அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, April 02, 2009

புதிய நிதியாண்டு வாழ்த்துக்கள்...

நேற்று வந்த ஒரு குறும்செய்தி - "இனிய புது நிதியாண்டு வாழ்த்துகள்" என்றது. அட இதுக்கும் கூட குறும்செய்தியா என்று முதலில் எண்ணினாலும், பின்னர் அதன் முக்கியதுவத்தை அனுப்பியவர் விவரித்தார். (அவர் ஒரு நிதி அமைப்பு சார்ந்த உறுப்பினர் என்பது கொசுறு செய்தி)... எந்த முறையும் இல்லாதது போல இந்த முறை கடுமையான பொருளாதார குழப்பத்தில் நிதியாண்டு பிறந்துள்ளது. கணிப்பொறி சார்ந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல், கணிப்பொறி துறையை உபயோகபடுத்தி கொள்ளும் துறைகளும் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கின்றன. வீட்டு கடன் முதல்கொண்டு எல்லா வகையிலும் கடன் சுமை ஏறியுள்ளது... சென்செக்ஸ் ஏறியுள்ளது என்றாலும் - நெருக்கடி நிலையை பார்த்து பார்த்து - எப்போது பிரச்சனை வரும் என்ற பயமும் உள்ளது. சத்யம் நிறுவன நெருக்கடிக்கு பிறகு எந்த நிறுவனம் எப்போது விற்க்கபடுமோ, யாரால் வாங்கப்படுமோ என்ற பயமும் இருக்கிறது. புதிய நிறுவனம் வாங்கியபிறகு - அதன் சட்டதிட்டங்கள் எப்படி இருக்குமோ என்ற பயமும் கூட. அடுத்த மாதம் சம்பளம் வருமா..!! இந்த மாதமே ஆள்குறைப்பு தீவிரப்படுமா.. என்ற பயங்கள் வேறு.. நிம்மதியாக சினிமா, உணவு விடுதி போகவும் விடாமல் - கையில் இருக்கும் காசை பத்திரப்படுத்த பிரயாசைகள்..!! போன மாதம்தான் - வரி என்ற பெயரில் சம்பளமே 4 இலக்கத்தில் வந்திருக்க, கோடை தொடங்கும் காலம் - எல்லா வகையிலும் செலவு வைக்குமே..!! இப்படி பல கவலைகள் நிதி சார்ந்து இருப்பதால் - வாழ்த்துகள் + பிராத்தனைகள் மிகவும் அவசியமாக இருக்கிறது என்கிறார் அவர். அதுவும் சரிதான்...!!

Tuesday, March 31, 2009

உண்மை விளம்பி...

வதந்திகள் உலகம் முழுவதும் வேறுபாடில்லாமல் பரவும் சுவரஸ்யமான கதைகள். கணிப்பொறி, தொழில், வரலாறு, அறிவியல், மொழி, நீதித்துறை, உணவு, குற்றம், பயங்கரங்கள், காதல், ராணுவம், திரைப்படங்கள், விளையாட்டு - இன்னும் மதம் கூட இந்த வதந்திகளுக்கு தப்பவில்லை. இன்றைய இணைய உலகில் முன்பை விட வேகமாக ஒரு விளையாட்டு போல வதந்திகள் பரவுகின்றன. யாருக்கும் நின்று உண்மை என்னவென்று ஆராய நேரமில்லை - அது உண்மை செய்தியாக இருந்தாலும் தங்களை பாதிக்காதவரையில் "மெய் பொருள் காண்பது அறிவு" என்பது பற்றியெல்லாம் கவலையில்லாமல் தொழில் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு சிறிய இணையதளம் இத்தகைய வதந்திகளையும் அதன் உண்மை செய்திகளையும் திரட்டி வெளியிட்டு கொண்டிருக்கிறது. ஆங்கில மொழியிலான இந்த தளம் படிக்க சுவரஸ்யமானது மட்டுமின்றி - ஏமாற்று கதைகளுக்கு உண்மையான விடை சொல்லவும் செய்கிறது. ஏப்ரல் 1 - முட்டாள்களின் தினமான இன்று இதனை பதிவித்தல் பொருத்தமானதாக நினைக்கிறேன்.

இணைய முகவரி: http://www.snopes.com/

Monday, March 16, 2009

காசேதான் கடவுளடா...

மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 35 லட்சம் வரைதான் செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது போதாது என கிட்டதட்ட எல்லா வேட்பாளர்களும் புகார் செய்துள்ளார்களாம். செலவுகளை கண்காணிக்க தனி பார்வையாளர்களும், வருமான வரித்துறையினரும் நியமிக்கபட உள்ளார்கள். கடந்த 20004 தேர்தலை விட இம்முறை 50% விலைவாசி உயர்ந்துவிட்டதால் இந்த கட்டுபாடு தளர்த்தபட வேண்டும் என பலரும் கேட்டுள்ளனர். போஸ்டர், வாகனம், கொடி, பிளக்ஸ் போர்ட், தேர்தல் அலுவலக செலவு என கைமீறுமாம் செலவு. உண்மையாக மக்களை சந்திக்கவும், அவர்களுடன் மேம்பாடு குறித்து விவாதிக்கவும், தொகுதிக்கு நிஜமாக நல்லது செய்திருப்பினும் - நல்ல கருத்து சார்ந்த ஒற்றுமை உணர்வு மக்களோடு இருப்பினும் - இந்த பணம் ரொம்பவே அதிகம். பெரும்பாலான இந்த செலவுகள் ஆடம்பர விளம்பரங்களே. கொஞ்சம் ஓட்டுக்கு பணமும் லஞ்ச பொருள்களுமாக விளையாடும். இந்த தேர்தலை வைத்து கட்சிகார அடிமைகள் கொஞ்சம் சம்பாதிப்பார்கள். சாராயமும் கைகலப்பும் இருக்கும். எங்கு கேட்டாலும் காசு இல்லை என்றும் - பொருளாதார தேக்கம் என்றும் சொல்லபடும் தேசத்தில் - இத்தனை பணம் எங்கிருந்து அய்யா வருகிறது. இந்த லட்சணத்தில் காமராஜர் ஆட்சியாம். இதற்கு எல்லா அரிதார முதலைகளும் 2010, 2011 என்று குறிவைத்து காய்நகர்த்துகிறார்கள். மொத்தத்தில் உருப்படியாக சம்பாரிப்பவன் ஏமாளி - மற்றவன் எல்லாம் பிழைக்க தெரிந்தவன்...

