அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, November 14, 2006

30 வயது மாயை

சென்ற நவம்பர் 6 தேதியோடு 29 வயது முடிந்து விட்டது. என் முப்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். சொல்லபோனால் மனதளவில் என்னை நான் இதற்கு தயார் செய்து கொண்டுள்ளேன் என்றே சொல்லவேண்டும். பெரிய மாற்றங்கள் இயல்பில் ஏதும் நடந்து விட போவதில்லை என்றபோதிலும், வயது சார்ந்த ஒரு மாயையை என்னுள் ஏதோ சில சம்பவங்கள் ஏற்படுத்திவிட்டன என்பது உண்மை.

இந்த மாயை பெரும்பாலும் அனுபவங்களை சார்ந்தே வருகிறது. அரைகிழவன் என்று 30 வயது முடிந்தவர்களை விமர்ச்சிப்பவர்களை பார்த்திருக்கிறேன். திருமணம் ஆகாத 30 வயது இளைஞன் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கபடுவதை கவனித்து இருக்கிறேன். ஒரு வகையான செயற்கையான மனச்சோர்வை 30 வயது ஆண்மகனுக்கு சமூகம் தருவதை சில சம்பவங்கள் எனக்கு நினைவூட்டுகின்றன. பெண்களுக்கு 30 வயது என்பது ஒரு பெரிய மாறுதலை தருகிறது - குடும்ப அளவிலும் அவள் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்று சமுதாயம் விரும்புகிறது - அதன் பிரச்சனைகளும் இடர்களும் தெரியாமலேயே. பொதுவாக சமுதாய அமைப்பில் 30 வயது ஆண் அல்லது பெண்ணுக்கு சில குறியீடுகளை கொடுத்து விடுகிறார்கள், அவர்கள் அந்த குறியீடுகளில் தான் வாழ அறிவுறுத்தபடுகிறார்கள் - மீறினால் கேலி செய்ய படுகிறார்கள். வயது சார்ந்த மாயை ஆரம்பமாகும் தருணம் 30 வயதுதான்.
என்னை பொருத்தவரை இது அற்புதமான காலகட்டமாக உணர்கிறேன். நவம்பர் 5 இரவில் ஏதோ நினைவுகளுடன் என் பழைய புகைபடங்களை பார்த்து கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு மரணம் நிகழ்ந்த மனோநிலை அன்று எனக்கு இருந்ததை மறுக்க முடியாது. நான் சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் எல்லாம் நினைவுக்கு வலுக்கட்டாயமாக கொண்டுவந்து இருந்தேன். சம்பந்தமே இல்லாமல் வீட்டுக்கு போன் செய்து பேசினேன். சில நெடுங்காலமாய் தொலைந்த நண்பர்களின் முகவரிகளை தேடினேன்... கிடைத்தவற்றை ஒழுங்குபடுத்தினேன்... கொஞ்சமாய் பிடித்த இசை... ஒரு கோப்பை தேநீர்... நான் நடந்து கொள்ளும் விதம் எனக்கே கேலியாக இருப்பினும் இதனை நிறுத்த முயலவில்லை. பிறகு நண்பர்களின் வாழ்த்துகளும், அம்மா அப்பாவுடன் பேசியதும் கொஞ்சம் கொஞ்சமாக மனசு சரியாகிவிட்டது. அலுவக நண்பர்கள் வாழ்த்துகளும் மனசை லேசாக்கி விட்டன. பிறகு மற்ற நாட்கள்... என்னை சராசரி வாழ்வில் தள்ளி விட்டன.. தலை சீவும் போது எட்டி பார்க்கும் ஒற்றை நரைமுடி தவிர, மற்ற எந்த அடையாளமும் என்னை மனதளவில் பாதிக்கவில்லை.

