். பின் வாழ்வின் பக்கங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளபடுகின்றன. என்
பெரும்பாலான எதிர்பாலின நட்புகளுக்கு முன்னமே நான் சொல்லிவிடுவதுண்டு - என் எல்லா
நட்பிலும் மெல்லிய இழை போல ஒரு நூல் காதலும் உண்டு என்று. அது யாரையும் தொந்தரவு
செய்யாது. அது உயரும் நிலையில் சில நிமிட சுய பரிசோதனை எதனையும்
தெளிவாக்கிவிடுகிறது. நட்பு என்ற நிலையில் இருந்து காதல் என்ற நிலைக்கு உயர்ந்த
தோழமைகள் உடனான வாழ்க்கை சுகமானது. இது இருவரின் சுய சம்மதத்துடன்
ஏற்படல் வேண்டும். காதல் பற்றி என் கருத்து சுலபமானது - 'காதல்கள்
திருமணத்தில்தான் முடியவேண்டும் என்பதல்ல - உன் வாழ்வில் நீயும் என் வாழ்வில் நானும்
செளக்கியமாக இருக்க நாம் உறுதுணையாக நின்று நினைப்போம் ஆயின் - பிரியும் காதலே
மேல்.'

ஆனால் இது நம் கலாச்சாரம் ஒத்து கொள்ளாத விஷயம். ஒருவரை காதலித்த பெண்ணை
அடுத்தவர் ஏற்று கொள்ள மாட்டார். ஆண் ஆயிரம் பெண்களை காதலித்தாலும் அது வீரம் என்று
ஆரம்பத்திலேயே சொல்லி வளர்த்தபட்டு இருக்கிறார்கள். கற்பு போன்ற குழப்பங்கள் எல்லாம்
பெண்களுக்கு மட்டும்தானாம். காதல் எந்த நிமிடமும் யாருடனும் வந்து விட்டு போகட்டும்
- முடிவில் உன் வாழ்க்கை யாரையும் தொந்தரவு செய்யாத வகையில் இருக்கட்டும். இந்த கருத்து
பெரும்பாலும் கற்பு சார்ந்த விஷயமாகவே கொள்ளபடுகிறது. ஒருவரை ஒருவர்
காதலித்தல் உண்மையாயின் அடுத்தவர் வாழ்க்கை அவர்களில் சுயம் போல அமைய வழிவிடுவதும்
காதலின் வெற்றியே. உங்கள் காதலில் நீங்களும் அப்படியா..? என்ற கேள்வியை எழுப்பும்
நண்பர்களுக்கு - ஆமாம். நான் காதல் கொண்டவர்களும், என்னை காதலால் கொண்டவர்களும்
கொஞ்சம் தெளிந்தே இருந்தோம் என்று கொள்ளலாம். ஒருவரை ஒருவர் மிரட்டி கொண்டதில்லை. என் வாழ்வில் தென்றல் போல வந்த பெண்கள் எல்லாம் என்னோடு உண்மையாகவே வாழ்ந்தார்கள். எங்கள் காதல் இன்னும் எங்கள் மனதில் உள்ளது - ஆனால் அது எங்கள் வாழ்வில் இடரவில்லை.
என் வாழ்வில் இருந்து வெளியேறும் பெண்கள் யாரும் என்னை சபித்ததில்லை. என் வாழ்வை அவர்கள்
கவனித்து இருக்கிறார்கள். என்னுடன் வாழ்தலில் உள்ள நிறை குறைகளை நாங்கள் பேசி கொண்டு
இருந்திருக்கிறோம். என் தோல்விகளாக நான் ஒப்பு கொள்ளும் என் படிப்பு மற்றும் வாகனம்
ஓட்டும் திறமை இல்லாமை தாண்டி, நான் கவரபட்டு இருக்கிறேன் - என் கவர்தலில் சாகசங்கள்
இருந்ததில்லை. என்னுடன் சேரும்போதும் என்னிடம் இருந்து விலகும் போது சலனங்கள் இல்லாமல்
இருக்கும் வித்தையை சில பெண்கள் கற்று தந்து இருக்கிறார்கள். புரிதலில் இருக்கும்
சூட்சுமங்களை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். குழப்பமான நட்புகள் முறிந்து விலகும்
நிமிடங்களில் என் குழப்பங்களை பேசி தீர்த்து இருக்கிறார்கள். என் வருங்கால மனைவிக்கு
நல்ல கணவனாக இருக்கும் சாஸ்திரங்களை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். என் வருங்கால
மனைவிக்கும் இது போன்ற நண்பர்கள் இருந்தால் அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணங்களை
விதைத்து உரமாக்கியிருக்கிறார்கள்.

எனக்கு இது சுகமானதாக இருக்கிறது. வெகுசில சமயங்களில் சில பெண்கள் தெளிவான
பார்வை இல்லாமல் அல்லாடும்போது அவர்களை அழைத்து பேச தோன்றினாலும் - அது உண்டாக்கும்
பின் விளைவுகளை எண்ணி அமைதியாக இருக்கிறேன்.

காதல் என்பது உடலா உள்ளமா என்ற கேள்வியை எழுப்பும் குமுதம் தொடரை படித்து விட்டு -
என் பதிவையும் இணைத்து என்னுடன் சிலர் இந்த வாரம் விவாதித்தார்கள். நல்ல அனுபவம்.
தாண்டி செல்லும் மேகங்கள் போல வாழ்வில் தோழமைகளும் காதல்களும் அமைகின்றன. சில
மேகங்கள் மழை பொழிவை இனிமையான கணங்கள் ஆக்குகின்றன. சில அடைமழையை. அது
மேகங்களின் தன்மை பொருத்துதது. பூமி எல்லாவற்றையும் ஏற்று கொள்கிறது.

Tuesday, November 14, 2006

30 வயது மாயை

சென்ற நவம்பர் 6 தேதியோடு 29 வயது முடிந்து விட்டது. என் முப்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். சொல்லபோனால் மனதளவில் என்னை நான் இதற்கு தயார் செய்து கொண்டுள்ளேன் என்றே சொல்லவேண்டும். பெரிய மாற்றங்கள் இயல்பில் ஏதும் நடந்து விட போவதில்லை என்றபோதிலும், வயது சார்ந்த ஒரு மாயையை என்னுள் ஏதோ சில சம்பவங்கள் ஏற்படுத்திவிட்டன என்பது உண்மை.

இந்த மாயை பெரும்பாலும் அனுபவங்களை சார்ந்தே வருகிறது. அரைகிழவன் என்று 30 வயது முடிந்தவர்களை விமர்ச்சிப்பவர்களை பார்த்திருக்கிறேன். திருமணம் ஆகாத 30 வயது இளைஞன் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கபடுவதை கவனித்து இருக்கிறேன். ஒரு வகையான செயற்கையான மனச்சோர்வை 30 வயது ஆண்மகனுக்கு சமூகம் தருவதை சில சம்பவங்கள் எனக்கு நினைவூட்டுகின்றன. பெண்களுக்கு 30 வயது என்பது ஒரு பெரிய மாறுதலை தருகிறது - குடும்ப அளவிலும் அவள் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்று சமுதாயம் விரும்புகிறது - அதன் பிரச்சனைகளும் இடர்களும் தெரியாமலேயே. பொதுவாக சமுதாய அமைப்பில் 30 வயது ஆண் அல்லது பெண்ணுக்கு சில குறியீடுகளை கொடுத்து விடுகிறார்கள், அவர்கள் அந்த குறியீடுகளில் தான் வாழ அறிவுறுத்தபடுகிறார்கள் - மீறினால் கேலி செய்ய படுகிறார்கள். வயது சார்ந்த மாயை ஆரம்பமாகும் தருணம் 30 வயதுதான்.
என்னை பொருத்தவரை இது அற்புதமான காலகட்டமாக உணர்கிறேன். நவம்பர் 5 இரவில் ஏதோ நினைவுகளுடன் என் பழைய புகைபடங்களை பார்த்து கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு மரணம் நிகழ்ந்த மனோநிலை அன்று எனக்கு இருந்ததை மறுக்க முடியாது. நான் சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் எல்லாம் நினைவுக்கு வலுக்கட்டாயமாக கொண்டுவந்து இருந்தேன். சம்பந்தமே இல்லாமல் வீட்டுக்கு போன் செய்து பேசினேன். சில நெடுங்காலமாய் தொலைந்த நண்பர்களின் முகவரிகளை தேடினேன்... கிடைத்தவற்றை ஒழுங்குபடுத்தினேன்... கொஞ்சமாய் பிடித்த இசை... ஒரு கோப்பை தேநீர்... நான் நடந்து கொள்ளும் விதம் எனக்கே கேலியாக இருப்பினும் இதனை நிறுத்த முயலவில்லை. பிறகு நண்பர்களின் வாழ்த்துகளும், அம்மா அப்பாவுடன் பேசியதும் கொஞ்சம் கொஞ்சமாக மனசு சரியாகிவிட்டது. அலுவக நண்பர்கள் வாழ்த்துகளும் மனசை லேசாக்கி விட்டன. பிறகு மற்ற நாட்கள்... என்னை சராசரி வாழ்வில் தள்ளி விட்டன.. தலை சீவும் போது எட்டி பார்க்கும் ஒற்றை நரைமுடி தவிர, மற்ற எந்த அடையாளமும் என்னை மனதளவில் பாதிக்கவில்லை.

29 வயது வரை செய்த நல்ல விஷயங்களை பொறுக்கி பார்த்த போது, நண்பர்களும் நம்பிக்கையும் தவிர வேறு எதுவும் இல்லை. இன்னும் டிகிரி வாங்கவில்லை (வாங்க போவதும் இல்லை என்று நினைக்கிறேன்), பெரிய வங்கி கணக்குகள் இல்லை, வாகனங்கள் ஓட்ட தெரியாது, நீச்சல் தெரியாது, கணக்கு பாடம் இன்னும் புரியாத புதிர்தான். மிக புத்திசாலிதனமாக சிந்திக்க தெரியாது... சரி என்ன தெரியும் என்று பார்த்தால்.. கொஞ்சம் இசை, ஓவியம், கவிதை, பேச தெரியும், செய்யும் தொழிலில் யாருக்கும் கேடு விளையவில்லை, நிறைய நண்பர்கள் உண்டு... கொஞ்சம் பயணங்கள் இருந்திருக்கின்றன. படிக்கும் பழக்கம் இருக்கிறது. படித்ததை யோசிக்கும் திறமை இருக்கிறது. மேலாண்மையில் கொஞ்சம் திறமை இருக்கிறது. செய்யும் தொழில் சார்ந்த விஷயங்களில் கிரகிக்கும் திறனும் மறுபடி உபயோக படுத்தும் திறனும் இருக்கிறது. அப்புறம்... என்னை பற்றி எல்லாம் தெரிந்த பின்னும் என்னை நம்பும் நண்பர்கள் இருக்கிறார்கள்... அவர்களுக்கும் எனக்கும் நடுவில் எங்களை பற்றிய நம்பிக்கை இருக்கிறது. ஓடி கொண்டிருக்கும் நதி போல வாழ்க்கை எங்களுக்கு முன்னால் இருக்கிறது.

பலி கொள்ளும் சமூகம்

சென்ற வார செய்தி பத்திரிக்கைகளில் கணிப்பொறி சார்ந்த நிறுவன ஊழியர்கள் சிலர் நடுஇரவுக்கு மேலும் கொண்டாட்டமாக இருந்தபோது கைது செய்யபட்டதை கட்டம் கட்டி வெளியிட்டு இருந்தன. போலீஸ் தன் கடமையை செய்ததை பெருமையாக வெளியிட்டு கொண்டது. கலாச்சார பாதுகாப்பு சங்கம் எல்லாம் கட்டம் கட்டி கணிப்பொறி சார்ந்த நிறுவன ஊழியர்களின் கலாச்சார சீரழிவு பற்றி பட்டியல் இட்டன. எல்லாம் பார்க்கும் போது சமூகத்துக்கு ஒரு விதமான குரோதம் பொதுவான கணிப்பொறி சார்ந்த ஊழியர்கள் மேல் இருப்பதை கவனிக்க முடிகிறது. இந்த குரோதத்தின் அடிப்படை காரணம் அவர்களின் சம்பளம். தனக்கு கிடைக்காத பணம் அவர்களுக்கு கிடைப்பதை, அந்த பணத்தை அவர்கள் ஆடி அழிப்பதை பார்க்கும் போது எழும் இயலாமை கோபம். அந்த பணத்துக்கு பின்னால் இருக்கும் வலி யாருக்கும் தெரியாது. வெகு சில வருடங்கள் மட்டுமே அனுபவம் உள்ளவர்கள் அதிகம் சம்பாதிப்பதில்லை. அவர்களின் சம்பளம் நிலையில்லாததும் கூட. கால் சென்டர் ஊழியர்களும், மேலாண்மையிலும் உள்ளவர்கள் மட்டுமே அதிகம் சம்பாதிக்கிறார்கள். இது அந்த வேலையில் உள்ள பளுவை பொருத்து மாற்றம் கொள்கிறது.

படிப்பே இப்போது காசு பார்க்கும் தொழிலை தேர்ந்தெடுக்கும் வழியாக மாறிவிட்டது. தேடி தேடி காசு பார்க்க தான் படிக்க வைக்க படுகிறார்கள். தாய் தகப்பன் பிரிந்து வேலை செய்ய குடும்பத்தாலேயே தூண்ட படுகிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து சம்பாரிக்க கற்பிக்கபடுகிறார்கள். எல்லாம் நடந்தாலும் சமூகம் சொல்லும் "நல்லவன்" வேடத்தையும் போட எதிர்பார்க்கபடுகிறார்கள். ஸ்டெரஸ் எனப்படும் மனச்சோர்வை நீக்கும் சமூக வழிகளை குடும்பம் மட்டுமே தர முடியும். அது டாலருக்கு ஆசைப்படும் முதலாளிகளால் எந்த தொழிலாளிக்கும் கொடுக்க முடியாதது - இன்னும் சொல்ல போனால் அவர்கள் அனுமதிப்பதில்லை - உற்பத்தி மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளபடுகிறது - நலன்..! இவன் போனால் இன்னொருவன் என்ற மனநிலை மட்டுமே மிச்சம். மனச்சோர்வை நீக்க உழைப்பவன் தேடும் வழி நிச்சயம் சமூக அமைப்பில் "நல்லது" என்ற பட்டத்தை கொண்டிருக்காது. தன்னிலை மறக்கும் வழிகள் எல்லாராலும் சொல்லி கொடுக்கபடுகிறன. அலுவகத்திலேயே பார்ட்டி நடத்தில் மண்டை சூட்டை தணிக்கிறார்கள். இல்லாத ஆசாமிகள் சொந்த காசில் கொண்டாடுகிறார்கள்.

எல்லாம் தெரிந்தும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இவர்கள் சம்பாரித்து கொடுக்கும் காசுக்காக குழந்தைகளை பலி கொடுத்து கொண்டு இருக்கிறது. சேர்ந்தால் போல 10 நாட்கள் விடுமுறை எடுத்தால் இந்த மாத சம்பளத்துக்கு பங்கம் வருமோ என்ற எண்ணம் கொண்ட குடும்பமும், எவன் நலம் எப்படி போனாலும் இந்த மாத டாலர் வருமானம் நிற்க கூடாது என்ற எண்ணம் கொண்ட நிறுவனங்களும் இருக்கும் வரைக்கும் - இத்தகைய வரைமுறை தாண்டிய சம்பவங்கள் நிகழத்தான் செய்யும். மனச்சோர்வை நீக்க மதுவும், மாதுவும், ஆட்டமும் பாட்டமுமே சரி என்ற மனோநிலை மாற குடும்ப அமைப்பும் நிறுவன அமைப்பும் சேர்ந்து செயல்பட்டால் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும். இதே சமுதாயம் இவர்களை சம்பாரிக்க தூண்டுகிறது. அப்படி சம்பாரிப்பவன் தங்களை போல ஒரு சாதார வாழ்வையும் வாழ வேண்டும் என்ற எதிர்பார்க்கிறது. இது முரண். பொதுவில் பார்க்கையில் எந்த நலம் சார்ந்த நடவடிக்கையும், யார் நலத்துக்கும் இல்லை. தான் செய்யாததை, செய்ய முடியாததை இவனும் இவளும் செய்ய கூடாது என்று நினைக்கும் மனப்பான்மைதான் காரணம்.

அப்படி சமுதாயம் "நல்ல" விதமான மாற எண்ணம் கொண்டவர்கள் கணிப்பொறி சாராத தொழில் அமைப்புகளை மேம்படுத்தட்டும். வாழ்க்கைக்கும் தேவையான பணத்தையும் மனத்தையும் தரும் கல்வியை அமைக்கட்டும். குடும்ப அமைப்பை சரியான வயதில் இளைவர்களுக்கு கொடுத்து சமூக வாழ்வை மேம்படுத்தட்டும். முட்டாள்தனமான மனச்சோர்வை நீக்கும் விதமாக நட்பையும், படிக்கும் பழக்கத்தையும், சுய நம்பிக்கையையும் அதிகபடுத்தட்டும். இத்தனை பணமும் வேண்டாம், "கலாச்சார" சீரழிவும் வேண்டாம் என்று நினைக்கும் குடும்பங்களும் நிறுவனங்களும் சமூகத்தில் மேலோங்குமாயின் இந்த நிலை மாறலாம்... இவை எல்லாம் நடக்காத விஷயங்கள். இவர்களால் முடிந்தது எல்லாம் எல்லா வகையிலும் அடிமைபடுத்தபடும் கணிப்பொறி சார்ந்த ஊழியர்களை முடிந்த போதெல்லாம் அவமானபடுத்துவது ஒன்றுதான்.

Sunday, October 29, 2006

இந்த மாத புத்தகங்கள்...

காலச்சுவடு சுந்திர ராமசாமியின் நினைவுகளை இந்த முறை பதிப்பித்து இருக்கிறது. சுகன்,வனம், கி.ராஜநாராயணனின் அவர்களின் கதைசொல்லி ஆகிய சிறு பத்திரிக்கைகள் நல்ல கவிதைகளை, சொல்பாணி கதைகளையும் வெளியிட்டு இருக்கின்றன.. வாய்ப்பு இருந்தால் படித்து பாருங்கள்..

கதைசொல்லி என் கிராமத்து கதை கேட்ட நாட்களை நினைவுருத்துகிறது.

சுஜாதாவின் கனவு தொழ்ற்சாலை படித்தேன். ஒரு கேள்வி அதன் பின்னர். பாலகுமாரன்,
சுஜாதா, சிவக்குமார்...எல்லாருமே சினிமாவின் நிதர்ச்சனம் என்ற பெயரில் பிரச்சனைகளை மட்டுமே எழுதுகிறார்கள்.. அதே சினிமா வெற்றிகளையும் சந்தோஷங்களையும் கொண்டதுதான்.. அதனை எழுத யாரும் தலைபடுவதில்லையே ஏன்....?

காந்தி - கொள்கைகளில் குழப்பங்கள்...

காந்தியின் கருத்துகளை சினிமாவில் சொன்னதற்கு வெகு விவாதங்கள் நடந்து கொண்டு
இருக்கின்றன. 50 ரூபாய்க்கு சத்திய சோதனை புத்தகம் கிடைக்கிறது. எத்துனை பேர் படித்திருப்பார்கள் அதனை..? அகிம்சை, நேர்மை பற்றி பெரும்பாலும் புத்தக அறிவாகவே நிறைய பேர் அறிகிறார்கள். பெரும்பாலும் மத்திய மற்றும் இளைய சமுதாயம் சார்ந்தவர்கள். "லகே ரகோ முன்னா பாய்" வாழ்வில் இந்த கொள்கைகளை பயன்படுத்தும் மனிதர்களை, பயன்படுத்த கதாநாயகன் மேற்கொள்ளும் வழிமுறைகளை கமர்ஷியலாக சொல்கிறது. புரிந்துகொண்டவர்கள் உண்டு. எனினும் நம் நிகழ்கால வாழ்வில் இவைகளை எல்லாம் உபயோகபடுத்த முடியுமா..? வேகமான பணத்தையும் முன்னேற்றத்தையும் மட்டுமே கொள்கைகளாக கொண்ட சமுதாயத்தில் காந்தியின் கொள்கைகள் எடுபடுமா..?

ஒன்று மட்டும் புரிவதில்லை. காந்தியின் கருத்துகளும் இந்த சூழ்நிலைக்கு
ஏற்றுகொள்ளபடுவதில்லை... காந்தியை பற்றிய விமர்ச்சனங்களும் எற்றுகொள்ளபடுவதில்லை... மொத்தத்தில் குழப்பமான வியாபார சமுதாயம்....

மழை - யாரும் ரசிக்காத நிகழ்வு

மழை - ஒரு அற்புதமான நிகழ்வு. பால்யத்தில் இருந்தே மழை ரசித்தல் பெரும்பாலும் எல்லாருக்கும் பிடித்திருந்து இருக்கிறது. ஈரமான மழைக்காலங்களில் சின்ன சின்ன சந்தோஷங்கள், சில் குளிரும் சிலுசிலுக்கும் காற்றும் தரும் சுகம் வேறு எந்த கால நிலையிலும் வரும் என்ற நினைவில்லை எனக்கு. வருங்காலங்களில் மழை ரசித்தல் இல்லாமலேயே போய்விடும் என்ற நிலையை இன்றைய சூழ்நிலைகள் உருவாக்குகின்றன என்பது என் கருத்து.

சரியான சாக்கடை வசதிகள் இல்லாமை, தேங்கி நிற்க்கும் தண்ணீரில் உண்டாகும் கொசுக்களும், நோய்களும், சிறு தூறல் விழுந்தாலே 40 ரூபாய்க்கு 80 ரூபாய் கேட்க்கும் இரட்டை வாடகை ஆட்டோகாரர்கள், தண்ணீரில் நிற்க்கும் வாகனத்தை தள்ள கூட காசு கேட்கும் மக்கள், எல்லா ஏரிகளும் குளங்களும் வீடுகளாகிவிட்ட நிலையில் இடுப்பு அளவு தண்ணீரில் வாழும் தாழ்ந்த நில மக்கள், இத்தனை கண்டும் ஒன்றும் செய்யாத அரசாங்கம், ஏதாவது செய்ய முயற்சிப்பவர்களையும் புரிந்து கொள்ளாமல் புறம் தள்ளும் மக்கள் சமுதாயம்...

மழை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வெறுக்கதக்க நிகழ்வாகி கொண்டு வருகிறது. உழவனை பற்றியும், காய்ந்து கிடக்கும் தாவரங்களை பற்றியும், வற்றி கொண்டு இருக்கும் நிலத்தடி நீர் பற்றியும், தாகத்தில் தவிக்கும் பறவைகளையும் மிருகங்களையும் பற்றி யாரும் கவலை படுவதில்லை.
எல்லாருக்கும் தங்கள் அலுவகநேரங்கள் தவறுவதிலேயே கவனம் இருக்கிறது. இயந்தரதனமான வாழ்வில் மழை ரசித்தல் முட்டாள்தனமானது என்ற கருத்து பெரும்பாலும் இருக்கிறது. வீட்டில் இருந்தாலும் தொலைகாட்சியில் மூழ்ங்கி இருக்கிறார்கள்.