மனசு...

இரண்டு நாள் முன்னர் ஜி.என். செட்டி சாலையில் ஒரு இரவு நடை போனபோது வித்தியாசமான ஒரு பேனர். "மனசு" என்று ஒரு அரசு திட்டம். இந்த திட்டம் பொது மக்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் அரவாணிகளை பற்றி, அவர்களின் திறமைகளை பற்றி சொல்லி அவர்களுக்கு உதவ ஏற்படுத்தபட்டுள்ளது - இதன் மூலம் அவர்களை பற்றிய தவறான நம்பிக்கைகள் களையப்படும். திறமைகள் கொண்ட அரவாணிகளை வேலைக்கு அமர்த்தி கொள்ள ஆர்வம் இருந்தால் இந்த அமைப்பினை தொடர்ப்பு கொள்ளலாம். ஒரு சேவை மையமும் உண்டு. இலவச மருத்துவ சேவை, நேரடி ஆலோசனைகள், பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்ட ஆலோசனை, வேலை வாய்ப்புக்கான மென் - திறன் பயிற்சி ஆகியவையும் வழங்கபடுகின்றன. இதனை மனிதாபமிக்க ஒரு நல்ல முயற்சியாக கருதலாம். இந்த முயற்சியின் பின்னே யார் இருந்தாலும் - இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

சென்னை சங்கமம் 2009

ஒரு நல்ல கிராமிய விழாவாகவே நடந்தது இந்த வருட "சென்னை சங்கமம்". நிறைய கூட்டம், நிறைய கலைஞர்கள் - நிறைய "கலைஞர்" துதிகள். ரேவதிக்கு அதிக ஆர்வமில்லை என கொள்ளமுடியாது - அவளுக்கு இது எல்லாம் புதியதாகபடவில்லை. கிராமத்தில் நிறைய இதுபோல பார்த்துள்ளதால் அதிக கவனம் இல்லை. நான் மட்டும் ஓடி ஓடி - அவளையும் இழுத்து கொண்டு ஓடி ஓடி - ஒளிப்படம் எடுத்தேன். இரண்டு நாட்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை கவனிக்க முடிந்தது - மற்ற நாட்களில் அலுவலக நெருக்கடி. புதிய திண்பண்டங்கள் - பெரும்பாலும் கிராமத்து உணர்வை கொண்ட உணவுகளை விற்க்கும் கையேந்தி வண்டிகளை சுற்றியும், 5 நட்சத்திர 'கரண்டி 50ரூபாய்' உணவுக்குமே கூட்டம் இருந்தது. கமர்கட்டும், தேங்காய் பருப்பியும் வாங்கினோம். அப்புறம் ஜிகர்தண்டா. இஞ்சி மொரப்பா... ஆடும் கலைஞர்களை விடவும், அடிக்கும் தாளத்துக்கு ஆடும் நம் சென்னை இளவட்டங்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. வெங்கடநாராயணா சாலையை விட பெசன்ட்நகர் கடற்கரை பரவாயில்லை - கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொண்டார்கள். சில கூத்துகளில் இரட்டை அர்த்தம் - ஆர்பரிக்கும் கூட்டம் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கத்தினார்கள். கத்த கத்த இரட்டை அர்த்தம் அதிகமானது. அதிலும் கானா பாட்டு பாடிய அம்மணி குலுக்கிய குலுக்கலில் - கூட்டம் சும்மா அதிருதுல்ல.. உண்மையாகவே அற்புதமான கலைகள் காண கிடைத்தையும் மறுக்க முடியாது. பொள்ளாச்சியில் இருந்து ஒரு தாள குழுவினர், திருவண்ணாமலையில் இருந்து ஒரு கூத்து நாடக குழு, ஒரு பஞ்சாபி நடன குழு மற்றும் பலர் மிகவும் அழகாக செய்தார்கள். கிளி ஜோஸ்யம், குறி கேட்பவர்கள் எல்லாம் இருந்தார்கள். புது மனைவியை கூட்டி போய் கிளி ஜோஸ்யம் பார்க்க போனால் அங்கே சனி விளையாடியது - அவன் ஒரு கூண்டில் இருந்து எலியை வரவைத்தான். அது ஒரு முருகன் படத்தை எடுத்து கொடுத்தது. அவன் கூசாமல் - "உனக்கு ரெண்டு பொண்டாட்டி" என்று சொல்லி விட்டான். ரேவதியும் நானும் சிரித்து விட்டு போடா வெண்ணை என்று காசு கொடுக்காமல் வந்து விட்டோம்.

தெய்வத்தால் ஆகாதெனினும்...

மூன்று வருடத்துக்கு முன்னால் மாதம் கிட்டதட்ட நான்கு லட்சம் சம்பளம். பொறியியல் படிப்பு. டெட்ராய்ட் நகரில் மென்பொருள் வேலை. உங்களில் அடுத்த இலக்கு எதுவாக இருக்கும்... நீங்கள் யோசிக்கும் அதே வினாடியில் செந்தில்குமார் என்ற இந்த நபர் வேலையை விட்டுவிட்டு திருச்சிக்கு வந்தார். கிராமம் கிராமமாக அலைந்தார். தேனூர் என்ற ஊரில் ஒரு சிறிய மருத்துவமனை, ஒரு கணிப்பொறி அமைப்பு, குழந்தைகளுக்காக ஒரு மரத்தடி பாடசாலை - இத்தனையும் கைகாசில். இது வரை நாற்பது லட்சம் செலவாகி இருக்கிறது. மலிவான குழைவான வேஷ்டி - சட்டை, கேரியர் சைக்கிள், சாப்பாட்டு தூக்கு பாத்திரம், மஞ்சம் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி, ஒழுங்குபடுத்தபடாத தாடி மீசை முகம் - இவர் ஒன்றும் பெரிய குடும்ப வாரிசு கிடையாது. சாதாரண குடும்ப பிண்ணனி. "உலக வரலாறு படிப்பதை விட உங்களை சுற்றியுள்ள கிராமங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கல்வி கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த கல்வியை சொல்வோம். இயற்கை வேளாண்மை செய்கிறோம். 3000 மரங்கள் நட்டுள்ளோம். அரசாங்க பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கல்லூரி நாட்டு நலப் பணிதிட்ட மாணவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் இன்னும் நிறைய செய்யலாம்." என்கிறார். "நல்லா படிச்சுட்டு நல்ல வேலைல இருக்கும் போதே 'இப்படி ஆயிட்டாரே' - அவருக்கு பொண்ணு குடுத்து என்ன பண்றது' என சொந்தங்கள் சொல்வதாக அவர் அம்மா கவலைபடுகிறார்.