29 வயது வரை செய்த நல்ல விஷயங்களை பொறுக்கி பார்த்த போது, நண்பர்களும் நம்பிக்கையும் தவிர வேறு எதுவும் இல்லை. இன்னும் டிகிரி வாங்கவில்லை (வாங்க போவதும் இல்லை என்று நினைக்கிறேன்), பெரிய வங்கி கணக்குகள் இல்லை, வாகனங்கள் ஓட்ட தெரியாது, நீச்சல் தெரியாது, கணக்கு பாடம் இன்னும் புரியாத புதிர்தான். மிக புத்திசாலிதனமாக சிந்திக்க தெரியாது... சரி என்ன தெரியும் என்று பார்த்தால்.. கொஞ்சம் இசை, ஓவியம், கவிதை, பேச தெரியும், செய்யும் தொழிலில் யாருக்கும் கேடு விளையவில்லை, நிறைய நண்பர்கள் உண்டு... கொஞ்சம் பயணங்கள் இருந்திருக்கின்றன. படிக்கும் பழக்கம் இருக்கிறது. படித்ததை யோசிக்கும் திறமை இருக்கிறது. மேலாண்மையில் கொஞ்சம் திறமை இருக்கிறது. செய்யும் தொழில் சார்ந்த விஷயங்களில் கிரகிக்கும் திறனும் மறுபடி உபயோக படுத்தும் திறனும் இருக்கிறது. அப்புறம்... என்னை பற்றி எல்லாம் தெரிந்த பின்னும் என்னை நம்பும் நண்பர்கள் இருக்கிறார்கள்... அவர்களுக்கும் எனக்கும் நடுவில் எங்களை பற்றிய நம்பிக்கை இருக்கிறது. ஓடி கொண்டிருக்கும் நதி போல வாழ்க்கை எங்களுக்கு முன்னால் இருக்கிறது.

பலி கொள்ளும் சமூகம்

சென்ற வார செய்தி பத்திரிக்கைகளில் கணிப்பொறி சார்ந்த நிறுவன ஊழியர்கள் சிலர் நடுஇரவுக்கு மேலும் கொண்டாட்டமாக இருந்தபோது கைது செய்யபட்டதை கட்டம் கட்டி வெளியிட்டு இருந்தன. போலீஸ் தன் கடமையை செய்ததை பெருமையாக வெளியிட்டு கொண்டது. கலாச்சார பாதுகாப்பு சங்கம் எல்லாம் கட்டம் கட்டி கணிப்பொறி சார்ந்த நிறுவன ஊழியர்களின் கலாச்சார சீரழிவு பற்றி பட்டியல் இட்டன. எல்லாம் பார்க்கும் போது சமூகத்துக்கு ஒரு விதமான குரோதம் பொதுவான கணிப்பொறி சார்ந்த ஊழியர்கள் மேல் இருப்பதை கவனிக்க முடிகிறது. இந்த குரோதத்தின் அடிப்படை காரணம் அவர்களின் சம்பளம். தனக்கு கிடைக்காத பணம் அவர்களுக்கு கிடைப்பதை, அந்த பணத்தை அவர்கள் ஆடி அழிப்பதை பார்க்கும் போது எழும் இயலாமை கோபம். அந்த பணத்துக்கு பின்னால் இருக்கும் வலி யாருக்கும் தெரியாது. வெகு சில வருடங்கள் மட்டுமே அனுபவம் உள்ளவர்கள் அதிகம் சம்பாதிப்பதில்லை. அவர்களின் சம்பளம் நிலையில்லாததும் கூட. கால் சென்டர் ஊழியர்களும், மேலாண்மையிலும் உள்ளவர்கள் மட்டுமே அதிகம் சம்பாதிக்கிறார்கள். இது அந்த வேலையில் உள்ள பளுவை பொருத்து மாற்றம் கொள்கிறது.