யாரையும் எதுவும் சொல்ல முடியாது. இது இன்றைய வாழ்விற்க்கு நாம் கொடுக்கும் விலை. எனினும் ஒருமுறையாவது மழை ரசித்து பாருங்கள். ஏதும் விலை கிடையாது அதற்க்கு.

Saturday, October 21, 2006

இருள் பிரியாமல்...

நேற்று இரவிலிருந்தே பட்டாசு சத்தம் ஓய்ந்ததாக நினைவில்லை. மழையும் தன் பங்குக்கு இரவும், காலையும் - மதியம் வரை கொஞ்சம் கொஞ்சமாய் பட்டாசு கொளுத்துபவர்களின் எரிச்சலையும் என் போன்ற மழை ரசிகர்களின் ரசிப்பையும் கொண்டு கொஞ்சமாய் வாழ்ந்து வந்திருந்தது.. சூடாய் தேநீர் கோப்பையுடன் மழை ரசிக்க இருள் பிரியாத அதிகாலை ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்திருந்த போது கடந்து வந்த சில தீபாவளி நினைவுகளை அசை போட சுகமாய் இருந்தது. 1991 - 92 - நான் கல்பாக்கத்தல் இருந்த போது ஒரு தீபாவளி நாளில் தான் சுகமான ஒரு தோழமைக்கு அடித்தளம் இடப்பட்டது. மொழி எங்களிடையே பெரிய தடையாக இருந்த காலம் அது. எனக்கு தமிழ் தவிர ஒன்றும் தெரியாது. என் ஆங்கிலம் கேட்டால் ராபர்ட் கிளைவ் பரம்பரையை சேர்ந்தவர்கள் என் தலைக்கு விலை வைத்து விடுவார்கள் - எனவே என் ஆங்கில புலமையை நான் பொதுவாக வெளிப்படுத்தி கொள்வதில்லை.

தோழமை அற்புதமான நிலையில் இருந்ததற்க்கே மொழி தடைதான் காரணமாகி இருந்தது. இருவரது மழலையும் இருவருக்கும் சுகமானதாக இருந்த காலகட்டம். ஆளில்லாத கடற்கரை எங்கள் தளமாக இருந்தது. முதன் முறை நாங்கள் முத்தமிட்டு கொண்டதும் அங்கேதான். அந்த தோழமையில் நடந்த சம்பவங்களை எப்போதாவது வாழ்வில் ஒரு குறுநாவலாகவாவது எழுதும் எண்ணம் எப்போதும் உண்டு. பின்னர் தோழமையின் வாழ்வில் நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவம் என் வாழ்விலும் கொஞ்சம் குடும்ப ரீதியான பிரச்சனைகளை கிளப்பியதற்க்கு பின்னர், நாங்கள் பேசிக்கொள்ள ஏன் முயற்சித்து கொள்ளவில்லை என்பதும், நேருக்கு நேர் சந்தித்தபோதும் வலுக்கட்டாயமாக முகம் திருப்பி கொண்டது, மன்னிப்பு கேட்பதற்க்காக சந்தித்து ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்திருததும், யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் தலையணை நனைத்து இருந்த இரவுகளும் - இன்றும் எந்த காரணத்தையும் எனக்கு புரியவைக்கவில்லை. பிரிவுக்கு பின்னர் முகவரிகளை தொலைக்கும் வினோத பிறவியாக நான் வாழ்ந்திருந்த குழப்பமான காலகட்டங்கள் அவை. ஒழுங்காக சட்டையை -இன் செய்து தலை சீவி மீசை ஒதுக்கும் போதெல்லாம் ஒரு வினாடியாவது இதனை முதன்முறையாக சொல்லி கொடுத்த தோழமையை நினைக்காமல் இருக்க முடிவது இல்லை.

ஊரெல்லாம் சந்தோஷமாக இருக்கும் நாட்களில்தான் யாரோ சிலரின் வாழ்க்கை மீண்டும் எழுதபடுகிறது. பெரும்பால இரவுகளில் பட்டாசு சத்தங்களும், போகி கொழுத்தும் தீயின் வீச்சமும் கடந்து போன இறுக்கமான சில இரவுகளையும் அதன் உறவுகளையும் நினைவுறுத்துவதில் ஆச்சரியமில்லை. கடந்து செல்லும் சாலையில் பிரித்து போட்டிருக்கும் ரோஜா பூக்கள் சில நிமிடங்களுக்கு முன் கடந்து போன மரண ஊர்வலத்தை நினைவுறுத்துவதை காட்டிலும் - நாம் கடந்து வந்த மரணங்களைதான் அதிகம் நினைவுறுத்துகின்றன. பிரிவும் மரணமும் தர்க்கபடி ஒன்றுதான். வீட்டில் இருந்து பிரிந்து வந்து தனியாக வாழ்ந்த கல்லூரி காலங்களில் எல்லாம் வெட்கம் விட்டு தனிமையில் அழுது இருக்கிறேன். காரணங்கள் ஆயிரம் இருந்திருக்கின்றன - எனினும் எல்லாம் என்னை மட்டுமே சார்ந்து இருந்திருந்திருக்கின்றன. சந்தோஷமான தருணங்களை நினைவுறுத்திகொள்ளும் அதே மனதின் திண்மை - கடந்து வந்த இறுக்கமான தருணங்களையும் கொள்ளுமாயின் - வாழ்வியல் சார்ந்த என் நிலையில் முன்னேற்றம் கொண்டுள்ளதென கொள்ளலாம்.

Sunday, October 08, 2006

நினைவுகளில் பெயர்கள்..

ரேடியோ... பொதுவாக பயணங்களில் ரேடியோ.. பிராந்திய விஷயங்களை சொல்லும் போதும்.. மெல்லிய மதிய நேர மற்றும் முன் இரவு பாடல்களிலும்..முத்திரை கொண்ட விஷயம்... ரேடியோ சொல்லும் நேயர்களின் பெயர்கள் பெரும்பாலும் அதிகம் கேட்டிராதவை. தங்களுக்கு விரும்ப்பமான பாடல்களை கேட்கும் அவர்களின் ஆர்வத்தை விட...அவர்களின் பெயர்களை கவனிக்கும் என் ஆர்வம் அதிகம் என்பேன் நான். சில
பெயர்கள் விசித்திரமானவை... சில பெயர்கள் சட்டென பழைய நண்பர்களை நினைவுறுத்தும்... சில பெயர்களை கேட்கும் போது அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனை வரும். சில பெயர்கள் பழைய சம்பவங்களை நினைவூட்டும்...அவை மறக்கமுடியாத மழைக்காலமாகவும் இருக்கும்...சிலரின் மரணமாகவும் இருக்கும்...

சினிமா - பார்வை கோளாறுகள்.

நல்ல இசை, திறமையான சண்டை காட்சிகள், அற்புதமான ஒளிப்பதிவு, சொல்லி கொடுத்தால் திறமை காட்டும் நடிகர்களும் நடிகைகளும்... இருந்தும் இந்திய சினிமாவில் வருடத்துக்கு மிக சில நல்ல திரைப்படங்களே வெளிவருகின்றன. இந்தியாவின் அனைத்து பகுதி திரைப்படங்களையும் குறிப்பிட்டாலும் வெறும் 20 சதவீதம் மட்டுமே அகில உலக சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் தகுதியை பெறுகின்றன. அதுவும்
பாடல்களையும் சண்டை காட்சிகளையும் நீக்கிய பிறகு (பெறும்பாலும் இவை நிஜம் சார்ந்து இருக்காததால்). திரைப்பட விழா படங்களிலும் குறும்படங்களிலும் பெறும்பாலும் தெளிவான திரைக்கதையும் பாத்திர அமைப்புமே முன்னுறிமை பெறுகின்றன என்றாலும் இசை, ஒளிப்பதிவு, நடிப்பு ஆகியவனவும் கருத்தில் கொள்ள படுகின்றன. இன்றைய நிறைய தமிழ் படங்களை பார்க்கும் போது 3 நாள் பாம்குரோவில் ரூம் போட்டு, 4 புல்
பாட்டில் ரம்மும், மூன்று நேரமும் கோழி பிரியாணியும், பர்மா பஜார் டிவிடிகளும் இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. சமீபத்தில் வந்த ஒரு இயக்குனர் நடிகராக நடித்த வழக்கமான ரவுடியிஸ திரைப்படம் ராம் கோபால் வர்மாவின் திரைப்படத்தின் அப்பட்டமான காட்சி தழுவல். கதை கொஞ்சம் மாற்றபட்டு காட்சிகள் (கோணம், ஒளி உட்பட) அனைத்தும் அப்பட்டமான தழுவல். தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யபடும் தமிழ் படங்கள்
இன்னொரு வகை கொடுமை.. லாஜிக் என்ற வார்த்தையை குழி தோண்டு நிறைய உப்பு போட்டு உயிரோடு புதைத்து விடுகிறார்கள்.. திரைக்கதையும் பாத்திர அமைப்பும் நிறைய கதைகளில் இருப்பதில்லை. நல்ல திரைப்படங்கள் நாவல்களில் இருந்து உருவாக்க படுகின்றன. அவை மனித வாழ்க்கையை, வாழ்வின் பிரதிபலிப்புகளை, மனித உறவுகளின் வலிமையை சொல்கின்றன. உலகின் எந்த போற்றபடும் திரைப்படத்தையும் எடுத்து
பாருங்கள். அவற்றில் இவை இருக்கும். சமீபத்தில் பார்த்த ஒரு நல்ல திரைப்படம் சித்தார்த்தா... அமைதி தேடும் துறவியையும் அவன் வாழ்க்கையும் சொல்லும் சுலபமாக புரிய கூட ஆங்கில படம். இன்னொரு திரைப்படம் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு மாற்றமடையும் மனித வாழ்க்கை பற்றி பேசும் ஒரு திரைப்படம்... ஒருவன் தொழில் அதிபர், ஒரு பெண் - கலெக்டர் மனைவி - இன்னொருவன் நக்ஸலைட்...இவர்களின் உறவு சிக்கல்கள்.. அரசியலும் நிஜமும் கலந்த பின்னனியுல். மற்றுமோர் திரைப்படம் - அகதியாக வந்து மக்கள் தலைவனாக உயரும் ஒரு கருப்பின சமூக கதை... இந்த திரைப்படங்கள் எந்த வித கதாநாயகதனமோ கிடையாது... பாடல்கள் பிண்ணனியில் மட்டும்.. தெளிவான அதிக புத்திசாலிதனம் காட்டாத வசனங்கள். நல்ல ஒளி ஒலி அமைப்பு... ஆரவாரமில்லாத நடிப்பு.. ஒரு திபேத்திய திரைப்படம் சென்னையில் திரையிடபட்ட போது அதில் வரும் 15 நிமிட உடலுறவு காட்சி மட்டுமே பெரும்பாலும் பேசப்பட்டது உச்சகட்ட முட்டாள்தனம். பெரும்பாலும் இந்த திரைப்படங்களை திரையிடும் அரங்குகளில் கூட்டம் இருப்பதில்லை. யாராவது சில காதல் ஜோடி (காந்தி மண்டபத்திலோ வள்ளுவர் கோட்டத்திலோ இடம் கிடைக்காதவர்கள்)அல்லது கொஞ்சம் தாடி வைத்த திரைப்பட ஆர்வலர்கள், அபூர்வமாக சில வெளிநாட்டினர்...மற்றபடி யாரும் ஓடி விளையாடும் அளவுக்கு இடம் கிடக்கிறது. செலவுக்கு பயந்து என் போன்ற ஆசாமிகள் டிவிடியில் திரைப்படங்களை பார்ப்பதும் காரணமாக இருக்கலாம்... நல்ல சினிமா நல்ல நாவலில் இருந்து கிடைக்கிறது. நல்ல நாவல் விற்பது இல்லை.

தெருவிழாக்கள்...

சில வாரங்களுக்கு முன்பு நான் தங்கியுள்ள பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா. சென்னையில் கோவில் திருவிழா பாடல்கள் கூட கொஞ்சம் முரட்டுதனமாகவும் மரியாதையில்லாமலும்தான் இருக்கின்றன.. வருவியா..வரமாட்டியா என சாமியையே கொஞ்சம் மிரட்டுகிறார்கள். அப்புறம் மேடை போட்டு ஆட்டம். சினிமா பாடல்களுக்கு விடலை பசங்களின் குத்தாட்டம்.. கூட்டத்தில் நிற்க்கும் இளம்பெண்களை குறிவைத்த
சினிமாத்தனமான ஆட்டம். 50 ரூபாய் டிசர்ட்டும் 100 ரூபாய் ஜீன்ஸும் போட்ட சூர்யாக்களும், விக்ரம்களும், விஜய்களும்...கூட ஆடும் ஜோதிகாக்களும், சினேகாக்களும்.. இன்னும் பிற கதாநாயகிகளும். ஒரு குறிப்பிட்ட வயதில் தன்னை ஒரு பிரபலமான நடிகராகவோ, நடிகையாகவோ.. கொஞ்சம் அவர்களின் சாயலாகவோ நினைத்து கொள்ளும் போதையின் விளைவு இது... கோவில் திருவிழாக்கள் இதற்க்கு நிறைய வழிவகை
செய்கின்றன. முன்னரெல்லாம் ஆர்கெஸ்டிரா வைப்பார்கள்...எ.ஆர் ஈஸ்வரியின் போதை பாடல்கள் நிச்சயம் இருக்கும். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்.. கூத்து.. காணாமல் போய்விட்ட விஷயங்கள் நிறைய உண்டு திருவிழாக்களில். எங்கள் ஊரில் தேர் திருவிழா நேரத்தில் நாடகம் போடுவார்கள். கோழி சண்டை உண்டு... வழக்கமான கரகாட்டம் உண்டு. கரகாட்டம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் சிரிப்பை அடக்கி கொண்டு
ரகசியமாய் ரசிக்கும் காம வேடிக்கைகள்...பாட்டுகள்.. அதன் அர்த்தங்கள் சிலருக்கே புரியும்.. புரியாதவர்கள் விடலைகள்.. பல அர்த்தங்களை கொண்டு சிரித்து கொள்ள வேண்டியதுதான்.. சில வீடுகளில் வி.சி.ஆர் வைத்து படம் போடுவார்கள். ஊர் ஊராய் வரும் சினிமா வண்டி (கடலை காட்டுக்குள் திரை கட்டி படம் போடும் குழு) வந்தால் கூட்டம் அங்குதான் இருக்கும். பெறும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்... கொஞ்சம் வசதிபடைத்த விடலைகளுக்காக (மீசை நரைத்த பெரிசுகளுக்கும்தான்) ரெக்கார்டு டான்ஸ்... பெறும்பாலும் ஊருக்கு வெளியே... சில சமயம் அது வெட்டு குத்து அளவுக்கு போவதுண்டு.. ரெக்கார்டு டேன்ஸ் பெண்கள் ஆண்களுக்கு பெண் வேடம் போட்டது போல இருப்பார்கள். வெகு அரிதாக அழகான பெண்களும் வருவதுண்டு... ஆனாலும் மொத்த ஆட்டத்தில் சில நிமிடங்களே வரும் சுத்தி சுத்தி ஆடும் அழகுக்காக சாராயமும், வருத்த கறியும் காசும் கொண்டு பார்த்து விட்டு.. "போன தடவ மாதிரி இல்ல மாப்ள.. " என்று வருத்தபட்டு கொண்டு வரும் சமுதாயம்.. சில சமயங்களில் சைக்கிள் கட்டி கொண்டு திருட்டிதனமாக ரெக்கார்ட் டேன்ஸ் பார்த்ததுண்டு... கரகாட்ட தேவதைகளை தொடர்ந்து கொண்டு அடுத்த ஊர் வரைக்கும் போனதுண்டு... இன்றும் ஊர் பக்கம் போகும்போது அந்த கடலை காடும், காட்டு தேவதை கோவில் மண்டபங்களும் அன்று நடந்த ஜால்ரா சலங்கை சத்தங்களை நினைவூட்டுவதுண்டு...

கலாச்சார பாதுகாப்பும் பெண்ணும்

கலாச்சார பாதுகாப்பு பற்றி மறுபடியும் ஒரு பதிப்பு... யாராவது கொடும்பாவி கொழுத்துவதாக இருந்தால் பாண்டிபஜாரில் டிராபிக் இல்லாத நேரத்தில் கொழுத்தலாம்... போன் செய்து திட்டுபவர்கள் அலுவக நேரம் தவிர மற்ற நேரங்களில் தொடர்ப்பு கொள்ளவும். சமீபகால (திடீர்) கலாச்சார பாதுகாப்பு நிகழ்வுகளை பார்க்கும் போது பெரும்பாலும் அவை பெண்கள் தொடர்ப்பாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது (அது உள் மன பிராந்தி என்பவர்கள் கொஞ்சம் விளக்கவும்...). சமீபத்தில் வந்த ஒரு திரைப்படம். மனைவி கணவனின் காதலை போற்றி, அவனின் பழைய காதலியை கூட்டி வந்து அவனுடன் ஒரு நாள் தங்க வைக்கும் காதல் கதை... வசனங்கள் காதலையும் புரிதலையும் அதன் உள்ளார்ந்த மன முதிர்ச்சியையும் சொல்லும் போதிலும்... கதையின் ஒரு வரி தெளிவாக சொல்வது - "மனைவி தன் கணவனின் காதலை மதித்து அவன் காதலியை மீண்டும் அவனுடன் ஒரு நாளாவது சேர்ந்திருக்க வைப்பது". என் கருத்து இந்த ஒரு வரியில் தான். எந்த கணவனாவது தன் மனைவியின் காதலை மதித்து, அவளுடைய பழைய காதலனை ஒரு நாளாவது (பகலிலாவது) தனிமையில் - தன் வீட்டில் தனித்திருக்க அனுமதிப்பானா... இந்த கருத்துடன் தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா..!!! எல்லா கலாச்சாரம் சார்ந்த விஷயங்களும் ஏதோ ஒரு வகையில் பெண்ணை (உடல் ரீதியாக பெண்ணை - இதனை கற்பு என்றும் சொல்லி கொள்கிறார்கள்.. ) சார்ந்தே அமைந்திருக்கின்றன என்பது என் கருத்து. ஆணுக்கு தன் ஆளுமை (பச்சையாக சொல்வதென்றால் - மனம் மற்றும் உடல் சார்ந்த ஆளுமை) மேல் கொண்ட அதிருப்தியும் சந்தேகமுமே ஆண் வலியுருத்தும் பல கலாச்சாரம் சார்ந்த அமைப்புகளுக்கு கரு. உயிர், பயர், கபி அல்விதா நா கெஹனா ஆகிய திரைப்படங்கள் சொல்லும் உணர்வு சார்ந்த உறவுகள் மிக சுலபமாக கொச்சைபடுத்தபடுவதற்க்கும் இதே அதிருப்தி + சந்தேக உணர்வுதான் காரணம். தான் தனிமைபடுத்தபட்டு விடுவோம் என்ற பயம் இதன்
அடிநாதம். பெண்களின் சமுதாய உயர்வு மற்றும் குடும்ப அமைப்பில் உயர்வு ஆகியவை காலம் காலமாக தடுக்கபட்டு வந்த காரணமும் இதுதான் என்பது கொஞ்சம் வரலாறு படித்த நண்பர்களுக்கு புரியும். படித்த பெண் யோசிப்பாளாகவும், யோசிக்கும் பெண் மிக சுலபமாக தன் வாழ்க்கையை அமைத்து கொள்வாளாகவும் ஆண்கள் புரிந்து வைத்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு திரைப்பட வசனம் உண்டு.. "காதல் என்பது.. சம்பந்தபட்டவர்கள்
பேசி கொள்வது... அடுத்தவரை முன்னேற்றுவது... உணர்வு அடிப்படையில் முதிர்ச்சி அடைய வைப்பது... " எத்துனை ஆண்கள் காதலை அப்படி புரிந்து கொள்கிறார்கள்.. பெரும்பாலும் பெண்களே அத்தகைய மன முதிர்ச்சியுடன் இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை. உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள்...

வியாபார மேடைகள்...

வியாழக்கிழமைகளில் எங்கள் ஊரில் சந்தை இருக்கும். கொஞ்சமேனும் பணத்தை பற்றி அறிந்து கொண்டது அங்கேதான். பாட்டிதான் எல்லா பெருமைகளுக்கும் சொந்தகாரர். சந்தைக்குள் நுழையும்போதே இனிப்பு பாகில் செய்யபட்ட தேர் பொம்மைகள் இருக்கும் - மஞ்சள் மற்றும் சிவப்பில். அப்புறம் ஜவ்வு மிட்டாய் - வாட்ச் கட்டி விடுவார்கள். மளிகை பொருள்களின் வாசனை கவிய குறுக்கும் நெடுக்குமாக சின்ன சின்ன கடைகள்.
சல்லிசான காய்கனி வகைகள்.. கூறு கட்டி விற்பார்கள். பலாப்பழம்..வாழை.. மற்றும் மாம்பழம். சந்தைக்கு கொஞ்சம் வெளியே கருவாடும், உப்பு கண்டமும், கறியும். சந்தைக்கு போய்வருவது ஒரு வகையில் வாரத்திருவிழா. அடுத்த நாள் இதே கூட்டம் சினிமா கொட்டகையில் விசிலடித்து கொண்டு இருக்கும். இரண்டாவது ஆட்டம் முடிந்து வரும்போது சந்தை மேடையில் ஊர் காவல் படை இளைஞர்கள் இருப்பார்கள்...சில முறை
சந்தையில் அபூர்வமாக பொம்மலாட்டம் பார்த்ததுண்டு. பெரும்பாலும் மகாபாரத கதைகள். பேருந்துகள் இருந்தாலும் வண்டி கட்டி கொண்டு பக்கத்து கிராமங்கலில் இருந்து வியாபாரிகளும் மக்களும் வருவதுண்டு.. யாரும் இல்லாத மற்ற நாட்களில் மதிய நேரங்களில் சந்தை ஒரு புழுதி படர்ந்த மைதானம்.. கொஞ்சம் மேடைகளும்.. கொஞ்சம் ஆடுகளும்... நிழலில் தூங்கும் கிழவர்களையும் தவிர... அங்கே யாரும் இருந்ததில்லை...