Monday, April 28, 2008

இன்னும் உண்டு வேலைகள்

கோவையில் ஆறுமுக்கு என ஒரு இடம் உண்டு. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நானும் நண்பர்களும் முன்னிரவு நேரங்களில் அலுவலகம் முடிந்து வரும்போது அந்த இடத்தை தாண்டி வருவோம். அங்கு ஒரு சிறிய தள்ளுவண்டி வடை போண்டா கடை இருந்தது. நாங்கள் அங்கு பெரும்பாலும் சாப்பிடுவது வழக்கம். அங்கு ஒரு சிறு பையன் இருந்தான். வயது 10 இருக்கும் - மணிகண்டன் - பெயர் என்று நினைவு. சரியாக கணக்கு பார்பான் - மிக சரியான உபசரிப்பு உண்டு. தொந்தரவு தரும் குடித்திருக்கும் பெரியவர்கள் அல்லது சண்டியர் பெண்களை அவன் கவனிக்கும் விதம் தனி விதம். கிட்டதட்ட 4 வருடங்கள் கழித்து இந்த முறை அவனை பார்த்த போது நல்ல மாற்றம் - முன்னேற்றம் எனவும் சொல்லலாம். சிறிய க்டை போட்டாகிவிட்டது. வடை போண்டா போட இன்னுமொரு ஆள். கல்லா பார்த்து கொள்ள மணிகண்டன் - 2 பிலாஸ்டிக் டேபிள் 8 சேர் வீதம் ஒரு சிறிய அறை.. சைக்கிள் நிறுத்த சின்ன இடம்.. ஒரு மாதிரி செட்டில் ஆகிவிட்டான். ஆனாலும் பழைய மணிகண்டன் மாறவில்லை - பேசும்விதமும், கஸ்டமர்களை கவனிக்கும் விதமும் மாறவில்லை - கல்லாவில் பணம் எண்ணிபோடும் விதம் மாறினாலும் சாப்பிடுபவர்கள் மேல் கண்வைத்து கணக்கு பார்க்கும் குணம் மாறவில்லை. "அண்ணே செளக்கியமா... !!" என்ற பால்யம் மாறாத - குரல் மாறிய குணம் அவனை இன்னும் அவனாகவே காட்டி கொண்டிருந்தது. உண்மையை சொன்னால் மணிகண்டன் போல உழைக்க ஆயிரம் உண்டு வழிகள். அடிப்படை நேர்மையும் அளவான சேமிப்பும் சரியான உழைப்புமே நல்ல முன்னேற்றத்தின் வழிகள் - கார்பரேட் கம்பெனியில் 5 இலக்க சம்பளம்தான் வாழ்க்கை என கொள்ளும் எத்தனை லட்சம் மனிதர்களிடையே இந்த மாதிரி மணிகண்டனும் வாழ்வில் இருக்கிறான். இன்னும் நிறைய மணிகண்டன்கள் பேக்கரி வைத்திருக்கிறார்கள், ஆட்டோமொலைல் வொர்க்சாப் வைத்திருக்கிறார்கள், காப்பி கடை வைக்கிறார்கள் முடி வெட்டுகிறார்கள் இன்னும் என்னவோ செய்கிறார்கள். மொத்ததில் வாழ்க்கை நடத்துகிறார்கள் - கார்பரேட் ஊழியர்களை விட சந்தோஷமாக. இதில் சில மணிகண்டன்களின் எண்ணம் எதிர்காலத்தில் நிறைய பணமாக இருக்கலாம் - ஆனால் அந்த காகிதங்கள் வாழ்க்கையை பறித்துவிடும் என தெரிந்திருந்தால் ஆசைப்பட மாட்டார்கள்.

பாலியல் மாநாடு

சென்னையில் நடந்த பாலியல் மாநாடு ஒரு நல்ல ஆரம்பம் - டிவியில் சொல்லபடும் குழப்பமான பாலியல் மருத்துவ விஷயங்களைவிட - ஒரு தைரியமான (அதுவும் ஒரு மருத்துவம் தானே.. ) மாநாடு நடத்தி - சமுதாயத்தின் நிறைய குழப்பங்களை தெளிவாக விளக்கிய கருத்து அரங்கங்கள் மற்றும் உரையாடல்கள் நன்றாக இருந்தன. லேகியம் விற்பவர்கள் இதனை எதிர்த்து கொண்டுதான் இருப்பார்கள். இன்றைய சூழலின் மிக முக்கியமான மருத்துவபகுதியாக பாலியல் இருக்கிறது. சரியான கருத்தறிவும் இன்றைய ஊடகங்களும் இதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். மக்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு என நிறவாரியாகவே பாலியலை அறிந்து கொள்ளும் காலம் மாறி - சரியான முறையில் ஒரு கல்வி அமைய - அதன் காரணமான குற்றங்கள் குறைய - பாலியல் மாநாடு வரும்காலத்தில் ஒரு கருத்துள்ள ஆரம்பமாக இருக்ககூடும்...

