அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, February 26, 2006

மனதோரம் ஒரு ரோஜா

மதனின் "நான் ஒரு ரசிகன்" இந்த வாரம் படித்தவுடன் எனக்கும் பழைய நினைப்பெல்லாம் வந்து விட்டது. பள்ளிகூட காலத்தில் ஒரு பெண் இருந்தாள். பர்த்தா அணியாத முஸல்மானிய பெண். இன்றும் யாராவது காதோரமாக ஒற்றை ரோஜா செருகியிருந்தால் அனிச்சையாக முகம் பார்க்க முயற்சி செய்வதுண்டு. அவளிடம் நான் பேசியதே இல்லை. இருவரும் பார்த்து கொண்டதுண்டு. அவளை பார்பதற்காகவே பிடிக்காத வாத்தியாரம்மாவிடம் கணக்கு டியூசன், டைப்ரெட்டிங் எல்லாம் போனதுண்டு. எத்தனை பெண்களிலும் ஒரு தாவணி பூவாக அவளை கண்டுபிடித்து விடுவோம். நண்பர்கள் உண்டல்லவா இது போன்ற விஷயங்களில் உதவ. மசூதிக்கு அருகில் உள்ள கோவில், கடற்கரை, நெஸ்கொ, புதுப்பட்டினம் மார்கட், சதுரங்கபூம்பட்டின ஆயுர்வேத மருத்துவர் வீடு, கணேஸ் தியேட்டர் எல்லா இடங்களில் அவள் என்னை பார்ப்பாள்... இன்று நினைத்தால் கொஞ்சம் சிரிப்பும், கொஞ்சம் பெருமூச்சும். அவளை தேவதையாகவே மனசு நினைத்திருக்கிறது. செக்ஸ் அப்பீல் என்ற அளவில் இதுவரை அவளை கற்பனை செய்யமுடியவில்லை என்பது ஏன் என்ற குழப்பம் இன்றும் உண்டு. வாழ்வில் அப்படி ஒன்றும் நான் ஒழுக்கசீலன் கிடையாது - வாய்ப்புகளில் சில சில்மிஷங்கள் அரங்கேறியதுண்டு எனினும் ஒரு வார்த்தை கூட பேசாத அவளிடம் ஒரு மரியாதை கலந்த அன்பு நின்றிருக்கிறது. அவள் சிரித்து பார்த்ததுண்டு, அழுது பார்த்ததுண்டு, கோகோ விளையாட்டில் அவள் ஓட தொடங்கி என் முகத்தில் இருந்த புன்னகை கவனித்து சட்டென நின்று தோற்று பின்னர் என் கண்களை தவிர்த்து இருந்ததுண்டு. அவளை பார்த்து கொண்டே சைக்கிளை பஸ்ஸுக்கு நின்றிருந்த மக்கள் மேல் கொண்டு இடித்து நான் அடி வாங்கியதுண்டு.. எனினும் இருவரும் பேசியதில்லை...பேச முயற்சித்ததும் இல்லை - காரணம்... தெரியவில்லை. காதல் என்று வகைப்படுத்தவும் தெரியவில்லை. பள்ளிகூட நாட்களுக்கு பிறகு தொடர்புகள் இல்லை...யாருக்கும் அவள் பற்றி தெரியவில்லை...யாரிடமும் கேட்க தைரியமும் இல்லை... ஆனால்... எப்போதாவது எங்காவது "அந்தியில வானம்..தந்தனத்தோம் போடும்...", "பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க..." மற்றும் "நிலா காயும் நேரம்...சரணம்" ஆகிய பாடல்களை கேட்கும் போது அவள் நினைவுகள் நெஞ்சில் பூக்கும்.

No comments: