அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Tuesday, March 31, 2009

நம்மால் முடியுமா..!

'Children of Heaven' என்று ஒரு திரைப்படம் - நிறைய பேருக்கு அறிமுகமாகியிருக்கும். குழந்தைகளுக்கான திரைப்படம் என்ற நிலையில் இருந்து கொஞ்சம் வளர்ச்சி பெற்று பெரியவர்களின் வாழ்க்கை சங்கடங்களையும் பேசும் இது போன்ற படங்களை பார்க்கும் போது தமிழில் இது போன்ற படங்கள் மிக குறைவு என்பது வருத்தமான உண்மை. இந்தியில் சில படங்கள் வந்திருக்கின்றன எனினும் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெற்றதில்லை. குழந்தைகளை வைத்து எடுக்கபடும் நம் திரைப்படங்கள் - கூடவே ஆடு, பாம்பு எனவும் கதை சொல்கின்றன. "பசங்க" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கமல் சொன்னது போல - போதை ஏற்றும் ஒரு படம் வேண்டும் என்றால் வருமானம் கணக்கில் கொண்டு தயங்காமல் தரும் சினிமா (தன்னையும் சேர்த்து) - வர்த்தகரீதியான வெற்றி இல்லாத குழந்தைகள் மற்றும் யதார்த்த சினிமாவை விட்டு விலகி நிற்கிறது. குறும்படங்கள் அளவிலாவது குழந்தைகளுக்கான கதைகள் படமாக்கபடலாம். அது நிச்சயம் கதாநாயகதன்மை கொண்ட "சூப்பர் மேன்" / "சக்திமான்" படங்களாக இல்லாமல் - இன்றைய சமூகம் மறந்து போன நல்வாழ்வு / நீதி கருத்துகளை (மாரல் சைன்ஸ்) மையமாக கொண்டு வரவேண்டும்.. நாளைய சமூகத்தில் வெறும் காசு பார்க்கும் இயந்திரங்களாக இருக்காமல் கொஞ்சமாவது மனித நேயம் வேண்டும் என்றால் - வெற்றி என்பது பிணங்களின் மீது கிடைப்பதல்ல என்பது புரியவைக்க படவேண்டும்...சக மனித வாழ்வு பற்றிய பார்வை சொல்லபட வேண்டும்... யாரையும் மதிக்கும் உணர்வும் வளர்க்கப்பட வேண்டும் - இதற்க்கு சினிமா சரியான ஒரு ஊடகம்.

Wednesday, March 25, 2009

வங்காள திரைப்படங்கள்...

உலக அழகியாக தேர்ந்தெடுக்கபட்ட ஐஸ்வர்யா ராய் வழக்கம் போலவே இந்திய திரையுலகின் குப்பை திரைப்படங்களில் நாயகியாக இருந்தார் - இருந்து கொண்டிருக்கிறார் - எனினும் வெகு சில திரைப்படங்கள் நடிப்பையும் பெயர் சொல்லும் விதமாக வெளிப்படுத்த உதவியிருக்கின்றன.. அவை பெரும்பாலும் வங்காள திரைப்படங்களாகவே இருக்கின்றன... இந்த இரண்டு திரைப்படங்கள் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை எனினும் - ஒரு சிறு குறிப்பாகவே சொல்கிறேன். 1. ரெயின்கோட் - ரிதுபர்ன கோஷ் இயக்கத்தில் அற்புதமான திரைப்படம். ஐஸ்வர்யாவும் அஜய் தேவ்கனும் நடித்திருப்பார்கள். 'ஒ கென்றியின்' சிறுகதையை கருவாக கொண்ட திரைக்கதை. பாடல்கள் எல்லாம் பிண்ணனியில் மட்டும்தான். அருமையான மெல்லிய இசை. பொய் என்னும் முகமூடி அணிந்த - அதற்க்கான காரணத்தை கவிதை போல கொண்ட முன்னால் காதல் ஜோடி... அவர்கள் மறுபடியும் சந்திக்கும் மழை நாள்... ஒருவருக்கு ஒருவர் சொல்லி கொள்ளும் பொய்கள்.. இறுதியில் வெளிப்படும் உண்மையும் - அது கொடுக்கும் உறுத்தலும்.. வாழ்வில் இது போன்ற நிமிடங்களை நாமும் தாண்டி வந்திருப்போமா..!! திரைப்படத்தை பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.. 2. சோக்கர் பாலி - ரவீந்திரநாத் தாகூரின் கதையை மையமாக கொண்ட வலி சொல்லும் கவிதை... இதன் இசை மிகவும் குறிப்பிட தக்கது.. மிஸ்ரா அவர்களின் உழைப்பு தெரியும் அதில். இதிலும் பாடல்கள் பிண்ணனியில் மட்டும்தான். விதவைகளின் வாழ்வு பற்றிய இந்த திரைப்படம் சுதந்திர போராட்டத்தின் பிண்ணனியில் சொல்லபட்டு இருக்கும். கதைகள் எல்லாம் நீங்கள் விக்கிபீடியாவில் கூட படித்து கொள்ளலாம் - எனினும் அனுபவித்து ரசிக்க வேண்டுமெனில் திரைப்படத்தை பாருங்கள்.. (நம்மூரில் ஐஸ்வர்யா ராயின் இன்ப இரவுகள் என்று டப் செய்து கேவலப்படுத்தினார்கள்.. டிவிடியில் பார்த்தல் நலம் ) - ரிதுபர்ன கோஷின் நிறைய திரைப்படங்கள் மிக அழகாகவும், கருத்தோடும் இருப்பதாக கருதுகிறேன்... பெரும்பாலும் முந்தைய தலைமுறை சார்ந்த கதைகள்.. லாஸ்ட் லியர் - அமிதாப்பின் அற்புத அவதாரமாக இருந்தது. வாய்ப்பு இருந்தால் இந்த 45 வயது மனிதரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படங்களை கவனித்து பாருங்கள்... திரைப்பட உக்தி, இயக்கம் அமைந்த முறை, இசை, காட்சி அமைப்பு, கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் கதை சொல்லும் பாணி - கதையின் நேர்மை என நிறைய இருக்கின்றன..