நாய்களின் அரசியல்

நான் வசிக்கும் தெருவில் 4 நாய்கள் இருக்கின்றன. முதலில் 3தான் இருந்தது - புதியது வந்து 1 மாதம் ஆகிறது. அவற்றுக்குள் பொதுவான அரசியல் என சில உண்டு. ஒரு நாயின் வரம்புக்குள் இன்னொரு நாய் வராது. ஒரு நாள் குரைத்தால் மட்டுமே மற்ற நாய்கள் குரைக்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் பிச்சைகாரர்களை பார்த்து குரைக்கும் - அல்லது போலீஸ்காரர்களை. இரவில் ஒவ்வொரு நாய்க்கும் ஒரு இடம் உண்டு. வெகு அரிதாக புணர்ச்சியில் இருக்கும் போது மற்ற நாய்கள் விலகி நிற்கும். யாரும் அவைகளுக்கு உணவிடுவதில்லை. கிடைத்தை - குப்பை தொட்டியிலும் அருகில் உள்ள கடைகளின் கழிவுகளில் இருந்து உண்டு வாழ்கின்றன. தெருவில் யாராவது பணக்கார நாய்களை கையில் பிடித்து கொண்டு நடப்பார்கள். அந்த நாய்கள் இவைகளை பார்த்து குரைக்கும். இவை பதிலுக்கு குரைக்காமல் விலகி போய்விடும். ரொம்ப வரம்பு மீறினால் - 2 அல்லது 3 நாய்கள் சேர்ந்து பணக்கார நாயை பார்த்து குரைத்து ஒரு வழி செய்துவிடும் - நாயை கூட்டி கொண்டு செல்பவர் பாடுதான் - சண்டையை தவிர்க்க போராட வேண்டி இருக்கும். அடிப்படையில் அவைகளுக்கு கூட யாரிடம் மோதலாம் - எப்போது மோதலாம் என தெரிகிறது. எல்லை கோடுகள் தெரிகிறது. தேவைபடும்போது தன் எல்லைக்குள் வந்து குரைப்பவர்களை கூட்டு சேர்ந்து மோதி துரத்த தெரிகிறது.

புகைபிடித்தலில் அரசியலும் பொருளாதாரமும்

புகைபிடித்தலை சினிமாவில் கட்டுபடுத்துவதன் மூலம் நாட்டுமக்களை திருத்தலாம் என நினைக்கும் புத்திசாலிதனம் சரி - அப்புறம் எதற்க்கு புகையிலை பொருள்கள் விற்பனை. அரசாங்கம் விற்பனையை நிறுத்தலாமே. அது இன்னும் வேகமாக திருத்துமே...அந்த விவசாயிகளை என்ன பண்ணலாம்...?? புகையிலை பொருட்கள் நிறுத்துவதால் வரும் பொருளாதார தேக்கத்தை என்ன செய்யலாம்... வேறு ஏதாவது சரிசமமான பயிரிடுதலை சொல்லிதரலாம் - யார் வேலை அது..? இன்னும் மலைகாடுகளில் பெரிய தலைகள் கஞ்சா பயிரிடுகிறார்களே அது யார் பார்ப்பது..? மது அருந்துவது தவறு - நல்ல விஷயம்தான். மதுகடைகளை முழுவதுமாக நிறுத்தலாமே. மாத மாதம் இலக்கு வைத்து மதுக்கடை வசூலை அதிகரிப்பது யார்..! அதனை நிறுத்தினால் மதுக்கடைகளில் வேலை செய்பவர்கள் வேலை இழப்பார்களே - அவர்களுக்கு யார் வேலை தருவது...! அந்த 5 வருட கிராம தன்னிறைவு பணியில் ஈடுபடுத்தினால் செய்வார்களா..!! இதில் புள்ளிவிவர விஷயம் வேறு - போன பொங்கலுக்கு 6 கோடி ரூபாய் விற்பனை.. புதுவருட விற்பனையை விட அதிகம்.. அட அட.. என்ன ஒரு சந்தோஷம்...! சினிமாவில் மது அருந்துதலும் புகைபிடித்தலும்தான் மக்களை கெடுக்கிறது என யோசிக்கும் புத்திசாலிகள் - கொஞ்சமாவது தரையில் நின்று யோச்சித்தல் நலம். அரசின் பொருளாதாரத்தில் ஒரு பங்கு மையமாக கொண்ட புகையிலை மற்றும் மதுவை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க முற்படுவது - நல்ல விஷயமானாலும் அதற்கான வழிமுறைகள் கண்துடைப்பாகவே இருக்கின்றன.

நினைவு மறந்த மனிதர்கள்

நினைவு மறந்த மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா.. பெரும்பாலும் கோவில்கலிலும் சில சாலைஓரங்களிலும் மற்றும் பெறும்பாலான நகர பேருந்து நிலையங்களிலும் கவனிக்கலாம். காலத்தின் ஒரு பகுதி அவர்களுக்கு புலப்படாமலேயே இருக்கிறது - மறந்து இருக்கலாம் அல்லது மறக்கவைக்கபட்டு இருக்கலாம். குடும்பத்தால் விரட்டபட்ட ஜுவன்கள்தான் பெரும்பாலும். பெண்களின் நிலை இன்னும் கொடுமை - அவர்களையும் கர்பமாக்கும் வக்கிரகாரர்களை என்ன சொல்ல... சிலரை நான் ஓரளவு கவனித்து இருக்கிறேன். வயதானவர்கள் பெரும்பாலும் ஏதேனும் முனுமுனுத்து கொண்டே இருப்பார்கள் - சில ஓயாமல் பேசுவார்கள். சிலர் அமைதியாக உட்கார்ந்து வெறித்து பார்த்து கொண்டு இருப்பார்கள். ஏதேனும் பொருக்கி கையில் உள்ள பையில் சேமித்து கொண்டே இருப்பார்கள் சிலர். சிலருக்கு காசு கொடுத்தால் புரியாது - பசி மட்டும்தான் பிரதானம். எது சாப்பிட கொடுத்தாலும் கூட உள்ள ஒரு நாய்க்கும் பங்கு கொடுக்கும் பெரிவர் ஒருவர் இருந்தார் - கோவை 10ஆம் நம்பர் வீதியில் - அவரையும் மனநலம் இல்லாதவர் என்றுதான் சொல்வார்கள். நிர்வாணம் கூட சிலருக்கு சகஜமாக இருக்கும். இவர்கள் நிச்சயம் ஆரம்ப காலத்தில் நன்றாக இருந்திருப்பார்கள். நல்ல வாழ்க்கையில் கூட இருந்திருக்கலாம். எந்த புள்ளில் வாழ்க்கை திசை மாறுகிறது என்பது கேள்வி. தனிமைபடுத்தபடுதல் என்பது பெரும் கொடுமை. சக மனிதர்களிடமிருந்து மட்டுமில்லாமல் - தன் வாழ்க்கையில் இருந்தே தனிமைபடுத்தபடுவது நினைக்கவும் முடியாதது. நினைவு மறந்தவர் எல்லாரும் மனநலம் இல்லாதவர் கிடையாது - சிலர் அப்படி மாறுவதுண்டு. நினைவுகள் மறந்து போனாலும் - புதிய வாழ்வின் விஷயங்களை ஆரோக்கியமாக கிரகிக்க முடிந்தவர் - பெரும் நலம் கொண்டவர். நினைவு மறந்த ஒருவருக்கு மறுபடி நினைவு திரும்பினால் அவரை குடும்பம் ஏற்று கொள்கிறது. ஒரு மனநலம் குன்றியவரை அப்படி ஏற்று கொள்ள தயங்குகிறது - ஒரு வகையாக பயம் காரணமாக இருக்கிறது. நினைவுகள் இல்லாத மனிதர்களை நம்மை சுற்றி கொண்டுள்ளோம்.. ஏதேனும் ஒரு நிலையில்லாத புள்ளியில் அவர்களின் வாழ்க்கை மையம் கொண்டலைகிறது. கடந்து போகும் எல்லா மனிதர்களிடமும் மனபிழறு உண்டு - அதன் சராசரி நிலைமட்டுமே நம்மை கோட்டின் இப்பகுதியில் வைத்திருக்கிறது.