மொழி காவலர்கள்

மொழிக்காவலர்களாக தங்களை காட்டி கொள்ளும் மொழி ஆர்வலர்களை நான் கேட்க நினைக்கும் கேள்வி. இன்றைய இந்தியாவின் தொழில் புரட்சி முக்கியமாக கணிப்பொறி மற்றும் தொலைதொடர்ப்பு. இவற்றில் வேலை செய்ய ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். சுந்திர இந்தியாவில் தொழில் ரீதியாக முன்னேறிய அனேகம் பேர் தாய்மொழி தவிரவும் மற்ற மொழிகளிலும் கொஞ்சம் புலமை பெற்றிருந்தது உண்மை. இந்த
அடிப்படையில்லாத மொழி காவலர்களால் படித்த இளைய சமுதாயத்துக்கு எந்த பயனும் இல்லை(நம் கல்வி முறையே இன்றைய வாழ்க்கை முறைக்கு பொருத்தம் கிடையாது என்பதும் என் வாதம்). எங்கு எந்த மொழி உபயோகபடுத்த பட வேண்டிய தேவை உள்ளதோ - அங்கே அந்த மொழி உபயோகம் செய்வதில் தவறேதும் இல்லை. பிடிவாதமாக தாய்மொழிதான் எல்லா இடங்களிலும் வேண்டும் என்றால் - மொழி காவலர் நண்பர்களே -
உங்கள் வாழ்க்கையில் ஒரு மாதம் முழுக்க முழுக்க தாய்மொழி மட்டுமே புழங்கி - அதே தாய்மொழியால் ஒரு 100 பேருக்காவது நல்ல பொருளாதார அமைப்பில் வேலை வாங்கி கொடுத்து பிழைக்க வையுங்கள் - அதனை முன்னுதாரணமாக காட்டுங்கள். பின்னர் - உங்கள் தாய் மொழிக்கான போராட்டங்களை தொடருங்கள்.. உங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

பெளர்ணமி பூஜை

இந்த முறை கோவை வரும்போதே வீட்டில் ஏற்பாடு செய்துவிட்டார்கள். அதனால் குலதெய்வம் கோவில் பிரயாணம் வழக்கத்தை விட திருப்தியாக இருந்தது. பெளர்ணமியும் வெள்ளிகிழமையில் அமைத்து விட்டது. இரவு பெளர்ணமி பூஜை விசேஷம். அபிஷேகம், ஆராதனை, படையல், பொங்கல், பஞ்சாமிர்த்தம், அவல் என திருப்தியான பூஜை. பல்லடத்தில் இருந்து உள்ளே உள்ள கிராமம் அது. எங்கள் குலதெய்வம் - அங்காளம்மன். காட்டு பெண் தெய்வம். கிராமத்தில் மொபைல் போன் டவர் எல்லாம் எடுக்காது (நிம்மதி). நல்ல காற்று. திருப்பூரில் பணம் படைத்தவர்கள் இங்கே காற்றாலையில் முதலீடு செய்திருக்கிறார்களாம். அரச மரத்தடி பிள்ளையார் அருகில் உட்கார்ந்து காற்றை அனுபவிக்கும் சுகம் அலாதி. கோவில் கிணற்றில் கல்கண்டு தண்ணீர். நல்ல ஓடு வேய்ந்த மண்டபம். 250 பேர் நிற்க்க கூடிய கோவில் வளாகம். ஒற்றை கோபுரமும்..ஒரு காவல்
தெய்வமும் கொண்ட பெண் தெய்வம். ஒரு இனம் புரியாத திருப்தி இந்த கோவிலுக்கு வரும்போது எனக்கு ஏற்படுவதை உணர்கிறேன். என் திருமணத்தை இந்த கோவிலில்தான் வைத்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு அம்மா மகிழ்ச்சியோடு சம்மத்தித்து இருக்கிறார். பெண்தான் யார் என்று தெரியவேண்டும்... நமக்கு செவ்வாய் தோஷம் உண்டென்பது ஜாதக கருத்து... அதுவும் தவிர வீட்டில் போய் பெண்பார்பதற்க்கு நான் அனுமதிப்பதில்லை. பெண் பார்த்தல் ஏதாவது கோவிலில் நடப்பது நல்லது - அதற்க்கு நிறைய தார்மீக காரணங்கள் உண்டு - எந்த விதத்திலும் மூட நம்பிக்கைகள் காரணம் கிடையாது. இன்னும் ஒரு வருடம் - அதற்க்கும் நானே பெண்ணை சொல்லிவிட வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் பெண்னை ஒத்து கொள்ள வேண்டும்... எப்படி இருப்பினும் எனக்கு சம்மதமே... திருமணம் மட்டும் கிராம கோவிலில் சொந்த பந்தம் எல்லாம் அழைத்து பந்தி போட்டு பரிமாறி கொண்டாட்டமாக நடக்க வேண்டும்... கிராமத்து கிழவிகளின் ஆசீர்வாதமும், குறும்பு பேச்சோடு கூடிய சொந்தங்களும், விடலைகளும் கூடி வாழ்த்திதான் திருமணம் என்பது என் கனவு...பார்க்கலாம்..

கொஞ்சமாய் வாழ்க்கை...

வேகமான வாழ்க்கை நகரத்தின் உயிர். வியாபாரமும், பணமும் நொடிக்கணக்கில் இயங்கும் சென்னையில் நான் வியக்கும் பகுதி இந்த வீதி. எலக்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி சார்ந்த கடைகளையும் சமீபகாலங்களில் மொபைல் தொலைபேசி விற்க்கும் கடைகளையும் அடைத்துள்ள பகுதி... என் வியப்பு இங்குள்ள வியாபாரமும் பணமும் அல்ல. வேலை செய்யும் மனிதர்கள். சின்ன அறை - அதற்க்குள் ஒரு கணிப்பொறியை முழுமையாக
செம்மைபடுத்த உதவும் உபகரணங்கள் - எங்கோ தென் தமிழகத்தில் டிப்ளமா படித்த வல்லுனர்கள்..அவர்களின் மறக்காத ஊர் பாஷை...மதிய நேர ரோட்டோர பிரியாணி...எல்லா சந்துகளிலும் சின்ன சின்ன அறைகளில் அவர்களின் மதிய தூக்கமும் இரவு உழைப்பும்.. வார இறுதி சினிமா.. கூட்டமாக மெரீனாவில் அரட்டை... பின் இரவுகளில் மதுபானத்தோடு தூக்கம்... வீட்டுக்கு பணம் அனுப்பும் பெருமை... மூன்று மாதம் ஒருமுறையாவது ஊருக்கு போகும் உற்சாகம்... எனக்கு இவர்களில் வெகு சிலர் நண்பர்களாக உண்டு. புத்தம் புதியதாய் சந்தைக்கும் வந்திருக்கும் அதி நவீன கணிப்பொறி சாதனம் பற்றி விலாவரியாக பேசும் திறமைசாலிகள்... எனினும் அடுத்து என்ன செய்யலாம் என பெரிய அளவில் திட்டமிடாதவர்கள்... தெரிந்த நண்பர்கள் மூலமாக இவர்களிலில் சிலருக்கு வேலை வாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்ட போதும், அவர்களின்
ஆங்கில திறமை மேம்பட சிறிய அளவில் முயற்சிகள் செய்த போதும் இவர்கள் காட்டிய ஈடுபாடு மிகவும் அற்புதமானது - அவர்களின் ஆர்வம் வெளிப்பட்ட முக்கியமான தருணங்கள் அவை... வாழ்க்கை எல்லாருக்கும் போல அவர்களுக்கும் கொஞ்சமாய் தன் தயவை வழங்கி கொண்டுதான் இருக்கிறது.

Wednesday, August 16, 2006

கண்ணும் கண்ணும்...

சில வருடங்களுக்கு முன்னர் நான் ஈரோட்டுக்கும் கோவைக்குமாய் வாரம் ஒருமுறையாவது அலைந்து கொண்டிருந்தேன் - ஒரு தொழில்முறை விஷயமாக. பெரும்பாலும் காலையில் போய் மாலையில்/இரவில் திரும்பும் பயணம் அது. அவினாசியில் மெயின் ரோடை ஒட்டிய ஒரு பள்ளியில் காலை பிராத்தனை நடைபெறும் - வரிசையில் நிற்கும் மாணவர்கள் - திருக்குறள் சொல்லும் மாணவன் அல்லது மாணவி - கொஞ்சம் என் கிராம வாழ்க்கையையும் பள்ளி வாழ்க்கையையும் நினைவுருத்தும் தருணங்களை அவை. பேருந்தின் சுகமான காற்றில் கண்கள் தாமாக மூடி கொள்ளும். கோவை-ஈரோடு பேருந்துகள் பெரும்பாலும் பாடல்களால் நிறைந்து இருக்கும். பெருந்துறை தாண்டிய பிறகு கண்விழித்தால் போதுமானது. ஒரு வெள்ளி கிழமை இப்படியான ஒரு பயணத்தில் நான் அவர்களை சந்தித்தேன். சந்தித்தேன் என்பது விட கவனித்தேன் என்பது பொருந்தும். அவர்கள் அனைவரும் பெண்கள் - பள்ளி மாணவிகள். பேருந்து நிலையத்திலேயே அவர்களின் கூச்சலும் சத்தமும்தான் பலமான கவனிப்பிற்க்கு உள்ளாகி இருந்தது. ஒரு பெண் அவர்களில் கொஞ்சம் என் கவனத்தை ஈர்க்கும் படி இருந்ததால் என் கவனிப்பு எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ந்தது. பின்னர் ஒரு கோவை செல்லும் பேருந்தில் அவர்கள் கூட்டமாக ஏறினார்கள். பேருந்தில் உட்கார இடம் இல்லை எனினும் - என் கொள்கைக்கு மாறாக நின்று கொண்டு செல்லவும் திட்டமிட்டு, நானும் அந்த பேருந்தில் ஏறினேன். அவர்களில் யாரும் என்னை கவனிக்கவில்லை என்பது எனக்கு தெரியும்... ஒரு வார தாடியும், கலைந்த தலையும், காலையில் இருந்து கணிப்பொறியில் விலகாத சோர்ந்த முகமும் கொண்டவனை யார் கவனிப்பார்கள்..! அவர்களின் ஒருவருக்கு ஒருவரான கேலியும் கிண்டலும், ஓடும் பாடலுக்கு ஏற்ற ஆட்டமுமாய் பேருந்து களை கட்டியிருக்க, யாரும் அவர்களை எதிர்த்து ஒன்றும் பேசவில்லை - பெரும்பாலும் ரசனைதான் இருந்தது. அவர்களின் பேச்சில் இருந்து அவர்கள் கோவையில் ஒரு கபடி போட்டிக்காக ஈரோட்டில் இருந்து வருகிறார்கள் என புரிந்து கொண்டேன். என் கவனத்தை ஈர்த்த அந்த பெண் நல்ல குறும்புக்காரி. நல்ல குரல் வளம். இளமையும் கூட. நான் நின்று கொண்டு வருவதாலும், கூட்டத்தினாலும், கொஞ்சம் சுய முயற்சியினாலும் அவள் பார்வைக்கு தெரியும்படி நின்று கொண்டிருந்தேன். மாலை நேரமாதலால் கோவை-ஈரோடு சாலை வாகனங்களால் நிறைந்து காணப்படும் எனவே பேருந்தின் வேகம் ரொம்பவும் இருக்காது. இரண்டு மணி பயண நேரத்தில் எப்படியாவது அவள் பெயரை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு என்னிடம் இருந்தது. அது என்னிடம் கை-தொலைபேசி இல்லாத காலம். எனவே வேறு ஒன்றும் செய்ய முடியாது. பெருந்துறை தாண்டி, விஜயமங்கலம் வரும் நேரத்தில் அவள் என்னை கவனித்திருப்பதை அவள் நடவடிக்கைகளின் மாறுதல்களில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. சில வினாடிகளாவது நான் அவளை கண்ணோடு கண்ணாக பார்க்க முடிந்தது. அவள் புன்னகை இன்னமும் மறக்க முடியாதது. எனினும் அவள் தனது வழக்கமான குறும்புகளை நிறுத்தவில்லை - அதனோடு என்னை கவனிப்பதையும் / நான் கவனிப்பதையும் தடுக்கவில்லை. நான் ஒன்றும் அழகனல்ல... எனினும் கொஞ்சம் சுமாரானவன். அப்போது வயது வேறு இளவயது. பெண்களுக்கே உரிய மெல்லிய நாணம் அவளிடம் இருப்பினும் நான் திரும்ப கவனிக்க படுவதை உணர்ந்தவுடன் மனசு பறக்க ஆரம்பித்துவிட்டது. அப்புறம் என்ன.. பார்வைகள்தான்.. கொஞ்சமாய் புன்னகைகள்தான். எனினும் பேர் கேட்க தைரியம் வரவில்லை. இப்படியாக இந்த காவியம் கோவை பேருந்து நிலையம் வரை தொடர்ந்து முடிந்து விட்டது. அவர்கள் இறங்கி கூட்டமாய் பேசி கொண்டு போய்விட்டார்கள்..இதற்கெல்லாம் அசந்து போகின்ற ஆசாமியா நாம். அடுத்தநாள் காலையிலேயே கோவை நேரு விளையாட்டு அரங்கிற்க்கு வந்து விட்டேன். எதிர்பார்த்த்படி அங்கு கபடி போட்டிகள் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் விளையாடி கொண்டு இருந்தது எல்லாமே ஆண்கள். வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது. பெண்கள் போட்டி மதியம் என்றார்கள். 5 ரூபாய்க்கு புரோட்டா சாப்பிட்டு விட்டு மதியம் வரை காத்திருந்தேன். மதிய வேளையில் நிலவை பார்த்து இருக்கிறீர்களா... அவள் வந்த போது அப்படிதான் இருந்தது. விளையாட்டுக்கான உடையில் ஒரு நிலா. அவர்கள் அணி விளையாடும் போது - விளையாட்டு ஆர்வலர்களின் கூச்சலில் என் கூச்சலும் இருந்த்து. அவள் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்... மறுபடியும் சில புன்னகைகள்... விளையாடும் போதே பார்வைகள்... அப்புறம் என்ன...! அவர்கள் விளையாடுவதை முடியும் வரை பார்த்து கொண்டே இருந்து விட்டு...விளையாட்டு முடிந்ததும் .. சில மெல்லிய பார்வைகளுக்கு பிறகு.. சில ரகசியமாக கை அசைப்புகளுக்கு பிறகு.. அவர்கள் கிளம்பிபோய் விட்டார்கள். இரண்டு பேருக்கும் பேசி கொள்ள தைரியம் இல்லை. வேறு என்ன செய்ய முடியும்... எனக்கு இன்றும் இருப்பதை போன்றே அந்த பெண்ணுக்கும் நினைவுகள் இருக்குமா என்று தெரியவில்லை. அழகான பறவைகளுக்கு பெயர் தேவையில்லை என்பதை போல - அவள் நினைவுகளுக்கு பெயர் இல்லாத அவளே அடையாளம். ஆனால் அதற்கு பிறகு நான் கபடி போட்டிகளின் ரசிகன் ஆகிவிட்டேன்.

வியாபிக்கும் அறிவியல்

இந்த அளவுக்கு இது மக்களிடையே போய் சேரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் இது அதிகம். இவற்றின் அறிவியல் நுட்பங்கள் அதிகம். விற்பனை அதிகம். எல்லா தரப்பு மக்களிடையேயும் ஒரு ஆறாவது விரலாய்... இன்னும் கொஞ்ச நாட்களில் இன்னொரு மூளையாய்... மொபைல் போன்கள். வாரத்துக்கு மூன்று புதிய வசதிகளையாவது இன்றைய கை தொலைபேசிகளில் காண்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு வரை வெறும் பேசும் கருவியாக இருந்தது இன்று ஒரு கையடக்க கணிப்பொறியை உள்ளடக்கியதாக இருக்கிறது. சில மருத்துவ ரீதியான எச்சரிக்கைகளையும் மீறி எல்லா தலைமுறைகளும் இன்று மொபைல் போன்களை பயன்படுத்துகின்றன. தகவல் தொடர்ப்பு என்பது முன்னர் தபால் ரீதியாக இருந்தது. பின்னர் கணிப்பொறி சார்ந்ததாகவும், இன்று மொபைல் போன்களின் உலகமாகவும் உள்ளது. அறிவியல் வளர்ச்சி வரவேற்க்க வேண்டிய விஷயம்தான்... ஆனால் இது பிற்காலத்தில் முகம் பார்த்து பேசும் பழக்கத்தை முற்றிலும் மறந்து விடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிட கூடாது. வாரம் ஒரு முறையாவது அறிவியல் இணைப்புகள் இல்லாத உலகில் இருந்து உணருங்கள். அது கொஞ்சமேனும் அற்புதமானது.

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண பகவானை எத்துனை பேர் கடவுளாக ஏற்று கொள்கிறார்களோ தெரியாது...ஆனால் தேசம் முழுக்க கோடிக்கணக்கானோர் ஒரு நண்பனாக, ஒரு வழிகாட்டியாக, ஒரு குருவாக ஏன் ஒரு மிக சிறந்த காதலனாக கூடவும் ஏற்று கொள்கிறார்கள்.. இந்த முறை சி.என்.என். தொலைக்காட்சி இந்த ஜென்மாஷ்டமியை ஒரு முக்கிய செய்தியாக கருதி இந்தியாவின் பல பகுதிகளிலும் எப்படி ஒரு திருவிழாவாக கொண்டாடுகிறார்கள் என்று ஒளிபரப்பி கொண்டிருக்கிறது. நல்ல நட்புக்கும், அற்புதமான காதலுக்கும், தெளிவாக அரசியல் வித்தைகளுக்கும் கிருஷ்ணபகவான் ஒரு அடையாளமாக கொள்ளபடுவதை, அதனை தேசத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒப்பு கொள்வதை உலக நாடுகள் கவனிக்கின்றன. மிக சிலரை மட்டுமே கடவுளாகவும் அதே நேரம் மனிதனாகவும் உலகம் ஒப்பு கொள்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் அனைத்து பாவ புண்ணியங்களையும், நல்லது கெட்டதுகளையும் கடவுளாக பிறந்தாலும் செய்யவேண்டியுள்ளது என்பது கிருஷ்ணனின் வாழ்க்கை. சில சித்து வித்தைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எல்லா மனிதர்களின் உள்மனது ஆசைகளாகவே வெளிப்படுத்தபட்டு இருக்கின்றன. ஜெயமோகனின் ஒரு சிறுகதை உண்டு - யாதவர்களின் அழிவுக்கு பிறகு கிருஷ்ணர் தனது அவதாரத்தை முடித்து கொள்ள வேண்டி ஏகலைவனின் அம்புக்கு பலியாக தயாராகிறார். இறுதியாக தன் காதலி ராதையை பார்க்க கோகுலம் செல்கிறார். அங்கு தன்னை போலவே ஒரு சிறுவனின் குழலோசைக்கு பசுக்களும் பறவைகளும் மயங்கி நிற்பதை காண்கிறார். அவருக்கு தாகம் எடுக்கிறது. ஒரு குளத்தில் நீர் அருந்த குனிகிறார். தண்ணீரில் அவர் முகத்தின் பிம்பத்தை காண்கிறார். முகம் பொலிவிலந்து இருக்கிறது. சுருக்கங்கள் முகத்தில். தலைமுடிகள் கொஞ்சம் நரைத்து இருக்கின்றன. சில நிமிட சிந்தனைகளுக்கு பிறகு அவர் ராதையை காணாமலேயே திரும்பி விடுகிறார் என கதை முடிகிறது. மிக சிறிய ஒரு கற்பனை சம்பவத்தை சொல்லியிருந்த போதிலும் அதில் எல்லா மனிதர்களது அந்திம கால இயல்புகளும் சொல்லபட்டு இருக்கின்றன. மகாபாரதத்தின் எல்லா கிளை கதைகளிலும் கிருஷ்ணர் ஒரு பாத்திரமாகவே இருந்திருக்கிறார். எல்லா சூழ்ச்சிகளுக்கு பின்னாலும், எல்லா சாதனைகளுக்கு பின்னாலும், எல்லா தந்திரங்களுக்கு பின்னரும் அவர் இருந்திருக்கிறார். பகவத்கீதை சரியான முறையில் படிக்கபட்டால் அவற்றில் சாணக்கியருக்கு இணையான அரசியல் தந்திரங்களை காணலாம். என்.டி.ஆர் ஆக இருந்தாலும், கேலண்டர் கிருஷ்ணராக இருந்தாலும், எந்த கோவில் அவதார வடிவாக இருந்தாலும்... கிருஷ்ணர் நிறைய வாழ்க்கை முறை சார்ந்த கருத்துகளில் பின்பற்றபட வேண்டிய தோழன் என்பது உண்மை.

Sunday, July 30, 2006

சுகிர்தராணியின் சில கவிதைகள்

மனதை தொட்ட சில கவிதைகள்.. இரவு மிருகம் என்ற தொகுப்பில் இருந்து…

எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்
யாரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்து கொண்டிருக்கிறோம்

உலகத்து மொழிகளின்
அத்தனை அகராதிகளிலும்
தேடித்தேடி
கடைசியில்
தெரிந்து கொண்டேன்
உன் பெயரில்
காதலுக்கு நிகரான
இன்னொரு சொல்லை.

கைநிறைய கவிதைகளோடு
உன்னிடம்
வந்து கொண்டிருக்கிறேன்
எண்ணமுடியாத முத்தங்களோடு
நீயும் எதிர்படுகிறாய்
ஒரு முத்தமிடலில்
பல கவிதைகளும்
ஒரு கவிதையில்
பல முத்தங்களும்
கை நழுவி போகின்றன.

போபால் எக்ஸ்பிரஸ்..

வாய்ப்பு கிடைத்தால் இந்த திரைபடத்தை பாருங்கள். மிக அற்புதமாக படமாக்கபட்டுள்ளது. போபால் விஷவாயு கசிவை மையபடுத்தி திரைபடமாக்கபட்டுள்ள கதை – நஸ்ருதீன்ஷ போன்ற அற்புதமான நடிகர்களால் மேலும் திரைப்படம் பண்பட்டு இருக்கிறது. பிதா என்று ஒரு திரைப்படம் – இன்று பார்க்க திட்டமிட்டு உள்ளேன். நிறைய கேள்விபட்டு உள்ளே இந்த திரைப்படம் பற்றி. மேலும் சில ஆங்கில திரைப்படங்கள் இருக்கின்றன (உதா: ). அடுத்த முறை ஒரு சிறிய திரைபட வரிசை கொடுக்கிறேன் – நமக்குள் நல்ல திரைப்பட ஆர்வமுள்ளவர்களுக்காக.

கும்பகோணம்..

சென்ற வாரம் கும்பகோணம் / திருநாகேஸ்வரம் – ராகு ஸ்தலத்தில் கொஞ்சம் பூஜை மற்றும் விஷேசங்கள். நல்ல கோவில் அது – தவிலுக்கும் நாதஸ்வரத்துக்கும் பயிற்சி பள்ளி இருக்கிறது. அற்புதமான இசை கோவிலுக்கு நல்ல உணர்வை கொடுக்கிறது. குளத்தை சுத்தமாக பராமரிக்கிறார்கள். சின்ன கோவில் எனினும் நல்ல பராமரிப்பு இருப்பதால் நல்ல அனுபவம். கும்பகோணம் டிகிரி காப்பியும், திருநாகேஸ்வரத்தில் பவண்டோவும் என் விருப்பங்கள் – இந்த முறையும் குறைவின்றி நிறைவேறியது. சென்னையில் அடாவடி பெண்களை பார்த்து பார்த்து… கும்பகோணத்திலும் திருநாகேஸ்வரத்திலும் அழகான தலை நிமிராத பெண்களை பார்த்ததும்… மனசு பிடித்து போயிற்று. அந்த ஏரியாவில் எனக்கு பெண் எடுப்பார்களா என்று தெரியவில்லை.

மின்னஞ்சலில் சாணக்கியர்.