Tuesday, March 17, 2009

கபி கபி...

என் மொபைல் போனின் காலர் டியூன் ("கைபேசியின் அழைப்பாளர் கேட்கும் இசை") 1976ல் வந்த ஒரு இந்தி திரைப்பட பாடல். "ஏன் இந்தி" என தார் டின் கையில் எடுப்பார் எவரும் இருக்கமாட்டார்கள் என நம்புகிறேன். அந்த பாடல் முகேஷ் சந் மாத்தூர் என்ற அற்புதமான பாடகரின் பாடல் - "கபி கபி" திரைப்படத்தில் இருந்து. இன்றைய இந்தி பாடல்கள் போல அதிரடி இசை இல்லாத காலம் அது. முகேஷ், முகமது ரபி, கிஷோர்குமார் என அருமையான பாடகர்கள் இருந்த காலம் அது. இன்றும் அந்த பாடல்கள் முன்னிரவு நேர அமைதியில் கேட்க சுகமானவை. சோகமானாலும், சந்தோஷமானாலும் - இந்தியும் உருதும் கலந்த அந்த பாடல்கள் அர்த்தம் கொண்டவையாக இருந்தன. அதே நேரத்தில் தமிழிலும் அதே வகையான பாடல்கள் இருந்ததை ரேவதியின் அப்பா சொல்லி கொண்டிருந்தார். அனுவும் நானும் விடிய விடிய பேசி கொண்டிருந்த சென்ற வருட கோடையில் எல்லாம் இந்த பாடல்கள்தான் என்னுடன் விழித்திருக்கும். ஒளி தகடுகள் கிடைக்கிறது இன்றும் எனினும் பெரும்பாலான பாடல்கள் பல்வேறு தகடுகள் சிதறி இருப்பதால் இணையத்தில் இருந்து பகிர்ந்து கொள்வதே இலகுவாக இருக்கிறது. நல்ல இசை ரசிக்க மொழி அவசியம் இல்லை என்பது என் கருத்து. லாலாவிலோ, அல்லது தன்னன்னன்னாவிலோ எந்த பாடலையும் அதன் ரிதத்தையும் அனுபவித்து ரசிக்க முடியும். வாத்தியங்களை பற்றி கொஞ்சம் அறிந்திருந்தால் இசை ரசித்தல் கூடுதல் இனிமை. மொழி புரிந்து ரசித்தால் - ஆகா தேவ சுகம். என் பள்ளி நாட்களில் அப்பாவும் நானும் விவிதபாரதியில் கேட்டு கொண்டிருப்போம். டிவி கிடையாது. ரேடியோதான் உலகம். மறக்க முடியாத காலம் அது. வாய்ப்பும் விருப்பமும் இருந்தால் தமிழ் பாடல்கள் ரசிப்பது போலவே பழைய இந்தி பாடல்களையும் கேட்டு பாருங்கள். சமீபத்திய சந்தோஷம். என் அலுவலக நண்பர் ஒருவரும் அவருடைய மொபைல் போனின் காலர் டியூனாக பழைய முகேஷ் இந்தி பாடலை வைத்திருக்கிறார் - இது என் மொலைப்போன் காலர் டியூனால் வந்த மாற்றம். :-)

ஆரோக்கியமான நகைச்சுவை.

சென்ற வார இறுதியில் ஒரு நாள் பாண்டி பஜாரில் உள்ள "Music World" சென்றிருந்தோம். கொஞ்சம் பழைய தமிழ் படங்கள் "Moserbaer" ல் வாங்கலாம் என நினைத்திருந்தோம். கிடைத்தது சில படங்கள்தான். "Moserbaer" இணையதளத்தில் உள்ள அளவுக்கு கடைகளில் கிடைப்பதில்லை போலும். ரேவதியின் தந்தையும் பழைய படங்கள் விரும்பி பார்ப்பார் - எனவே அவருக்கு இரண்டு வாங்கவிருந்தோம். பார்க்க பார்க்க - கிட்டதட்ட எல்லா படங்களிலும் நாகேஷ் ஒரு தவிர்க்க முடியாத கதாபாத்திரமாகவே இருந்ததை கவனித்தோம். இது புதிய விஷயம் இல்லை எனினும் - இது பற்றி பேசுவதை எனக்கு ரேவதிக்கும் தவிர்க்க முடியவில்லை. பல படங்களை நினைவுருத்தி கொண்டோம். சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் என ஒரு கதாநாயகனுக்கு சமமான திரைப்படங்கள் இருந்தாலும் திருவிளையாடல், ஊட்டி வரை உறவு போன்ற திரைப்படங்களும் மறக்க முடியாது. காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அவர் மேஜையில் குரு ஜெர்ரி லூயிஸின் புகைபடத்தை வைத்திருப்பார். ஜெர்ரி லூயிஸ் திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு நாகேஷ் ஏன் அவரை குருவாக கொண்டார் என புரிந்து கொள்ளலாம்.

நம்மவர் மிக அருமையான ஒரு குணசித்திர வேடத்தை தந்தது. மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஒரு பிணம் - ஆனால் மிகவும் சிரிக்க வைத்த ஒரு பிணம். ஒரு காலத்தில் திலக நடிகர்கள் கூட தங்கள் படங்களுக்கு நாகேஷின் தேவை மிக அதிகம் என உணர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் கமல் மட்டுமே நாகோஷை சரியான முறையில் உபயோகபடுத்தி கொண்டார். சில ரஜினி படங்களும் உண்டு. சில திரைப்படங்களில் கொடூரமான ஆனால் கொஞ்சம் சிரிக்க வைக்கும் வில்லன் வேடங்களும் உண்டு. வேகமான - மற்றும் எதிர்வினை சார்ந்த நடிப்பும் வசன துள்ளலும் அவர் அடையாளங்கள். அது சார்லி சாப்ளின் மற்றும் ஜெர்ரி லூயிஸின் நடிப்பினை ஆழ்ந்து வாங்கி கொண்ட கவனங்கள். அன்பே வா, பாமா விஜயம், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் என வித்தியாசங்களை காண்பித்து இருந்தாலும் எம்.ஜி.ஆர் சிவாஜி தாண்டி ஒரு இயக்குனரின் பார்வைக்கு உயிர் கொடுத்தவர் நாகேஷ். அது அவருக்கும் கே.பாலச்சந்தருக்கும் உள்ள இணக்கம். நடிகர்கள் ஜெமினிக்கும் தங்கவேலுவுக்கு ஒரு புரிதல் சார்ந்த நட்பு இருக்கும் - உதாரணம்: கல்யாண பரிசு. அத்தகைய புரிதல் எம்.ஜி.ஆருடனும், சிவாஜியுடனும் நாகேஷுக்கு இருந்தது. பல படங்கள் உதாரணமாக சொல்லலாம். அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வைரமுத்து - தமிழகத்தின் சிரிப்பு இறந்து விட்டது என சொன்னார். மிகையாகாது. நல்ல நகைச்சுவை, வேகமான எதிர்வினை கொண்ட உடல் அசைவுகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத தேர்ந்த குரல் வளம் கொண்ட வசன உச்சரிப்பு, மேலை நாட்டு நாட்டிய வகை (சந்திரபாபு இதனை அற்புதமாக செய்வார்), அருமையான குணசித்திர நடிப்பு என பல்வகை அதிசயங்களை காட்டியவர் நாகேஷ். நிறைய பேசி கொண்டிருந்தோம். கொஞ்சம் படங்கள் வாங்கினோம். இன்னும் என்ன என்ன படங்கள் வாங்க வேண்டும் என பட்டியல் இட்டு கொண்டிருக்கிறோம். பார்க்க வேண்டும். தமிழில் நல்ல நகைச்சுவை இப்போதெல்லாம் காண கிடைக்காததாகி விட்டிடுக்கிறது.

Monday, March 16, 2009

எம்.என். நம்பியார்

ஒரு வில்லன் நடிகராக மட்டுமே எம்.என். நம்பியார் என் இளம் வயதில் அறிமுகமானார். திரையில் உள்ள நடிகரை, குவித்த மணலில் அமர்ந்து டெண்ட் கொட்டாயில் படம் பார்க்கும் அனேகம் பேரும் திட்டுவது எனக்கு குதூகலமாக இருக்கும். அதிலும் என் பாட்டி படம் பாத்துவிட்டு வரும் வழியெல்லாம் திட்டுவார். பிற்பாடு கெட்டவர்கள் என்ற வர்க்கத்தின் அடையாளமே நம்பியாரின் முகமாய் ஆகி போனது. வெகு நாட்கள் பிறகு அவரின் வேறுபட்ட நடிப்பை பாக்கியராஜிம் மற்றவர்களும் எடுத்துகாட்டிய பிறகு மதிப்பு மென்மேலும் உயர்ந்து போனது. வித்தியாசமான குரல் அமைப்பு, வசன உச்சரிப்பு, கண் ஜாடை, குணசித்திர வேடங்களில் மற்றவர்க்கு இடம் கொடுத்து நடிக்கும் பாங்கு - என எந்த திலகத்துக்கும் கொஞ்சமும் குறைந்தவராக அவர் இல்லை. என்னை பொருத்தவரை - எம். ஆர். ராதாவும் நம்பியாரும் இல்லாமல் இருந்தால் திலகங்களின் நடிப்பு மட்டுமே நடிப்பு என பேசபட்டிருக்கும். எந்த வயதிலும் நல்ல உடல் பயிற்சி, ஐயப்ப பக்தி என மேன் மேலும் ஆச்சரியங்களை கொடுத்தவர். அவர் மறைவுக்கு பின்னாலாவது அவரை பற்றி நிறைய பேர் பேசுவது திருப்தி அளிக்கிறது. நாடகதன்மையும் - நாடக தன்மை இல்லாத நடிப்பும் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் கொடுத்தது - திலகங்கள் கூட செய்யாதது.

Friday, March 21, 2008

காலம் கொள்ளும் வாழ்க்கை

அடிப்படையில் வளையல் கடை நடத்தி வந்த ஒரு இளைஞர். 1981-ல் ஒரு திரைப்படம் அவரை நடிகராக்கியது. 82 திரைப்படங்கள் நடித்துள்ளார். அரசியல், சினிமா என வாழ்க்கை வேறு மாதிரி வட்டமடைய, வாழ்க்கை முறை மாற்றம் அடைந்தது. இப்போது அவர் உயிருடன் இல்லை. கொஞ்சம் யோசிப்போம். ஒரு வேலை அவர் வளையல் கடை மட்டுமே நடத்தியிருந்து - திரைபடமும் அரசியலும் அவர் வாழ்வில் இல்லாமல் இருந்திருந்தால் - அவர் எப்படி இருந்திருப்பார். வேறு ஒரு வாழ்க்கை பாதையில் இருந்திருக்கலாம் - இன்னும் கொஞ்சம் குடும்பத்துடன் நேரம் செலவளித்து இருக்கலாம் - இன்னும் உறவினர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கலாம் - இன்னும் ஆரோக்கியமாக இருந்திருக்கலாம் - ஏன் இன்னும் உயிரோடு கூட இருந்திருக்கலாம். நான் வாழ்க்கை முன்னேற்றத்தை குறை கூறவில்லை. வளையல் கடையும் ஒரு வாழ்க்கைதானே என்கிறேன். பொருளாதார முன்னேற்றம் வாழ்க்கையின் அடிப்படைகளை பணயம் வைத்துதான் நடக்கும் எனில் - ஒரு நிமிடம் யோசிக்கலாமே. பெசன்ட் நகரில் வாழ்வதும் சைதாப்பேட்டை குடிசைபகுதியில் வாழ்வது அடிப்படையில் வாழ்க்கைதான். நடைமுறை வாழ்க்கையில் இது பலிக்காது என விமர்ச்சனம் வருகிறது. இருக்கலாம் - இல்லாமலும் இருக்கலாம்.

Wednesday, March 19, 2008

நடிகனின் மரணம்.

இயல்பான நடிப்பு என்பதனை ரகுவரனை தவிர வேறு யாரிடமும் கண்கூடாக கண்டதில்லை. தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர். பெரும்பாலும் எல்லா திரைப்படங்களிலும் நல்ல நடிப்பை வழங்கியிருந்தாலும் - ஒரு சில திரைப்படங்கள் அவரின் வெகு அற்புத நடிப்பு திறமையை வெளிக்காட்டின. உதாரணம்: அஞ்சலி. பெரும்பாலும் வில்லன் வேடங்கள் என்றாலும் குணசித்திர வேடங்களில் மிக அற்புதமான நடிப்பை அவர் வழங்கியது உண்மை. யாருடனும் ஒப்பிட முடியாத அற்புத கலைஉலக பங்கீடு கொண்டவர். பலருக்கும் நல்ல நண்பர். தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். மொழி வேறுபாடு இன்றி பாராட்டபட்டு இருக்கிறார்.

காதல், மனைவி, குழந்தை, ஆன்மீகம், புத்தகங்கள் என வாழ்க்கை சுகமானதாக இருந்திருக்கலாம். குடிப்பழக்கம் உடல்நிலையை கெடுக்க, மணவாழ்க்கையின் கசப்பு மனநிலையை கெடுக்க.. ஒரு நல்ல கலைஞன் ..இன்று மரணமடைந்து விட்டான்.

அவர் நடித்த திரைப்பட வரிசை மற்றும் சிறு தகவல்கள் இங்கே: http://en.wikipedia.org/wiki/Raghuvaran

Monday, March 10, 2008

இசை பாடல்கள்

போட்டி போட்டு கொண்டு இசை சேனல்கள் பெருகி வருகின்றன. சினிமா பாடல்கள் தினவாழ்வில் வலுக்கட்டாயமாக நுழைகின்றன. கிட்டதட்ட 6 தமிழ் சினிமா இசை சேனல்கள் எங்களுக்கு கிடைக்கிறது. தூர்தர்ஷன் மட்டுமே இன்னும் நாட்டுபுற பாடல்களையும் தேசிய பாடல்களையும் கொஞ்சம் கர்நாடக சங்கீதத்தையும் வழங்கி கொண்டு இருக்க மற்ற சேனல்கள் சினிமாவில் மட்டுமே குறியாக இருக்கின்றன. ஒரு நல்ல விஷயம் - தேடி தேடி பழைய கருப்பு வெள்ளை பாடல்களையும், இளையராஜாவின் அபூர்வமான பாடல்களையும் ஒளிபரப்புகிறார்கள். சில படங்களை கேள்விபட்டிருக்கவே மாட்டோம் - பாடல்கள் தித்திக்கும். நல்ல இசை, மெல்லினமான பாடல் வரிகள் என மனதை கரைக்கின்றன. முன்னிரவு நேரங்களின் பாடல்கள் பெரும்பாலும் அருமை - ஆனால் இவற்றை யார் பார்க்கிறார்கள் - எல்லாரும் ரசிப்பது குத்து பாடல்கள்தான் - தவிர ரியாலிடி ஷோ டான்ஸ் நிகழ்ச்சிகள் - சில சேனல்களில் இரவு மசாலாவும் உண்டு. சரி - கார்பரேட் உலகின் அடிமைகளை உலுக்கி உறவுக்கு தயார்படுத்த அதுவும் தேவைதானே - இப்படி எல்லாம் செய்தால்தான் சந்ததி விருத்தியாகி.. இன்னும் பேப்பர்களை திண்ணலாம்.

Monday, November 05, 2007

மனசு இழுத்து செல்லும் பாதைகள்

ஜெயமோகன் தனது ஒரு பேட்டியில் 'ஒரு திரைப்படத்தின் ஏதேனும் ஒரு காட்சியில் மனசு எங்கியோ போய்விடுகிறது' என்கிறார். படித்து கொண்டிருக்கும் போதே, இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டதை யோசித்து பார்த்தேன். பல திரைப்படங்கள் மட்டுமல்ல, நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வாழ்வியல் அனுபவங்கள், விவாதங்கள் ஏன் மவுனங்களில் கூட மனது ஏதோ ஒரு புள்ளியில் லயித்து போகிறது. நமக்கும் அந்த புள்ளிக்குமான உறவு சட்டென வெளிச்சமாகிவிடுகிறது. அதன் மேல் ஒரு மையல் கொள்கிறது - ஆழ்ந்த காதல் அனுபவம் என்று கூட சொல்லலாம். என்னை பொருத்தவரை மிக அற்புதமான ஒரு உணர்வு அது. அந்த கனவு பாதைகளை தொடர்ந்து புள்ளி தொடும் தூரத்தில் ஒரு எண்ணம் கலத்தல் உண்டாகிறது. சொல்ல போனால் நிறைய சொல்லலாம் - எல்லாம் சொல்லிவிட்டால் மனசு என்ன தீர்ந்தா போய்விடுகிறது - நிரம்பி தழும்பும் தாமரை குளம் போல அது.

Thursday, March 22, 2007

திரைப்படமும் வாழ்வும்...

பாபெல் என்ற திரைப்படமும், புரூப் என்ற திரைப்படமும் - பாபெல் திரைக்கதை மூலமாக கொண்டது. உலகில் வேறு வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்கள் - ஒரு அடிப்படை சம்பவத்தால் இணைக்கபடும் விதம். இம்மாதிரி திரைப்படங்களை கதைகளாக படித்த அனுபவம் இருக்கிறது. ராஜேஸ்குமார் கூட மாத நாவல்களில் கையாளும் விஷயம் இது. சொல்லும் படியான விஷயங்கள் - உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் குழப்பாத
திரைக்கதை. படம் முழுவதும் பார்த்தால்தான் புரியும். ஜப்பானிய பெண்ணின் மனோதத்துவம் தொடர்ப்பான நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நிறைய விமர்ச்சனங்களை கொண்டுவரலாம். புரூப் - சிறிய ஆனால் சொல்ல தகுந்த கதை. ஒரு வகை மனோ வியாதியால் பாதிக்கபடும் தந்தையும், அவர் மகளுக்கும் கணிதம் சார்ந்த விஷயங்களில் இருக்கும் அதீத ஆர்வம் - அவர்கள் / அவள் எழுதும் கணித முறை - அது சார்ந்த - அவளுக்கும் அவள் சகோதரி மற்றும் காதலனுக்குள்ளான மனோரீதியான இடைவெளிகள் என கதை அமைகிறது. திரைப்படத்தின் வசனங்கள் ஒரு நல்ல விஷயம். திரைக்கதை அமைப்பு திரைப்படத்தின் சில காட்சிகளுக்கு பின்னரே புரியும்படி இருக்கிறது. இரண்டு படங்கள் இந்த வாரம் - டிவிடி புண்ணியத்தில்.

எந்த ஒரு சம்பவமும் - அது சார்ந்த கருத்துகளும் ஒவ்வொருவரின் சுய அனுபவங்களின் அடிப்படையிலேயே எடுத்துகொள்ளபடுகிறது என்பதற்க்கு சமீபத்திய ஒரு திரைப்படத்தின் இறுதிகாட்சியாக வரும் கற்பழிப்பு காட்சி உதாரணம். அந்த சம்பவம் - அந்த மண்ணில் நடந்திருக்கிறது - இன்னும் நடப்பதற்க்கான சாத்தியம் இருக்கிறது. தென் தமிழ் கிராமங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த சம்பவத்திற்க்கான சாத்தியமும்
இருக்கிறது - சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம். சம்பவம் திரைப்படத்தில் காண்பிக்கபட்ட முறை பற்றிய கருத்துகளும் - அதற்க்கான இயக்குனரின் கருத்துகளும் பத்திரிக்கை செய்திகளாகிவிட்டாலும், திரைப்படம் மக்களிடையே சென்று சேர்ந்துவிட்டது. இதனை பற்றி பேசுபவர்களுக்கு நிறைய தீனியும் கிடைத்துவிட்டது.

Sunday, October 08, 2006

சினிமா - பார்வை கோளாறுகள்.

நல்ல இசை, திறமையான சண்டை காட்சிகள், அற்புதமான ஒளிப்பதிவு, சொல்லி கொடுத்தால் திறமை காட்டும் நடிகர்களும் நடிகைகளும்... இருந்தும் இந்திய சினிமாவில் வருடத்துக்கு மிக சில நல்ல திரைப்படங்களே வெளிவருகின்றன. இந்தியாவின் அனைத்து பகுதி திரைப்படங்களையும் குறிப்பிட்டாலும் வெறும் 20 சதவீதம் மட்டுமே அகில உலக சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் தகுதியை பெறுகின்றன. அதுவும்
பாடல்களையும் சண்டை காட்சிகளையும் நீக்கிய பிறகு (பெறும்பாலும் இவை நிஜம் சார்ந்து இருக்காததால்). திரைப்பட விழா படங்களிலும் குறும்படங்களிலும் பெறும்பாலும் தெளிவான திரைக்கதையும் பாத்திர அமைப்புமே முன்னுறிமை பெறுகின்றன என்றாலும் இசை, ஒளிப்பதிவு, நடிப்பு ஆகியவனவும் கருத்தில் கொள்ள படுகின்றன. இன்றைய நிறைய தமிழ் படங்களை பார்க்கும் போது 3 நாள் பாம்குரோவில் ரூம் போட்டு, 4 புல்
பாட்டில் ரம்மும், மூன்று நேரமும் கோழி பிரியாணியும், பர்மா பஜார் டிவிடிகளும் இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. சமீபத்தில் வந்த ஒரு இயக்குனர் நடிகராக நடித்த வழக்கமான ரவுடியிஸ திரைப்படம் ராம் கோபால் வர்மாவின் திரைப்படத்தின் அப்பட்டமான காட்சி தழுவல். கதை கொஞ்சம் மாற்றபட்டு காட்சிகள் (கோணம், ஒளி உட்பட) அனைத்தும் அப்பட்டமான தழுவல். தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யபடும் தமிழ் படங்கள்
இன்னொரு வகை கொடுமை.. லாஜிக் என்ற வார்த்தையை குழி தோண்டு நிறைய உப்பு போட்டு உயிரோடு புதைத்து விடுகிறார்கள்.. திரைக்கதையும் பாத்திர அமைப்பும் நிறைய கதைகளில் இருப்பதில்லை. நல்ல திரைப்படங்கள் நாவல்களில் இருந்து உருவாக்க படுகின்றன. அவை மனித வாழ்க்கையை, வாழ்வின் பிரதிபலிப்புகளை, மனித உறவுகளின் வலிமையை சொல்கின்றன. உலகின் எந்த போற்றபடும் திரைப்படத்தையும் எடுத்து
பாருங்கள். அவற்றில் இவை இருக்கும். சமீபத்தில் பார்த்த ஒரு நல்ல திரைப்படம் சித்தார்த்தா... அமைதி தேடும் துறவியையும் அவன் வாழ்க்கையும் சொல்லும் சுலபமாக புரிய கூட ஆங்கில படம். இன்னொரு திரைப்படம் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு மாற்றமடையும் மனித வாழ்க்கை பற்றி பேசும் ஒரு திரைப்படம்... ஒருவன் தொழில் அதிபர், ஒரு பெண் - கலெக்டர் மனைவி - இன்னொருவன் நக்ஸலைட்...இவர்களின் உறவு சிக்கல்கள்.. அரசியலும் நிஜமும் கலந்த பின்னனியுல். மற்றுமோர் திரைப்படம் - அகதியாக வந்து மக்கள் தலைவனாக உயரும் ஒரு கருப்பின சமூக கதை... இந்த திரைப்படங்கள் எந்த வித கதாநாயகதனமோ கிடையாது... பாடல்கள் பிண்ணனியில் மட்டும்.. தெளிவான அதிக புத்திசாலிதனம் காட்டாத வசனங்கள். நல்ல ஒளி ஒலி அமைப்பு... ஆரவாரமில்லாத நடிப்பு.. ஒரு திபேத்திய திரைப்படம் சென்னையில் திரையிடபட்ட போது அதில் வரும் 15 நிமிட உடலுறவு காட்சி மட்டுமே பெரும்பாலும் பேசப்பட்டது உச்சகட்ட முட்டாள்தனம். பெரும்பாலும் இந்த திரைப்படங்களை திரையிடும் அரங்குகளில் கூட்டம் இருப்பதில்லை. யாராவது சில காதல் ஜோடி (காந்தி மண்டபத்திலோ வள்ளுவர் கோட்டத்திலோ இடம் கிடைக்காதவர்கள்)அல்லது கொஞ்சம் தாடி வைத்த திரைப்பட ஆர்வலர்கள், அபூர்வமாக சில வெளிநாட்டினர்...மற்றபடி யாரும் ஓடி விளையாடும் அளவுக்கு இடம் கிடக்கிறது. செலவுக்கு பயந்து என் போன்ற ஆசாமிகள் டிவிடியில் திரைப்படங்களை பார்ப்பதும் காரணமாக இருக்கலாம்... நல்ல சினிமா நல்ல நாவலில் இருந்து கிடைக்கிறது. நல்ல நாவல் விற்பது இல்லை.