இயற்கை விவசாயம்

பாலேக்கரின் இயற்கை விவசாயம் பற்றி கோவையில் கருத்தரங்கு மற்றும் பயிற்சி என்பது நிச்சயம் நல்ல விஷயம். நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாயிகளின் கருத்துகள் நெடுங்காலமாக கவனிக்கபடாமல் இருக்கின்றன. உணவு முறை பற்றிய ஆரோக்கிய சிந்தனைகளில் எல்லாம் இயற்கை விவசாயமும் கலந்து கொள்வது நல்லது. விவசாயம் அது சார்ந்த மற்ற துறைகளையும் மேம்படுத்தும். வேலை வாய்ப்பும் நல்ல சந்தையும் பெருகும். இன்னும் இதனை பற்றிய சிந்தனைகளை பொதுமக்களிடையே தர வேண்டும். அரசாங்கம் கருத்துகளுக்கும் சாதனைகளுக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சினிமாவுக்கும் கிரிகெட்டுக்கும் செலவு செய்வதை விட ஆரோக்கியமான உணவை பயிரிட என்ன செய்யலாம் என யோசிக்கலாம். தனி மனித சிந்தனையும் முயற்சியும் என்றும் வரவேற்புடையவை. ஆரோக்கியமான உணவு மற்றும் சுத்தமான தண்ணீர் - ஒரு முதல் தர உலக தேவையாக மாறும் நாள் தொலைவில் இல்லை. முயற்சி எடுக்கும் சிறுதுளி அமைப்பிற்க்கும் - உபயோகபடுத்தபோகும் விவசாய நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

5 வருட திட்டம்

5 வருடங்களில் கிட்டதட்ட எல்லா கிராமங்களும் தன்னிறைவு பெற்றுவிடும் என தமிழக உள்துறை சொல்கிறது. இதன் திட்டத்தை பற்றி அடிப்படை அறிவுடன் யோசித்தால் - முதலில் எல்லா கிராமங்களும் அருகில் உள்ள சிறு நகரங்களுடன் பாதைவழி இணைக்கபட வேண்டும். இன்னும் சாலை விஷயமே தெரியாத கிராமங்கள் சில நூறு உண்டு. சாலை போக்குவரத்து வசதிகள் வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் - விளை பொருட்களை விற்க சந்தைகள் அதிகமாக வேண்டும் - மருத்துவ வசதிகள் வேண்டும். ஆரம்ப கல்வி மற்றும் வாழ்க்கை கல்வி கிடைக்க செய்ய வேண்டும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிகள் வேண்டும். இதற்கெல்லாம் தெளிவான திட்டம் வேண்டும் - செயல்படுத்த ஊழல் இல்லாத அதிகாரிகளும் ஆட்களும் வேண்டும் - ஓவ்வொரு 6 மாதமும் திட்ட மறு-மதிப்பீடு மற்றும் பணிகள் எத்துனை சதவீதம் நிறைவேறி உள்ளது எனவும் பார்க்கவேண்டும். அவற்றை பொது மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் - நாளிதழ்களும் இணையமும் இருக்கிறதே. இயற்கை விவசாயம் மற்றும் வல்லுனர்களின் யோசனைகளை கேட்கலாம். திட்டமிடபட்ட செலவு, ஆன செலவு, மிச்ச தொகை, மனித முயற்சி திட்டம் மற்றும் விவரங்கள் திட்டத்தின் நிலையை பற்றிய தகவல்கள் கொடுக்கும். இன்னும் நிறைய இருக்கிறது - இது ஏதும் செய்யாமல் கலர் டீவி இருக்கும் ஓட்டு வங்கி எல்லாம் தன்னிறைவு பெற்றவை என்ற கருத்தோடு தமிழக உள்துறை இருக்குமாயின் - முன்னேற்றம் என்பது வெறும் கனவுதான்.

ஆணுறையும் ஜெயில் கைதிகளும்

அரசாங்கம் ஜெயில் கைதிகளுக்கு ஆணுறை வழங்க இருப்பதாகவும் அது நிச்சயம் ஓரின சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக இல்லை எனவும் அது எயிட்ஸ் பாதுகாப்புக்குதான் எனவும் - சுத்தமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. ஒரு வகையில் இது நிச்சயம் பாராட்டபட வேண்டிய விஷயம். உடலுறவு நிச்சயம் இருக்கும் எனவும் - அது ஓரின சேர்க்கையாக தான் இருக்கும் எனவும் (அல்லது இதற்க்காவும் அரசாங்கம் ஏதாவது செய்யுமா..) அரசாங்கம் ஒத்து கொள்கிறது - ஆனாலும் ஆவணமாக இல்லை. சுகாதாரமில்லாத உறவு நோய்பரப்பும் அதனை தடுக்க வேண்டும் என்பது நல்ல எண்ணம். மற்றபடி ஆண்கள் சிறை மட்டுமல்லாது பெண்கள் சிறையும் உண்டு. அங்கும் மனிதர்கள் உண்டு. அங்கும் உணர்வுகள் உண்டு - என்ன செய்யலாம் என பேச யாரும் கிடையாது (பெண் ஓரின சேர்க்கைக்கு காப்பு உறை தேவையில்லை என்பது உண்மை எனினும்)- (இன்னும் சில பேரின் கருத்து - சிறையில் கிடைக்காத வசதிகள் கிடையாது - அரசாங்கம் கோழிகறி கூட கொடுகிறது - இருக்கலாம் - தண்டனை என்பது எல்லா மனித உரிமைகளையும் பறிப்பது அல்ல - தனிமைபடுத்தி குற்றத்தை புரிந்து கொண்டு மனதை திருத்துவது). பொதுவாக ஜெயிலில் ஆண் ஓரின சேர்க்கை பற்றி (அரை மனதாக) மனித உரிமை பேசப்படுகிறது - இந்த வகையில் ஓரின சேர்க்கை குற்றம் அல்ல எனவும் - சுகாதாரமாக இருப்பது நல்லது எனவும் அரசாங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சொல்கின்றன. எனினும் பெண் ஓரின சேர்க்கை இன்னமும் ஒரு கவர்ச்சி விஷயமாக இருக்கிறது - அதன் உணர்வுகள் அல்லது தேவைகள் புரிய எந்த அமைப்பும் முழுமையாக கிடையாது - எல்லாரும் முனுமுனுக்கிறார்கள் தவிர செயல்பட யாரும் இல்லை - தனிமனிதர்கள் ஏதும் செய்ய முடியாது. சிறை பெண்களுக்கு உணர்வுகளே இருக்காது என நினைக்கிறார்களா, அல்லது சுகாதாரம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா - அல்லது இந்தியாவில் பெண் ஓரின சேர்க்கையே எல்லாம் கிடையாது என்ற கலாச்சார குழப்பமா..!!! பெண்களுக்கான அடிப்படை பாலியல் சுகாதாரம் பற்றி சொல்லிதர யார் உண்டு. யார் கேட்பார்கள்..!!!