சமீபத்தில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. சாணக்கியரின் சித்தாந்தங்களை விவரித்து எழுதியிருந்தார்கள். இன்றைய அலுவக சூழலில் அவரின் கருத்துகள் மிகவும் தேவைபடுகின்றன என்பது என் கருத்து. வாழ்வியல் ரீதியான அரசியலில் அவர் கருத்துகளை நான் என்றும் பயன்படுத்துகிறேன். சாணக்கியரின் கருத்துகள் வெறும் அரசியல் சார்ந்தவை அல்ல – நல்ல மனிதனின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் – இடர்பாடுகள் என்ன – எப்படி கவனித்து – புரிந்து அவற்றை முறியடித்து வாழ்வது என்றும் உண்டு. அர்த்த சாஸ்திரம் பாதி படித்து வைக்க பட்டு இருக்கிறது. அடுத்த முறை பதிவுகளில் கொஞ்சம் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தார்தர்களும் புத்தர்களும்…

ஒரு பொதுவான நண்பருடன் கலந்துரையாடலின் போது பற்றற்று வாழும் வாழ்க்கை பற்றி பேசினோம்… சித்தார்த்தர்கள் தான் நல்ல புத்தர்கள் ஆக முடியும் என்ற என் கருத்து பெரும் விவாதத்துக்கு உள்ளானது. ஆசைகள் இல்லாமல் வாழ்வது தியானம் என்றால் – ஆசைகளை கொண்டு வாழும் அற்புதமான வாழ்க்கை தியானத்துக்கு மேலானது என்பது என் கோட்பாடு. காதலும் ஆசையும் கொண்ட வாழ்க்கை வேண்டும் – ஆனால் இழப்புகளுக்கு வருந்த கூடாது. வருவது போலவே போவதும் இயல்பானது என்று கண்ணதாசன் சொல்வாராம். முற்றிலும் துறந்த துறவியாகி தான் மட்டும் சொர்கம் போவதைவிட, இருக்கும் வரைக்கும் சுக வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுடன் சேர்ந்து பூலோக சொர்க்கம் காண்பதில் தவறில்லையே. இன்னொன்றும் கவனியுங்கள் – அது அருணகிரிநாதராகட்டும், பகவான் கிருஷணராகட்டும் அல்லது கண்ணதாசன் ஆகட்டும் – எல்லா விளையாட்டுகளும் விளையாடி முடித்தபின்னரே அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்தார்கள். 20 வயதிலேயே தலையணை புத்தகங்களை படித்துவிட்டு வேதாந்தமும் சித்தாந்தமும் பேசும் நண்பர்களே மன்னியுங்கள்.. ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொல்வதை கவனியுங்கள்.. “இளைஞர்களே.. இளைஞிகளே… இது உங்கள் பருவம்…பூக்களை பாருங்கள்…பட்டாம்பூச்சிகளை பாருங்கள்…வாழ்க்கை ஒரு அழகான தோட்டம் போன்றது…ரசியுங்கள்..” – கலந்துரையாடலின் போது ஒரு தோழி சொன்னார் – சித்தார்தரை விட யசோதா உயர்ந்தவர் என்று… நான் முற்றிலும் ஏற்றுகொண்ட விஷயம் அது.

காதலுடன்…

என் சில நட்புகளும் காதல்களும் சிலரிடையே கொஞ்சம் சலசலப்புகளை ஏற்படுத்துவதை சில நேரங்களில் காண்கிறேன். இந்த பதிப்பு எந்த வகையிலும் வாக்குமூலம் கிடையாது – எனினும் மனதில் பட்டதை எழுதும் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு இந்த பதிப்பு அமைகிறது. என்னை பொருத்தவரை எல்லா நட்பிலும் மெல்லிய காதல் தேவைபடுகிறது. முகத்தில் புன்னகை – கண்களில் நட்பு – இவை வேண்டுமென்றால் இதயத்தில் காதல் வேண்டும். இரு பால் வகை நட்புகளிலும் காதல் தேவைப்படுகிறது – காதல் என்பது வெறும் ஆண் பெண் உறவுதான் என்று வாதிடுபவர்களுக்கு நான் பதில் சொல்ல போவதில்லை – காதல் என்பதை நான் ஆத்மார்த்தமான அன்பு என்றும் – மனம் சார்ந்த நெருக்கமாகவும் கூட எடுத்து கொள்கிறேன். ஒரு ஆணுடன் ஏற்படும் நட்பு உணர்வு சார்ந்ததாக அமையும் சாத்தியத்தில் இயல்பான நெருக்கம் அமைகிறது. இருவருக்குள்ளும் ஒரு புரிதல் சாத்தியமாகிறது – ஒருவரின் எண்ண ஓட்டத்தை புரிந்து அடுத்தவர் நடப்பது சாத்தியமாகிறது – இது உறவை மேம்படுத்துவதோடு – செய்யும் வேலையை அற்புதமாக்குகிறது – பெறும்பாலான குழு மேலாண்மை உக்திகளில் இவற்றை காணலாம். காதல் என்பது பொருட்கள் மேலும், சம்பவங்கள் மேலும் கூட வரலாம். சிலருக்கு மோட்டார் வாகனங்கள், சிலருக்கு கை தொலைபேசிகள், சிலருக்கு கை கடிகாரங்கள்… சிலருக்கு திருமணங்களில் கலந்து கொள்தல் மிகவும் பிடிக்கும் .. எனக்கு பயணங்கள் பிடிப்பதை போல. சம்பவங்களின் மேல் கொள்ளும் காதல் நம் பங்களிப்பை மேம்படுத்துகிறது. பொருட்களின் மேல் கொள்ளும் காதல் நம் கவனிப்பை – மேல்படுத்துகிறது.

காதலுடன்…வாழ்தலில் ஆசையுடன் வாழும் போது வாழ்க்கை வாழதக்கது ஆகிறது…வாழ்தலில் உயிர் முக்கியம். உயிருக்கு காதல் முக்கியம். மனதில் காதல் கொண்டு கண்களில் அன்பு கொண்டு பேசி பாருங்கள்….நடக்காத விஷயமே கிடையாது. இயல்பாகவே ஆண் பெண் உறவில் ஒரு காதல் அமையும் – அது அமையும் போது வெறும் நட்பு என்ற உயரத்தில் இருந்து கொஞ்சம் உறவு உயர்கிறது. அப்படி உயர்ந்த உணர்வு சுலபத்தில் கலையாது. இங்கு சமூகத்தில் காதல் என்பது காமத்தின் முன்னுரையாக மட்டுமே கருதப்படும் பட்சத்தில் – காதல் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமானதும் கூட. காதல் வார்த்தைகளின் மென்மையை கொடுக்கிறது – அடுத்தவரை புரிந்து கொள்ளும் ஆற்றலை கொடுக்கிறது. எந்த ஒரு உணர்வு நெருக்கத்தையும் நட்பையும் மேம்படுத்துகிறதோ அதனை காதல் என்று கொள்கிறேன் நான். கொஞ்சம் கண் பார்வைகள், கொஞ்சம் புன்னகை இவை போதும். மனதில் பிடித்த பாடலை என்றும் மவுனமாய் பாடுங்கள் – அது உங்களை உற்சாக படுத்தியிருக்கும். தினமும் பார்க்கும் நண்பர்களை அவர்களின் செயல்களுக்காக பாராட்டுங்கள் – உங்கள் வார்த்தைகளின் தாக்கம் புரியும். மனதில் ஒரு உணர்வோடு பழக ஆரம்பித்து விட்டீர்களானால், அடுத்தவருக்காக நீங்கள் செய்யும் எல்லா செயலிலும் ஒரு உயிர்ப்பு இருக்கும். அது மேலும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும். அலுவகம், குடும்பம் என எல்லா இடங்களிலும் இது தேவைபடுகிறது. இதே கருத்துகளை சில நிறுவனங்கள் பயிற்சியாகவே அளிக்கின்றன - மனோதத்துவ வாழ்க்கை முறை என்ற பெயரில். எல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. எனவே…வாழ்ந்து பாருங்கள்… தினமும் கொஞ்ச நேரமாவது… காதலுடன்.

ரயில் பயணங்களில்

ரயில் பயணங்கள் இப்போதெல்லாம் ரொம்ப சுவரஸ்யமாக ஆகிவிட்டது. பொதுவின் என் கோவை பயணங்கள் இரவில் அமையும் – இந்தமுறை கோவையில் இருந்து சென்னை பயணம் காலையில் அமைந்து விட்டது. நிறைய விதமான மனிதர்கள் – நிறைய விதமான காட்சிகள். ரயிலில் புத்தகங்கள் மட்டுமல்ல இப்போதெல்லாம் டிவிடி – விசிடி – எம்பி3 சிடிகள் எல்லாம் கிடைக்கிறது. ரயில் மசால் தோசையும் காப்பியும் குடித்து விட்டு நிமிர்ந்த போது அவர் அறிமுகமானார். தன்னை ஒரு அரசாங்க அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார் – நான் வழக்கம் போல (எல்.எம்.டபில்யுல… மெக்கானிக்கல் என்ஜினியர்) அறிமுகம் செய்து கொண்டேன். என்னிடம் இருந்த பத்திரிக்கைகளின் எல்லா பக்க செய்திகளையும் விமர்ச்சனம் செய்தார். எந்த அரசாங்கமும் சரியில்லை என்று மொத்தமாய் குற்றம் சாட்டினார் – அவர் சேலத்தில் இறங்கும் வரைக்கும் அவர் மட்டும்தான் பேசிகொண்டு இருந்தார் – நாங்கள் எல்லாரும் அவரை பார்த்து கொண்டு மட்டுமே இருந்தோம் – சிலர் தூங்கி போய் இருந்தார்கள்.

ரயிலில் சில சுவரஸ்யமான புத்தகங்கள் கிடைப்பது உண்டு – இந்த முறை 5 மொழிகளை தமிழ் மூலமாக கற்று கொள்ள சொல்லி தரும் புத்தகம் ஒன்று கிடைத்தது – 10 ரூபாய்தான் விலை. முதல் பக்கத்திலேயே சொல்லிவிட்டார்கள் – “எல்லா மொழிகளின் பெயர்ப்புகளும் எங்கள் அறிவுக்கு எட்டிய வரைதான்” என்று – யாராவது மொழி தெரிந்தவர்களுடன் புத்தகத்தை வைத்து சரிபார்த்த பிறகுதான் கற்று கொள்ளவேண்டும் – இல்லாவிட்டால் குத்து வெட்டு நடந்து விடும் போல. ரயிலில் பிச்சை எடுக்காமல் ஏமாற்றாமல் கவுரவமாக புத்தகம் விற்று பிழைப்பு நடத்தும் நபர்களிடம் எனக்கு என்றுமே நல்ல மரியாதை உண்டு – அதனால் ரயிலில் புத்தகம் வாங்குவது பழகிவிட்டது – நான் வாங்கிய இன்னொரு புத்தகம் “சாமுத்திரிகா லட்சணம்” – (இடது முதுகில் மச்சம் இருக்கும் பெண் நல்ல குடும்பஸ்திரி…யார் இதையெல்லாம் பார்த்து உதை வாங்க போகிறார்களோ தெரியவில்லை…) – ஒரு எம்பி3 சிடியும் ஒரு டிவிடியும் வாங்கினேன் – பரவாயில்லை – காசுக்கு மோசமில்லை.

மருத்துவ உடனடி விளம்பரங்கள் போலவே – உல்லாசத்துக்கு அழைக்கும் கை தொலைபேசி எண்களும் நிறைந்து காணப்படுகிறது ரயில் பெட்டியின் கழிவறைகள். தேசத்தின் மிக அதிகம் பேர் வேலை செய்யும் அரசாங்க யந்திரம் – நாட்டின் பகுதிகளை இணைக்கும் சந்தோஷமான வாகன சேவை – மனிதர்கள் மாறி கொண்டே இருக்கிறார்கள் – கிராமத்து வயலோர சிறுவர்களின் உற்சாக கை அசைப்புகளுக்கு புன்னகைத்தபடியே – இயங்கி கொண்டு இருக்கிறது – ரயில் – ஒரு வாழ்க்கை போல.

மீண்டும் கொஞ்சம் காலை…

பருவ பெண்ணின் அலட்சியமான தாவணி கட்டு போன்ற பைக்காரா மலைச்சாலை... கொஞ்சமாய் உயிரை தொடும் பனி…ஈரமான காற்று… முற்றிலும் புதிதானதல்ல எனினும்…ஒவ்வொரு முறையும் மனசு நிறையும் பயணம் அது. இந்த முறை அலுவக நண்பர்களுடன். பயணம் சுகமானது…அதுவும் அற்புதமான கூட்டணி அமையும் போது மேலும் உற்சாகமடைந்து விடுகிறது. புதிய நண்பர்கள்…புதிய அனுபவங்கள்…கேலி..சிரிப்பு…கவிதையான நினைவுகள்.. இவைதான் பயணத்தை நினைவுகளில் சேமிக்கும்.

வாகன வசதிகளும், தங்குமிடமும் சரியான முறையில் அமையவில்லை – முதல் நாள் உணவு தேவாமிர்தம் – தேவர்கள் மட்டும்தான் சாப்பிட முடியும்…இரண்டாவது நாள் அற்புதமாக கழிந்தது. முதல் நாள் இரவில் தீ மூட்டி…ஆட்டம் ஆடி… கொஞ்சம் தள்ளி இருந்து பார்த்த போது ஆதி மனிதனின் மிச்சங்களை பார்க்க முடிந்தது. கொஞ்சம் மதுவும், கொஞ்சம் உற்சாகமும், குளிருக்கு இதமான தீயும்…சரியான கூட்டணியும் அமைந்ததும் நாகரீக மனிதனுக்கு உள்ளே இருக்கும் ஆதி மனிதன் வெளியே வருகிறான் – அவனுக்கு எந்த விதிகளும் கிடையாது – அவன் சுயமாய் இருக்கிறான். மூளைக்குள் ஓங்காரமிடும் கட்டளைகள் தவிர அவனுக்கு கடவுள்கள் கிடையாது.

இரண்டாம் நாள் – என்னுடன் வந்த முதன் முறை பயணிகளுக்கு சுகமான நாளானது. 2600 அடி உயரத்தின் குளிர்ச்சியை சென்னைவாசிகளும் மலைவசஸ்தலமில்லாத வாசிகளும் அனுபவித்து மகிழ்ந்தார்கள். உதகை கொஞ்சமாய் வெகுஜன நகரமாகி வருகிறது. முன்னர் இவ்வளவு கூட்டம் கிடையாது. மெல்லிய பனியில் சுட்ட மக்காசோளமும், மிளகாய் பொடி போட்ட பொரியும் கொரித்து கொண்டு கை கோர்ந்து நடந்த காலம் எல்லாம் உண்டு. அதீதமில்லா இருட்டில் தோள் சாய்ந்த துணையோடு தொட்டபெட்டாவின் மலை பாதைகளில் சுற்றியதுண்டு. இப்போது எங்கு திரும்பினாலும் மக்கள் மக்கள் மக்கள் – இவ்வளவு கூட்டம் இந்த இடத்தின் தனிமையின் அழகை கொஞ்சம் கொஞ்சமாய் தின்று விடுகிறது. இந்த முறை பழங்குடி மக்களை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை. என் தோழர்களில் சிலர் அங்கு உண்டு. இவ்வளவு கூட்டமாய் அவர்களை சந்திப்பது உசித்தமான விஷயமில்லை என்பதால் இந்தமுறை சந்திப்பை தவிர்க்க வேண்டியதாயிற்று.

புதிய நட்புகளும் இந்த பயணத்தில் உண்டு – சிலரை புதியதாய் அறிந்தும் கொண்டோம். சில தோழர்கள் இந்த அளவுக்கு மற்றவரை கிண்டல் செய்வார்கள் – நடனம் ஆடுவார்கள் – பாடுவார்கள் என்று தெரியாது. முதல் நாளின் இரவு பயணத்தில் கொஞ்சம் கவிதைகள் பரிமாறி கொண்டோம். ஒரே அலைவரிசை கொண்ட தோழி அமைவது – அதுவும் இரண்டு நாள் அலுவக பயணத்தில் அமைவது இதுதான் முதன் முறை – என் மற்ற இலக்கில்லாத பயணங்களில் இத்தகைய தோழிகளை கண்டு கொண்டதுண்டு.
மிக சில இடங்களே பயணம் கொண்டோம் – தோட்டவியல் பூங்கா – தொட்டபெட்டா – பைக்காரா அருவி – ஏரியில் படகு பயணம் – கொஞ்சம் வழித்தடங்களில் இயற்கை என்று சுலபமாய் முடிந்து விட்டது பயணம். மிலாஞ், அவலாஞ், கிலன்மார்கன், பைக்காரா என அடர்ந்த பகுதிகளுக்குள் செல்ல நேரமில்லை. அடுத்த பயணத்தில் திட்டமிட வேண்டும். மலைகளின் அரசி என்றும் காத்திருக்கிறாள்.

Sunday, June 18, 2006

கனவு..

ஒரு விசித்திரமான விந்தை.. மூளையின் அற்புதமான செயல்பாடு.. சமீப காலமான நானும் கனவுகளை பற்றி இணையத்தில் படித்து வருகிறேன்.. இந்தியாவில் உள்ளது போலவே எல்லா நாடுகளிலும் கனவுகளுக்கு பலன் எழுதுகிறார்கள்.. என் பிரச்சனை அது அல்ல.. மூளையின் விஸ்தாரமான செயல்பாடுகளை நான் வியந்து கொண்டு இருக்கிறேன்.. சுஜாதாவின் தலைமை செயலகம் பிள்ளையார் சுழி. சிக்மண்ட் பிராய்ட் கனவுகளை பற்றி, அவை சொல்லும் மானிட தன்மைகள் பற்றி அடிமனதின் நினைவு தேக்கங்கள் பற்றி பேசுகிறார்.. ஒரு மனோதத்துவ நண்பரிடம் பேசி கொண்டு இருக்கும் போது, என் கேள்விகளை சொன்னேன்.. அவரின் பதில்களின் சாராம்சம்.. கனவு மூளையில் உதயமாகும் ஒரு இன்ஸ்டண்ட் சினிமா.. இதன் பிரதிபலிப்பு உடலிலும் இருக்கும்.. வாழ்வில் அனுபவித்து அறியாத உணர்வுகளை பற்றி மூளை திரட்டி வைத்திருக்கும் தகவல்களை இந்த கனவுகளின் பிரதிபலிப்பாக உடலில் உணரலாம்.. கனவுகளின் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் பெறும்பாலும் கடந்த சம்பவங்களில் அறிந்தவை / உணர்ந்தவை.. அதுவும் தவிர முற்றிலும் புதிய கதாபாத்திரங்களும் சம்பவங்களும் வருவதுண்டு...அவை மூளை கொண்ட தகவல் சுரங்கம். படித்தவை, பார்த்தவை, கேட்டவை, உணர்ந்தவை.. எல்லாம் தகவல்கள். இவற்றை ஒருங்கிணைப்பவை கனவுகள்.. எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் கனவுகள் சுவரஸ்யம் மிகுந்தவை என்று படித்து இருக்கிறேன். கனவுகளை பற்றி பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு தோழி உண்டு.. என் கனவுகளுக்கு சில நேரம் பலன்கள் சொல்வாள். அவளின் கனவுகள் பெறும்பாலும் தேவதை கதைகள் போன்றவை.. என் கனவுகள்... சொல்லமுடியாது..நாளைக்கே நடந்து விடலாம்.. அவ்வளவு நிஜம் சார்ந்தவை.. சிலவற்றை நிஜவாழ்விலும் கண்டு வியந்திருக்கிறேன்.. மருத்துவம் ஒத்து கொள்ளாது.. மூளையின் கிரகிக்கும் திரணில் உள்ள சிறு குறைபாடு இந்த விந்தையை நிகழ்த்துகிறது என சொல்வார்கள்.. சில இரவுகளில் கனவுகளை எதிர்பார்த்து காத்திருந்து இருக்கிறேன்.. அவை மெல்ல மெல்ல என்னை அட்கொண்டு இருக்கும்.. சிறு குழந்தைகள் கதைகளுக்கு காத்திருப்பது போல..வாழ்வின் சில கட்டங்கள் கனவுகளை அடிப்படையாக கொண்டவை.. நிகழ்வுகள் எல்லாம் கனவுகள் போல.. கனவுகள் மட்டும் நிகழுவுகள் போல..

சில புத்தகங்களும் சில கருத்துகளும்...

சமீபத்தில் ஒரு வார இதழில் எழுத்தாளர் மற்றும் கார்டூனிஸ்ட் மதன் படித்த சமீபகால புத்தகங்களில் அயல் நாட்டு கவிஞர்கள் எழுதிய காமம் சார்ந்த கவிதைகள் பற்றி சொல்லியிருந்தார். நானும் சில கவிதைகளை இணையத்தில் படித்து இருக்கிறேன்.. கவிதை நயமும், மென்மையான காமமும் சொல்லும் அற்புதமான கவிதைகள்.. சிலவற்றை மொழிபெயர்க்கவும் முயற்சித்து கொண்டு இருக்கிறேன்.. இன்றைக்கு நம் சினிமா பாடல்களில் காமம் வெளிப்படையாக தெரிவது போல இருக்காது அந்த கவிதைகள்.. மென்மையானவை.. உணர்வுகளை பேசுபவை.. உணர்ச்சிகளை அல்ல. இங்கே எரொடிக் (Erotic) என்று சொல்லபடும் கருத்துகளை கொண்ட புத்தகங்கள் ரொம்ப கம்மி. எல்லாருக்கும் அந்த புத்தகங்களை ரெண்டு பக்கமும் 'பின்' அடித்த மை குடிக்கும் பக்கங்களை கொண்ட, எழுத்து பிழை உள்ள புத்தகங்கங்களின் முறையில் தான் தெரியும். சிறுகதை இலக்கியத்திலும்.. கட்டுரை இலக்கியத்திலும்..கவிதை இலக்கியத்திலும் இவை குவிந்து உள்ளது.. ஒரு காலத்தில் நான் தேடி தேடி படித்ததுண்டு.. இன்னும் படிப்பதும் உண்டு. ஒரு நல்ல வரிசை தயார் செய்து விட்டு இங்கே பதிப்பிக்கிறேன். கி.ராஜநாராயணன், புதுமைபித்தன், பாரதியார், ல.சா.ரா., கு.பா.ரா, தி.ஜானகிராமன், ரமேஷ்-பிரேம், சாருநிவேதா,சுகிர்தராணி இவர்கள் கொஞ்சமே .. இன்னும் லட்சம் பேர் உண்டு... நான் படித்தவர்களில் நன்கு நினைவு உள்ளவர்கள் இவர்கள்.. சொல்லாமல் விட்டவர்கள் இருந்தால் மன்னிகவும்... போன் செய்து திட்ட வேண்டாம்..

