அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 05, 2007

செக்ஸ் கல்வி

பெரும்பாலருக்கு செக்ஸ் கல்வி பற்றிய அறிவு என்பது புஜியம் என்று நினைக்கிறேன். பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பேசும் பெற்றோரை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது. செக்ஸ் கல்வி என்பது எப்படி செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல - அதல்லாம் சொல்லி கொடுத்து வருவது இல்லை. முறையான செக்ஸ் என்ன, பாதுகாப்பு என்ன, சுயம் அறிதல் என்ன, சுகாதாரம் என்ன, உடல் உறுப்புகள் என்ன என்பதனையும் ஆணுக்கு பெண் பற்றியும், பெண் ஆண் பற்றியும் ஒரு அறிவும் கொடுப்பதுதான் செக்ஸ் கல்வி. கேட்டால் அதுதான் டிவியும் சினிமாவும் சொல்லி கொடுக்கிறதே என்கிறார்கள் - மார்பும் இடுப்பும் குலுக்கி ஆடும் ஆட்டமும், கட்டி பிடித்து உரசி கொள்வதும்தான் செக்ஸ் என்றால் - குழந்தை பிறப்பு என்பது கொக்கு கொண்டு வந்து போடும் விஷயம் என்ற அளவில்தான் செக்ஸ் அறிவு மக்களுக்கு இருக்கிறது என்று பொருள். 8ஆம் வகுப்பில் உடல்கூறு கல்வி என்று ஒரு விஷயம் அறிவியலில் இருக்கிறது - பல வாத்தியார்கள் அதனை கற்பிப்பதில்லை. செக்ஸ் பெரும்பாலருக்கு முறையற்ற வழியில்தான் அறிமுகம் ஆகிறது - தெளிவனா அறிவு இல்லாமலேயே , பல பெண்கள் ஆர்கஸம் என்றால் என்ன என்று தெரியாமலேயே, பெறும் பாலான ஆண்கள் தங்கள் திருப்தி அடைந்தவுடனே தூங்கி... குழந்தை பெற்றும் கொள்கிறார்கள் - அட ஏதாவது படித்தால்தானா ஏதாவது முழுசாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் - காம சூத்திரா புத்தகம் வாங்க வெட்கபடுகிறவர்கள், முக்குகடையில் சிவப்பு நாடாவும் மஞ்சள் நிலவும் வாங்குகிறார்கள். எது செக்ஸ் என்பதிலேயே குழப்பம் இருப்பதாக படுகிறது எனக்கு. செக்ஸ் உடம்பு கிடையாது - ஆரோக்கியமான மனதுதான் என்றால் யாருக்கும் புரிவதில்லை. உடல் உறுப்புகள் வெறும் எலும்பும் சதையும்தான் - மனசு ஆரோக்கியமான செக்ஸால் சூழப்படும்போதுதான் அது முழுமையான செக்ஸை கொண்டுவருகிறது. மனசு இல்லாத வெறும் கிளர்ச்சி என்பது ஒரு வகை வன்முறை. இந்த லட்சணத்தில் முறையான ஒரு அறிவு கொடுக்க தடை விதித்து சங்கம் வைக்கிறார்கள் - எதை அல்லது யாரை பாதுக்காகிறார்கள் என்றே தெரியவில்லை. கலாச்சார பாதுகாப்பு கடை விரித்து தெருவில் போகும் பெண் புடவை விலகினால் கூட வெறித்து பார்க்கும் அறிவு இல்லாத எதிர்கால சந்ததியை உருவாக்குகிறார்கள். பெண்ணின் மாத பிரச்சனையை கூட செக்ஸாக கருதும் அளவுக்கு - ஒரு நாப்கின் வாங்க கூட ஆண்கள் அதிகம் இல்லாத மருந்து கடையை நாடும் அளவுக்கு குழப்பம் இருக்கிறது. வாய் கிழிய பேசுவதால் எந்த உபயோகமும் இல்லை - முதலில் செக்ஸ் கல்வி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் பின்னர் அதை பற்றிய கருத்துகள் வரட்டும். ஆரோக்கியமான உடல் நலமும் மன நலமும் வேண்டும் என்றால் எதுவும் முறையாக தெரிந்து கொள்ளட்டும். பத்திரிக்கைகளும் பிற ஊடகங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் - வெறும் வியாபாரத்துக்காக மோதவிடுதலில் யாருக்கும் நல்லது இல்லை.