Tuesday, April 01, 2008

நம்மை சுற்றிய உலகம்...

சில செய்திகள் சென்ற வார பத்திரிக்கைகளில் இருந்து. இவற்றை பற்றி பின்னர் விவாதிப்போம். அடிப்படை - உறவுகளும், உணர்வுகளும், வாழ்க்கை முறை, சமூக அரசியல் மற்றும் உளவியல் வன்முறை.

செய்தி 1 - கேரளாவின் ஒரு கிராமத்தில் இருந்து அரபு நாட்டுக்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண் விபச்சாரத்தில் தள்ளபடுகிறார். அவருடைய கணவர் செய்தி அறிந்து தன் மனைவியை அனுப்பிய அதே ஏஜண்ட் மூலமாக அரபு நாடு சென்று போலீஸ் மற்றும் தூதரக உதவியுடன் தன் மனைவியை மீட்டிருக்கிறார்.


செய்தி 2 - திருமணம் நிச்சயமான பிறகு கை தொலைபேசியில் காதல் உரையாடும் ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ளும் இளமைக்கால - பள்ளி அல்லது கல்லூரி காலங்களின் நட்புகள் மற்றும் உறவுகள் பற்றிய - அந்தரங்க செய்திகள் பின்னாளின் திருமண முறிவுக்கு காரணமாகிறது என்கிறது சமீபத்திய கோர்ட் ஆதாரம் ஒன்று.


செய்தி 3: 2004 ஆம் வருடம் முதல் வகுப்பில் தேறிய - இன்னும் வேலை கிடைக்காத ஒரு இளைஞர் தன்னையும் விட சுமாராக படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்து இருப்பதை கண்ட விரக்தியில் குடித்துவிட்டு போதையில் ஒரு கடற்கரையோட கல்லூரியின் ஆய்வு கூடத்தை வெடிகுண்டு தயாரிக்க முற்றுகையிட அவரை போலீஸ் கைது செய்தது


செய்தி4: சென்னையில் "சேர்ந்து வாழ்தல்" கலாச்சாரம் அதிகமாகிறது - பெறும்பாலும் இளம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியான தொலைபேசி உதவி நிறுவன ஊழியர்களே என்கிறது ஆய்வு. திருமணமாகாதவர்களுக்கு வீடு கிடைப்பதில்லை என்பதால் ஜோடி போல காண்பித்து கொள்ளுதல், உயர்ந்து வரும் தனி மனிதர் வீட்டு வாடகை, குடும்ப உறவுகளிடம் இருந்து தனிமை, பொருளாதார சுதந்திரம், காலதாமதமாகும் திருமணம், நெடு நேர அலுவலக வாழ்க்கை, விளையாட்டான காமம் அறியும் போக்கு, நுகர்வு கலாச்சாரத்தின் விளைவு, உலகமயமாக்கலின் விளைவு, கார்பரேட் உலகின் உளவியல் வன்முறைக்கான வடிகால் என காரணங்கள் அடுக்கபடுகின்றன.

Sunday, March 23, 2008

திருநங்கை கல்வியாண்டு

ஒரு வழியாக வரும் கல்வியாண்டு முதல் திருநங்கைகளுக்கான பாலின பிரிவு கல்லூரிகளில் ஏற்படுத்தபடும் என அரசு அறிவித்து உள்ளது. வாழ்த்துகள். எதிர்கொள்ள கூடிய சமூக பிரச்சனைகள் இருந்தாலும் - இனி அவர்களின் வாழ்வு கொஞ்சமேனும் மாறுபடும். ரோஸ் போன்ற திருநங்கைகள் தங்களை ஒரு வாழ்வு உதாரணமாக இன்னும் வெளிப்படுத்தி கொள்ள வேண்டும். சக உயிராக மதிக்கபடும் விதத்தில் - அவர்களுக்கு தனி கழிப்பறை என்பது கல்வியை விட மிக முக்கியமான வாழ்வு நிலை முன்னேற்றமாக கொள்கிறேன்.

ஆட்டமும் பின்புலமும்..