ஒரு முறை ஒரு நண்பனின் திருமணத்துக்காக புத்தகம் பரிசாக கொடுக்கலாம் என தீர்மானித்தோம். சென்னையின் மிக பிரபலமான புத்தக கடை அது.. தமிழுக்கான புத்தகங்கள் ரொம்ப கம்மி. தமிழ் புத்தகங்களை புரட்டி கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது எரொடிக் புத்தங்கள் உள்ள பகுதி. ஆங்கிலத்தில் காமசூத்திரம் வாங்கினோம். அங்கே நின்றாலே பார்ப்பவர்கள் பார்வையில் ஒரு கிண்டல் தென்பட்டது. பில் போடும் இடத்தில் பெண் நமுட்டாய் சிரிக்கிறாள். பக்கத்தில் இருப்பவர் ஏதோ பாவ காரியம் பார்பவர்போல முகம் சுளிக்கிறார்.. ஆனால் எல்லாருக்கும் அங்கே உள்ள புத்தகங்களை பார்க்கம் புரட்டி படிக்க உள்ளே ஆர்வம் இருக்கிறது. .. தைரியம் இல்லை.. இவர்களால்தான் காமம் சரியான் முறையில் உணரபடவில்லை.. தெரிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை. உபயோகபடுத்தி பார்பதில் தெளிவும், கொஞ்சம் கட்டுபாடும் போதும்..

கிடக்கிறார்கள்... அப்புறம் நான் 6 புத்தகங்கள் வாங்கினேன்.. 3 கவிதைகளும், இரண்டு கட்டுரைகளும்.. ஒரு சிறுகதைகளும் கொண்டவை. காமம் அடிப்படை உணர்வாக இருக்கிறது. காதலைவிட..காமமே உறவுகளில் மேலோங்கி இருக்கிறது.. ஒத்து கொள்வதில் மாறுபாடுகள் இருக்கலாம்.. சமூக சூழல், வளர்ப்புமுறை, சொல்லி கொடுக்கபட்டவை, மதம், வயது, வாழ்க்கை முறை, விருப்பு வெறுப்புகள்.. காரணங்கள் பலவாறு உண்டு....இயக்கத்தின் காலம் தொட்டு, மனித இனம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இதில் ஒன்றில்தான் என்பது என் கருத்து. தெளிவான காமம்.. தியானம் போன்றது.. ஒரு வகையில் ஆன்மூகம்.. நான் மட்டும் சொல்லவில்லை.. ஓஷோவும் சொல்கிறார்.. வாழ்கை பற்றி வாஸ்தியானர் சொன்னதை மெல்ல மெல்ல கதைகளில் ஒரு நீரோடை போல பாலகுமாரனும் சொல்கிறார்.. திரிகூட ராசப்பகவிராயர் சொன்னதை.. குறத்தி கவிதைகளில் உள்ளதை வைரமுத்துவும் வாலியும் சொல்கிறார்கள்.. எல்லாம் சொல்லி என்ன..? இங்கே எல்லா பூனைகளும் சைவ வேடம் தான்.

குறும்படங்கள் மற்றும் விவரணப்படங்கள்.

திரை.. இந்த புத்தகம் கடைகளில் கிடைப்பது பெரும்பாடு.. ஒரு மாதம் வந்தால் அடுத்தமாதம் கிடைப்பதில்லை.. வழக்கம்போல நிறைய பேசியிருக்கிறார்கள்... கிரீஸ் காசரவள்ளியின் கன்னடபடங்கள்...75 ஆண்டுகள் மலையாள சினிமா .. கோவிந்த் நிகலானியின் கலந்துரையாடல்- ஆகியவை நான் ரசித்த சில. மேலும் ஒரு சுவரஸ்யமான விஷயம் கனவுப்பட்டறை என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்படும் புத்தகங்கள் குறும்படங்கள் மற்றும் விவரணப்படங்கள். வெகு சீக்கிரம் சில புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் வாங்குவேன் என நினைக்கிறேன்.. பின்னர் அவர் பற்றி எழுதலாம்.. அயல்நாட்டு திரைப்படங்கள் அவற்றில் வரும் விஸ்தாரமான உடலுறவு காட்சிகளுக்காகவே கவனிக்கபடுவதாக ஒரு முறை சுஜாதா சொல்லியிருந்தாக நினைவு. என் பார்வையில் அவை ஒரு வகையான உணர்வு வெளிப்பாட்டின் பங்களிப்பு. நம் திரைப்படங்களின் பாடல்களை போல.. நிஜ வாழ்வில் உடலாலான ஈர்ப்பும் தொடுகையும் மிக இயல்பாக நம்மால் கையாளப்படுகின்றன.. பாடல்கள் யாராலும் பாடபடுவது இல்லை. சில நேரங்களில் சில அபூர்வமான பாடல்கள் தொடுகையும் ஈர்ப்பையும் வேகப்படுத்தி இருக்கின்றன.. உணர்வுகளை தூண்டும் தருணங்கள் அவை. குறும்படங்களில் இந்த குழ்ப்பங்கள் இருப்பதில்லை. சில நிமிடங்கள் விவரம் சொல்லும் வேகம் மட்டுமே.. சில நேரங்களில் இரண்டு முறை பார்த்தால் மட்டுமே புரிகிறது. வெகுஜன திரைப்படங்களை விட.. கதையும் கதையின் போக்கும் அற்புதமாக படமாக்கபடும் விதம் இதில் உள்ளது. வாழ்வின் மிக சிறிய... நாம் பொதுவில் கவனிக்க தவறும் தருணங்கள் இத்திரைப்படங்களில் கையாளப்படுகின்றன. நேரம் கிடைத்தால் நீங்களும் பாருங்கள்.. பின்னர் பகிர்ந்து கொள்ள எனக்கும் நண்பர்கள் வேண்டும்...

Sunday, May 28, 2006

கோடை மழை..

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை. வானம் கருப்பு கட்டி கொண்டு, காலை நேரத்தில் மெல்லிய ஊதல் காற்றோடு, இரவுகளில் மெல்லிய சில் துளிகள்...இது எல்லாம் எனக்கு சென்னையில் புதுசு. கோவையில் மிக பழக்கமாக சூழ்நிலை இது. கோவையில் பொதுவான காலநிலை இதுவாக இருப்பதால் சென்னையில் சமீபத்திய இரண்டு நாட்கள் கோவையில் இருக்கும் உணர்வை தூண்டிவிட்டு இருக்கிறது.

கோடை மழை அற்புதமானது. வெயிலின் வெக்கையை சட்டென அணைத்து சீதோஷணநிலையை குளுமையாக்கும் காலதேவனின் தூதுவன் இந்த கோடை மழை. ஒரு உருது கவிதை இந்த மழையை உறவுக்கு பின்னால் உறங்கும் காதலர்களின் உடல் சூட்டோடு ஒப்பிட்டு பாடுகிறது. காமம் மெல்லிய வெயில் போல துவங்கி பின்னர் வெப்பமும் வெட்கையும் வேட்கையும் கொண்டு... பின்னர் மெல்ல குளிர்ந்து அடங்கி ஒரு நீரோடை போல உறவு நிகழ்வதாக அந்த உருது கவிதை பேசும்.

கிராமத்தில் கோடை மழை ரசிக்க படவேண்டிய ஒரு விஷயம். பொதுவாக கோடை காலத்தில் பருத்தியோ அல்லது வேர்கடலையோ பயிரிட்டு இருப்பார்கள் (என் நினைவுக்கு தெரிந்து).. அப்புறம் அம்மன் கோவிலில் விழா உண்டு. கோடை மழையை பெருசுகள் வானம் பார்த்தே சொல்லி விடுவார்கள்.. அம்மன் விழா முடியவும் மழை வரவும் சரியாக இருக்கும். கொஞ்சமாய் வானம் கறுத்தவுடன் எங்கோ தூரத்தில் இருந்து மண் வாசம் அடிக்கும். சில வீடுகளில் பொரியும் கடலையும் வருக்க ஆரம்பித்து விடுவார்கள்.. மெல்ல மேல் மண் தெருவில் பறக்கும். வயலோரல் நண்டும் எலியும் வலையை விட்டு வெளியே
வந்து மெல்ல எட்டி பார்க்கும். கொம்பு சுற்றி காற்றடிக்கும் என்று கேள்விபட்டு இருக்கிறீர்களா..அங்கே நேரில் பார்க்கலாம். மெல்ல மழை பெய்ய துவங்கிய உடனே தெருவில் ஜனம் கூடி மழையில் கொஞ்சம் நனையும்..அது மழைக்கு கொடுக்கும் மரியாதை..கோடை மழை அத்தகைய மரியாதைக்கு உரியது. ஓட்டு வீடுகளில் பதிக்கபட்டு இருக்கும் தகரங்களில் தண்ணீர் வழிந்தோடும். மண் வாசம் மூக்கை துளைக்கும்.. செடிகளும் வயலும் மரங்களும் மழையில் நனைவதை ஒரு கவிஞன் காதலில்
மூழ்ங்கும் காதலிக்கு ஒப்பிடுவான்.. மெல்ல இலைகளிலும் கிளைகளில் தண்ணீர் வாங்கி...தன்னுள் இறக்கி.. வேர்வரைக்கும் மழையை வரவேற்பதில் புல்லினங்கள் தவிர நிகர் ஏது. சில வீடுகளில் அதிரசம் சுடுவார்கள்.விஷ்ணுவுக்கு பூஜைகள் உண்டு. மழை முடிந்த பிறகு மழை இருக்கும் எல்லார் வீடுகளிலும்..கோவிலிலும். மதிய மழை மாலை நேரத்தை ரம்மியமாக்கி விடுவதுண்டு.. சில் காற்று.. தண்ணீர் சொட்டும் இலைகளும் கொடிகளும்...அதிரசமும் பொரியும் பகிர்ந்து கொள்ள வரும் ஊர்காரர்கள்.. மழை இந்த மனிதர்களை ஒருங்கிணைப்பதில் அற்புதமானது.. காதலை .. காமத்தை தோற்றுவிக்கும் குணம் கொண்டது மழை.. குறிப்பாக கோடை மழை.. அது தரும் சுகம் எதனோடும் ஒப்பிட முடியாதது.. என் நினைவுகளில் உள்ள எல்லா ஊர்களிலும் நான் நினைவு கூறும் காலங்கள் .. என் மழைகாலங்கள்.. என் காதல் காலங்களை போலவே.. என்றும் ஈரமானது .. அந்த மழை கால நினைவுகள்..

நட்போ காதலோ...

சென்ற வாரம் ஒரு நாள்.. தூக்கம் வராத ஒரு பின்னிரவு பொழுது.. ரேடியோ மிர்ச்சி எப்.எம் மில் ஏதோ ஒரு நிகழ்ச்சி.. ஒரு பெண் எல்லாரையும் கேள்வி கேட்டு, பதில் வாங்கி, பாட்டு போட்டு உற்சாகமிழந்து கொண்டு இருந்த நேரம்..பொதுவாக நான் பாடல்களை மட்டும் கேட்பதுண்டு.. நிகழ்ச்சியின் இடையே பேசுபவர்கள் இரவின் ரம்மியத்தை கெடுத்துவிடுவாதக நான் கருதுவதால்.. அன்று அந்த பெண் ஒரு அற்புதமான கேள்வியை எழுப்பினாள்.. ஒரு ஆணும் பெண்ணும் வெறும் நட்பாக மட்டுமே பழக முடியுமா.. நெருங்கிய நட்பாக.. அல்லது ஒரு மெல்லிய காதல் அவர்களிடையே இருக்குமா.. என்பது அந்த கேள்வி.. இது கொஞ்சமாய் என் நினைவுகளை தூண்டிவிட்டது என்று சொல்லலாம். மெல்ல நிதானமாக யோசித்து பார்க்கையில் என் வாழ்வில்
இதுவரை நான் கடந்து வந்த எல்லா பெண்களிடமும் வெறும் நட்பாக மட்டும் இருந்திருக்கிறேனா.. அல்லது வெகு சில பெண்களிடம் மட்டுமே இருந்ததாக நான் கருதிய மெல்லிய காதலும் அதனும் மெல்லிய காமமும் எல்லா பெண்களிடமும் இருந்ததா.. இது விஷயமாய விவாதிக்கவும் முடியாது.. நம் சமுதாயத்தில் மிக முக்கியமாக எல்லாரிடமும் முகமூடி அணியும் கட்டாயம் எல்லாருக்கும் இருக்கிறது.. எனக்கு நட்பை தவிர வேறு உணர்வுகளும் இருப்பதாக சொன்னால்...எந்த பெண்ணும் பழக யோசிப்பார்கள்.. (காரணம் தெரியாது.. ). வெறும் நட்புதான் என்றால் அது அடிமுட்டாள்தனமான வாதம் என்று நமக்கே தெரியும்..(இதுக்கும் காரணம் தெரியாது).. உடலும் உள்ளமும் ஒரு நேசித்தலில் இல்லாமல் இருக்குமானால் எதிர்பாலினம் சார்ந்த நட்பு சரிவர அமையாது என்பது என் கருத்து. இல்லாவிட்டால்..வெறும் தாண்டி போகும் போது வாழ்த்து சொல்லும் நட்பாக இருக்க வேண்டும்.. அது நட்பு அல்ல என்றும் சொல்வேன். நட்பு என்பதில் .. பக்கத்தில் உட்கார்ந்து பேச வேண்டும்...பேசுவதை கேட்க வேண்டும்.. கிண்டல் வேண்டும்..கேலி வேண்டும்.. அரவணைப்பு வேண்டும்.. அன்பு வேண்டும்.. கேள்விகள் வேண்டும்.. சில பதில்களும் வேண்டும்.. எச்சரிக்கைகள் வேண்டும்.. தூண்டுதல்கள் வேண்டும். .. நம்பிக்கைகள் வேண்டு..செல்ல பார்வைகள் வேண்டும்.. சட்டென கோபங்கள் வேண்டும் ..குளிர்ந்த குறும்புகள் வேண்டும்..விமர்ச்சனங்கள் வேண்டும்.. அமோதிப்புகள் வேண்டும் ... இது எல்லாம் இருக்க முதலில் ஒரு ஈடுபாடு வேண்டும்.. அது உடலும் உள்ளமும் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.. இது என் கருத்து.. உங்களுக்கு மாற்று கருத்துகள் இருந்தால்.. என்னுடன் விவாதியுங்கள்..

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் பிடித்தது..

ரெயின் கோட்
சோக்கர் பாலி
பனாரஸ்
வாட்டர்

நான்கும் இந்தி திரைப்படங்கள்.. DVD புண்ணியத்தில் சென்ற வாரம்
பார்த்தேன்.. அதில் முக்கியமாக ரெயின் கோட் என்ற திரைப்படம் ஒரு இரவு
தூக்கத்தை முழுக்க கெடுத்து விட்டது... உங்கள் காதலியை அவள்
திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் கழித்து பார்த்தால் நீங்கள்
எப்படி நடந்து கொள்வீர்கள்.. அவள் எப்படி நடந்து கொள்வாள்.நீங்கள்
இருவரும் ஒருவருக்கு ஒருவர் எப்படி உங்கள் சூழ்நிலைகளை மறைத்து
நடிப்பீர்கள்.. பொய் சொல்வீர்கள்.. ஒருவருக்கு ஒருவர் எப்படி உதவுவீர்கள்.. உங்கள்
சூழ்நிலைகளை தாண்டு அடுத்தவரை எப்படி கவனிப்பீர்கள்..
அடுத்தவரது உறவுகளை எப்படி விசாரிப்பீர்கள்.. உங்கள் பொறாமைகள்
வெளிப்படுமா...? உங்கள் இயலாமைகள் வெளிப்படுமா..? பழிவாங்கும்
மெல்லிய நடவடிக்கைகள் இருக்குமா..? போலி பந்தாக்கள் இருக்குமா...? இந்த
திரைப்படம் சொல்லும் நிகழ்ச்சிகள் நிச்சயம் என் வாழ்விலும் ஒருநாள் நடக்கும்..
மனது கொஞ்சம் கனத்து விட்டது இந்த திரைப்படம் பார்த்த பிறகு.

மரணமும் உறவுகளும்

மனித உறவுகளை .. வாழ்வின் நியதிகளை, நெறிமுறைகளை, வாழ்க்கையின்
உறவுகளை மேம்படுத்துபவை எவை என்று எண்ணும் போது என் நினைவுகளில்
வருவது மரணங்களும் விபத்துகளும். விபத்தில் இருந்து மீண்டு
வருபவர்கள், மரணத்தின் கதவுகளில் விரல்களின் ரேகைகளை
பதித்தவர்கள் மற்ற எல்லாரையும் விட பிற மனிதர்களையும், தன்
வாழ்க்கையையும் அதிகம் நேசிக்கிறார்கள்..வாழ்வின் அர்த்தமற்ற தன்மை
அவர்களுக்கு தெரிந்து விடுகிறது..நட்பு, அன்பு, காமம் , பசி, ருசி, பயணம்
எல்லாவற்றையும் மிக அதிகமாக உணர்வுடன் நேசிக்க தொடங்கி
விடுகிறார்கள். அவர்களின் பார்வை, உலகத்தை பார்க்கும் நோக்கு எல்லாம் மாறி
விடுகிறது..சிலர் சன்னியாசமும் பூணுவதுண்டு எனினும் அதுவும் உலகத்தை
பார்க்கும் முறையை மாற்றும் கோணம்தான். விபத்துகளும் இப்படிதான். ஒரு
முறை விபத்தில் சிக்கி..மரணத்தின் கோரத்தை..இழப்பை பார்க்க
நேரிடுபவர்கள்..பிழைத்து வந்ததும் வாழ்க்கையை நேசித்து வாழ
தொடங்கி விடுவதுண்டு. பழைய கோபங்கள்.. குரோதங்கள் இன்றி..
வாழ்க்கையை நேசிப்பதற்ற்கு தக்கதாக மாற்றிவிடுவது எது...?
பயம்..!!! சில நேரங்களில் ஆம்.. பயம்.. வாழ்வை நேசிக்க கற்று கொடுத்து
விடுகிறது. உறவுகளை நேசிக்கவும் மதிக்கவும் பயம் கற்று
கொடுக்கிறது.. அது மரணம் பற்றிய பயமாக இருந்தால் மட்டுமே..சில
வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு கதை.. தன் தந்தையுடன் நிறைய
கருத்து வேறுபாடுகளில் இருக்கும் மகன், தன் நண்பனின் தந்தை இறந்த
துக்க காரியத்துக்கு போய்வந்ததும்,...முற்றிலும் மாறி..தன் தந்தையை
நேசிக்க தொடங்குகிறான்..அவர் வாதங்களின் கோணத்தை உணர்கிறான்.
மரணம் எது வழியாகவும் வரலாம்..விபத்தோ.. அல்லது
இயற்க்கையாகவோ.. ஆனால் எந்த மரணமும் .. சார்ந்தவர்களின் உள்ளங்களில்
மாற்றங்களை உருவாக்குகிறது என்பது நிஜம். மரணபயம்.. ஒரு தனி
மனிதனின் வாழ்வின் போக்கையே மாற்றகூடியது. இதில் தத்துவங்களுக்கு
இடமில்லை.. பகவத்கீதையும் மற்றும் பல புத்தகங்களும் மரணம்
பற்றி சொல்லியிருந்தாலும்.. யாராலும் மாற்ற முடியாத மனித
மனங்களை..அவற்றின் மன அடைப்புகளை நீக்கும் சக்தி மரணத்துக்கு
உள்ளதாக கருதுகிறேன்.

இரவு பயணங்கள்..

இரவில் பயணங்கள் ரம்மியமானவை. அதுவும் இரவு பேருந்து பயணங்கள்..தொடர்ச்சியான பயணமாக இல்லாமல் சிறு இடைவெளிகளை கொண்ட பயணங்களை நான் அதிகம் விரும்புவதுண்டு. பின் இரவின் மடியில் மெல்லிய ரேடியோ இசையோடு, மங்கிய குழல் விளக்குகள் கவிய, புகை படிந்து காய்ந்து கொண்டு இருக்கும் உணவு விடுதிகள்..தூக்க கலக்கத்தோடு வியாபாரத்தில் இருக்கும் மனிதர்கள்..அது ஒரு வேறு வகையான உலகம். பயணிகளை விட நான் ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் அவர்களோடு பயணத்தில் உள்ள மனிதர்களிடன் உள்ள உறவுகளை கவனிப்பதில் ஆர்வம் கொண்டதுண்டு. பல ஓட்டுனர்களுக்கு நடத்துனர்களுக்கு உணவு விடுதி வேலையாட்களுக்கும் விசித்திரமான நட்பு இருப்பதுண்டு. நீங்கள் ஓட்டுனருடனோ, நடத்டுனருடனோ நெருக்கமாக இருந்தால் உங்களுக்கும் ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கும். இரவு பேருந்துகளின் பாடல்கள் சுகமானவை.. அப்படிபட்ட தொகுப்புகளை அவர்களே பெரும்பாலும் உருவாக்குகிறார்கள். இரவு கவிந்தபிறகு பயணம் சார்ந்த உலகம் அலாதியானது. அது பகல் பயணத்தில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இரவு உணவு விடுதிகள்..இரவு தங்கும் விடுதிகள்..பேருந்து நிலையங்கள்.. மனிதர்கள்.. நடு இரவில் தேநீர்.. பாடல்கள்... நெடுந்தொலைவு பேருந்துகளை போலவே, குறைந்த தூர பயணங்களும் இரவில் மேற்கொண்டு உள்ளேன். சில பயணங்களில் இயற்கையும் சேர்ந்து கொள்ளும்.. முக்கியமாக மழை. மழை நேர இரவு பயணங்கள் பயணங்களின் போக்கையே மாற்றி விடுவதுண்டு. என் பயணங்களில் சில வித்தியாசமான பயணிகளை பார்த்திருக்கிறேன்..ஆண்கள் பெரும்பாலும் நிறைய பேசும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்..அரசியல் பொருளாதாரம் உறவுகள்..எல்லாம் பேசுவார்கள்.. நான் ரசித்து வந்து இருக்கிறேன்.. குறிப்பாக பெண்கள்.. அந்த பயணத்துக்கு பிறகு அவர்களை மறுபடி சந்தித்து இருப்பது அபூர்வம்..எனினும் சில பெண்கள் மனதை விட்டு அகலாதவர்கள்.. அந்த கண்கள்.. அந்த புன்னகை.. சில பார்வைகள்.. என்றும் மறக்க முடியாதவை.. இன்றும் என் பயணத்தில் இடம் கொண்ட எந்த ஊரை தாண்டி போனாலும்.. என் கண்கள் என்னையும் அறியாமல் தேடுகின்றன..மனம் கொண்ட இடங்களை போலவே.. மனம் கொண்ட மனிதர்களையும்.. இன்னும் சொல்ல நிறைய உண்டு.. வரும் காலங்களில் பகிர்ந்து கொள்வோம்..

