அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, June 02, 2010

எங்கள் இசையின் பிரம்மா...

மீசை முளைக்க தொடங்கிய பதின்வயதுகளில் அறிமுகமானது பண்ணையபுரத்து கலைஞனின் இசை. எல்லோரையும் போல சினிமா பாடல்களில் தன்னையும் தன் மனதுக்கு பிடித்த பெண்ணையும் கொண்டு கனவு காணும் வயதுகளில், பிண்ணனி பாடல்கள் இசைஞானிதான். அந்த இசை பித்து இன்றுவரை தொடர்கிறது - இன்னும் மரணம் வரை இருக்கும்.

எத்தனையோ விமர்சனங்கள் அவர் மீது - இசை பற்றியும், அவர் வாழ்க்கை பற்றியும். என்ன பேசினாலும், அவர் ஒரு மகா கலைஞன் என்பதில் மாற்று கருத்து பலருக்கும் கிடையாது.

ஒரு கட்டுரையில் படித்தது ...

” 900 படங்கள், ,4500 பாடல்கள், மொழிகள் கடந்த இசை என ராஜாவின் ராஜ்ஜியம் கற்பனையிலும் பிரமிக்க வைப்பது. வழக்கமான சினிமா இசையல்லாது, 40 தனி ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் இளையராஜா. அவற்றில் பெரும்பாலானவை விற்பனையில் பெரும் சாதனை படைத்தவை. கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டவை. 35 ஆண்டுகள் தன் இசையால், பாடல்களால், குரலால் இந்த தமிழ் சமூகத்தையே கட்டிப்போட்ட ஒப்பற்ற இசைப் படைப்பாளி. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதிதாய் பிறந்த உணர்வைத் தரும் இசைக்குச் சொந்தக்காரர். “

இளையராஜாவின் இசை வெறும் இசை மட்டுமல்ல - ஒரு அற்புதமான தியானம். உழைப்பும், கலை மேல் கொண்ட மரியாதையும் தெரியும் அவர் இசையில். பிரமிக்கதக்க இசை நுணுக்கங்கள் மற்றும் வாத்திய தேர்வு ஒரு சுகமான ஆனந்தம்.

வைரமுத்து, வாலி மற்றும் பலரின் அற்புதமான கவிதைகளாகட்டும், எஸ்.பி.பி, யேசுதாஸ், சுசீலா, ஜானகி ஆகியோரின் குரலாகட்டும் - இளையராஜாவின் இசையன்றி இவ்வளவு பெயர் பெற்றிருக்க முடியாது. பலரின் சினிமா உலக வாழ்க்கையின் வெற்றிக்கு பின்னர் அவர் இருந்தார் - பல கதாநாயகர்களின் வெற்றிகள் உட்பட. மறந்து போன திரைப்படங்கள் கூட நினைவில் வருவது அவர் பாடல்களின் வழியாகதான். பாடல் மட்டுமன்றி பிண்ணனி இசையின் நாயகன் அவர்தான் இத்தனை வருடங்களாக.

புல்லாங்குழழும், வயலினும் அவர் பாடல்களில் கொஞ்சி விளையாடும் அழகே அழகு - அதற்க்கு 1000 பாடல்களை உதாரணம் காட்டலாம். எங்கள் யாருக்கும் உலக இசை தெரியாது - ஆனால் எங்கள் உலகத்தின் இசையை அறிமுகபடுத்தியவர் அவர்தான். உலக இசை பற்றிய அதீத ஞானம் உள்ளவர்களுக்கு அவர்மேல் கருத்துகள் இருக்கலாம் - எங்களை பொருத்தவரை இசை என்றால் முதலில் இளையராஜாதான்.

அவர் பிறந்த நாளான இன்று - அவர் இருக்கும் காலங்களில் வாழ்தல் குறித்த மகிழ்ச்சியுடன் ... இந்த பதிவு அவருக்காக.