உறவுகளின் மதிப்பு

ஒரு ஆணிடம் பெண்ணும், பெண்ணிடம் ஆணும் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னவாக இருக்க முடியும். இந்த கேள்வியும் பதிலும் பல முறை நான் பலரிடம் விவாதித்த விஷயங்கள்தான். என் வாழ்விலும் முழுக்க தெரியாமலேயே கொஞ்சம் கடைபிடித்தும் கொண்டிருக்கிறேன்.. எனினும் இதே கருத்தை வாழ்க்கை பற்றிய பல்நோக்கு அனுபவம் கொண்டவரிடத்திலும் இருந்து படிக்க நேர்வது ஒரு நல்ல அனுபவம்...

கேள்வி: பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்.

பதில்: மதிக்கபடுவதை; தனக்குள்ளிருக்கும் ஆளுமை ஆராதிக்கபடுவதை; நித்தம் நித்தம் நேசம் நிரூபிக்கபடுவதை; தன் பலவீனங்களைக் கண்டு கொள்ளாத கண்களை; தன் பலத்தை கொண்டாடும் குணத்தை; ஒலி உயராத குரலை; நான் உனக்கு மட்டும்தான் என்னும் உயிரழுத்தும் ஸ்பரிசத்தை; சபையில் கொடுக்கும் கெளரவம் தனிமையிலும் கொடுக்கப்படுவதை; தாம்பத்யம் முடிந்த தருணங்களில் "குளியல் அறைக்கு முதலில் நீ போ" என்று வழங்கப்படும் முன்னுரிமையை;

அடிப்படையில் இது பெண் விரும்பும் விஷயங்கள் மட்டும் கிடையாது - ஆணும் கிட்டதட்ட இதே விஷயங்களை பெண்ணிடமிருந்து விரும்புகிறான் - ஒருவருக்கு ஒருவர் இதனை பரிமாறி கொண்டால் மட்டுமே உறவு சாத்தியபடுகிறது. இது வெறும் வார்த்தை கோர்வைகள் அல்ல - வாழ்க்கை. மனிதரை மனிதர் மதிக்கும் பாங்கு. உறவு பலப்பட உதவும் மந்திரம் - எனினும் இதனை புரிந்து கொள்ளும் மனங்களுடன் மட்டுமே எதுவும் சாத்தியபடுகிறது.

மனசு இழுத்து செல்லும் பாதைகள்

ஜெயமோகன் தனது ஒரு பேட்டியில் 'ஒரு திரைப்படத்தின் ஏதேனும் ஒரு காட்சியில் மனசு எங்கியோ போய்விடுகிறது' என்கிறார். படித்து கொண்டிருக்கும் போதே, இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டதை யோசித்து பார்த்தேன். பல திரைப்படங்கள் மட்டுமல்ல, நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வாழ்வியல் அனுபவங்கள், விவாதங்கள் ஏன் மவுனங்களில் கூட மனது ஏதோ ஒரு புள்ளியில் லயித்து போகிறது. நமக்கும் அந்த புள்ளிக்குமான உறவு சட்டென வெளிச்சமாகிவிடுகிறது. அதன் மேல் ஒரு மையல் கொள்கிறது - ஆழ்ந்த காதல் அனுபவம் என்று கூட சொல்லலாம். என்னை பொருத்தவரை மிக அற்புதமான ஒரு உணர்வு அது. அந்த கனவு பாதைகளை தொடர்ந்து புள்ளி தொடும் தூரத்தில் ஒரு எண்ணம் கலத்தல் உண்டாகிறது. சொல்ல போனால் நிறைய சொல்லலாம் - எல்லாம் சொல்லிவிட்டால் மனசு என்ன தீர்ந்தா போய்விடுகிறது - நிரம்பி தழும்பும் தாமரை குளம் போல அது.

தமிழா..! தமிழா..?