Sunday, May 14, 2006

தோற்றமும் மறைவும்

தினத்தாள்களில் ஒவ்வொரு நாளும் மரண அறிவிப்புகள் வெளியாகின்றன..எல்லா மருத்துவங்களுக்கும் எல்லா நம்பிக்கைகளுக்கும் தாண்டி மரணம் தன் எல்லையை விஸ்தரித்து கொண்டே இருக்கிறது...எல்லா வீடுகளிலும் மரணம் தன் ரணங்களை பதித்து இருக்கிறது. வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளை போல மரணத்தையும் எதிர்நோக்க எல்லா வீடுகளிலும் மனிதர்கள் தங்களை கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.. பெரும்பாலான பத்திரிக்கை விளம்பரங்கள் கடமைக்காக கொடுக்க படுகின்றன.. குடும்பத்தார்களை விட மேனேஜர்கள்தான் விளம்பரங்களை கொடுக்கிறார்கள். விளம்பரத்தில் யார் பெயரெல்லாம் வரவேண்டும் என்பது பற்றி சில நேரம் வாக்குவாதம் கூட வருவதுண்டு. மரணமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர் மட்டுமே மவுனம் காப்பதுண்டு.. மற்றவர்கள் பிறரை ஜெயிக்க முயற்சித்து கொண்டு இருப்பார்கள். மரணமடைந்தவர் வயது கூடியவரானால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் ஆழ்ந்த மவுனத்தில் இருப்பதை கவனித்து இருக்கிறேன். அது மரணத்தின் வலி மட்டும் அல்ல.. நாளை தன்னையும் அங்கே அந்த சூழலில் பொருத்தி பார்க்கும் மன உளைச்சல்... பத்திரிக்கை விளம்பரங்களில் உள்ள மனிதர்களின் முகங்களை உற்று பார்த்திருக்கிறேன்...இவர்கள் எங்கே எப்படி பிறந்திருப்பார்கள்..? எங்கே படித்து வளர்ந்து வாழ்க்கையின் அனுபவங்களை பெற்றிருப்பார்கள்..? இவர்களின் காதல்கள், தொழில், வெற்றிகள் தோல்விகள், நட்பு, பயணங்கள்...யாரும் இவர்களை, இவர்களின் வாழ்க்கையை பதிவு செய்வார்களோ.. தோற்றமும் மறைவும் ஒன்றை ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கின்ற வாழ்க்கை சூழலில்...யாரை பற்றியும் எந்த பதிவும் இல்லாத வாழ்க்கை முறையில்..எத்தனை கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் கூத்துகளும்.. என் வாழ்வில் சில மனிதர்களையாவது அவர்களின் வாழ்க்கையை முடிந்தவரை பதிவு செய்ய சில நேரம் நான் எண்ணுவதுண்டு. முடிந்த வரை நெருங்கிய உறவுகளையாவது... இன்றெல்லாம் யாரை பற்றியும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் பற்றி பேசவும் நேரமின்று அலைகிறோம்.எல்லா மனித வாழ்க்கையும் ஏதோ ஒரு வகையில் நமக்கு கிடைக்கும் பாடங்கள்தான்.. இந்த பதிவுகள் இலக்கியமாகாவிட்டாலும் யாரோ சிலருக்கு உலகம் பற்றி சொல்லும்.. இல்லாவிட்டால் தோற்றமும் மறைவும் தொடர்ந்து கொண்டே இருக்கும்... குழந்தைகள் இல்லாத கிராமங்களை கடக்கும் கூட்ஸ் ரயில் வண்டிகளை போல..

குழந்தையும் கொஞ்சம் தெய்வமும்...

என் அலுவகத்துக்கு அருகில் இருக்கும் தேநீர்கடையில் சில மாலை நேரங்களில் நின்று கொண்டு இருக்கும் போது வயதான பெண்மணிகள் சிலரை காண்பதுண்டு... பெரும்பாலும் உயர் மத்தியதர வகுப்பை சார்ந்தவர்கள்.. மெதுவாக தங்களுக்கு பேசி கொண்டு நடந்து செல்லும் சுய பயணிகள்.. சில நேரங்களில் 2 அல்லது 3 பெண்கள் குழுவாக பேசிகொண்டு நடந்து செல்வதுண்டு. தோளில் தொங்கும் பையுடன் பள்ளிகூட ரகசியங்களை பேசி சிரித்து கொண்டு ஓடும் சின்ன குழந்தைகளில் குதூகலங்களை அந்த குழு அரட்டையில் கவனித்து இருக்கிறேன். சில நேரங்களில் ஒரு பெண்ணை மற்றவர்கள் ஏதோ சமாதானம் செய்து கொண்டு இருப்பார்கள். சில பெண்கள் கையில் குழந்தையுடன் வருவதுண்டு... மற்ற வயதான பெண்களுக்கு அந்த குழந்தையுடன் இருக்கும் வினாடிகள் சுக காலங்கள்.. குழந்தைக்கு பேசதெரியாது.. சைகையும் சத்தமுமாய் அது பேரிளம் குழந்தைகளுடன் கதை பேசி கொண்டு இருக்கும்... சில பெண்கள் கையில் இருக்கும் குழந்தையுடன் வெகு சுவரஸ்யமாக பேசி கொண்டு நடப்பதையும் பார்க்கிறேன்.. குழந்தை வாயில் விரலும் பொருந்தாத அமைதியுடன் பெண்ணின் பேச்சை கவனித்து கொண்டு இருக்கும்... பொதுவில் பெண்கள் அவர்களில் பேச்சை யாராவது கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வயதான பெண்களுக்கு அது நிறைய உண்டு. பேச்சை கவனித்தல் ஒரு வகை அங்கீகாரம்..ஒரு வகை விருந்தோம்பல்..ஒரு வகை நெருக்கத்தை அது உண்டு செய்கிறது. பிராத்தனைகளும் அது போலவே.. ஆண்களின் பிராத்தனைகளை விட பெண்களின் பிராத்தனைகளுக்கு வலுவுண்டு.. அது மனோரீதியான எண்ண அலைகளை பெரும்பான்மைபடுத்துகிறது. கடவுளும் குழந்தையும் சில நேரங்களில் இந்த பெண்களுக்கு ஒரே அலைவரியில் ஒன்று படுகிறார்கள். காற்றில் இலைகள் உதிர்ந்து கொண்டு இருந்தாலும் ... புதிய இலைகள் சுவாசிக்க மறப்பதில்லை..

பயணங்களை பற்றிய நினைவுகள் ...

பயணங்களை பற்றிய நினைவுகள் எல்லாம் அவற்றோடு சம்பந்தபட்ட மனிதர்களை கொண்டே அமைகிறது என்று எனக்கு ஒரு கருத்து உண்டு. பெரும்பாலான பயணங்களில் நான் சந்தித்த சில மனிதர்கள் ஏதோ ஒரு விதத்தில் அந்த பயணத்தை நெடு நாட்களுக்கு நினைவு படுத்தி கொண்டே இருப்பார்கள். கோவைக்கு அருகே உள்ளது வெள்ளியங்கிரி மலை. சித்திரை மாதம் அங்கே காலம் காலமாக ஒரு பயணம் உண்டு. ஒருமுறை நானும் போவதற்க்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் பயணப்பட்டோம். மலையடிவாரத்தில் ஒவ்வொரு நாளும் கட்டளைதாரரின் பெயரில் அன்னதானம் உண்டு. அது மொத்தம் 7 மலைகளின் தொடர்ச்சி. சரியான பாதை முதல் 3 அல்லது 4 மலைவரைதான். இரவு நேரம் என்பதால் டார்ச் விளக்குகளின் உதவி மட்டுமே. சிலர் கொண்டு வந்திருந்த ரேடியோ பெட்டிகளில் மெல்லிய சினிமா சங்கீதங்கள் கசிய..வியர்க்க வியர்க்க மலை ஏறினோம். அது ஒரு அற்புதமான அனுபவம். நுரையீரல்கள் சுவாசத்து சுவாசித்து ஓய்வுக்கு தூண்டும்..கால்கள் மெல்ல நடுங்கும்..வியர்வையில் நனைந்த உடல் மெல்ல சித்திரைமாத இரவு பனியில் வெட வெடக்கும். முதலில் கொஞ்சம் ஏதாவது பேசி கொண்டு நடப்பவர்களும் பின்னர் மவுனமாக ஏறுவார்கள். எல்லா மனிதர்களும் சொல்லி வைத்தது போல மலையின் சுபாவம் பற்றியும், மலை வழி பாதையின் சிரமங்கள் பற்றியும், அடுத்த மலை கொஞ்சம் சுலபம் என்றும் பேசி நடப்பார்கள். கொஞ்சமாய் ஓய்வு எடுத்தால் மொத்தமாய் படுத்துவிடுவார்கள் என்பதால்..சில வினாடிகளுக்கு மேல் உட்கார்ந்து ஓய்வு எடுக்க யாரும் விடமாட்டார்கள்.. 5 மலைகளுக்கு பிறகு சுனை ஒன்று உண்டு. அங்கே குளிக்கலாம்..நான் தண்ணீரை தெளித்து கொண்டு வந்துவிட்டேன்.. அப்புறம் ஒரு இடத்தில் அடுப்பு வைத்து சூடான கடுங்காப்பியும், பாலில்லாத தேநீரும், சுண்டலும் தந்தார்கள்.. அந்த நேரத்தில் அது தேவாமிர்ந்தம்.விடியல் 4 மணிக்கு 7அவது மலையில் இரண்டு பாறைகளுக்கு நடுவே இருக்கும் சிவ லிங்கத்தில் சூரியனின் முதல் கதிர்கள் விழும் நேரத்தில் தரிசனம் கிடைத்தது.. அது அந்த பயணத்தின் கடுமையை முற்றிலும் போக்கும் கணம். சில நண்பர்கள் தாமதமாக வந்து சேர்ந்தார்கள்.. திரும்பி வரும்போது வெளிச்சத்தில் மலை இறங்கினோம். அந்த மலையில் வசிக்கும் மக்கள்.. மாதம் ஒருமுறை டவுனுக்கு வந்து சில அத்தியாவசிய சாமானங்களையும் வாங்கி கொண்டு கொஞ்சம் சினிமாவும் பார்த்து கொண்டு மறுபடியும் மலை வாழ்க்கைக்கு வந்து விடுகிறார்கள். மலை அவர்களுக்கு எல்லாம் கொடுக்கிறது. கீழே சிறுவாணி அணை..மூலிகைகளும் காட்டு மரங்களும் கொண்ட அற்புதமான மலை.. சீதை வனம் என்று ஒரு இடம்.. அற்புதமான பூக்கள்.. மக்கள் நடமாட்டம் வருடத்தில் சில மாதங்கள்கள் தான். மற்றபடி அது சொர்க்க பூமி.. கீழே மலை அடிவாரத்தில் கோவில் ஒன்று இருக்கிறது.. வெள்ளியங்கிரி நாதர் கோவில். இந்த பயணம் முழுவதும் அனுபவிக்க துணையிருந்தது கூட இருந்த நண்பர்கள் மட்டுமே.. இவர்களில் யாரை பார்க்கும் போதும் அந்த பயணம் நினைவில் நிற்கிறது. நெடுநாட்களுக்கு நான் 7 மலைகளும் தாண்டி..ஒரு கடுமையான பயணத்தை முடித்து விட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.. சென்ற வாரம் மறுபடியும் நண்பர்கள் அழைத்திருந்தார்கள்.. வேலை பளு.. போக முடியவில்லை.. எனினும் அந்த மலைபகுதிக்கு இன்னும் ஒருமுறை நிச்சயம் போகவேண்டும்...அப்படி ஒரு சுத்தமான இயற்கை சூழல் எல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை..

நர்த்தகி....

எனக்கு அந்த பெண் அறிமுகமானது ஒரு திரைப்பட விழாவின் புத்தக பகுதியில். ஒரு நர்த்தகி என்று அறிமுகபடுத்தபட்டாள். மிக இயல்பாக நட்பு உருவானது. மிக அழகான நேர்த்தியான உடலமைப்பு..நளினம்....இருவருக்கும் பொதுவான பிடித்த நிறைய விஷயங்கள் இருந்தன.. பின்னர் இரவு கிளம்பும் போது தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிடும்படி கேட்டாள். என்னிடம் எந்த ஊர்தியும் கிடையாது..சரியாக எந்த ஊர்தியும் ஓட்டவும் தெரியாது.. பின்னர் ஆட்டோவில் வந்தோம்.. இருவருக்கும் பொதுவான தோழியும் உடன் இருந்ததால் பேச்சும் கருத்தும் சகஜமாகவே இருந்தது. பிரியும் போது கை கொடுத்து பிரிந்தோம்.. பின்னர் சில நாட்கள் தொடர்ப்பு இல்லை. பின்னர் ஒருமுறை பொதுவான தோழியை பார்க்க நேர்ந்தது..பேச்சினூடே அவள் சொன்ன ஒரு விஷயம் கொஞ்சம் வியப்பையும் நிறையவே பெருமையையும் கொடுத்தது.. எங்கள் நர்த்தகி ஒரு மூன்றாம் பாலினம் என்ற செய்திதான் அது. தன்னை பெண்ணாக உருவகபடுத்தி கொண்டுள்ளதாக சொன்னாள்..உடலாலும் மனதாலும்.. பின்னர் ஒருமுறை அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.. தன்னை ஒரு பெண்ணாகவே அறிமுகபடுத்திகொண்டு அவளும் எங்கள் பொது தோழியும் தங்கியுள்ள இடத்தை சொன்னார்கள்...சில நாட்கள் கடற்கரையில் சந்திப்பதுண்டு.. நல்ல உறவும் நட்பு எங்களிடையே உள்ளதை நாங்கள் இயல்பாகவே உணர்கிறோம்.. நான் என் குறும்பட ஆர்வங்கள் பற்றி பேசினேன்.. அவள் சார்ந்துள்ள வருமானம்சாராத ஒரு அமைப்பை அறிமுக படுத்தினாள்.. சில நாட்கள் பல விஷயங்களை நெடுநேரம் பேசுவோம்.. இசை..நாடகம்...சினிமா..புத்தகங்கள்.. பயணங்கள்.. அவளை அவளாகவே நாங்கள் ஏற்று கொண்டு உள்ளோம்.. என்னையும் என் தோழியையும் அவள் ஏற்று கொண்டதை போலவே.. இந்த நட்பும் அது சார்ந்த விஷயங்களும் மிக அற்புதமாக உள்ளன.. இது போன்ற ஒரு தோழமையின் கால கட்டங்கள் இன்னும் எத்தனை காலம் வரை என்று சொல்ல முடியாது.. எனினும் இது ஒரு அற்புதமான தோழமையாக கருதுகிறேன்..

Sunday, May 07, 2006

தீராநதி கவர்ந்தவை

ரமேஷ் - பிரேமின் 'கூத்தாண்டவன்' சிறுகதை... - தற்கொலைக்கு முயலும் ஒரு ஆணின் வாழ்க்கையும், அவன் நண்பனுடன் அவன் கொள்ளும் உறவுகளும், அவன் தாயின் கற்பினை கொள்ளை கொள்ளும் சந்தர்ப்பவாத சூழல்களும், கூத்தாண்டவர் கோவிலுக்கு வேஷம் கட்டி கொண்டு போகும் அவன் தந்தையின் கதையும்.. தன்னை ஒரு இருபாலின உறவு சேர்க்கையாளனாக அவன் உணர்வதும், சமூகத்துக்கு அவன் பார்வையும்...மெல்லிய தான் சார்ந்த உறவுகளின் மேல் கொள்ளும் பொறாமையும் என கதை ஒரு தற்கொலைக்கு உண்டான சூழல்களை சொல்லி போகிறது... தமிழில் இது போன்ற கதைகள் அதிகம் கிடையாது என்று நினைக்கிறேன்.. ரமேஷ் - பிரேமின் சில கதைகளை படித்து இருக்கிறேன்... அதீதமான கற்பனை சவாரிகளும் காமமும் கலந்தவை அவர்...மனித மனங்களின் இருளில் படிந்து உள்ள உதிர்ந்த சுவர்களை போல...

சுகிர்தராணியின் செந்நிறம், மீட்சி மற்றும் ஆயுதம் கவிதைகள்...

கூகை என்ற புத்தக விமர்ச்சனம்... - தலித் இலக்கியத்தில் ஒரு வித்தியாசமான கதை என்று சொல்லபடுகிறது...

எஸ். ராமகிருஷ்ணன் - எழுதியிருக்கும் தென் அமெரிக்க திரைப்படங்களை பற்றிய பார்வைகள்... க்ளோபர் ரோச்சா, வால்டர் செலஸ், கார்லோ கமுராட்டி ஆகியோரின் திரைப்படங்கள் அலசபட்டு உள்ளன.. முக்கியமாக சே-குவாராவின் மறுபக்கத்தை காட்டும் 'மோட்டார் சைக்கிள் டயரீஸ்'.

லீனா மணிமேகலையின் ரகசிய உறவுகள் பற்றி ஒரு கவிதை..மெல்லிய காமம் சொன்னாலும் கவிதையின் அர்த்தம் உள் இறங்குகிறது.

சந்தைக்கு வந்த கிளி...

ஒரு முறை துடியலூர் சந்தைவழியாக பெரியநாயக்கன் பாளையம் செல்ல வேண்டியிருந்தது.. நண்பர் வீட்டில் மனைவி ஊருக்கு போயிருந்ததால்...சொந்த சமையல்...துணைக்கு நாங்களும்..போகும் வழியில் சந்தையில் காய்கறி வாங்கிகொள்ள திட்டம்.. நல்ல கூட்டம் அன்று. காரை வெளியிலேயே நிறுத்திவிட்டு.. உள்ளே நுழைந்தோம்... அற்புதமான சந்தை...கொஞ்சமே விலையில் நல்ல காய்கறிகள் மற்றும் பலசரக்கு பொருள்கள்.. இப்படி எல்லா கிராம விளைச்சலும் சரியான முறையில் இடை தரகர்கள் இல்லாமல் வியாபரம் ஆனால்...இலவச பொருள்களில் அரசியல் நடத்தும் முதலைகளை துரத்திவிடலாம்..

சந்தையில் ஓரம் ஒருவர் கிளி கூண்டு வைத்து உட்கார்ந்து இருந்தார்...வயதானவர்...வெள்ளை வேட்டி சட்டையில்...தலையில் முண்டாசு...அடர்த்தியான வெள்ளை மீசை..பட்டை சந்தனம் என்று நல்ல விளம்பரம்... ஒரு சிறிய அட்டையில்... "கிளி ஜோஸ்யம்... 2 ரூபாய்... " என்று இருந்தது.. கூட வந்த நண்பர் அங்கேயே நின்று விட்டார்.. சரி அவருக்காக பார்க்கலாம் என்று போனால்...கிழவர் பேச்சு பிரமாதம்.. பயங்கர வரவேற்ப்பு... எங்களை காட்டி கூட்டம் வேறு சேர்த்துவிட்டார்.. எங்களை சுற்றி 10 - 15 பேர் கூடிவிட்டார்கள்..கிளிக்கு பேர் ஐஸ்வர்யா...!!! அது வெளியே வந்து ஒரு வித வன்மத்துடன் எங்களை பார்த்தது.. 4- 5 சீட்டுகளை கலைத்தது.. பிறகு ரொம்ப பெருமையாக ஒரு சீட்டைஎடுத்து கொடுத்துவிட்டு.. கிழவர் கையில் இருந்து 2 நெல்லு மணிகளை கொத்தி கொண்டு அசுவரஸ்யமாக நடந்து கூண்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டது.. நண்பருக்கு வந்திருந்தது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் படம்... கிழவர் பாட்டெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டார்.. "தம்பி உனக்கு ரெண்டு மனைவி.. " என்று வேறு பாட்டெல்லாம் பாடம் கூட்டம் மெல்ல சிரிக்க ஆரம்பித்து விட்டது.. எங்களுக்கு கொஞ்சம் தர்மசங்கடம்.. அவசர அவசரமாக கையில் கிடைத்த சில்லரையை அவருக்கு கொடுத்துவிட்டு.. காருக்கு ஓடி வந்தோம்..

சில நேரங்களில் இந்தகைய ஜோசியர்களிடன் ஏற்படும் அனுபவம் நல்ல ரசனைக்குரிய விஷயமாக இருக்கும்...சில நேரங்களில் எரிச்சலும் வருவதுண்டு.. எனினும் அந்த கிழவரின் விஷயங்களை சொல்லும் முறையிம், வார்த்தை பிரயோகங்களும் அற்புதமாக இருந்ததை மறுக்க முடியாது...

சில வருடங்களுக்கு பின்னர் அந்த நண்பரை பார்த்த போது... பம்பாயில் இன்னொரு பெண்ணுடன் சமீபகாலத்தில் தொடர்பு ஏற்பட்டு தற்போது இரு மனைவியருடன் வாழ்வதாக சொன்னார்... அது அவருக்காக சொல்லபட்ட ஜோஸ்யமா...இல்லை ஜோஸ்யர் சொன்னதுக்காக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறாரா...புரியவில்லை..

தண்டு மாரியம்மன் திருவிழா

இந்த முறை கோவைக்கு சென்றிருந்த போது தண்டு மாரியம்மன் திருவிழா நடந்து கொண்டிருந்தது...மாலை மெல்ல ஒரு நடை சென்றோம்.. நல்ல அலங்காரம்..நல்ல கூட்டம்.. கோவை பெண்களின் உடையலங்கார மாறுதல்களை ரசித்து கொண்டே ( சைட் அடிப்பதற்க்கு இன்னோரு பெயர்...) கோவில் சுத்தி வந்தோம்.. ரோட்டை மறித்து பந்தல் போட்டிருந்தார்கள்... ஆர்கெஸ்டிரா என்று ஒரு சமாச்சாரம்.. கொஞ்சம் நின்று பார்ப்போம் என்று ஒரு பழரசம் வாங்கி கொண்டு கவனித்தோம்...அருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர்...முதலில் புன்னகைத்தார்...பதிலுக்கு புன்னகைத்தது தப்பாக போனது... மனிதர் ஆரம்பித்து விட்டார்..."தம்பி ... நான் இந்த கோவிலுக்கு எத்தனை செய்ஞ்சுருகேன்...அந்த காலத்திலே..." என்று.. "இந்த காலத்து பொண்ணுகளுக்கு துணி போடவே கஷ்டமா இருக்கு போல தம்பி.. என்ன துணி இது...சகிக்கில " புலம்பல் வேறு.. பிடிச்சா பாரு.. பிடிக்கலேனா மறைக்காம நகர்ந்து போலாம்ல.. என்று சொல்ல முடியவில்லை.. முந்தய ஆச்சார உடை அலங்காரங்கள் மறைந்து கொஞ்சம் கவர்ச்சி இருந்தது மறுக்க முடியாது எனினும்..இன்றைய காலங்களில் இது எல்லாம் பேச முடியாது.. எனினும் அவர் புலம்பலையும் பேச்சையும் ஒரு கூட்டம் நின்று ஆமோதித்து கொண்டு இருந்தது... எல்லாரும் 40 வயதை தாண்டியவர்கள்... கடவுள்,பக்தி, கற்பு...என்றெல்லாம் பேச்சு வளர...என் கையில் இருந்த பழரசமும் தீர்ந்து போகும் நேரத்தில் நல்ல நேரம்...கச்சேரி ஆரம்பமானது.. ஆரம்பத்தில் ஒரு கடவுள் பாட்டு.. அப்புறம் ஒரு கடவுள் பாட்டு... அப்புறம்.. " தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா... " என்று ஒரு பெண் அபஸ்வரமாய் பாட ஆரம்பிக்க... இந்த பாட்டுக்கு அர்த்தம் என்ன..? கோவில் திருவிழாவில் இது சரியா என்ற உள் கேள்விகளோடு திரும்பி பார்த்தால்.. அந்த மானஸ்தர்கள் யாரையும் காணோம்...எல்லாம் ஆர்கஸ்டிரவின் முதன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள்...

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்.