Tuesday, June 01, 2010

சினிமா விமர்ச்சனங்கள் - ஒரு பார்வை

எந்த ஒரு விமர்ச்சனமும் தனி அளவில், ஒரு கருத்து என்ற அடிப்படையில்தான் நான் பார்க்கிறேன். கருத்து உருவாக ஒரு பின்புலம் வேண்டும் - அந்த பின்புலம் வாழ்வின் அந்த நிமிடம் வரை கடந்து வந்த தருணங்களையும் அனுபவங்களையும் கற்று கொண்டாதாக நம்பப்படுபவைகளையும் அடிப்படையாக கொண்டது. சினிமா விமர்ச்சனங்களும் அப்படித்தான். இப்போதெல்லாம் புதிய அல்லது பழைய, உலக, இந்திய சினிமா பற்றிய அதிபுத்திசாலி விமர்ச்சனங்கள் எழுதாவிட்டால் பதிவுலகத்துக்கே லாய்க்கியில்லை என்ற நிலை உருவாகிவிட்டது போல - அத்தனை விமர்ச்சனங்கள் - மொக்கை படங்களுக்கு கூட.

பெரும்பாலான இந்த விமர்ச்சனங்களுக்கு தோதாகத்தான் நம் தமிழ் படங்களும் இருக்கின்றன - தமிழ் மட்டுமல்ல, வேறு இந்திய மொழி படங்களுக்கு 100க்கு 80, அப்படித்தான் இருக்கின்றன. எனினும் அடிப்படையில் இந்த விமர்ச்சனங்களின் மேல் என் கருத்து ஒன்று உண்டு - இது என் கருத்து மட்டுமே - சில சினிமா விமர்ச்சனங்கள் போல முடிவான ஒன்று கிடையாது.

1. பல பதிவர்கள் சினிமா வெறும் கலைப்படைப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் போல - எல்லா படங்களுக்கும் உலக படங்களை ஒப்பீடு செய்கிறார்கள். உலக அளவில் சிலாகிக்கபடும் திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனைகளை - தேவையான காலத்தில் கொடுக்கவில்லை என்று ஒருமுறை சுஜாதா சொல்லியிருக்கிறார். சினிமா அடிப்படையில் ஒரு வியாபாரம். கடும் உழைப்பு. அது முடிவில் பணமாகவும் வருமானம் கொடுக்க வேண்டும்.

2. மொக்கை படங்களை ஓட்டும் பதிவுகள் சரிதான் - ஏனெனில், சினிமா ஒரு பெறும் உழைப்பு. அதன் வருமானம் வெறும் பணம் மட்டுமல்ல - பலரின் வாழ்க்கை. அந்த உழைப்பை அர்த்தமற்றதாக்கும் சினிமாக்கள் - வசூலில் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும், பலரின் வாழ்க்கையை ஒரு படத்தோடு முடித்து விடுகின்றன. முட்டாள்தனமான சினிமாக்களை சொல்லும் அதே தொனியில் தனக்கு புரியவில்லை என்பதற்க்காக எல்லா (ஓரளவுக்கு) உருப்படியான திரைப்படங்களையும் கலாய்ப்பது - ஒரு தனிமனித புத்திசாலித்தனத்தின் விளைவே. தனக்கு புரியாமல் போன காரணம் தெரிய யாரும் உழைப்பதில்லை. ஒரு கதைக்கு பின்னான கரு, அதன் புனைவு, திரைக்கதையாக்கத்தின் வியாபாரம் எதுவும் புரிவதில்லை. வெறுமனே - எனக்கு புரியவில்லை - எனவே யாருக்கும் புரியாது என்ற தொனி பலரின் விமர்ச்சனங்களில் உண்டு.

3. ஏனென தெரியாத குழப்பமான பார்ப்பனிய எதிர்ப்பு. பார்பானல்லாதவன் செய்தல் கலை - பார்பான் செய்வதெல்லாம் குற்றம் என்ற தொனி. இந்த குழப்பத்தை பற்றி எழுத வேண்டியதே இல்லை - பதிவுலகம் முழுக்க வினவபட்ட விஷயம்.

4. இத்தனை புத்திசாலித்தனமான (நினைத்து கொண்டு) விமர்ச்சனங்களை எழுதும் பதிவு நண்பர்கள் சினிமாவை வெறும் டி.வி.டி. தியேட்டர் அளவிலேயே அதிகம் தெரிந்து கொண்டு இருக்கிறார்கள். விதிவிலக்காக சிலர் உண்டு எனினும், விமர்ச்சனம் எழுதும் கோஷ்டி அதிகம் "பொட்டி" தட்டுபவர்கள்தான். எல்லார் விருப்பத்துக்கும் ஒரு திரைப்படம் நிச்சயம் இருக்க முடியாது - அப்படி விமர்ச்சனமே இல்லாத திரைப்படங்கள் கிடையாது. என் கருத்து, விமர்ச்சனம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுதான். எதனை எதனோடு ஒப்பீடு செய்யவேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல்தான் பெரும்பாலும் விமர்ச்சனங்கள் அமைகின்றன.