"கற்றது தமிழ்" - முதலில் என் மனதில்பட்ட ஒரு விஷயம் - அழகான திரைப்படம். நல்ல இசை அமைப்பு, நல்ல வசனங்களும் பாடல்களும், நல்ல ஒளிப்பதிவு - எல்லாம் கொண்டு நல்ல ஒருங்கிணைப்பு. திரைப்படம் பற்றிய விமர்ச்சனங்களை பல இணைய தளங்களிலும் பத்திரிக்கைகளிலும் எல்லாரும் படித்திருக்கலாம் - பல பரிமாணக்களை கொண்ட கருத்துகளை கூட நான் கவனித்தேன். என்னை பொருத்தவரை ஒரு பின்நவீனத்துவ அடிப்படை உணர்வை நான் கதை சொல்லும் பாணியில் கவனித்தேன். மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் பயணம் செய்கின்றன - காதல், தேடல், தன்னுள் தொலைந்து போதல் என்னும் வேறு வேறு பரிமாணம் கொண்ட உணர்வுகள் பதிவு செய்யபட்டுள்ளன. ஒரு மனநோயாளின் பயணங்களை, நான் பார்த்த எந்த திரைப்படத்தையும் விட இக்கதை அருமையாக பின் தொடர்ந்து உள்ளது. தமிழ் சார்ந்த படிப்பு மட்டுமே கதாபாத்திரத்தின் பிரச்சனைகளுக்கு காரணம் என்று வலியுறுத்தபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை - அவன் பொருளாதாரம் மற்றும் சுய ஒழுக்க குழப்பங்கள் மட்டுமே என் கண்ணுக்கு தெரிகிறது. காசு இருந்து தனிமையும் இருந்தால் - எந்த சாமியும் கொஞ்சம் சாராயமும் கறியும் பெண்ணும் கேட்கும்.
தமிழ் வாத்தியார் வேலையும் அதன் குறைந்த பொருளாதாரமும் ஒரு பின்புலமாகவே நான் கொள்கிறேன். போலீஸ் பிரச்சனையில்தான் அவன் ஓட்டம் ஆரம்பிக்கிறது - அதற்கு காரணம் ஒரு போலிஸ் அதிகாரியின் பெண் வேட்கை - அந்த பிரச்சனையில் இருந்து அவன் வெளிவர முடியாமைக்கு அவன் பொருளாதாரம் என்ற லேசான பின்புலம் - அதற்கு பிறகு வருவதெல்லாம் நாடகம். மற்றொரு பரிணாமமாகிய - அவனுக்கும் அவளுக்கு உள்ள காதலும், அவனுக்கும் அவன் தமிழ் வாத்தியாருக்கும் உள்ள நட்பும், அவன் பயணங்களும் - மிக அற்புதமாக கவிதைகள். காதலை உள்கொண்ட ஆணும் பெண்ணுமாய் உயிர் அலைகிறது. கதை அமைப்பின் உறுத்தல்களாய் கொஞ்சம் ஒப்பனையும் உடையலங்காரங்களும் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. மரணங்களால் அறிமுகபடுத்தி கொள்ளும் பாத்திர நேர்த்தியும், குழந்தை வாழ்க்கைக்குள் தொலைந்து போகும் குணமும், சின்ன சின்ன சிறுகதை அமைப்புகளை போன்ற கதை அமைப்பும் - ஒரு நாவலை உணரும் அனுபவம் எழுகிறது. ஒரு நிமிடம் இந்த திரைப்படம் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து பதிவு செய்யபடும் அனுபத்தை யோசிக்கும் போது - மிக அற்புதமான கதை களம் விரிகிறது. தமிழ் ஆசிரியரின் பார்வையில் வேறு ஒரு கோணம். என் மற்ற பதிவுகளிலும் இந்த திரைப்படம் பற்றிய சில சிந்தனைகளை பகிர்ந்து கொள்வேன் என நினைக்கிறேன். மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக ராமை நான் சிந்திக்கிறேன். இந்த திரைப்படம் நிறைய யோசிக்கவும் நிறைய பேசவும் வைக்கிறது - அது நிச்சயம் தமிழ் படித்த அவலம் பற்றி அல்ல. மனித வாழ்க்கை பற்றி - எதிர் கோண சிந்தனைகள் பற்றி, உறவுகள் பற்றி, உணர்வுகள் பற்றி - இன்னும் நிறைய. என்னை பொருத்தவரை - இன்னும் செய்திருக்கபட வேண்டிய நிறைவான திரைப்படம்.

