அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, November 12, 2005

பள்ளியின் கதவுகளில்...

கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் பழைய மாணவர் பேரவை 25 ஆண்டுகளுக்கு முந்திய மாணவர்களை மீண்டும் கலந்துரையாட செய்து அற்புதமான ஒரு முயற்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. இப்போதெல்லாம் மாதம் இருமுறை வைக்கிறார்கள் என நினைக்கிறேன். பழைய நண்பகளை அதுவும் நெடுநாட்களுக்கு பிறகு சந்திப்பது அற்புதமான விஷயம். நானும் என் பள்ளி நண்பர்களை அப்படி சந்தித்து இருக்கிறேன். 8ஆம் வகுப்பில் இருந்து ஒரு பழக்கமாக பள்ளி குழு புகைபடங்களின் பின்புறம் வரிசைவாரியாக பெயர்களை எழுதிவைப்பதை பழக்கமாக கொண்டதினால் இன்னும் புகைபடங்கள் பார்க்கையின் பெயர்கள் நினைவிருக்கிறது. இந்த பழக்கத்தை சொல்லிகொடுத்த தமிழ்அய்யாவுக்கு என்றும் நன்றி சொல்வேன். ஆயினும் சிலரை எங்காவது எத்தோசையாக பார்க்க நேரிடும் போது பெயர் தொண்டையில் சிக்கி கொள்கிறது. ஆரம்ப பள்ளி தோழர்களை சில முறை கிராமத்துக்கு போகும்போது சந்திப்பதுண்டு. முருகன் என்றொரு நண்பர் - அருணாச்சலம் மளிகை கடை வைத்திருக்கிறார். திங்களூர் - பெருந்துறை பகுதியில் ஒரு சின்ன ஊர் (இப்போதெல்லாம் நிறைய மாறிவிட்டது - கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்கள் தங்கள் அடையாளத்தை இழந்து வருவதற்கு சான்றாக). எனக்கு வீடு தாண்டிய உலகத்தை அறிமுகம் செய்த ஊர். சோளக்காட்டுக்குள் பயமுறுத்தும் அய்யனார் கோவில், ஆரம்ப பள்ளி கூடத்தின் திண்ணைகள் கட்டிய வகுப்பறைகள், யாரோ ஒரு மாணவன் எழுதிய இன்றைய மாணவர் பதிவு மற்றும் யாரோ ஒரு ஆசிரியர் சொல்லி கொடுத்த பாடத்தின் அழிக்கபட்டாத மிச்சங்களுடன் கூடிய கரும்பலகை, கொடி ஏற்றும் மைதானம், சந்தை பகுதி, ஊருக்கு வெளியே வருடம் ஒரு முறைமட்டுமே கதவு திறக்கபடும் இருண்ட கோவிலுன் கல் மண்டபங்கள் எல்லாம் என்னுடன் வரும்போது அவர் ஆச்சரியமாக பார்ப்பார். இதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என எனக்கு தெரியவில்லை என்பார். அவர் மனைவி அற்புதமான சமைப்பவர். ஊர் திரும்பும் வரை நாக்கினடியில் சுவைக்கும் கோழி குழம்பு. இரண்டு அற்புதமான குழந்தைகள் - அதே ஓட்டு பள்ளியில் படிக்கின்றன (அடுத்த வருஷம் பெருந்துறைல படிக்க வைக்கணும்...என்பார் அடிக்கடி). என்னோடு நான் பொருத்தி பார்க்கும் நண்பர்கள் குழாமில் முருகனின் வாழ்க்கை என்னை பொருத்தவரை அற்புதமான உலகம். அவனுக்கு என் உலகம்தான் அற்புதம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற சொல்வழக்கு போல. சில நண்பர்களை மறுபடியும் பார்க்கவே முடியவில்லை. ஆறுமுகம் என்றொரு நண்பன் - 3ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தோம். பள்ளி சுற்றுலாவில் மைசூர் போனோம். 3 நாட்களும் கைகளை கோர்த்து கொண்டே(தொலைந்து போகாமல் இருக்க...) சாப்பாடு, தூக்கம், பெரிய சர்ச், பிருந்தாவனம், ஏதேதோ இடங்கள்... இன்று நினைக்கையில் வாழ்க்கையின் முடிந்த பகுதியின் சந்தோஷங்கள் இனிக்கின்றன. வருத்தங்கள் ? - வழக்கம் போலவே....

1 comment:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//என்னோடு நான் பொருத்தி பார்க்கும் நண்பர்கள் குழாமில் முருகனின் வாழ்க்கை என்னை பொருத்தவரை அற்புதமான உலகம்//

என்னோடும்..

-மதி