படிப்பே இப்போது காசு பார்க்கும் தொழிலை தேர்ந்தெடுக்கும் வழியாக மாறிவிட்டது. தேடி தேடி காசு பார்க்க தான் படிக்க வைக்க படுகிறார்கள். தாய் தகப்பன் பிரிந்து வேலை செய்ய குடும்பத்தாலேயே தூண்ட படுகிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து சம்பாரிக்க கற்பிக்கபடுகிறார்கள். எல்லாம் நடந்தாலும் சமூகம் சொல்லும் "நல்லவன்" வேடத்தையும் போட எதிர்பார்க்கபடுகிறார்கள். ஸ்டெரஸ் எனப்படும் மனச்சோர்வை நீக்கும் சமூக வழிகளை குடும்பம் மட்டுமே தர முடியும். அது டாலருக்கு ஆசைப்படும் முதலாளிகளால் எந்த தொழிலாளிக்கும் கொடுக்க முடியாதது - இன்னும் சொல்ல போனால் அவர்கள் அனுமதிப்பதில்லை - உற்பத்தி மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளபடுகிறது - நலன்..! இவன் போனால் இன்னொருவன் என்ற மனநிலை மட்டுமே மிச்சம். மனச்சோர்வை நீக்க உழைப்பவன் தேடும் வழி நிச்சயம் சமூக அமைப்பில் "நல்லது" என்ற பட்டத்தை கொண்டிருக்காது. தன்னிலை மறக்கும் வழிகள் எல்லாராலும் சொல்லி கொடுக்கபடுகிறன. அலுவகத்திலேயே பார்ட்டி நடத்தில் மண்டை சூட்டை தணிக்கிறார்கள். இல்லாத ஆசாமிகள் சொந்த காசில் கொண்டாடுகிறார்கள்.

எல்லாம் தெரிந்தும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இவர்கள் சம்பாரித்து கொடுக்கும் காசுக்காக குழந்தைகளை பலி கொடுத்து கொண்டு இருக்கிறது. சேர்ந்தால் போல 10 நாட்கள் விடுமுறை எடுத்தால் இந்த மாத சம்பளத்துக்கு பங்கம் வருமோ என்ற எண்ணம் கொண்ட குடும்பமும், எவன் நலம் எப்படி போனாலும் இந்த மாத டாலர் வருமானம் நிற்க கூடாது என்ற எண்ணம் கொண்ட நிறுவனங்களும் இருக்கும் வரைக்கும் - இத்தகைய வரைமுறை தாண்டிய சம்பவங்கள் நிகழத்தான் செய்யும். மனச்சோர்வை நீக்க மதுவும், மாதுவும், ஆட்டமும் பாட்டமுமே சரி என்ற மனோநிலை மாற குடும்ப அமைப்பும் நிறுவன அமைப்பும் சேர்ந்து செயல்பட்டால் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும். இதே சமுதாயம் இவர்களை சம்பாரிக்க தூண்டுகிறது. அப்படி சம்பாரிப்பவன் தங்களை போல ஒரு சாதார வாழ்வையும் வாழ வேண்டும் என்ற எதிர்பார்க்கிறது. இது முரண். பொதுவில் பார்க்கையில் எந்த நலம் சார்ந்த நடவடிக்கையும், யார் நலத்துக்கும் இல்லை. தான் செய்யாததை, செய்ய முடியாததை இவனும் இவளும் செய்ய கூடாது என்று நினைக்கும் மனப்பான்மைதான் காரணம்.

அப்படி சமுதாயம் "நல்ல" விதமான மாற எண்ணம் கொண்டவர்கள் கணிப்பொறி சாராத தொழில் அமைப்புகளை மேம்படுத்தட்டும். வாழ்க்கைக்கும் தேவையான பணத்தையும் மனத்தையும் தரும் கல்வியை அமைக்கட்டும். குடும்ப அமைப்பை சரியான வயதில் இளைவர்களுக்கு கொடுத்து சமூக வாழ்வை மேம்படுத்தட்டும். முட்டாள்தனமான மனச்சோர்வை நீக்கும் விதமாக நட்பையும், படிக்கும் பழக்கத்தையும், சுய நம்பிக்கையையும் அதிகபடுத்தட்டும். இத்தனை பணமும் வேண்டாம், "கலாச்சார" சீரழிவும் வேண்டாம் என்று நினைக்கும் குடும்பங்களும் நிறுவனங்களும் சமூகத்தில் மேலோங்குமாயின் இந்த நிலை மாறலாம்... இவை எல்லாம் நடக்காத விஷயங்கள். இவர்களால் முடிந்தது எல்லாம் எல்லா வகையிலும் அடிமைபடுத்தபடும் கணிப்பொறி சார்ந்த ஊழியர்களை முடிந்த போதெல்லாம் அவமானபடுத்துவது ஒன்றுதான்.