காமம் என்பது பொதுவானது...

ஒரு சமீபத்திய பத்திரிக்கையில் அரவாணிகளின் வாழ்க்கை பற்றிய கட்டுரைகளை படிக்க நேர்ந்தது. மூன்றாம் பாலினமாகிய அவர்களை சினிமாவும் மற்ற ஊடகங்களும் எங்கனம் பதிவு செய்கின்றன என்பதை பற்றிய மாறுபட்ட சிந்தனைகளுக்கு நடுவே அவர்களின் காமம் சார்ந்த வாழ்வு பற்றி சில ஆங்கில இணையதளங்களில் படிக்க நேர்ந்தது. ஒரு மிக இயல்பான உடல் உணர்வை - அரவாணிகளை கொண்டு பெரும்பாலும் ஒரு அவமானத்துக்கு உரிய விஷயமாகவே உலகம் எங்கும் வெளிப்படுத்தபடுகிறது. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனக்கு உள்ள உடல் வேட்கையை தீர்க்கும் வழிகள் ஆயிரம் புத்தகங்களிலும் ஆயிரம் விவாதங்களும் சொல்லி கொடுக்கபடுகிறது. அரவாணிகளின் உணர்வுகளை - உயிர் கொள்ளும் வலியை சொல்ல யாரும் கிடையாது. அரவாணிகளுடனான உடலுறவு ஒரு மிக அவமானத்துக்கு உரிய விஷயமாகவே உள்ளது. கேலிக்குரிய விஷயமாகவே ஊடகங்களில் வெளிப்படுகிறது. சக மனிதராக கூட அவர்களை மதிக்க முடியாத சமூகம் - "அது" என்ற அKறிணையில் விளிக்கும் போதும், கேலி பேசும் போதும் - நான் கூட மவுனியாகதான் இருக்கிறேன் - என்னை சுற்றிய சமூகத்தின் பார்வையில் நான் யார் என்ற கேள்வியும் கேலியும் எழும் என்பது அறியும்போது.

புளியமரத்தின் கதை

நான் முதல் முதலில் சு.ரா பற்றிய குறிப்புகளை மட்டுமே படித்திருந்தேன். அதுவும் அவர் மரணத்துக்கு பிறகுதான். அப்புறம் ஒரு நண்பர் மூலமாக "ஜெ.ஜெ. சில குறிப்புகளை" படித்தேன்.. ஒரு விதமான புது அனுபவமாகவே இருந்தது.. ஒரு மனிதரை - உணர்வு ரீதியாக விரும்பி கொஞ்சம் வெறுத்து, நிறைய கவனித்து நிறைய சுய ஆலோசனை செய்து, அவரை தொடர்ந்து சென்று ஆதர்சனம் செய்யும் ஒரு அனுபவம். இன்னும் சில முறையாவது படிக்க வேண்டிய நாவல் அது. சிறுகதைகளையும் மற்ற நாவல்களையும், சில கவிதைகளையும் இன்னும் முறையாக படித்ததில்லை. "புளிய மரத்தின் கதை" நாவல் வாங்கி கிட்டதட்ட 3 மாதங்கள் படிக்கவே இல்லை. பின்னர் ஒரு நான்கு நாட்கள் சேர்ந்தால் போல விடுமுறை (காந்தி ஜெயந்தி, ஆளும் கட்சி பந்த் மற்றும் வார விடுமுறை) வந்ததும் ஒரே மூச்சில் நாவலை இரண்டு முறை படித்து விட்டேன். நாவல் பற்றிய மாற்று விமர்ச்சனங்கள் முன்னமே படித்து இருந்ததால், நாவலின் நடை பற்றிய முன்னறிவு இருந்தது -எனினும் அது நாவலின் சுவையை குறைக்கவில்லை. ஒரு மரம் - ஒரு ஊரின் அடையாளம் - அது சார்ந்த மனிதர்கள் - அவர்களின் வாழ்க்கை - கொஞ்சம் அரசியல், கொஞ்சம் கால மாற்றங்கள் என நாவல் ஒரு ஒற்றையடிபாதையின் நடை சுமை தீர்க்கும் அனுபவம் போல இருந்தது. இந்நாவலின் தாக்கம் இன்னும் நிறைய நாட்கள் இருக்கும் - இதன் சுலபமான நடை ஒரு காரணம். ஒரு பூங்கா உருவாகும் விதமும், அதனை சுற்றிய மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நல்ல சுவையான பார்வை - இனி ஒவ்வொரு பூங்காக்களையும் பார்க்கும்போதும் பார்வை முறை கொஞ்சம் இந்த நாவல் சார்ந்தே இருக்கும். மனிதர்களின் வாழ்க்கை எப்படி அடுத்தவர்களின் கவனத்துக்கு உட்பட்டே அமைகிறது என்பதை நாவல் அடிப்படையாக கொண்டுள்ளது - அப்படி கவனம் ஈர்க்கும் முயற்சிகளும் முறைகளும் ஓவ்வொருவரின் சுயலாப அடிப்படையிலேயே அமைகிறது. நாவல் பற்றியும் சு.ரா பற்றியும் இன்னும் அவரின் மற்ற சிறுகதை, கவிதை மற்றும் நாவல்கள் பற்றியும் மேலும் எழுதலாம் - அதனூடே சு.ரா / அவரின் படைப்புகள் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் ( ம.க.இ.க வின் படைப்புகள்) மிகவும் அருமையானவை - பகிர்தலுக்கும் விவாதங்களுக்கும் சுவையானவை... எதிர்கால பதிவுகளில் மேலும் பகிர்ந்து கொள்ளலாம்...