Sunday, July 30, 2006

போபால் எக்ஸ்பிரஸ்..

வாய்ப்பு கிடைத்தால் இந்த திரைபடத்தை பாருங்கள். மிக அற்புதமாக படமாக்கபட்டுள்ளது. போபால் விஷவாயு கசிவை மையபடுத்தி திரைபடமாக்கபட்டுள்ள கதை – நஸ்ருதீன்ஷ போன்ற அற்புதமான நடிகர்களால் மேலும் திரைப்படம் பண்பட்டு இருக்கிறது. பிதா என்று ஒரு திரைப்படம் – இன்று பார்க்க திட்டமிட்டு உள்ளேன். நிறைய கேள்விபட்டு உள்ளே இந்த திரைப்படம் பற்றி. மேலும் சில ஆங்கில திரைப்படங்கள் இருக்கின்றன (உதா: ). அடுத்த முறை ஒரு சிறிய திரைபட வரிசை கொடுக்கிறேன் – நமக்குள் நல்ல திரைப்பட ஆர்வமுள்ளவர்களுக்காக.

Sunday, May 28, 2006

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் பிடித்தது..

ரெயின் கோட்
சோக்கர் பாலி
பனாரஸ்
வாட்டர்

நான்கும் இந்தி திரைப்படங்கள்.. DVD புண்ணியத்தில் சென்ற வாரம்
பார்த்தேன்.. அதில் முக்கியமாக ரெயின் கோட் என்ற திரைப்படம் ஒரு இரவு
தூக்கத்தை முழுக்க கெடுத்து விட்டது... உங்கள் காதலியை அவள்
திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் கழித்து பார்த்தால் நீங்கள்
எப்படி நடந்து கொள்வீர்கள்.. அவள் எப்படி நடந்து கொள்வாள்.நீங்கள்
இருவரும் ஒருவருக்கு ஒருவர் எப்படி உங்கள் சூழ்நிலைகளை மறைத்து
நடிப்பீர்கள்.. பொய் சொல்வீர்கள்.. ஒருவருக்கு ஒருவர் எப்படி உதவுவீர்கள்.. உங்கள்
சூழ்நிலைகளை தாண்டு அடுத்தவரை எப்படி கவனிப்பீர்கள்..
அடுத்தவரது உறவுகளை எப்படி விசாரிப்பீர்கள்.. உங்கள் பொறாமைகள்
வெளிப்படுமா...? உங்கள் இயலாமைகள் வெளிப்படுமா..? பழிவாங்கும்
மெல்லிய நடவடிக்கைகள் இருக்குமா..? போலி பந்தாக்கள் இருக்குமா...? இந்த
திரைப்படம் சொல்லும் நிகழ்ச்சிகள் நிச்சயம் என் வாழ்விலும் ஒருநாள் நடக்கும்..
மனது கொஞ்சம் கனத்து விட்டது இந்த திரைப்படம் பார்த்த பிறகு.

Sunday, March 26, 2006

" ஜன ஆரண்ய " 1977 - 2006

சத்தியஜித் ராயின் "ஜன ஆரண்ய" திரைப்படம் பற்றி சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களில் படித்து இருக்கிறேன். 1977ல் அவர் இந்த திரைப்படம் பற்றி எழுதியிருக்கிறார். வசனங்களை சத்தியஜித் ராயே எழுதியியிருக்கும் இந்த திரைப்படம் ஒரு தூய்மையான இளைஞனை மெல்ல மெல்ல மாசுபடுத்தி அவனிடம் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் பிரக்ஜையை எல்லாம் கழற்றிவிடும் நகரத்தின் அசுர குணங்களை சொல்கிறது. 1977ல் இருந்து இன்று 2006 வரை நகரம் தன் முகத்தை மாற்றி கொள்ளவே இல்லை...அது இன்னும் நகரம் தேடிவரும் அப்பாவி தூய்மையான இளைஞர்களை குறிவைத்து காத்துகொண்டு இருக்கிறது. DVDல் இந்த திரைப்படம் கிடைத்துள்ளது. அடுத்த வாரத்துக்குள் பார்த்துவிடுவேன். அப்புறம் நாம் விவாதிப்போம்.

Tuesday, May 24, 2005

நல்ல சினிமா...

நல்ல சினிமா பற்றிய குழப்பங்கள் இன்னும் நிறைய பேருக்கு இருக்கின்றன. சினிமா பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததே இதற்க்கான காரணம் என்பது என் கருத்து. பலருக்கு சினிமா இன்னும் ஒரு கவர்ச்சியான பொழுதுபோக்கு. சிலருக்கு செய்திகளையும் கருத்துகளையும் சொல்லும் ஊடகம். சிலருக்கு கலை. சிலருக்கு கனவு... சிலருக்கு
தொழில். ஒரு சாதாரண ரசிகனின் நிலையிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பொதுவில் இன்று சினிமாவின் தொழிற்நுட்பம் சார்ந்த அறிவு மீடியாக்களின் புண்ணியத்தில் கொஞ்சம் பேருக்கு இருக்கிறது. லைட்டிங், எடிட்டிங், கேமரா, காஸ்டீயும், கவிதை சார்ந்த பாடல்கள், சண்டைகள் எடுக்கபடும் முறை என பேசவாவது தெரிகிறது. எனினும் நல்ல சினிமா எது..? இந்த கேள்வியின் பதில்...!!! பல நேரங்களில் குழப்பம்தான்.