சாருவின் ஒரு சமீபத்திய உரையாடலில் - தற்போதைய டெலிவிஷன் நடன நிகழ்ச்சிகளை பற்றி - ஒரு சமுதாய மட்டதுக்கான செக்ஸுவல் பேண்டஸி என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனை பற்றி கொஞ்சம் இணையத்திலும் ஆராய்ந்தபோது ஒரு சுவரஸ்யமான மனோதத்துவ விஷயம் கிடைத்தது. பொதுவில் விசுவல் மீடியா என சொல்லபடும் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட வகை பார்வையாளர்களுக்கு பெரும்பாலும் போய் சேருகிறது - அதிலும் பெரும்பாலும் ஆண்கள் - அதன் சதவீதத்தில் 60% பெண்கள். சாதாரணமாக நாம் பார்க்கும் பெண்கள் அல்லது கதாபாத்திரங்களை - கொஞ்சம் உடல் ரீதியாக கற்பனை செய்து - அதன் மூலம் ஒரு விதமான சுகம் அடைதல் ஒரு மனோவியாதி - ஆனால் கொஞ்சம் சாத்வீகமாக மனோவியாதி. இது நிறைய பேருக்கு இருந்தாலும் சமுதாய கட்டுபாடுகள் அவற்றை கொஞ்சம் மட்டுபடுத்துகிறது. கவனித்துபார்த்தால் இந்த நடன நிகழ்ச்சிகளில் வருபவர்கள் எல்லாம் - சின்னதிரை நாடக அல்லது சிறு நடிகர்கள். சினிமா நடிகர்கள் அல்லது நடிகைகள் - சினிமாவின் நடனங்கள் பாடல்கள் மூலம் சாதாரண ரசிகனின் உள் எண்ணங்களை தூண்டுகிறார்கள். அவர்களின் மேல் வருவதை விட இழுத்து போர்த்தி நடிக்கும் சிறு நடிகர் நடிகைகள் மற்றும் சின்னதிரை நடிகைகள் மேல் சாதாரண ரசிகனுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அந்த உடல் ரீதியான ஈர்ப்பை இத்தகைய நடன நிகழ்ச்சிகள் தீர்த்து வைக்கின்றன. உடைகள், மேடை அமைப்பு, பாடல் விதம், ஆடும் விதம், இசை அதிர்வுகள் ஆகியவை ஒரு வகையான ரெக்கார்டு டான்ஸ் அனுபவத்தை சாதாரண ரசிகனுக்கு கொடுக்கின்றன. ஒருவித ரகசிய கவனிப்பு நிகழ்கிறது என தெரிந்தும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பெண்ணுடை அணியும் ஆண்கள் ஒரு விதமான கவர்ச்சி பார்வையுடன் கவனிக்கபடுகிறார்கள் (உதா: சில உடனடி மேடை சிரிப்பு நிகழ்ச்சிகள்) - அவர்களை கமெண்ட் செய்வது நடுவராக உட்கார்ந்திருப்பவர்களே.. ஒருவகையான கிராஸ் டிரெஸிங் கவர்ச்சி என இதனை கொள்ளலாம் (இதிலும் பெண் மட்டம்தட்டபடுவதுதான் பின்புலத்தில் இருக்கிறது).. அட சிரிப்பு நிகழ்ச்சிதானே - விட்டுவிடலாம் என சிலர் சொல்கிறார்கள். நடன நிகழ்ச்சிகள் சினிமா பாடல்களை முன்னிலையாக கொள்வதில் - உண்மை சினிமா காட்சியில் உள்ள காமிரா, ஒளி மற்றும் இதர விஷயங்களை ஈடு செய்ய மேலும் உடல்ரீதீயான அசைவுகள் புகுத்தபடுகின்றன. எல்லா இந்திய சினிமா பாடல் காட்சியின் அசைவுகளும் காமத்தை அடிப்படையாக கொண்டவை - அதிலும் இந்த புகுத்தபட்ட அசைவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பது உண்மை. எதுவும் தவறில்லை. ஆனால் புரிந்து கொள்ளுங்கள் - இது ஒருவகையான செக்ஸுவல் பேண்டஸி என்பதை.

உடை மட்டுமா கலாச்சாரம்..

சினிமா நடிகைகளின் மேடை உடை பற்றிய கருத்துகளுக்கு கனிமொழி தெரிவித்து உள்ள மறு-கருத்து உண்மையில் யோசிக்க கூடியது - லட்சம் பேர் பார்க்கும் திரைப்படத்தின் உடை பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் - (கவர்ச்சி ஆபாசம் என எல்லா எல்லைகளையும் தாண்டும் உடைகள் இருந்தாலும்) - மேடையில் அணியும் உடை பற்றி கருத்து சொல்வது சரியானதில்லை என்றிருக்கிறார். இந்தியாவுக்காக விளையாடலாம் - ஆனால் இந்தியாவில் விளையாட முடியாது என சொல்லும் அளவுக்கு ஒரு விளையாட்டு வீராங்கனையை மனகசப்பு கொள்ள செய்யும் நாடு இது - உடை என்பது அவரவர் விருப்பம் - உன் உடை என்னை தூண்டுகிறது என்றால் பிரச்சனை எனக்குள் இருக்கின்றது என பொருள். 1000 பேர் பார்க்கிறார்கள் - 1000 பேருக்குமா உடனே காம எண்ணங்கள் தோன்றி - ஏதோ ஒரு பெண்ணையாவது புணர வேண்டும் என்ற வெறி வருகிறது...? கலாச்சார காவலர்களின் உடனடி பிரச்சனை அவர்கள் உடல்சார்ந்த மனோ பலவீனங்களே என கொள்ளலாமா..!! புண்ணியவான்களே.. நான் துணியில்லாமல் எல்லாரும் இருங்கள் என சொல்லவில்லை - நீங்கள் போற்றி வணங்கும் சங்க இலக்கிய மாதர்களின் உடையலங்காரங்களை கொஞ்சம் கருத்தில் கொண்டு பின்னர் உங்கள் விமர்ச்சனங்களை வெளிப்படுத்துங்கள் என்கிறேன். நடிகைகளின் துணிபற்றி பேசும் நேரத்தில் கொஞ்சம் உண்மையான சமூக பிரச்சனைகளையும் கவனிக்கலாம் - உதாரணம்:- எல்லா கிராமங்களுக்கும் முழுமையான மருத்துவ வசதி மற்றும் ஆரம்ப கல்வி.

காகித பூக்களின் காலம்...

வசந்த காலத்தை வரவேற்க்கும் வண்ணங்களின் பண்டிகை கொண்டாடபட்டு கொண்டிருக்கிறது. நான் வசிக்கும் பகுதியில் வட இந்திய குடும்பங்கள் உண்டு. 2 நாட்களாக அவர்களின் கொண்டாட்டங்களை ரசித்து கொண்டிருக்கிறோம். பொதுவாக வட இந்தியர்கள் இத்தகைய பண்டிகைகளை விமர்ச்சையாக கொண்டாடுகிறார்கள். பிள்ளையார் சதுர்த்தியும் தீபாவளியும் போல. தென் இந்தியாவில் மட்டும்தான் இவை அரசியலாக்க படுகின்றன.