புது வீடு...

தி.நகரின் வெங்கட நாராயணா சாலை அருகே புதிய வீட்டில் குடியேறி இருக்கிறோம் நானும் என் நண்பரும். இரண்டாவது மாடியில் மூன்று அறைகள் கொண்ட சிறிய வீடு. குடி புகுந்து, பொருட்கள் பார்த்து வாங்கி அமைத்து ஒரு முழுமைக்கு கொண்டு வருவதற்க்குள் 20 நாட்கள் முடிந்து விட்டது. கேபிள் தொலைகாட்சியும், தமிழ் செய்திதாளும், காலை நேர நடை பயிற்சியும், 20 நிமிட உடல் பயிற்சியும், குளிக்கும் போது அருகே உள்ள பள்ளியில் இருந்து கேட்கும் நீராடும் கடலுடுத்த பாடலும், அலுவக காரில் பயணங்களும், வழக்கமான அலுவக வேலைகளும், வார இறுதி தூக்கமும், கொஞ்சம் கதையும் கவிதை வாசிப்பும், சில சுவரஸ்யமான சந்திப்புகளும் (பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்), கைதொலைபேசி நண்பர்களும், இரவு 2 மணி வரை உரையாடல்களும், வார இறுதி மாலை நேர கடை பாதை நேரத்தொலைப்பும், இரவு நேர கையேந்திபவன் உணவுகளும், காபி டே மாலை நேரமும், மழை கால பகல் தூக்கமுமாக கழிந்து கொண்டே இருக்கிறது இரவும் பகலும் நாட்களும் வாரங்களும்...