ஒரு முறை நண்பர்களுடனான விவாதத்தில் நல்ல சினிமா பழைய படங்கள்தான் என்ற கருத்து வந்தது..சிவாஜியும், எம்ஜியாரும், ஜெமினிகணேசனும் மற்றும் கருப்பு வெள்ளை கால திரைபடங்கள் மட்டுமே நல்ல சினிமா என்றார்கள்.. நான் மகேந்திரனின் உதிரிப்பூக்களையும், மெட்டி, நண்டு போன்ற படங்களை குறிப்பிட்டேன். துரதஷ்டவசமாக யாரும்
அந்த திரைப்படங்களை அறிந்திருக்கவில்லை. பாலுமகேந்திராவின் ஓடாத படங்களையும் யாரும் அறிந்திருக்கவில்லை. வியாபாரரீதியாக ஓடும் திரைப்படங்கள் நல்ல திரைப்படங்களாக ஒத்து கொள்ளபடுவதில்லை. ஓடாத படங்களே நல்ல படங்களாம்... அந்திமந்தாரை, ஹேராம், ஆறிலிருந்து அறுபதுவரை, அன்பே சிவம்... என அவர்கள் வரிசைப்படுத்தினார்கள்... இக்காலங்களில் அழகியும், ஆட்டோகிராப்பும் நல்ல திரைப்படங்களாக
ஒத்துகொள்ளபடுபவை ஆனால் எப்படியோ வசூலும் கொஞ்சம் கொடுத்தவை. நான் நிழல்கள், 16 வயதினிலே, முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே, வானமே எல்லை, இது நம்ம ஆளு, சிந்துபைரவி, மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், கேளடி கண்மணி போன்றவையும் நல்ல படங்கள் என்றேன். எல்லாவற்றிலும் கருத்தும் நல்ல திரைப்படமாக்கலும் உள்ளது. எனினும் வசூலும் கொடுத்தது. குமுதம் அரசு பதில்களில் ஒருமுறை "தேசம்"
திரைப்படம் பற்றிய ஒரு கேள்விக்கு.. " நல்ல கருத்துகளை சொல்வதற்று ஒரு திரைப்படம் தேவையில்லை என்று பதிலளிக்கபட்டிருந்தது.. " .. அப்புறம்.. மலையாளமும் பெங்காலியும் நல்ல படங்களை என்று பேச்சு திரும்பியது... ஏனோ தமிழ் படங்கள் பற்றி .... படம் பார்க்கும் முறை பற்றி தெளிவான எண்ணங்கள் எல்லை. பதேர்பாஞ்சாலி, செம்மீன் படங்களை யாரும் பார்க்காமலேயே கேள்வி ஞானத்திலேயே அவை நல்ல படங்கள் என
விளம்பரபடுத்துகிறார்கள். தமிழின் நல்ல திரைப்படங்கள் மிக சிலருக்கே தெரிந்துள்ளன. நண்பர்களுடன் ஒரு நாள் ஒரு விசிடி கடைக்கு போய் "Mr. & Mrs. Iyar" என்ற திரைப்படத்தின் விசிடி பற்றி விசாரிக்கையில்... "மலையாள செக்ஸ் சினிமா சிடி எல்லாம் கிடையாது சார்" என்றார் கடைக்காரர்.. தலையில் அடித்துகொண்டு திரும்பினோம்.
ராகுல் போஸையும், கொங்கனா சென்னையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த நான் தயாரில்லை. நான் விரும்பிய திரைப்படங்கள் பற்றி பேச நிறைய உள்ளது. பின்னர் ஒருநாள் பேசலாம்.

சரி உன் கருத்து என்ன என்று கேட்பவர்களுக்கு.. யதார்த்தமும்...வாழ்வின் அற்புதங்களையும் அனுபவங்களையும் சொல்லும் எந்த மொழி சினிமாவும் நல்ல சினிமாதான்.

அப்புறம் சமீபத்தில் படித்ததில் பிடித்தது.


ஒரு பத்திரிக்கை பேட்டி ஒன்றில் இயக்குனர் மகேந்திரன் " மனதில் எதிர்பார்ப்பும், அதற்கேற்ற வேகமும் இருக்கிறதா..? நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை அதற்கேற்ற போக்கில் செய்து கொண்டிருங்கள். அதன் விளைவு எப்படியாவது வந்துதான் தீரும். கால ஓட்டத்தில் சற்று பிந்தலாம். அவ்வளவுதான்... "

அப்புறம் சல்மாவின் கவிதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கவிதை

விபத்தில் இருந்து மீண்ட நாளின் உடை
நாம் சந்தித்து கனிந்திருந்த
வேளையில் பகிர்ந்திருந்த உணவு
நெருங்கியவரின் மரண செய்தி
வந்து சேர்கையில்
என் கண்களை கவர்ந்த
சிவப்பு வண்ண கார்
வியப்பாகதானிருக்கிறது
பொருட்களின் மீது
காலம் பதிந்து நிலைபெறுமென்பது...