சென்ற திங்கள் கிழமை காலை 6 மணி. மொபைல் போனில் அலாரம் அடித்ததும் திடுக்கிட்டு கண் விழித்து சைட்பர்த்திலிருந்து குதித்து இறங்கி கண்ணை கசக்கி கொண்டு ரயிலின் கதவுக்கு வந்தால்...ரயில் நகரவே இல்லை. இன்னும் சிலர் கதவோரம் நின்று கொண்டு இருந்தார்கள்.. "எங்க சார் இருக்கோம்..."என் கேள்விக்கு நக்கலாக பதில் வந்தது... "அத கண்டுபிடிக்கத்தான் நாங்களும் பார்க்கறோம்.." கொஞ்சம் தெலுங்கு வாசம்..பதில் சொன்ன ஆசாமி கொஞ்சம் ஆஜானுபாவமாக இருந்ததால் மேற்கொண்டு பேசும் எண்ணத்தை கைவிட்டேன். பின்னர் மெல்ல ரயில் நகர்ந்து ஒரு ரயில்வே கேட் முன்னால் நின்றது.. வெளியே இருந்த பெயர் பலகை 'சாம்பல்பட்டி' என்றது. இந்த ஊர் எங்கே இருக்கிறது...??? பக்கத்தில் ஒரு பெரியவர் சொன்னார்.. ஜோலார் பேட்டைக்கு முன்னால்... ரயில் ஏன் நகரவில்லை.. பதில் இல்லை.. டி.டி.ஆர்.. ஆளே காணவில்லை.. மணி 8 ஆகும் வரைக்கு அங்கேயே இருந்த ரயில் மெல்ல மெல்ல நகர... பசி வயிற்றை பிறண்ட ஆரம்பித்துவிட்டது.. 1:25ரூபாய்க்கு கூட விலை பெறாத 4 இட்டிலிகள் 20 ரூபாய்க்கு வாங்கினோம்...எல்லாம் ரோட்டோர திடீர் வியாபார்கள் கைவண்ணம்..ரயில் நிற்பதையும், மக்கள் பசி முகங்களையும் பார்த்தவர்களின் வியாபார நோக்கம்...20 ரூபாய் அதிகம் என்று யாரும் பேரம் பேசவில்லை.. மாறாக ரயிலில் அதிகம் பேர் வாங்கினார்கள்..கை கழுவும் போது என்னுடன் நின்ற ஒருவர் சொன்னார்..."விலை அதிகம் என்றாலும் நாம் வாங்குவோம் என்று அவர்களுக்கு தெரியும்...நாம் நிறைய சம்பாரிப்பவர்கள் என்பது அவர்களின் கருத்து..தவறில்லை...ஆனால் இந்த சம்பாதனைக்கு ஆரம்பகாலத்தில் இருந்தே படிப்பு, லஞ்சம், சுய தேவைகளின் பலி என நாம் இழந்திருப்பதையும் அவர்கள் கணக்கில் கொள்ள வேண்டும்..." ரயில் அன்று முழுவதும் மெல்ல மெல்ல நகர்ந்து ஜோலார்பேட்டைக்கும் அரக்கோணத்துக்கும் இடையே உள்ள தூரத்தை 12 மணி நேரத்தில் கடந்தது.

நல்ல வெயில். சரியான உணவு வசதிகள் கிடையாது. இரவு ரயில் ஆகையால் உணவு சமைக்கும் பெட்டியும் ரயிலில் இல்லை. யாரும் உணவு பொருள்களும் கொண்டு வரவில்லை. தண்ணீரும் கிடையாது.. எல்லா ரயில் நிலையங்களிலும் மே முதல் தேதிக்காக "உழைப்பாளர் தின" விடுமுறை.. சுகாதாரமில்லாத கிராம ரயில்நிலைய தண்ணீரை குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து சிப் சிப்பாக தண்ணீர் குடித்து கொண்டு இருந்தார்கள்..10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் 25 ரூபாய்.. பழங்கள் கிடையாது. ஏ.சி. பெட்டியில் காற்று வசதியும் இல்லாததால் எல்லாரும் வெளியேதான் நின்று கொண்டு இருந்தோம்.. என்னுடன் ஒரு ஆங்கிலேய பெண் பயணம் செய்தால்..கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் சுற்றுபயணம் செய்து கொண்டு இருக்கிறாள். அரைமணிக்கு ஒரு சிகரெட்..கொஞ்சம் தண்ணீர்..வேறு எதுவும் சாப்பிடவில்லை...முதலில் புன்னகையில் ஆரம்பித்த நட்பு மெல்ல பேச்சில் நின்றது. ஒரு அந்துவான காட்டில் ரயில் நின்ற போது நானும் அவளும் அருகில் தெரிந்த நீர் தேங்கியுந்த நீர் நிலைக்கு நடந்தோம். வெயிலில் தண்ணீரின் மேல் பகுதி சூடாக இருந்தாலும் கலைத்து விட்ட பின்னர் தண்ணீர் குளுமையாக இருந்தது.. குடிக்க முடியாது எனினும் முகம் கழுவ முடியும்...நிறைய பேசினாள்...கொஞ்சம் கோவமும் அவள் பேச்சில் இருந்தது..இத்தகைய சூழலில் தண்ணீரும் உணவும் கூட ஏற்பாடு செய்ய முடியாத ரயில்வே டிபார்மெண்டை அவள் திட்டிய போது எனக்கும் பதில் இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக என் பகுதியில் இந்த சிலர் நட்பாகிவிட்டோம்...சுருதி என்று ஒரு குட்டி பெண்..பயங்கர குறும்பு... பயங்கர சத்தம்... வயதான சிலர்...பழங்கால கதைகள்...பசி மறக்க வேண்டுமே.. !! அரக்கோணத்தில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டதால் கால தாமதம் ஆகிறது என்றார்கள்..ஒரு வழியாக ரயில் ஊர்ந்து சென்னை சென்ரலில் நுழைய எல்லாரும் அவரவர் பெட்டிகளை தயார் செய்தோம்.. அந்த ஆங்கிலேயெ பெண் ரயில் கொடுக்கபட்டிருந்த போர்வைகளையும் தலையணைகளையும் ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தாள்...

Sunday, April 30, 2006

பயணங்களில் தோழமை...

என் தோழமைகள் எல்லாம் நேரில் மட்டுமே சந்தித்து தோழமை கொண்டவர்கள் கிடையாது... நிறைய மின் அஞ்சலிலும், இணைய பேச்சு மூலமாகவும், சமீப காலமாக கை தொலை பேசியிலும் அறிமுகம் ஆனவர்கள்... இவர்களை நேரில் சந்திப்பது ஒரு அற்புதமான விஷயம்... முகம் பார்க்காமல் பேசியும் பழகியும் ஒருவருக்கு ஒருவர் அடுத்தவரை பற்றி ஒரு பிம்பம் வைத்திருப்போம்...அவற்றை ஒப்பிட்டு பார்க்கும்... எங்கனம் இருப்பினும் அதனை ஏற்று கொள்ளும் ஒரு அற்புதம். பெரும்பாலும் ஓவியங்களாலும், சில கவிதைகளாலும், சில கட்டுரைகளாலும்தான் எங்கள் தொடர்ப்பு ஏற்படுகின்றது..சில விதி விலக்குகளும் உண்டு. ஒரு இணைய பேச்சு மூலமாக அறிமுகமான ஒரு தோழியை சந்திக்க சில வருடங்களுக்கு முன்பு தென் தமிழ்நாட்டுக்கு பயணபட்டு இருந்தேன். என்னுடம் இன்னொரு தோழியும் இருந்தாள். பெண்களை சந்திக்க நான் எப்போதும் தனியாக போவது கிடையாது. சில சங்கடங்களை தவிர்க்கதான். எங்கள் பயணம் இனிமையாக இருந்தது. சொல்லபோனால் அந்த பயணத்தின் என் உடன் வந்த தோழியும் நானும் நன்றாக நெருங்கிவிட்டோம். புதிய தோழியின் வீட்டுக்கு சென்ற போது அற்புதமான வரவேற்பு..நல்ல உணவு..நல்ல கவனிப்பு.. ஒரு சிறு நெருடல் என்னவென்றால் எங்களை கணவன் மனைவியாக அவர்கள் எண்ணி கொண்டதுதான்...அவர்களின் கலாச்சாரத்தில் திருமணத்துக்கு முன்னர் ஒரு பெண் ஒரு ஆணுடன் வெளிவருவது இல்லை என்பது புரிந்தது...நாங்களும் நன்றாகவே நடித்தோம்... அது ஒரு இனிய அனுபவம்...தங்கியிந்த இரண்டு நாட்களும் அற்புதமாக போனது. புதிய தோழி நல்ல ரசிகை..நல்ல ஓவியர்... இருவரும் வரைந்து தள்ளினோம்...
நடந்தே சில கோவில்களையும் வயல் பகுதிகளையும் சுற்றினோம்...அவளுக்கு எங்கள் நிலை பார்த்து நல்ல களிப்பு.. சரியான கிண்டல்... எங்களுக்கும் புதிய அனுபவம்... போட்டோக்கள் எடுத்தோம்... கோவில்களில் அர்ச்சனை...சேர்த்து எங்களுக்கு மாலை... வெளியில் சொல்ல முடியாத தர்மசங்கடம் ஒரு பக்கம் இருந்தாலும் இருவருமே அதனை ரசித்து இருந்தோம்... பின்னர் ஊர்வந்த சேர்ந்த பிறகும் சில மாலை வேலைகளில் எங்களை கிண்டல் செய்ய இந்த சம்பவம் ஒரு காரணமாக இருந்தது... சென்ற வருடம் என் உடன் வந்திருந்த தோழிக்கு திருமணம் ஆகிவிட்டது.. திருமணத்துக்கு தென்
தமிழ்நாட்டு தோழி மட்டுமே வந்திருந்தாள்... யாருக்கும் சொல்லாத ஒரு இனிய அனுபவத்தை எங்களுக்கு கொடுத்தமைக்காக அவளுக்கு நாங்கள் நன்றி சொன்னோம்... திருமணம் முடிந்து அவள் வெளிநாடு கிளம்பி சென்ற இரவில் நானும் என் தென் தமிழ்நாட்டு தோழியும் பேருந்து நிலையத்தில் இரவு காத்திருந்தோம். மனம் கனத்து இருந்தது... ஏதோ ஒன்றை இழந்த நினைவு... தொடர்ந்த மாதத்தில் வந்து சேர்ந்த ஒரு தோழியின் கடிதமும் அதனை சொல்லியிருந்தது.

க.சீ. சிவக்குமார்..ஒரு கவிதை

வேப்பம் பூக்கள்
பூக்கின்ற காலத்தில்தான்
பூக்கும்...
வேறுவழியின்றி
பழங்காலத்தில்
அவற்றின் வாசத்தின்
ஞாபகத்தைச்
சேமித்தேன்...

காத்திருத்தலில்...

சென்ற வாரம் ஒரு தோழி என்னை அழைத்திருந்தாள். அவளுக்கு அடுத்தநாள் காலை சண்டிகர் செல்லும் ரயில். இரவு முழுவதும் தன்னுடன் ரயில் நிலையத்தில் இருக்கமுடியுமா என கேட்டிருந்தாள்...தவிர்க்க முடியாத காரணங்களால் முந்தயநாள் இரவே நான் கோவை புறப்பட வேண்டி இருந்ததால் அவள் அழைப்பை நிராகரிக்க வேண்டியதாகிவிட்டது. ரயிலில் நிராகரித்தலின் வலி எனக்கும் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னால் கோவை ரயில் நிலையத்தில் அப்படி ஓர் இரவு முழுக்க ஒரு புதிய தோழியுடன் கழித்தது நினைவு வந்தது...அலுவகத்தில் மேலதிகாரிக்கு உறவு அந்த பெண் - ஒரு புரோஜக்ட் விஷயமாக சில நாட்கள் - ஏறக்குறைய ஒரு மாதம் நாங்கள் பழகியிருந்தோம். நிறைய பேச்சு...கொஞ்ச நேரம் என் மடியில் தூக்கம்...யாரும் இல்லாத பிளாட்பாரங்களில் நடை, சின்ன குறும்புகள், ஒருவருக்கொருவர் இதுவரை இல்லாத அறிமுகங்கள்...கொஞ்சமே கொஞ்சம் ரகசிய பரிசுகளும் பரிமாற்றங்களும்... என அந்த இரவு வாழ்வில் சில இரவுகள் போல மறக்க முடியாதது. அந்த இரவு அதன் நிறத்தை எங்கள் நினைவுகளில் தீற்றிவிட்டு இருந்தது... நிகழ்ந்த சில நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்பது கூட வாதத்துக்கு அப்பாற்பட்டது...காலை 5 மணிக்கு ரயில்... அதற்கு பிறகு நாங்கள் சந்திக்கவில்லை ...முயற்சிகளும் எடுக்கவில்லை... நினைவுகள் மட்டுமே... சில நேரங்களில் அருகில் இருக்கும் தோழமையை விட... தொலைந்து போன தோழமைகள் மனதின் அருகில் இருக்கிறார்கள்.

வெண்ணிலாவின் ஒரு கவிதை...

எதைப் பற்றியும் எழுதுகிறாய்
என்னைப் பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா..?
மழை பற்றி எழுதுவது சுகமா..?

நம்பிக்கைகள்...

பெரும்பாலும் நான் கோவில்களுக்கு போவதை விரும்புவதுண்டு. காரணங்கள் பக்தியை தவிர வேறு சிலவும் உண்டு. அங்கு உள்ள அமைதி,விலாசமான கலை, பார்க்க நேரிடும் மனிதர்கள், செய்யபடும் பிராத்தனைகள், விளையாடும் குழந்தைகள், அடிப்படையாக நம்பிக்கையும் கூட..பெரிய கோவில்களின் பால் உள்ள ஈர்ப்பு ஒரு வகை என்றால் சிறிய கிராமிய கோவில்கள் பால் கொண்ட ஈர்ப்பு மற்றோர் வகை. ஸ்ரீரங்கமும், சிதம்பரமும், திருஅண்ணாமலையும் ஒரு வகையான உணர்வுகளை கொண்டு வந்தது...அதே நேரம் கும்பகோணம் பயணத்தில் பார்த்த திருவழஞ்சுழி, திருபுவனம், திருவையாறு, மயிலாடுதுறை, பழையாறை, பட்டீஸ்வரம், தாராசுரம், திருவிடைமருதூர் மற்றும் சமீபத்தில் வியந்த உத்திரமேரூர் ஆகிய கோவில்கள்
மற்றோர் வகையான உணர்வுகளை கொண்டு வருகின்றன...பிந்தைய கோவில்கள் மிகவும் என்னை கவர்ந்தன காரணம் அங்கு காணப்படும் கூட்டமின்மையும் அமைதியும்தான்...எங்கள் கிராமத்தில் ஒரு கோவில் இருக்கிறது...பெரும்பாலும் கோவில் விழாக்களில்தான் மக்கள் கூட்டம் வரும்...மற்ற நாட்களில் விச்சிராந்தமான அமைதி... முதலில் ஒரு வேம்பு மரம்..கீழே மேடையில் பிள்ளையார்... காற்று அவ்வளவு அற்புதமாக வரும் அந்த மேடையில் அமர்ந்திருந்தால்.. உள்ளே சிறு மண்டபம்..கர்ப்பகிரகம்..அருகில் சுற்றி வரும்போது சில காவல்தெய்வங்கள்..சிறு கிணறு..அற்புதமான கற்கண்டு போன்ற தண்ணீர்...சுற்றிலும் நிறைய மரங்கள்...ஆங்காங்கே பொங்கல் வைக்கபட்ட கல் அடுப்புகள்... நல்ல காற்றும் அமைதியான சூழலுமே
கோவிலை அற்புதமாக்கி விடுகின்றன... தாராபுரம் அருகே இருக்கும் அமராவதி ஆற்று கரையில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலும் அப்படித்தான்... ஆற்றில் வழிந்தோடும் தண்ணீரும் அரச மரத்தடி பிள்ளையாரும்...மண்ணில் புதைந்து இருந்து இன்னும் பூஜை வாங்கிகொள்ளும் சிவலிங்கமும்.. அந்த ஏகாந்த சூழலை விவரிக்க வார்த்தைகள் போதுமானதில்லை... பெரிய சுலோகங்கள்...பெரிய மந்திரங்கள் கிடையாது...சமஸ்கிரதம் கிடையாது..தமிழில் கிராமிய வார்த்தைகளில் அர்சனைகள்... சாதாரண வஸ்திரங்களும், சூடங்களும், விளக்கும் இன்னும் மனிதர்கள் வாசிக்கும் கிராமிய இசையும் கொண்ட...கிராம மக்களின் நம்பிக்கையை மட்டுமே சுமந்த தெய்வங்கள்... மழையும் வெயிலும் பூமியும் காற்றும் ஆகாயமுமே கடவுளாக
கொண்ட...அவற்றுக்கு உருவம் தந்த மக்களின் நம்பிக்கையை பொய்க்காத தெய்வங்கள்.. அருள் வருவது, கிடா வெட்டுவது என்று சில விஷயங்கள் இருந்தாலும் அவை அனைத்திலும் நம்பிக்கை பார்க்கும் ஜனங்கள்... கோவில்களில் பிராத்தனைகள் என்பது அவரவர் எண்ணமும் விருப்பமும்... என் முதன்மை...கோவில்களில்... அமைதியான ரசித்தலும்.. மனசு நிறைய சுலோகங்களும்...அமைதியான ஏகாந்த சூழலில் மென்மையாக கடவுளுடன் பேசும் தியானமும்தான்... பொதுவில் நம்பிக்கைதான் கடவுள்...அதனை மேம்படுத்தும் இடமே கோவில்...

மாசிலா விநாயகமூர்த்தியின் ஒரு கவிதை...

நவக்கிரகங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிகொள்கிறது மனசு.
எதை வேண்டி
எதைப் பெறுவது...?

காலம் தாண்டும் கவிதைகள்...

சில கவிதை தொகுப்புகள் கிடைத்து இருக்கிறது...அவை சில வருடங்களுக்கு முந்தயது.. கவிதைகளுக்கு காலவெளி கிடையாது... சில கவிதைகள் என் சில அனுபவங்களை ஒத்து போவதால்..அவற்றையும் அவற்றை சார்ந்த என் நினைவுகளையும் இங்கு பதிவு செய்கிறேன்...

வெங்கடேஷ் வரதராஜனின் ஒரு கவிதை...

காத்திருத்தல்

நீ வரும் பாதையில்
காத்திருந்த காலங்கள்
நீ கடந்து சென்ற பின்னர்
நகரவிடாத பொழுதுகளாய்
மாறி இம்சைதரும் கணங்கள்.

இப்போதெல்லாம் அப்பாதையில்
நீ வருவதில்லை.
நானும் காத்திருப்பதில்லை..

எனினும், காத்திருத்தல் நிகழாமலில்லை.
யாரோ யாருக்காகவோ
காத்திருக்கத்தான் செய்கிறார்கள்
பாதை நெடுகிலும்.

இப்படியாய் கழியும் பொழுதுகள்
-- தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி

நேருக்கு நேராய்
நினைப் பார்க்க விழைகிறேன்
பின் ஏனோ
விழிகளைத் தழைக்கிறேன்

உன்னிடம் ஏதோ
சொல்ல நினைக்கிறேன்
ஆனால் இதழ் புதைத்து
மெளனம் காக்கிறேன்

வளைக்கரத்தை மெல்ல
வருட நினைக்கிறேன்
இருந்தும் இன்னும்
வாளாதிருக்கிறேன்

என் விந்தையான போக்குக்கு
பிறர் காரணம் அறியார்

அறிந்த நீயோ
இங்கே இல்லை

Friday, April 21, 2006

வலிமை கொண்ட பாரதம்...

மூன்று வருடங்களுக்கு முன்னர் கோவையில் ஒரு புத்தக காட்சிசாலையில் அவரை பார்த்தேன். நல்ல உயரம், நரைத்த தாடி, தோளை தொடும் நீண்ட முடி, தீட்சண்யமான கண்கள்..அவருடன் ஒரு பெண் இருந்தாள். ஜீன்ஸும் சுடிதாரின் டாப்ஸும் (அதுக்கு என்ன பெயர் என்று இன்னும் தெரியவில்லை...) அணிந்திருந்த அந்த பெண்தான் முதலில் கவர்ந்தாள், அவளை கண்கள் தொடரவே இந்த பெரியவரை பார்த்தேன். பார்த்ததும் பிடித்தது அவரது தோற்றம்தான். புத்தகங்களை வாங்கி கொண்டு எதிரே இருந்த அன்னபூர்ணா கெளரிசங்கரில் காப்பி குடிக்க உட்கார்ந்து இருந்தேன். அவர்கள் என் எதிரில் இருந்த டேபிளில் உட்கார்ந்து இருந்தார்கள். டேபிளில் என் புத்தகங்கள் இருந்தன. அவர் பார்வை என் புத்தகங்களில் பதிவதை கவனித்தேன். மெல்ல புன்னகைத்தேன். அவரும் பதிலுக்கு புன்னகைத்தார்...தெளிவான ஆங்கிலத்தில் "நீங்கள் விலைக்கு வாங்கிய புத்தகங்கள் அருமையானவை...இது போன்ற புத்தகங்களில் உங்களுக்கு ஆர்வம் உண்டா..?" என்றார். "எனக்கு ஆர்வம் நிறைய உண்டு...அதுவும் தவிர இத்தகைய சித்தாந்தங்களில் பிடிப்பும் உண்டும்" என்றேன். "இந்த சித்தாந்தங்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா...?" என்றார்.."என் நம்பிக்கை எல்லாம் நடைமுறை படுத்தி வெற்றி பெற்றவைகளில் மட்டும்தான்... தியரிகளை நான் அதிகம் நம்புவதில்லை..அவை சிலரின் கருத்துகள் மட்டுமே..ஒரு சமூகம் அந்த தியரியை ஒத்துகொண்டு வழிநடக்குமாயின் அது செழுமைபடுத்தபட்ட நடைமுறை விதியாகிறது..." என்றேன்.. அமோதிப்பது போல புன்னகைத்தார்.அந்த பெண் என்னை விரோதி போல பார்த்து கொண்டு இருந்தது. ஒரு சிறு காகிதத்தில் அவர் பெயரும் தொலைபேசி எண்ணும் கொடுத்து தொடர்ப்பில் இருக்க சொன்னார்.பின்னர் அவரை பார்க்க 5 மாதம் ஆகிவிட்டது...