ஆலந்துறை நினைவுகள்

பேரூர் போகும் வழியில் ஆலந்துறை பேருந்து கொஞ்சம் பழைய நினைவுகளை கொண்டு வந்தது. என் கல்லூரி காலங்களில் கோவைபுதூர் முருகன் காம்லெக்ஸில் தங்கியிருந்தேன். என்னுடன் ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்த இருவர் தங்கியிருந்தனர். ஒருவர் தூத்துகுடிகாரர் - சங்கர் கனேஸ் - மற்றொருவர் ஈரோடு அருகே - காசிராஜன் அவர் பெயர். எனக்கும் காசிக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் நல்ல புரிதல் இருந்தது, எனவே எல்லா இடமும் சேர்ந்து சுத்துவோம். வார இறுதிகள் பெரும்பாலும் குனியமுத்தூர் அல்லது சுண்டக்காமுத்தூர் சாராயகடைகளில்தான் இருக்கும். கொஞ்சம் செட் சேர்ந்துவிட்டால் அப்புறம் கூத்தும் கும்மாளமும்தான் - அவரை மறுபடி ரூம் கூட்டிவர நிதானத்தில் இருக்கும் நான் ரொம்ப அவசியம் என்பதால் எல்லா கும்மாளங்களிலும் எனக்கும் இடம் உண்டு. ஒரு முறை ஆலந்துறையில் இருக்கும் அவரின் நண்பரை பார்க்க சென்றோம். அவர் ஸ்பிக் நிறுவனத்தின் சமையல் பகுதியில் வேலை செய்பவர். வயசாளி. அடிப்படையில் விவசாயி. நாங்கள் சென்ற நேரம் ஊரின் ஏதோ கோவிலில் கடா வெட்டு. ஒரே ஆட்டமும் பாட்டமுமாய் இருந்தது. வாய்கால் பாலம் அருகில் அவர் வீடு. அது கரும்பு சக்கையும் முட்டையும் போட்டு கட்டிய பாலமாம்.. மாலை மங்கும் நேரம் எல்லாம் கட்டெரும்புகள் நிறைந்து இருக்கும். வாய்க்கால் கரை ஓரமாய் ஜமுக்காளம் போட்டு 3 பாட்டில் நாட்டு சரக்கும் கோழியும் ஆடும் சப்பாத்தியும் சோறும் வைத்து ஒரே படையல்தான். 5 ரவுண்ட் முடிந்தவுடன் காசி பாட ஆரம்பித்து விடுவார் - பொதுவாக பழைய சிவாஜி பாடல்கள்தான். ராகமும், தட்டில் தாளமுமாய் பாட்டும் ஜீவன் அவர் - நம் ஆலந்துறை தோழர் எம்.ஜி.ஆர் ரசிகர் - மொத்தத்தில் அன்று ஒரே போட்டி பாடல்கள்தான்... அவர் பாட, அப்புறம் இவர் பாட... சண்டையில்லாமல் இருவரும் தூங்கும் வரை ஒரே இசை கச்சேரி... என் கவனம் சாப்பாட்டில் மட்டுமே இருந்தாலும், பாட்டின் சுவரஸ்யத்தில் சரக்கு அவர்களுக்கு அதிகமாகி இருந்தாலும் மற்றும் திரும்பி செல்ல பேருந்து வசதி இல்லாததாலும் - பாதை ஓரத்திலேயே படுத்து தூங்கும்படி ஆனது அன்று - அடுத்த நாள் விடுமுறை என்பதால் பிரச்சனை இல்லை. மறுநாள் விடிகாலை மறுபடி அரைதூக்க நிலையிலேயே அறை வந்து சேர்ந்தோம். இன்று நினைப்பினும் நல்ல சந்தோஷம் - எங்கு இருக்கிறார்களோ அந்த அறை நண்பர்கள் - சில காலங்களுக்கு பிறகு முற்றிலும் தொடர்பு இல்லை.

வாழ்க்கை ஒரு புள்ளியில் இல்லை.

நம் வாழ்வில் பெரும்பாலரை - நல்லவர்கள் கெட்டவர்கள் அப்பாவிகள் மோசமானவர்கள் இன்னும் என்ன என்னவோ சொல்லி ஒரு அடைமொழியோடே மனதில் வைத்திருக்கிறோம். அடிப்படையில் பெரும்பாலரின் செயல்களே அவர்களை பற்றிய ஒரு மனத்தோற்றத்தை நம்முள் உருவாக்குகின்றன. அந்த செயல்களிக்கான அடிப்படைகள் யாராலும் கவனிக்கபடுவதில்லை. ஒருவரின் நடத்தை அல்லது ஒழுக்கம் முழுமையாக அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் - சில கற்பனை கோடுகளாலேயே நிர்ணயம் செய்யபடுகிறது. யாரும் அடிப்படையில் எந்த குணாதிசியமும் கொண்டவர்கள் இல்லை - ஒரே குணாதிசியம் கொண்டவர்களாக சமுதாயத்தில் எல்லாருடனும் இருந்து கொள்ள யாராலும் முடியாது - ஒழுக்கமும் அது போலதான். மாற வேண்டிய நேரத்தில் முகங்கள் மாறியே ஆகவேண்டும். யாரை பற்றியும் பொதுவான கருத்துகளை தவிர்க்கலாம் - எல்லாரையும் நேசிக்க முடியும். செயல்களை வைத்து ஆட்களை எடைபோடாமல் - செயலுக்கு பின்னால் உள்ள காரணிகளை கவனித்து பார்த்தால் நம் பார்வையின் பண்பாடு நமக்கே தெரியும். - நம்மை நாமே சுயநிர்ணயம் செய்து கொள்ளவும் முடியும். வாழ்க்கை ஒரு புள்ளியின் பார்வை அல்ல - புள்ளி ஒரு வடிவத்தின் காரணி. வடிவம் அறியாமல் அதை பற்றி சொல்லும் கருத்துகள் பயன் இல்லாதவை.