அத்வானி சோனியா காந்தியின் வீட்டுக்கு மனைவியோடு சென்று வாழ்த்துகிறார். லாலுபிரசார் நிதிஷ் குமாரை சகோதரர் என சொல்லி வாழ்த்துகிறார். அரசியல் தாண்டிய மனித நட்புணர்வு இருப்பதாக நான் கொள்கிறேன். பெறும்பாலான அரசு விழாக்களில் அவர்கள் மகிழ்ச்சியாக பேசி கொண்கிறார்கள். சிலர் சொல்லலாம் - இவை எல்லாம் வெறும் அரசியல் நடிப்பு என - இருந்துவிட்டுதான் போகட்டுமே, நடிப்புக்காகவாவது நட்பும் சகமனித நேசமும் இருக்கிறதே.. தென் நாடு அப்படி அல்ல.. அரசியல் எதிரிகள் கூட்டாக விழாக்களில் கலந்து கொள்ள கூட மாட்டார்கள், தொண்டர்கள் அதைவிட மேல்.அரசியல் இப்படி என்றால் மக்களும் வேறுவிதம்.

வட இந்திய மக்கள் கொண்டாடுவது போல நெருக்கமான விழா கொண்டாட்டங்கள் தென் இந்தியாவில் இல்லை. வளர்ந்த அறிவியல் கை-தொலைபேசியில் வாழ்த்தி குறும் செய்தி அனுப்புவதோடு உறவுகளை எல்லை படுத்தி விடுகிறது. தொலைகாட்சியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பாட்டு போட சொல்கிறார்கள். கூட்டு குடும்ப விழாக்கள் மிகவும் அறிதாகிவருகின்றன - நகர சூழலும், கார்பரேட் கலாச்சாரமும் இன்னும் அவற்றை அரிதாக்குகின்றன. அலுவலகத்தில் தொழிலாளர்களிடையே சிறு நிகழ்ச்சிகளும் கூட்டு விளையாட்டுகளும் நடத்தி என்ன லாபம். அவை எல்லாம் மறுபடி தொழிலார்களை கொஞ்சம் அதிகம் வேலை வாங்க ஏற்பாடு செய்யும் சுயலாப நோக்கே அன்றி வேறில்லை. குடும்பம் அலுவலகம் சாராத வெளிநட்பு என்பதெல்லாம் பலி கொண்டு விட்டு - Employee Engagement Initiatives (EEI) - நடத்துவதில் என்ன பயன் இருக்கிறதோ தெரியவில்லை.கடிதகங்கள் குறைந்து மின்னஞ்சல் அதிகமாகிறது. கடிதங்கள் எழுத பிரயத்தனபட வேண்டி இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகளை சொல்வோம், கருத்துகளை சொல்வோம், அனைவரையும் விசாரிப்போம், கடித வார்த்தைகளில் அன்பு இருந்தது. இன்றெல்லாம் மின்னஞ்சல் கூட குறும் செய்தி போலதான் இருக்கிறது. நீண்ட நட்பு அல்லது உறவுமுறை கடிதங்கள் என எதுவுமே இல்லை. வளரும் அறிவியல் உலகத்தை சுருக்கிவிடலாம் - ஆனால் சகமனிதனை, உறவுகளை, அடுத்து உள்ளவரை மிகவும் தொலைவாக்கிவிட்டது. எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மன அழுத்தத்தையும், சத்தமில்லாத அழுகைகளையும் அதிகமாக்கி இருக்கிறது. வட இந்தியர்கள் போல கூடி கொண்டாடும் விழாக்கள் மட்டுமே சகமனித சகோதரதுவத்தை கொஞ்சமாவது மிச்சம் வைக்க உதவும். முடிந்தவரை நேரில் வாழ்த்து சொல்லலாம், அடிக்கடி சந்திக்கலாம், மாதம் ஒருமுறையாவது நண்பர்கள் கூடி படித்தவை, பார்த்தவை என பகிர்ந்து கொள்ளலாம், சில நீண்ட கடிதங்கள் எழுதலாம். இவை எல்லாம் ஊருக்கு உபதேசம் மட்டுமல்ல. நானும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்தான்.

நிஜமும் நிழலும்..

வட இந்தியாவின் ஒரு சிறைசாலை. சிறை கைதி மிகவும் வயதானவர். ஆயுள் தண்டனை பெற்றவர். அவருக்கு மணமாகாத ஒரு பெண். தன் பெண்ணின் திருமணவாழ்க்கை பற்றிய கவலையுடன் இருந்த அவர், சிறைசாலை அதிகாரிகளிடம் தன் மனதை பகிர்ந்து கொள்ள, அவர்கள் மற்ற சிறைக்சாலை பணியாளர்களுடன் சேர்ந்து பணம் வசூலித்து கைதியின் மத முறைப்படி மிக நல்ல முறையில் திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறார்கள். திருமண தம்பதி சிறைசாலைக்குள் வந்து ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார்கள். சட்ட விதிமுறைகளின் படி இது தவறு எனினும், மறுபக்கத்தில் இது ஒரு நல்ல மனிதநேய எடுத்துகாட்டு. சிறைகைதியின் அடிப்படை உணர்வுகள் மதிக்கபட்டு, பொருளாதார சூழல் கருத்தில் கொள்ளபட்டு செய்யபட்ட ஒரு நல்ல உதவி. அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளால் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட மனதளவில் நல்லது செய்த ஒரு திருப்தி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இருக்கும். நடவடிக்கை எடுக்க அரசாங்கம் சொல்லும் காரணம் சிறைசாலைக்குள் சம்பந்தம் இல்லாத வேறு மனிதர்கள் வரக்கூடாது என்பதுதான். அப்புறம் ஒரு நாள் தொலைக்காட்சி பார்க்கும்போது ஒரு குழப்பம் வந்தது. வட இந்திய அல்லது தென் இந்திய திரைப்படங்கள் என்ற எல்லை இல்லாமல், பெறும்பாலும் சிறைச்சாலைகளுக்குள் குத்தாட்ட பாடல்கள் இருக்கின்றன - சம்பந்தமே இல்லாமல் அரைகுறை உடையில் ஒரு அழகி(?) வேறு. இது எல்லாராலும் ரசிக்க படுகிறது. அடிப்படை கேள்விகள் கூட எழுவதாக தெரியவில்லை. நிழலின் அபத்தமும், நிஜத்தின் நெகிழ்ச்சியும் இரு வேறு துருவங்களாகவே இருக்கின்றன.