5. தன்னை புத்திசாலி என நினைத்து உழைப்பவர்கள் - சினிமா விமர்ச்சனம் தவிர, ஏதாவது உருப்படியாகவும் எழுதலாம். சினிமா விமர்ச்சனம் எழுத தினத்தந்தியும் வேறு குப்பைகளும் இருக்கிறது. ஒரு திரைப்படத்தை பற்றிய குறிப்பு போதும் - அதனை பார்ப்பதும் பார்க்காததும், புரிந்து கொள்ளுதலும் அவரவர் உரிமை. இப்படி ஒரு சினிமா இருக்கிறது - முயற்சி செய்யுங்கள் என்ற தொனியிலான குறிப்புகள் எந்த பதிவிலும் காண அரிதாகி விருகிறது.

6. சினிமாவுக்கு வெளியே புத்திசாலி என அறியபட்டவர்களை எல்லாம், சினிமா முட்டாளாக ஆக்கியிருக்கிறது. காரணம் - திரைப்படத்தின் வெற்றி / தோல்வி என்ற இரு நிலைகள். வெற்றி படங்கள், சமூக அக்கறையோடும், வாழ்வின் நிஜங்களை பற்றிய புனைவுகளோடும் இருக்குமானால் அது நிஜ வெற்றி. எனினும், திரைபடங்களுக்கான பகுத்தறிவு, அதனை என்ன வகையான திரைப்படம் என்று தீர்மானித்து விடுகிறது. அந்த அளவில், அந்த திரைப்படம் தன் தன்மையை கொண்டிருக்கவேண்டும். (உதாரணம்: Action, Adventure, Comedy, History, Fantasy, Drama, Musical, etc.) இதனை பற்றிய அறிவு, விமர்ச்சகர்களுக்கு அவசியம். இல்லாவிட்டால் எதிலோ எதனையோ தேடும் நிலைதான் வரும்.

7. சினிமாவுக்கு சமூக அக்கறை எப்படி தேவையோ, அதே அளவு சமூக அக்கறை விமர்ச்சகர்களுக்கும் வேண்டும். மோசமான முட்டாள்தனமான சினிமா சமூகத்தின் சில வேர்களை அழிப்பதை போல, மோசமான முட்டாள்தனமான விமர்ச்சனங்கள் சிலரின் வாழ்க்கையை அழித்து விடுகின்றன. இது சினிமாவுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல - பொதுவிலும் கூட.

8. தனி மனித புரிதல், தனி மனித அனுபவங்களிலும், பக்குவத்திலும் மட்டுமே சாத்தியமாகிறது. அது இல்லாத போல - எடுத்தேன் கவிழ்த்தேன் வகை கருத்துகளும், குழப்பமான கலாச்சார கருத்துகளும் வெளிவருகிறது. பல பதிவுகள் இந்த வகைதான்.

9. குழப்பான ஒப்பீடு ஒரு குற்றம் என்னை பொருத்த வரையில். பெரும்பாலும் ஒரு எதிர்மறை விமர்ச்சனம் அதிக புத்திசாலிதனத்தை காட்டும் என்ற தொனியில் ஏதாவது பேசவே சில பிரபல சினிமாக்களை பற்றி - அவை அரத பழசாக இருந்தாலும் கூட... அலசல் வகை கட்டுரைகள் பதிவிடபடுகின்றன. இது வெறும் புத்தக புத்திசாலிதனத்தை காட்டும் முயற்சி. இந்த வகை பதிவுகளை சம்பந்தபட்டவர்கள் படிக்கவே போவதில்லை.

10. சாப்பிட தெரியும் என்ற ஒரே காரணத்துகாக சமையல்காரர்களை விமர்ச்சிக்கலாம் என்ற போக்கிலிருந்து விலகி, உண்மையான அர்த்தமுள்ள விமர்ச்சனக்கள் எழுதபடுமானால் - அது சினிமா என்ற ஊடகம் என்ன நல்ல விளைவுகளை உருவாக்க விரும்புகிறோமே அதனை கொண்டு வரும். இல்லாவிட்டால், இந்த விமர்ச்சன குப்பைகளை நாளடைவில் யாரும் கண்டு கொள்ளாத நிலை வந்து விடும்.