கல்யாணமாம் கல்யாணம்..

இன்றைக்கு எல்லாம் எதிர்பார்ப்புகள் நிறைய வளர்ந்து இருக்கிறது - 40% ஆண்களும் பெண்களும் நிறைய எதிர்பார்ப்புகளுடனே திருமண வாழ்வில் நுழைகிறார்கள். பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் போதே இதன் பிரச்சனைகளை பார்க்கிறார்கள். குறைந்தது 50 ஆயிரம் சம்பளமும், 2 முறையாவது வெளிநாட்டு அனுபவமும், இந்தியாவின் முதல்தர கம்பெனிகளில் வேலையும் கொண்டவர்களை மட்டுமே - அது பெண் வீடு ஆகட்டும், பிள்ளை வீடு ஆகட்டும் - விரும்புவதில் உள்ள லாஜிக் புரிவதில்லை எனக்கு. மனசு ஒத்துபோன திருமணம் என்பது கணிபொறி சார்ந்த தொழில் நுட்ப மனிதர்களின் (20 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் பெரும்பாலர் - எந்த தொழில் செய்தாலும்) வாழ்வில் பெரும்பாலருக்கு இருப்பதில்லை. ஏதோ ஒத்து போவதற்காக வாழ்கிறார்கள் - அல்லது சீக்கிரம் மண முறிவுக்கு வருகிறார்கள். குழப்பமான வாழ்வில் பணமும் அமெரிக்க அனுபவங்களும் எந்த மாற்றத்தையும் தருவதில்லை. அதிகபடியான வேலை நேரத்தில் குடும்பத்தில் இழக்கிறார்கள். உடல் நலமும் மன நலமும் இல்லாமல் குழந்தை வளர்ப்பும், செக்ஸ் வாழ்க்கையும், அமைதியான ஒரு நேர கூட்டு குடும்ப இரவு உணவும் கூட - அடிப்படை நலன்கூட இல்லாமல் - நிரம்பி வழியும் வங்கி கணக்கும், ஷெர் மார்கெட்டும், பாரின் டூர்களும், அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையும் என்ன தர முடியும். பெரும்பாலான வீடுகளில் யாராவது ஒரு பையன் பார்க்க லட்சணமாக இருக்காவிட்டாலும் பரவாயில்லை கொஞ்சம் பணம் காண்பித்து நம்புவது போல பேசி அமெரிக்க மொழி பேசினால் - கூசாமல் பெண்ணை கூட்டி கொடுக்கிறார்கள் - லியாகத் அலிகான் வழக்கு ஒரு எடுத்துகாட்டு. லியாகத் முயற்சி மட்டும்தான் செய்தான் - முடித்து கொடுத்தது பெண் வீட்டிகாரர்கள்தான் - முடித்து கொடுக்க வைத்தது - இவர்கள் எதிர்பார்த்த அவன் காட்டிய தகுதிகள் - பணமும், அமெரிக்காவும் முதல்தர தொழில்படிப்பும். ஒரு வகையில் இது விபச்சாரம்தான். அதிகம் படிக்காதவர்கள், குறைந்த சம்பளம் உள்ளவர்கள், சிறிய அளவில் தொழில் வாழ்க்கை உள்ளவர்கள் - எனக்கு தெரிந்து நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள் - தகவல் தொழில் நுட்ப வாழ்வில் உள்ளவர்களை விட 100% மடங்கு மேல். திருமண வாழ்வுக்கு அடிப்படை தேவை என்ன என்பதை யாராவது பிள்ளை பெற்ற பெண் பெற்ற பெற்றோர்களுக்கு எடுத்து சொன்னால் பல தற்கால தலைமுறை வாழ்க்கை உருப்படும்.