5 மாதங்களுக்கு பிறகு சேலம் பஸ் நிலையத்தில் மறுமுறை அவரை பார்த்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்டார். அவர் தருமபுரிக்கு அருகே ஒரு கிராமத்துக்கு போக போவதாகவும் நான் ஓய்வாக இருந்தால் தன்னுடன் வரும்படியும் அழைத்தார்..சொல்லி கொள்ளும் படி எந்த வேலையும் இல்லாததால் அவருடன் போக இசைந்தேன். பயணம் முழுவதும் புத்தகங்கள் பற்றியும்...கருத்துகள் பற்றியும் அரசியல் பற்றியும் போராளிகளின் வாழ்க்கை முறை பற்றியும் நிறைய பேசி கொண்டே வந்தார். தேசத்தின் மோசமான நிலை பற்றி அவர் பேசும் போது அவரது வார்த்தைகளில் ஆவேசம்.. நான் அதிகம் பேசவில்லை...கவனித்தலில் நேரம் கழிந்தது..இரவு 8 மணி சுமாருக்கு அந்த கிராமத்து சாலையில் இறங்கி நடக்க தொடங்கினோம். சில நிமிடங்களில் பாதை என்பதே இல்லை. முள் செடிகள் சூழ்ந்த அந்த பாதையில் நடந்து கொண்டே இருந்தோம்.. யாரை பார்க்க...எங்கே போகிறோம் என்ற கேள்விகளை நான் கேட்க விரும்பவில்லை எனினும் கேள்விகள் இருந்தது...கிட்டதட்ட 5 மணி நேர நடை பயணத்துக்கு பிறகு காடா விளக்குகள் பொருத்தபட்ட சில வீடுகள் கொண்ட ஒரு இடத்தை அடைந்தோம். பெரும்பாலும் அங்கிருந்தவர்கள் இளைஞர்கள்..பெண்களும் இருந்தார்கள்..ஒரு விதமான முரட்டுதனமான அமைதி இருந்தது...பெரியவரை ரொமப விசேஷமாக வரவேற்றார்கள்.
அவர் கொண்டு வந்திருந்த புத்தகங்கள்..வாங்கி பத்திரபடுத்தபட்டன.. சூடான டீ எங்களுக்கு கொடுக்கப்பட்டது. நான் ஒரு தெரிந்த நண்பர் என்று அவர்களிடம் அறிமுகபடுத்தபட்டேன்.. அங்கிருந்தவர்களில் சில முரட்டுதனமாக இல்லை..மாறாக தெளிவான ஆங்கிலமும், நகர் புறங்களில் வாழுபவர்கள் போல இருந்தார்கள்....மறைந்து வாழும் போராளிகள் என்பதை உணர்ந்து கொள்ள ரொம்ப நேரம் ஆகவில்லை...எந்த பயமும் வரவில்லை..மாறாக அவர்களின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ஆசை மட்டுமே இருந்தது. என்னிடம் அறிமுகப்படுத்தி வைக்கபட்டவர்கள் தவிர யாரும் என்னிடம் பேசவே இல்லை...அவர்கள் அந்த பகுதி மக்களிடம் கல்வியறிவை மேம்படுத்துவதாகவும், விவசாய கருவிகளுக்கு உதவுவதாகவும், கடின நில விவசாயம் பற்றி சொல்லி கொடுப்பதாகவும் சொன்னர்கள். தன்னை மருத்துவர் என்று அறிமுகபடுத்தி கொண்ட ஒருவர் ஜனநாயக அமைப்பு என்ற போர்வையில் நடக்கும் அரசியல் கேவலங்ளை பற்றி ஆவேசப்பட்டார். கல்வியும், சுய தொழிலும், முரண்பாடில்லாத பொருளாதார சூழ்நிலைகள் மட்டுமே கீழ்மட்ட மக்களை மேம்படுத்தும் என்பது அவர்களின் ஒட்டு மொத்த கருத்தாக இருந்தது.

அவர்களில் பெரும்பாலோர் படித்தவர்களாக இருப்பதை உணர்ந்தேன்.. அரசியல் மேலும் சமுதாயம் மேலும் அவர்களில் பெரும்பாலோருக்கு நம்பிக்கை இல்லை...அவர்கள் ஒரு தீவிரமான புரட்சியில் ஈடுபட்டு இருந்தார்கள்...சமுதாய அமைப்பில் ஒரு புதிய உத்வேகத்தை கொண்டு வருவது அவர்களின் நோக்கமாக இருந்தது. அடுத்த நாள் அங்கிருந்து கிளம்பிவரும் வரை அந்த சூழல் ஒரு நல்ல உணர்வை கொடுத்தது. வெளிஉலகில் நல்ல வேலையில் இருக்கிறார்கள்...சம்பாதிக்கும் சொந்த காசில் இந்த புரட்சியை நடத்துகிறார்கள்..கிராமங்களில்..சின்ன ஊர்களில் சத்தம் இல்லாமல் இந்த புரட்சி நடக்கிறது.. அந்த அனுபவத்துக்கு பிறகு அவர்களில் யாரையும் நான் மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் நகஸல்பாரி இயக்கம் சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்துவைப்பதின் மூலம் அவர்களை புரட்சியில் இருந்து தடுத்து நிறுத்துவதாக செய்தி வந்து இருந்தது. அவர்கள் இந்த சின்ன தடைகளில் தங்கள் இயக்க செயல்பாடுகளை தடுத்து கொள்வதில்லை...அரசாங்கத்தின் கணிப்பு போராளிகள் விஷயத்தில் என்றும் சரியாக இருப்பதில்லை..விலைக்கு வாங்க நினைக்கும் அரசாங்கத்தின் போக்குக்கு மிக சிலரே பலியாகிறார்கள்...இன்னும் எத்தனையோ சத்தமில்லாத புரட்சிகள் தேசத்தின் கண்ணுக்கு தெரியாத எல்லைகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன...

படித்ததில் பிடித்தது..

சமீபத்தில் படித்ததில் பிடித்தது.. கொஞ்சம் விசிலடிக்கவும் வைத்தது..

ஆரியபட்டா
வானத்தை கிழித்தது,
அணுகுண்டு சோதனை
பூமியை கிழித்தது,
அரைக்கைச் சட்டை
கிழிந்தது மட்டுமே
நெஞ்சில் நிற்கிறது

பிள்ளை வேண்டாமென்று
கருப்பையைக் கிழித்தார்கள்
உணவும் எதற்கென்று,
இனிவயிற்றை கிழிப்பார்கள்.

எல்லாம் கிழிந்த
எங்கள் தேசத்தில்
வாய் கிழிவது மட்டும்
வகைவகையாக இருக்கும்...

நன்றி: கந்தர்வன் கவிதைகள்

Tuesday, April 18, 2006

ஒரு சந்தேகமும் நிறைய குழப்பமும்...

தமிழ் கலாச்சாரம் என்று ஒரு குழப்பம் இருக்கிறது.. இது பற்றி வாய் கிழிய பேசும் சிலரை கவனித்து இருக்கிறேன். தமிழ் கலாச்சாரம் திருக்குறளை அடிப்படையாக கொண்டது என்று ஒருவர் என்னிடம் சொல்லி ஒத்து கொண்டால்தான் ஆயிற்று என்று பிடித்து நிறுத்தி துளைக்க ஆரம்பித்து விட்டார். வாய்மை, நேர்மை, புறம் கூறாமை, பிறன் மனை நோக்காமை, அன்பு, அறம், தூய்மை, கொள்கையோடு கூடிய வாழ்க்கை, நல்லதே பேசுதல், கற்பு என்று கருத்துகளை அடுக்க ஆரம்பித்துவிட்டார். இதையெல்லாம் கடைபிடிப்பவர் மட்டும்தான் இதனை பற்றி பேசவேண்டுமா இல்லை யாரும் பேசலாமா என்று தூண்டில் போட்டேன்...தமிழர் எல்லாரும் பேசலாம் என்று வாய்விட்டார். எனக்கு ஒரு கேள்வி...இன்றைய அரசியல்வாதிகளும் சமூக பாதுகாவலர்களும் மேலே சொன்ன கருத்து புதையல்களில் எதனையும் கடைபிடிப்பதாக தெரியவில்லை...வாய் கிழிய பேசுவதை தவிர... 6 மாசத்துக்கு ஒருமுறை கற்பு பற்றி பேசுவது ஒரு எடுத்துக்காட்டு... (அதுவும் பெண் கற்பு மட்டும்தான்...கற்பு என்பது உடலா மனமா என்று கூட யாருக்கும் தெரியாது.. )... ஆனால் எல்லாரும் - தமிழர்கள் என்று சொல்லி கலாச்சாரத்தை வேட்டியை விட இறுக்கமாக கட்டி பாதுகாத்து கொள்கிறார்கள்.. உங்களில் யாராவது விஷயம் புரிந்தால்.. சொல்லி கொடுங்கள்....தமிழ் கலாச்சாரம் என்றால் என்ன என்று...!!!

வரிகளை தொலைக்கும் புலிகள்...

பொதுவாக எனக்கு திருமணம் என்ற சடங்கில் கொஞ்சமும் சமூக நம்பிக்கையில்லை...நேரடியாக சொல்லபோனால் ஒரு பெண்ணை ஒரு ஆண் புணர்வதற்கான ஒரு உரிமம் போல திருமணம் என்ற சடங்கு நம் சமுதாயத்தில் உள்ளது. அடிப்படைவாத சமூக அமைப்பில் பெண் ஒரு ஆணின் படுக்கை அறைக்காகவே வளர்க்க படுகிறாள். படிப்பு, வேலை, தகுதி, சுதந்திரம் மற்ற எல்லா ஈர வெங்காயங்களும் வெறும் நிற பூச்சுகள். உடல்தேவைக்காவே திருமணம் அடிப்படையில் நடத்தபட்டு, பின்னர் அவர்களுக்குள் ஒரு ஒருமித்த உணர்வு உணரபட்டு, ஒரு காதலாகவும் பாசமாகவும் சித்தரிக்கபட்டு...ஒரு வழியாக தமிழ் கூறும் நல்லுலகில் வாழ்க்கை பயணத்தை நடத்துவது கலாச்சாரம் ஆகிவிட்டது.. இதில் யாரும் தப்பி பிழைக்க போவதில்லை.. நான் உட்பட.

காதல் ஒன்று மட்டும்தான் உடல் தேவையும் சார்ந்த அதே நேரம் சுய மரியாதை உணர்வாக கருதிகொண்டு இருந்தேன்..அதுவும் சமீபகாலங்களில் கரையான் அரிக்க தொடங்கிவிட்டது. காதலில், உறவில், உணர்வில் விட்டு கொடுத்தல் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. சுய அடையாளங்களை விட்டு கொடு என்று யாரும் சொல்லி தரவில்லை. இதில் வேடிக்கை - பாரதியும் பாலச்சந்தரும் சொல்லும் புதுமை பெண்கள் நிலைதான்...சமுதாய சுய தேவைகளை பூர்த்தி செய்யும் கட்டாயங்கள் ஒருபுறம், புதுமை பெண்ணாக உருவகம் செய்யபட்டு உள்ள நிலையை காப்பாற்ற வேண்டிய கடமைகள் ஒருபுறம் என தவிக்கிறார்கள்.

சாதாரண பெண்களில் இருந்து சுய மரியாதை கவிஞர்களாகவும் திறமையான அரசியல் வல்லுனர்களாகவும் உணரபட்ட பல பெண்களுக்கும் இதே நிலைதான். தன் சுய அடையாளங்களை காதலுக்காக ஒரு ஆணும் பெண்ணும் தியாகம் செய்வதாக இருந்தால் - இருவருக்கு இடையே உள்ள காதல் எதனை அடிப்படையாக கொண்டது? தியாகம்? அல்லது சுய அடையாளங்கள்..? எதனை அடிப்படையாக கொண்டு (உடல் தவிர) காதல் வந்ததோ, காதலின் வெற்றி அதனை பலி வாங்கும் என்றால் சுய அடையாளங்கள் எதற்கு - யாருக்காவது பலி கொடுப்பதற்கா..? என்னை பொருத்தவரை சுய அடையாளங்களே ஒரு மனித உயிரின் முகவரி. அதனை பலி கொடுப்பது என்பது தன்னையே பலி கொடுப்பதற்க்கு சமம். புலிகளின் அடையாளம் அதன் உடலில் உள்ள வரிகள்தான். வரிகளை தொலைக்கும் மொட்டை புலிகள் வெண்மையை சமாதானத்தின் அடையாளமாக - விட்டு கொடுத்தலின் அடையாளமாக - காதலின் அடையாளமாக சொல்லி கொள்ளட்டும். ஆனால் இன்னமும் புலிகள் என்று சொல்லி கொள்ள வேண்டாம்.

Monday, April 17, 2006

காதலும் குழப்பங்களும்...

கடந்த 4 மாதத்தில் சட்டென நிறைய காதல் கதைகளை கேள்விபட்டு கொண்டு இருக்கிறேன்... நேற்றுவரை நன்றாக இருந்துவிட்டு சட்டென இன்று காதல் வந்துவிட்டது என்று சொல்லி நிலாவை பார்த்து தென்னை மரத்தை பார்த்து கவிதை எழுத தொடங்கிவிடுகிறார்கள்...ரொம்ப பெரிய மனிதர்கள் போல வாழ்க்கையை பற்றிய கணக்கு...எதிர்காலம் பற்றிய கணிப்பு...தாங்க முடியவில்லை...முதல் வசந்தம் திரைப்படத்தில் சத்தியராஜ் சொல்லும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.. "மொதல்ல வேட்டிய ஒழுங்கா கட்டுங்கடா டேய்...அப்புறம் பண்ணலாம்..காதலும் கத்திரிக்காயும்... " பசங்களுக்கு காதல் மிக சுலபமாக வந்து விடுகிறது..பெண் கொஞ்சம் பார்க்கும்படி அழகாக இருந்தாலே போதும்...பசங்கள் பாயை பிறண்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.. கூட இருப்பவர்கள் நிலைதான் பரிதாபமாகிறது... பெண் பிள்ளைகள் நிலை இன்னும் பிரச்சனை..யாராவது கொஞ்சம் ஆறுதலாக பேசி பழகி, கொஞ்சம் உதவிகள் செய்து, லேசான கதாநாயகதனத்துடன் (ஓரளவுக்கு பார்க்க லட்சணமாக இருந்து...பைக் ஓட்டுதல், ஜெல்போட்டு தலை வாருதல், கொஞ்சம் விலை உயர்ந்த கலர்கலரான சட்டைகள், காபிடேயில் டின்னர்...மற்றும் பல).. இருந்து, பிடித்த விஷயங்களை பேசி..பழகினால்..அப்புறம் அவர்களுக்குள்ளும் காதல் விதைபோட்டு மரமாகிவிடுகிறது..தவிர்க்கமுடிவதில்லை...எல்லா பசங்கள், பெண் பிள்ளைகள் அப்படி இல்லை என்றாலும்... 70% இந்த குழப்பத்தில்தான் இருக்கிறது..இதில் இன்னொரு குழப்ப சமுதாயமும் இருக்கிறது...எல்லா பெண்களுக்கும் அஜீத், விஜய் போல பசங்கள் தேவைப்படுகிறார்கள் (கிடைக்காவிட்டால் கிடைத்தவரை சரி..) எல்லா ஆண்களுக்கும் திரிஷாவும் அஸினும் தேவைப்படுகிறார்கள் (கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிடைத்த பெண்களுடன் பழகுவது ஒரு உதாரணம்...) இதில் உதார் வேறு.. நாங்கள் எல்லாம்.. உதாரண காதலர்கள் என்று.. அதாவது தெய்வீக காதலாம்... உடல் ஈர்ப்பு கிடையாதாம்.. அப்புறம் எதுக்கு நண்பர்களே அழகான (அல்லது அழகு என்று நினைத்து கொண்டு இருக்கும்..) பெண்களும் ஆண்களும் தேடி நட்பு கொண்டு காதல் என்ற நிலைக்கு முன்னேறுகிறீர்கள்.. லட்சணமில்லாத துணையை தேட வேண்டியதுதானே... தொடாமல் பழக வேண்டியதுதானே...கல்யாணம் செய்து கொண்டு பிரம்மசரியத்தை பூண வேண்டியதுதானே.. அது எல்லாம் கூடாது.. எல்லாம் வாய்பந்தல்.. செக்ஸ் இல்லாத காதல் என்று ஒன்றும் இல்லை.. எல்லாம் ஆர்மோன் கோளாறு என்றால்.. உன் பார்வை சரியில்ல்லை என்று நமக்கு அறிவுரை... அன்பு நண்பர்களே.. உங்கள் எல்லாருக்கும் என் பதில்கள் இது..

என்னை பொருத்தவரை..காதல் உடல்சாராமல் வராது.. அப்படி வரும்காதல் நிலைத்து நிற்க்கும்.. அப்படி நிற்க வயது 40க்கு மேல் காதல் வரவேண்டும்.. காதல் வெறும் ஆர்மோன் கோளாறு... உடம்பில வளைவுகளும், பர்ஸில் கனமும் இல்லாத ஆணும் பெண்ணும் காதல் செய்தால் எனக்கு கடிதம் எழுதுங்கள்.. நீ கவிதை எழுதுகிறாயே அந்த தேவதை யார் என்று கேட்க்கும் புத்திசாலிகளுக்கு.. அது தேவதைதான்.. ஆனால் நான் தெய்வீக காதலன் இல்லை... உடல் இச்சைகளுக்கு அப்பாற்படாத காதல் என்று பொய் சொல்லி திரிவதில்லை.. இது என் வாக்குமூலமாகவும் வைத்து கொள்ளலாம்.... குழப்பி கொண்டு என்னையும் குழப்பி விட்டு திரியாதீர்கள்.. (நான் குழப்பினால் நீ ஏன் குழம்புகிறாய் என்று கேள்வி வேறு...) ஆதலினால் நண்பர்களே காதல் செய்யுங்கள்.. ஆனால் தெய்வீக காதல் என்று சொல்லி திரியாதீர்கள்.. அப்படி யாராவது உண்மையாகவே தெய்வீக காதலர்கள் இருந்தால்.. கோடி நமஸ்காரம்... என்னை சந்திப்பதை தவிர்த்து விடுங்கள்...வீண் வாக்குவாதங்களால் தீமை என்று ராசிபலன் எழுதியிருக்கிறது..

Sunday, April 16, 2006

பாட்டு கதை கணிதங்கள்...

சென்ற முறை ஊருக்கு போயிருந்தபோது சட்டென ஜாதகத்தை எடுத்துகொண்டு ஒரு ஜோசியரை பார்க்கும் நெருக்கடி ஏற்பட்டு விட்டது. சந்தோஷமான விஷயம் கால்கட்டு 31 வயதில் வைத்து கொள்ளலாம் என்று அவர் சொல்லிவிட்டதுதான். ஜோசியகாரர்கள் சில நேரம் நல்ல பொழுதுபோக வைத்துவிடுவதுண்டு - ஒரு பணிக்கர் ஒருவர்.. பாட்டு கதை எல்லாம் சொல்லி என்னை உற்சாகபடுத்திவிட்டார். சில விஷயங்களை பற்றி நிஜமாகவே ஆச்சரியபட்டதுண்டு. அந்த கட்டங்களுக்குள் வாழ்வின் சில நுட்பமான விஷயங்கள் துல்லியமாக கணிப்படுகிறது. சில புத்தகங்கள் படித்து பார்த்ததுண்டு. சில கணிதங்கள் புரிந்ததில்லை. எனினும் அந்த துறை மனிதர்களிடம் ஒரு பிரமிப்பு உண்டு. 70 சதவீதம் ஜோசியர்கள் போலித்தனமான கதைகளை சொன்னாலும் 30 சதவீத நபர்கள் சுத்தமாக சொல்வதுண்டு. இன்றைக்கு எல்லாம் நிறைய ஜோசிய புத்தகங்கள் வந்து எல்லாருக்கும் ஜோசியம் பற்றி தெரிந்து வந்து இருந்தாலும் சில ஜோசியர்களுக்கு இன்னும் வாழ்க்கை நடந்து கொண்டேதான் இருக்கிறது. எனினும் பல ஜோசியர்கள் இன்னும் நல்ல வசதியில் வாழ்வதில்லை...

சே குவாரா...

சே குவாரா பற்றி நிறைய புத்தகங்கள் இருந்தாலும் சமீபத்தில் படிக்க ஆரம்பித்து இருக்கும் பொலிவிய நாட்குறிப்பு என்ற புத்தகம் அற்புதமாக தெரிகிறது. ஒரு டைரியை போல தொகுக்கபட்டு இருக்கும் இந்த புத்தகம் மெல்ல மெல்ல ஒரு போராளியின் வாழ்வில் நடக்கும் மாற்றங்களை சொல்கிறது. வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வரும் போராளியின் வாழ்க்கை சூழல் இந்த புத்தகத்தை படிக்கும்போது புரிகிறது. நிறைய ஆயுதங்களும், தொலைதொடர்பு சாதனங்களும் இல்லாத அந்த நாட்களின் யுத்தபூமியும் முகமறியாத தோழர்களும் புத்தகத்தை வாசிக்கும்போது மனதில் பதிந்து விடுகிறார்கள். நேரம் கிடைக்கும்போது படித்துபாருங்கள்.. புத்தகத்தை வாசித்து முடித்ததும் மேலும் பகிர்ந்து கொள்ளலாம்.

இரவுகளில்...

ராமகிருஷ்ணனின் வார இதழ் தொடர் ஒன்றில் இரவுகளில் நகரங்களில் வாழ்க்கை பற்றி சமீபத்தில் படித்ததேன். இரவுகளில் நகரங்கள் புதிய அவதாரங்களை எடுக்கின்றன.. சில இரவு பயணங்களில் தாண்டி செல்லும் ஊர்களின் அடங்கும் வாழ்க்கை பற்றியும், பின்னர் மெல்ல விழிக்கும் வாழ்க்கை பற்றியும் நினைத்ததுண்டு.. ராமகிஷ்ணன் அற்புதமான பயணி. தன் பயணத்தில் அனுபவங்களை அவர் சொல்லும் பாங்கு அற்புதமாக உள்ளது. தொகுப்பு வெளியிடப்படும்போது மறக்காமல் வாங்க வேண்டும். சங்க சித்திரங்களில் ஜெயமோகன் இயல்பான வாழ்க்கையின் இலக்கியம் பற்றி பேசும் போது இருந்த லயம், ராமகிருஷ்ணனின் எழுத்திலும் இருக்கிறது. இரவு ஊர்கள் பற்றியும், அதிகாலை ஊர்கள் பற்றியும் எழுத நிறைய உள்ளது. சில ஊர்கள் ஓவியங்களை போல மனதில் பதிந்து இருக்கின்றன. ஊர்களின் பெயர்கள் விசித்திரமான காரணங்களை சொல்லி மனதில் பதிந்து உள்ளன. சில ஆறுகள், பெரும்பாலும் கோவில்கள், சில ஊர்களில் மனிதர்கள், சில ஊர்களில் உணவு என ஒவ்வொரு ஊரும் ஏதோ ஒரு அடையாளத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் கிராமம் கிராமமாக சென்று பார்க்கும் ஆர்வம் இன்னும் இருக்கிறது. நேரம் கிடைப்பதில்லை - வருடத்தில் ஒருமுறையாவது அப்படி பயணம் செய்யவேண்டும். ஒருமுறை கும்பகோணமும் அதனை சுற்றியுள்ள இடங்களும் சென்றிருந்தேன். அற்புதமான அனுபவம். பயணம் தனிமையின் அரூபமாக தன்னையும் இணைத்து கொள்கிறது. கொஞ்சம் காகிதங்கள். கொஞ்சம் பென்சில்கள்,கொஞ்சம் பணம் அவ்வளவுதான். வரைவதை அங்கேயே யாரிடமாவது கொடுத்து விட்டு வந்து விடுவதுண்டு. பெரும்பாலும் சிறுவர்கள் சிறுமியர். சில நேரம் வயசாளிகள். முகமறியாத மனிதர்களுக்கும், தண்ணீர் கேட்டால் மோர் கொடுக்கும் குணம் இன்னும் அங்கே இருக்கிறது.